மொரோக்காவில் ஒரு சட்டம் இருக்கிறது போலும் - விவாகரத்தின் போது கணவனின் சொத்தின் பாதி மனைவிக்கு போய் விடும். அதில் இருந்து தப்பிக்கும் நோக்கிலோ என்னவோ அந்நாட்டு கால்பந்தாட்ட வீரர் அச்ரப் ஹக்கீமி தன் சொத்துக்களை தம் அம்மா பெயரில் எழுதி வைத்துவிட்டார். அவரது மனைவி விவாகரத்து கோரிப் போனால் இந்த செய்தி தெரிய வர அதிர்ச்சியாகி விட்டார். இதைப் பல நண்பர்களும் என்னுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்களிடம் நான் சொல்லிக்கொள்வது இந்தியாவில் இந்த சட்டத்தை கொண்டு வர காங்கிரஸ் அரசு 2010-11ஆம் கட்டத்தில் முயன்றது, ஆனால் பா.சிதம்பரம் உள்ளிட்டோர் முயன்றதால் கைவிட்டது என்பதே. 2015இல் மீண்டும் பெண்ணிய குழுவினர் மோடியை சந்தித்து இச்சட்டத்தின் 'பல பயன்களை' விளக்கி இதை கொண்டு வர தூண்டினர். ஆனால் அவர்களை அடித்து பத்தி விட்டார். மோடி செய்ததில் எனக்குப் பிடித்த ஒரே காரியம் இது தான். ஆனால் இந்த சட்டம் வராமல் போனது பெண்களை விட வக்கீல்களுக்கே பெருத்த நட்டம் - செட்டில்மெண்டிலே 10% வாங்குபவர்கள் சொத்தில் வாங்காமலா இருப்பார்கள்? 10 கோடி வரக்கூடிய சொத்தில் 10% எவ்வளவு வரும்? சரி அவ்வளவு தர மாட்டேன் என்றால் கூட 3-5% வாங்காமல் டீலிங்கை முடிப்பார்களா? ம்ஹும்! ஆனால் என்ன பிரச்சினை என்றால் இவர்களுடைய மகன்களும் பாதிக்கப்படும் போது இவர்களுக்கு டவுசர் கழன்று போகும். அப்போதுதான் வலி புரியும்.
ஆனால் இச்சட்டத்தை இப்போதுள்ள ஜீவனாம்ச சட்டத்தின் ஒரு கொடூரமான வடிவம் என்றே கருத வேண்டும் - ஜீவனாம்சம் என்பது படிப்பறிவில்லாத, வேலைக்கு போய் சம்பாதிக்க வழியில்லாத பெண்களுக்கு நியாயமாக தேவைப்படுவது. ஆனால் அதை அதிகமாக பெறுவது ஆண்களுக்கு சமமாக படித்து வேலைக்கும் செல்லும் பெண்களே என்பது எதார்த்தம். அதற்கு சட்டம் கூறும் நியாயம் விவாகரத்தின் பின்பும் அப்பெண்ணின் வாழ்க்கைத் தரம் குறைந்து விடக் கூடாது என்பது. ஏன் அதில் சட்டத்துக்கு அவ்வளவு அக்கறை? ஏன் ஆணின் வாழ்க்கைத் தரம் பற்றி அக்கவலை இல்லை? வேலை போனால் நம் வாழ்க்கைத்தரம் தவிடுபொடியாகிறதே? நிறைய பேர் தற்கொலை பண்ணுகிறார்களே. ஏன் தொழிலாளர் பாதுகாப்பு சட்டம் இவர்களுக்கு அரசோ தொழில்நிறுவனமோ சம்பள இழப்பீட்டை மாதாமாதம் அளித்து வாழ்க்கைத்தரம் மாறாமல் பார்க்க வேண்டும் எனக் கோருவதில்லை? ஏன் மனைவியைப் பற்றி மட்டும் ஒரு குடும்ப நலச் சட்டம் கவலைப்படுகிறது? ஏனென்றால் எக்காரணம் கொண்டு அம்மனைவி குடும்ப உறவுக்குள் நீடிக்கும் ‘நிலை’ வரக் கூடாதாம்! இன்னும் நேரடியாக சொல்வதென்றால் மனைவிக்கு சிறு