Skip to main content

இரு நகல் சித்தாந்தங்களுக்கு மத்தியில்


இன்று என் நண்பரான ஒரு சமூகவியல் பேராசிரியருடன் நாட்டு நடப்புகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கையில் அவர் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக வலுவான எதிர்க்கருத்துக்கள் நாட்டில் திரண்டு வருவதாகவும், தென்னிந்தியா - வட இந்தியா என ஒரு பிரிவினை தோன்றி வருவதாகவும் விரைவில் உள்நாட்டுக் கலகம் தோன்றக் கூடும் என்றார். நான் அவரிடம் எனக்கு வேறொரு பார்வை இது குறித்து உள்ளதாக சொன்னேன். இன்று பாஜகவின் சித்தாந்தத்துக்கு சார்பாகவோ எதிராகவோ மக்கள் சிந்திப்பதாகத் தோன்றவில்லை, மாறாக மக்களுக்கு சிந்திப்பதில் நம்பிக்கை போய்க்கொண்டிருக்கிறது என்றேன். நான் இதை என்னைச் சுற்றி உள்ளவர்களின் உளவியல், போக்குகள், நான் கற்பிக்கும் இளைஞர்களிடம் தென்படும் இயல்புகள், நாட்டுநடப்பு ஆகியவற்றை வைத்து சொல்கிறேன். ஜெயமோகன் சொல்வதைப் போல இதை ஒரு எழுத்தாளனின் உள்ளுணர்வு எனலாம். என்னுடைய உள்ளுணர்வு இதுதான்: பொதுவாக சிந்திப்பதன் நோக்கம் அறிவைப் பெறுவது, அறிவைப் பெறுவதன் நோக்கம் தெளிவு, மகிழ்ச்சி, வெற்றி, சமூக அங்கீகாரம் ஆகியவை. துரதிஷ்டவசமாக பின்நவீன காலத்தில் அறிவு என்பதே வெறும் தகவல், தகவல் என்றாலே அதிகாரத்திற்கான கருவி, அறிவென்றாலே நாம் வாங்கித் துய்க்கிற ஒரு பண்டம் என்றாகி விட்ட பின்னர், மக்கள் சிந்திப்பதை கூட ஒரு பயன்மதிப்பு உள்ள செயலா என வினவத் துவங்குகிறார்கள்.
அதாவது இதைக் குறித்து சிந்தித்தால், கற்றுக்கொண்டால், இதைப் பொருட்படுத்தினால் எனக்கு என்ன பயன் என்பது முக்கியமான கேள்வி இன்று. ஒரு புத்தகம் படித்தால் என்ன பயன்? ஒரு கவிதை படித்தால் என்ன பயன்? அரசியல்படுவதால் என்ன பயன்? நாட்டுக்காக உழைத்தால் எனக்கு என்ன பயன்? அன்பு பாராட்டினால் என்ன பயன்? யோசித்தால் என்ன பயன்? பேசினால் என்ன பயன்? நான் தூங்கினால் எனக்கு என்ன பயன்? ஒழுங்காக சாப்பிட்டுத்தான் ஆக வேண்டுமா? அதனால் எனக்கு என்ன பயன்? உன்னுடன் வாழ்ந்தால் என்ன பயன்? உன் குழந்தையைப் பெற்றால் என்ன பயன்? உன்னைப் பிரிந்தால் என்ன பயன்? இப்படி மனிதர்கள் சிந்திப்பது இயல்பாகி விட்டது. இது இயல்பானது, அதனால் இப்படி இருப்போம் என்பது இன்று ‘இயல்பற்றது’. எதுவும் அதன் பயன்மதிப்பின் படியே ஏற்றுக்கொள்ளப் படுகிறது. இலக்கியம் படித்தால், புத்தகம் வாசித்தால் அது வாழ்க்கையில் முன்னேற உதவும் என்று வாசிப்பை இன்று சந்தைப்படுத்த வேண்டி இருக்கிறது. ஜெயமோகன், செல்வேந்திரன் ஆகியோர் புதிய வாசகர்களை நோக்கி அடிக்கடி இவ்வாறே பேசுகிறார்கள். ஆனால் இது உண்மையில்லை என நமக்குத் தெரியும் - புத்தக வாசிப்பு அதிகமாகும் போது மக்கள் உலகியல் வெற்றியில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள். ஆனால் இந்த உண்மையை சொன்னால் இன்று யாருமே வாசிக்க மாட்டார்கள். ஒரு காலத்தில் பயன்மதிப்பில்லாத பொருளும் வேண்டும் என நினைத்தார்கள், இன்று கண்ணை மூடிவிட்டு அதை தூக்கி கடாசி விடுவார்கள்.
