Skip to main content

90களின் தமிழ் சினிமா: சமூக மாற்றங்களின் அடையாளம் - அரவிந்த்


 




உலகின் பெரும்பாலோரின் பொழுதுபோக்கான சினிமாவை வெறும் மக்களை மகிழ்விக்கும் ஜனரஞ்சக ஊடகமாக ஒதுக்கிச் செல்ல முடியுமா என்ற கேள்வி என் மனதில் வெகு நாள் இருந்தது. 

”அக்காலத்தில் கம்பருக்கு ஒரு சடையப்ப வள்ளல் என்றால், எனக்கு இன்று சினிமா’” என எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்கள் பலமுறை கூறியதிலிருந்து அனைத்துக் கலைகளின் சங்கமமான சினிமாவின் முக்கியத்துவம் புரிகிறது. 

நம்மால் மாற்ற முடியாத சமூகப் பிரச்சனைகளுக்கு அடுத்தவரைக் குறை சொல்லும் நம் உளவியல் அனைத்து தவறுகளுக்குமான ஊற்றுக் கண்ணாக சினிமாவையே எண்ணுவதால் அதை என்னால் ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. 

நம்மையும், நம் பண்பாட்டையும் அறிய முயலும் வெளி நாட்டாருக்கு எளிய சாதனமாக இருப்பது சினிமா என்ற நிலையில், அதைப் பற்றி மேலும் சிந்திக்கவும் ஆராயவும் ஒரு ஆரம்பக் கட்டமாகத் திகழ்வது யுவபுரஸ்கார் விருது வென்ற எழுத்தாளரும், ஆங்கிலப் பேராசிரியருமான திரு ஆர். அபிலாஷ் அவர்களின் ”90களின் தமிழ் சினிமா” நூல். 

சினிமா என்பது வெறும் மிகைப்படுத்தப்பட்டக் கனவுலகம் என எண்ணும் நமக்கு, 90 களில் ஏற்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் முதல் நம் உளவியலிலும், நம்பிக்கைகளிலும் ஏற்பட்ட மாற்றங்கள் திரைப்படங்களிலும் இன்று வரை பிரதிபலிப்பதை இந்நூலின் மூலம் அறிய முடிகிறது. காதலை, சாதிப் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் ஒரு அருமருந்தாகக் காட்டிய தொண்ணூறுகளின் சினிமா, பின்னர், காதலர்களுக்குக் காதலே சிக்கலாகவும், சுதந்திரமான சிந்தனைகள் உடைய இன்றைய தலைமுறைப் பெண்களிடம் பழகும் முறைகளைப் புரிந்து கொள்ளாத ஆண்களின் இடர்பாடுகளைக் காட்டும் கண்ணாடியாகவும் பல திரைப்படங்கள் இருப்பதை அறிய இந்நூல் உதவுகிறது. அதற்கும் மேல், காதலை ஒரு கிடைத்தற்கரிய பொருளாகக் காட்டிய இதயம், காதலன் போன்ற படங்களில் இருந்து, காதலை வெறும் வீடியோ கேம் போல மலிவானதாகக் காட்டும் ”ஓ காதல் கண்மணி” போன்ற படங்கள் வரை, படங்களில் காட்டப்பட்டவை இச்சமூகத்திலும் பிரதிபலிப்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். 

இவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்தாலும், குடும்ப அமைப்பைக் கடந்து காதலை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களையே வெற்றி பெற்ற அமர காதல் படங்களும், இயக்குனர் சேரனின் மகள் காதல் விவகாரம் போன்ற நடைமுறைச் சம்பவங்களும் காட்டுவது மூலம், குடும்ப அமைப்பின் குறையாத வலிமையும், அவ்வமைப்பின் அங்கமாகவே பெரும்பாலான இன்றைய இளைஞர்கள் சார்ந்து இருப்பதையும் உணரலாம். நாயகர்களின் காதலுக்கு உதவும் நண்பன் என்ற உறவு முறை, தொண்ணூறுகளுக்குப் பிறகு பிணக்கும் ஊடலும் நிறைந்த ஆண்களின் நட்புறவாகப் பரிணமித்திருப்பதை சுவாரசியமாகக் காட்டும் இயக்குனர் பாலா, ராஜேஷ், வெங்கட் பிரபு போன்றோரின் புரோமான்ஸ் படங்கள்; ஆண்கள், உண்மையான சுதந்திரத்தை உணர்வது பெண்கள் அருகில் உள்ள போதா, அல்லது தன் நண்பர்களோடு உள்ள தருணங்களா என ஆரம்பித்து ஆண்மைக்குள் பெண்மையையும், பெண்மைக்குள் ஆண்மையையும் சித்தரிக்கும் திரைப்பட நுட்பங்களை நடைமுறை எதார்த்தங்களோடு சுவையாக பொருத்தி சொல்லியிருக்கிறார் ஆசிரியர். 

சினிமாவின் ஜனரஞ்சகமான வெற்றிக்கு மற்றொரு காரணமான வன்முறையைச் சித்தரிக்கும் தேவர் சாதி வரிசைப் படங்களும், அதற்கு ஒப்பீடாகக் காட்டப்பட்ட மலையாள நாயர் சமூக வீரப் படங்களும் பாலிவுட்காட்ஃபாதர் படங்களைப் பற்றிய தகவல்கள் நூலின் சுவாரசியமான பகுதிகள். நிலப் பிரபுத்துவக் காலத்தைக் கடந்து வெவ்வேறு துறைகளில் களம் புகுந்தும், இவ்வகை பழைய வன்முறை விழுமியங்கள் ரசிக்கப்படுவதற்கானக் காரணங்கள்; வன்முறைக்கு எதிராகப் பேசுவதாகச் சொல்லும் இப்படங்கள், வன்முறையையே நாயகன் ஆண்மையின் சின்னமாகப் பிரதிபலித்தல் போன்ற வியக்கத்தக்க சுவாரசியமான விவாதங்கள் நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைக்கின்றன. 

இன்னொரு பக்கம், நாயகனைக் கவர்ச்சிகரமாகவும், நாயகனின் ஆண்மையை விட வில்லன்களின் ஆண்மையையும் அவர்கள் தரப்பு நியாயங்களையும் பெரிதாகக் காட்டி வெற்றிபெற்ற இயக்குனர் திரு கௌதம் மேனன் படங்களில் கையாளப்பட்ட அதிசய நுட்பங்கள் நம்மை அறியாமலே நம்மை வியக்கச் செய்கின்றன. இவற்றிற்கு அப்பால், இக்காலத்தில் பெரும் வெற்றி பெற்ற பிரம்மாண்ட இயக்குனர் திரு சங்கர் அவர்களின் படங்களில் உபயோகிக்கப்பட்ட நவீன யுக்தி பற்றிய விவரணங்கள் எல்லாம்; வாசகர்களே வாசித்து, அனுபவிக்க வேண்டியவை. 

இவ்வாறு, நாம் பார்த்த திரைப்படங்கள் குறித்த பல புது சுவாரஸ்யமான தவல்களையும் நம் ரசனையின் பல சிடுக்குகளையும் அனுபவிக்க இந்நூலை பின்வரும் சுட்டியில் வாங்கி வாசிக்கலாம். 


இரா. அரவிந்த் 

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...