உலகின் பெரும்பாலோரின் பொழுதுபோக்கான சினிமாவை வெறும் மக்களை மகிழ்விக்கும் ஜனரஞ்சக ஊடகமாக ஒதுக்கிச் செல்ல முடியுமா என்ற கேள்வி என் மனதில் வெகு நாள் இருந்தது.
”அக்காலத்தில் கம்பருக்கு ஒரு சடையப்ப வள்ளல் என்றால், எனக்கு இன்று சினிமா’” என எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்கள் பலமுறை கூறியதிலிருந்து அனைத்துக் கலைகளின் சங்கமமான சினிமாவின் முக்கியத்துவம் புரிகிறது.
நம்மால் மாற்ற முடியாத சமூகப் பிரச்சனைகளுக்கு அடுத்தவரைக் குறை சொல்லும் நம் உளவியல் அனைத்து தவறுகளுக்குமான ஊற்றுக் கண்ணாக சினிமாவையே எண்ணுவதால் அதை என்னால் ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
நம்மையும், நம் பண்பாட்டையும் அறிய முயலும் வெளி நாட்டாருக்கு எளிய சாதனமாக இருப்பது சினிமா என்ற நிலையில், அதைப் பற்றி மேலும் சிந்திக்கவும் ஆராயவும் ஒரு ஆரம்பக் கட்டமாகத் திகழ்வது யுவபுரஸ்கார் விருது வென்ற எழுத்தாளரும், ஆங்கிலப் பேராசிரியருமான திரு ஆர். அபிலாஷ் அவர்களின் ”90களின் தமிழ் சினிமா” நூல்.
சினிமா என்பது வெறும் மிகைப்படுத்தப்பட்டக் கனவுலகம் என எண்ணும் நமக்கு, 90 களில் ஏற்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் முதல் நம் உளவியலிலும், நம்பிக்கைகளிலும் ஏற்பட்ட மாற்றங்கள் திரைப்படங்களிலும் இன்று வரை பிரதிபலிப்பதை இந்நூலின் மூலம் அறிய முடிகிறது. காதலை, சாதிப் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் ஒரு அருமருந்தாகக் காட்டிய தொண்ணூறுகளின் சினிமா, பின்னர், காதலர்களுக்குக் காதலே சிக்கலாகவும், சுதந்திரமான சிந்தனைகள் உடைய இன்றைய தலைமுறைப் பெண்களிடம் பழகும் முறைகளைப் புரிந்து கொள்ளாத ஆண்களின் இடர்பாடுகளைக் காட்டும் கண்ணாடியாகவும் பல திரைப்படங்கள் இருப்பதை அறிய இந்நூல் உதவுகிறது. அதற்கும் மேல், காதலை ஒரு கிடைத்தற்கரிய பொருளாகக் காட்டிய இதயம், காதலன் போன்ற படங்களில் இருந்து, காதலை வெறும் வீடியோ கேம் போல மலிவானதாகக் காட்டும் ”ஓ காதல் கண்மணி” போன்ற படங்கள் வரை, படங்களில் காட்டப்பட்டவை இச்சமூகத்திலும் பிரதிபலிப்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்தாலும், குடும்ப அமைப்பைக் கடந்து காதலை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களையே வெற்றி பெற்ற அமர காதல் படங்களும், இயக்குனர் சேரனின் மகள் காதல் விவகாரம் போன்ற நடைமுறைச் சம்பவங்களும் காட்டுவது மூலம், குடும்ப அமைப்பின் குறையாத வலிமையும், அவ்வமைப்பின் அங்கமாகவே பெரும்பாலான இன்றைய இளைஞர்கள் சார்ந்து இருப்பதையும் உணரலாம். நாயகர்களின் காதலுக்கு உதவும் நண்பன் என்ற உறவு முறை, தொண்ணூறுகளுக்குப் பிறகு பிணக்கும் ஊடலும் நிறைந்த ஆண்களின் நட்புறவாகப் பரிணமித்திருப்பதை சுவாரசியமாகக் காட்டும் இயக்குனர் பாலா, ராஜேஷ், வெங்கட் பிரபு போன்றோரின் புரோமான்ஸ் படங்கள்; ஆண்கள், உண்மையான சுதந்திரத்தை உணர்வது பெண்கள் அருகில் உள்ள போதா, அல்லது தன் நண்பர்களோடு உள்ள தருணங்களா என ஆரம்பித்து ஆண்மைக்குள் பெண்மையையும், பெண்மைக்குள் ஆண்மையையும் சித்தரிக்கும் திரைப்பட நுட்பங்களை நடைமுறை எதார்த்தங்களோடு சுவையாக பொருத்தி சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
சினிமாவின் ஜனரஞ்சகமான வெற்றிக்கு மற்றொரு காரணமான வன்முறையைச் சித்தரிக்கும் தேவர் சாதி வரிசைப் படங்களும், அதற்கு ஒப்பீடாகக் காட்டப்பட்ட மலையாள நாயர் சமூக வீரப் படங்களும் பாலிவுட்காட்ஃபாதர் படங்களைப் பற்றிய தகவல்கள் நூலின் சுவாரசியமான பகுதிகள். நிலப் பிரபுத்துவக் காலத்தைக் கடந்து வெவ்வேறு துறைகளில் களம் புகுந்தும், இவ்வகை பழைய வன்முறை விழுமியங்கள் ரசிக்கப்படுவதற்கானக் காரணங்கள்; வன்முறைக்கு எதிராகப் பேசுவதாகச் சொல்லும் இப்படங்கள், வன்முறையையே நாயகன் ஆண்மையின் சின்னமாகப் பிரதிபலித்தல் போன்ற வியக்கத்தக்க சுவாரசியமான விவாதங்கள் நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைக்கின்றன.