அரசியல்வயப்படுவது ஒரு பொதுநல நோக்கிறாகவே. அதற்கு தர்க்க சிந்தனையும் சமூக அக்கறையும் அவசியம். இவை இரண்டுமே ஒரு தனிமனிதனுக்கு நேரடி பயன்மதிப்பற்றவை. அதனாலே இன்றைய இளைஞர்களிடம் நீங்கள் இந்த இரண்டையும் ‘விற்க’ முடிவதில்லை. தனக்கு பொருளீட்டித் தராத, உலகியல் பயனளிக்காத தர்க்க சிந்தனையை அவர்கள் ஏற்க மாட்டார்கள். இதை நான் வணிகவியல், நிர்வாகவியல் படிக்கும் மாணவர்களிடம் அதிகமாக பார்க்கிறேன். அவர்களிடம் நீங்கள் சமூக முன்னேற்றம், அறம், தர்க்கம், அரசியல், இலக்கியம் என எதைப் பற்றி பேசினால் அலுப்பாகி அந்நியமாகி விடுகிறார்கள். அறிவியல் கற்கும் மாணவர்களோ இதனால் எனக்கு என்ன பயன் என யோசிக்கிறார்கள். மானுடவியல் மாணவர்களோ இந்த கருத்துக்களுடன் உறவாடினாலும் ஆழமான நம்பிக்கையற்றிருக்கிறார்கள். மாணவர்களே இப்படி என்றால் பொதுமக்கள் மேலும் மேலும் அந்நியப்பட்டிருக்கிறார்கள்.
இந்த போக்குடன் பாசிச சிந்தனை கைகோர்க்கும் போது ஒரு ஆபத்தான மனப்பான்மை தோன்றுகிறது - இந்துத்துவ கருத்தியல் குறித்த எந்த புரிதலும் இன்றி, மேலோட்டமான கருத்துக்களை கேள்விப்பட்டதை வைத்து அக்கருத்தியலுடன் இணங்கிப் போகிறவர்கள், எதிர்க்கருத்தியல், எதிர்முகாமை சேர்ந்தோரை கடுமையாக வெறுக்கும், தாக்கும் மக்களை இன்று அதிகமாக பார்க்கிறேன். நான் இவர்களை போலி இந்துத்துவர்கள், போலி வலதுசாரிகள் என்பேன். நகல் இந்துத்துவர்கள் என்றும் கூறலாம். அசல் இந்துத்துவர்களை விட இன்று நகல் இந்துத்துவர்களே பெருகி வருகிறார்கள். வலதுசாரி சிந்தனை இவர்களுக்கு வசீகரமாக இருப்பதற்கு இரு காரணங்கள்:
வலதுசாரி சிந்தனை இன்று அதிகாரம் பெற்றிருக்கிறது. தன்னை நோக்கி வருவோருக்கு மட்டுமீறின அதிகாரத்தை அது அள்ளி வழங்குகிறது. தன் கதவுகளை இச்சிந்தனை ‘திறந்து’ வைத்திருக்கிறது. ஆனால் இதற்கு எதிர்முகாமை சேர்ந்த இடதுசாரி, மையவாத சிந்தனையோ சற்று ‘மூடி’ இருக்கிறது, நீ உழைத்து என்னைப் புரிந்து கொள், நீ பயன்மதிப்பு கோராமல் என்னை ஏற்றுக்கொள் என்கிறது. அது இவர்களுக்குப் பிடிக்கவில்லை.