மனக்கசப்பு ஏற்பட்டாலும் அவர் குடும்பத்தை உடைத்துவிட்டு வெளியே வந்துவிட வேண்டுமாம். ‘வெளியே வந்து நாம் வேலை பார்த்து கஷ்டப்படணுமே, இப்போ கணவன் சம்பளத்தில் வசதியாக வாழ்கிறோமே’ எனும் எண்ணத்தில் அவர்கள் மணவாழ்க்கைக்குள் நீடிக்கலாகாதாம்! ஏன் நீடித்தால் என்னவாம்? குறைந்த நஷ்டத்தை விடுத்து அதிக லாபத்தை நாடுவதும், சகிப்பதும் தானே மனித வாழ்க்கை? வேறொன்றுமில்லை, இப்பெண்கள் வெளியே வந்தாலே அதிகமாக துய்ப்பில், பண்ட நுகர்வில் ஈடுபடுவார்கள், தாராளவாத சந்தை வளரும். ஆக, இது முழுக்க முழுக்க ஒரு பொருளாதார சதித்திட்டம் மட்டுமே. பெண்ணுக்கு கணவனின் சொத்தில் பாதியைக் கொடுத்தாலும் அவள் அதை வைத்து கூடுதலாக செலவு பண்ணுவாள், எதாவது ஒரு வியாபாரத்தை கூட ஆரம்பிக்கலாம், இதுவும் சந்தைக்கு நல்லதே. ஆனால் சட்டம் இந்த சந்தைப் பொருளாதார வளர்ச்சி நோக்கத்தை ஒரு சமத்துவ, தர்மம், நியாயம் சார்ந்த ஒரு உயர்நோக்கமாக சித்தரித்து நாடகம் போடுகிறது. சில வக்கீல்களுக்கும் பெண்ணியவாதிகளுக்கும் இதில் பொருளாதார லாபம் உள்ளதால் அவர்கள் இச்சட்டத்தை ஆதரித்து ஜால்ரா அடிக்கிறார்கள். சோழியன் குடுமி சும்மாவா ஆடும் என்பது வேறு யாரையும் விட இவர்களுக்கே அதிகம் பொருத்ந்தும்.
உலகம் முழுக்க இதுவே நடக்கிறது. நல்லவேளை இந்தியாவில் இச்சட்டம் இன்னும் வரவில்லை.
முற்போக்கு எனும் பெயரில் இயற்றப்படும் இம்மாதிரி போலி 'சமத்துவ' அசமத்துவ சட்டங்கள் மக்களை பல அபத்தங்களை செய்ய வைக்கிறது: நியாயமாக சம்பாதிப்பதைக் கூட சொந்த பெயரில் வைத்துக்கொள்ள விடாமல் செய்கிறது. கறுப்பு பணப்பரிமாற்ற வளர்ச்சிக்கு காரணமாகிறது. எப்போதும் சொந்த மனைவியை சந்தேகிக்க செய்கிறது.
கடந்த ஆண்டு வட இந்தியாவை, பெங்களூரில் வாழ்ந்துவந்த என் தோழி ஒருவர் வணிகரான தன் கணவரை விவாகரத்து பண்ணப் போவதாக சொன்னார். அதற்காக ஆவேசமாக மும்பைக்கு போனார். போனவர் அதன் பிறகு சட்டென முடிவை மாற்றிக்கொண்டார். என்ன காரணம்? கணவரின் சொத்துக்கள் வரி ஏய்ப்புக்காக உறவினர்கள் பெயரில் பதிவாகி உள்ளதாம். அவருடைய பணமும் வங்கிக்கணக்கில் இல்லை. அதனால் அவரிடம் இருந்து இப்போது விவாகரத்து வாங்கினால் அஞ்சு காசு பேறாது என்று அவர் தெளிவாகப் பேசினார். கணவனிடம் சமாதானமாக போய் விட்டார். மொரோக்கா கால்பந்தாட்ட வீரர்களை விட பெரிய கால்பந்தாட்டக்காரர்கள், பந்தை எதிரணி பக்கம் திரும்பி விடாமல் வளைத்து வளைத்து கொண்டு போகும் திறமைசாலி ஆண்கள் நம் ஊரில் நிறையவே இருக்கிறார்கள். என்ன அவர்கள் வணிகர்கள், மாத சம்பளக்காரர்கள் அல்ல!
ஓம் வேலூர் இப்ராஹிமாய நமஹ!

Comments