இன்று மனிதர்கள் - வெற்றி பெற்றவர்கள், பணக்காரர்கள், ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் என எல்லாருமே - தம்மை பாதிக்கப்பட்டவர்களாகவும் தோற்கடிக்கப்பட்டவர்களாகவும் கருதுகிறார்கள். இது ஒரு மிகை கற்பனை. இவர்கள் இந்த மிகை கற்பனைக்கு சான்றாக எதையும் வைத்திருப்பதில்லை. மாறாக ஒரு மிகை வெறுப்பே இந்த மிகை கற்பனையை செலுத்துகிறது. இந்த மிகை வெறுப்பு ஒரு கற்பனையான மற்றமை மீது செலுத்தப்பட்டு வளர்க்கப்படுகிறது. தனது துயரத்துக்கு யார் காரணம் என இவர்களுக்கு தெரிய வந்தாலும் அவர்கள் அதை ஏற்கவோ அதைக் குறித்து சிந்திக்கவோ தயாரில்லை. ஏனென்றால் அச்சிந்தனை அவர்களுக்கு அதிகாரத்தை தராது. அதனால் அவர்கள் கற்பனையே ஆனாலும் தமக்கு ஒருவித சமூக அதிகாரத்தை அளிக்கும் மிகை வெறுப்பின் மீது நின்று சிந்திக்கவும், கொந்தளிக்கவும், போலி அரசியல் செய்யவுமே விரும்புகிறார்கள்.
இந்த நகல் வலதுசாரிகளிடம் நீங்கள் எதையும் சொல்லி புரிய வைக்கவோ திருத்தவோ முடியாது. என்ன பிரச்சினை என்றால் இன்று இன்னொரு பக்கம் இடதுசாரிகள், மையவாதிகளும் ஒருவித நகல்களாக மாறி வருகிறார்களோ என்பதே. தேவைப்படும் போது தேவையான அளவுக்கு அரசியல் பண்ணிக்கொள்ளலாம், தமது எதிர்ப்பரசியலையும் பயன்மதிப்பு கொண்டதாக மாற்றிக்கொள்ள வேண்டும் எனும் போதம் அவர்களுக்கு அதிகமாகி விட்டது. ஒருவர் ஆவேசமாக சமூக பிரச்சினைகளைப் பற்றி பேசினால் உணர்ச்சிவசப்படாமல் மற்றமை மீதான கோபமாக மட்டும் அதை மாற்றி ஒரு சுய பொழுதுபோக்காக அதை மாற்றிக்கொள்கிறோம். முற்போக்காளர்களின் அரசியலும் இப்படி சமூக பிடிப்பற்றதாக மாறி வருகிறது. அவர்களுக்கும் தாம் நடப்பு உலகில் இருந்து, சமூகத்தில் இருந்து அந்நியப்படுகிறோமோ எனும் ஐயப்பாடு வலுவாகி வருகிறது.
ஒரு உதாரணம்: புதிய கல்விக்கொள்கையை கடுமையாக விமர்சித்து நான் ஒரு புத்தகம் எழுதினேன் (“நான் ஏன் புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கிறேன்?”). ஆனால் இன்று ஒரு கல்வியாளனாக அதே கல்விக்கொள்கையை ஏற்று அதன்படி கல்வித்திட்டத்தை நான் வரையும் போது எனக்கு அந்த ‘கோபம்’ இருப்பதில்லை. அதில் உள்ள சௌகரியமாக பகுதிகளை மட்டும் கருதி, மிச்சத்தை மறந்து நான் என் பணியை ஆற்றுகிறேன். இது புதிய கல்விக்கொள்கைக்குள் ஒரு புத்தம் புது கல்விக்கொள்கையாக என் மனதுக்குள் உருக்கொள்கிறது. நான் என்னையே ஏமாற்றிக் கொள்கிறேன். எனக்கு வேறு வழியில்லை தான். ஆனால் இப்படித்தான் நாம் ஒவ்வொரு வரும் அதிகாரவயப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட சிந்தனையை நம் வயப்படுத்தி அதற்கேற்ப ஒழுகுகிறோம். எனக்கு இதை நினைக்கவே மிகுந்த அவநம்பிக்கையாக இருக்கிறது.
இப்படி இடதும், வலதும் நகலாகிப் போன ஒரு உலகில் நாம் என்னதான் செய்ய முடியும் என்று நான் என் நண்பரைக் கேட்டேன். எனக்கு ஆனால் ஒன்று தோன்றுகிறது - பாசிசம் குறித்து கூடுதலாக ஆய்வு செய்து ஒரு சிறிய நூலை எதிர்காலத்தில் எழுத வேண்டும். இந்த ஆரண்ய காண்டத்தில் மரவுரி தரித்த பஞ்ச பாண்டவர்களான நமக்கு வாய்த்ததெல்லாம் அந்த 'சிறிய சலுகை' மட்டுமே!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...