Skip to main content

குப்பை மலை மீது அமைந்த நகரங்கள்




நாம் நகரங்களை ரொம்பவே ரொமாண்டிசைஸ் பண்ணுவதாகத் தோன்றுகிறது - குறிப்பாக நகர சமூகமே முற்போக்கு சமூகம், எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு, அதுவே வளர்ச்சி, அதுவேமாற்றம், முன்னேற்றம், அன்பு மணிஎன்றெல்லாம் நினைத்துக் கொள்கிறோம். இடதுசாரி மனநிலை கொண்டவர்களுக்கு நகரங்களை விமர்சிப்பதில் பெரிய மனத்தடை உள்ளது. எழுத்தாளர்கள் இன்னொரு பக்கம் நினைவேக்கத்திலேயே வாழ்வதால் அவர்களும் இப்பிரச்சினைகளை பேசுவதில்லை. ஊடகங்களுக்கோ நகரங்களை விமர்சித்தால் தம்மை பிற்போக்கு என்று கூறிவிடுவார்களோ எனும் தயக்கம் வேறு.

 நகரத்தின் பிரச்சினைகளை நாம் பேசுவதே இல்லை. நகரத்தில் எல்லாருக்கும் நியாயமான அடிப்படையான வசதிகள் வேண்டும் என நாம் கோருவதே இல்லை. கொடுக்கிற அஞ்சு பத்து பிச்சைய எப்படி கொடுத்தா என்ன என்று கவுண்டமணி ஒரு படத்தில் கேட்பார், அப்படி இருக்கிறது நாம் நகரத்தை அணுகும் முறை. வாய்ப்பு கிடைத்தால் நகரத்தில் இருந்து தப்பித்து ஊருக்கு ஓடிவிடலாம் என நினைப்பவர்கள் ஏராளம், அதற்கு காரணம் நன்றி மறக்கும் குணம் அல்ல, நகரத்தில் நமக்கு மூச்சுமுட்டுவது, அவ்வாறு இங்குள்ள வாழ்க்கைத்தரம், குறைபாடுகள், போதாமைகள் உள்ளதுதான்.


ஒவ்வொன்றாக பார்ப்போம்.

இடம்: நான் இடப்போதாமையை பற்றி சொல்லவில்லை. திட்டமிட்டு இங்கு இடங்கள் அமைக்கப்படும் முறையைப் பற்றி சொல்கிறேன். மத்திய வர்க்கமோ, மேல் மத்திய வர்க்கமோ இங்கு வாழும் நிலையைப் பார்த்தால் அவலமாக இருக்கிறது. பெங்களூரை எடுத்துக் கொண்டால் எவ்வளவு இருட்டான, சிறிய குறுகிய அறைகளைக் கொண்ட வீடுகளைக் கட்டி வைக்கிறார்கள். மூன்று பேர் சேர்ந்து நின்றால் பரஸ்பரம் இடித்துக் கொள்ள வேண்டியதுதான். அதே போலத்தான் இங்குள்ள தெருக்களும். இரவோ பகலோ தெரியாதபடியான வீடுகள் இவை. தஸ்தாவஸ்கி தன் நாவல்களில் வர்ணித்த பீட்டஸ்பர்க் தெருக்களைப் போல இருக்கிறது. நீங்கள் மின்விளக்கை அணைத்துவிட்டால் பெரும்பாலான வீடுகள் பகலிலும் இரவாகத் தோன்றும்


மாசு:

வெளியே போனால் தூசும், பறக்கும் குப்பைக்கூளங்களும், கட்டுமானப் பணிகளின் சிமெண்ட் துகள்களும், இன்னொரு பக்கம் செத்துக்கொண்டிருக்கும் தெருவோர மரங்களின் மகரந்த துகள்களும். இவையெல்லாம் சேர்ந்து ஏற்படுத்தும் காற்று மாசினால் இங்கு பல ஆயிரம் பேர்களுக்கு ஒவ்வாமை வியாதிகள் வந்து விடுகின்றன, அதன் விளைவால் நுரையீரல் பிரச்சினைகளுடன் அலைபவர்கள் அதிகம். குறிப்பாக இளைஞர்கள்.


தில்லி இதைவிட மோசமான காற்று மாசைக் கொண்ட ஊர் என்கிறார்கள். மும்பை இன்னும் நெரிசலான நகரம். சென்னை சற்று பெரிய நகரம், காற்றோட்டமானது என்பதால் மக்கள் தப்பிக்கிறார்கள். ஆனால் அங்கும் குப்பைக்கூளத்தின் நடுவே, மிகச்சிறிய அறைகளில் தான் வாழ்கிறோம், நான்கு பேர் சேர்ந்து நடக்க முடியாத தெருக்களில் தான் நடக்கிறோம்


சரி நகரம் என்றால் சற்று நெரிசடியாகத் தான் இருக்கும், அங்கு நிறைய பேர் வேலை தேடி வருகிறார்கள அல்லவா என்று சொல்கிறீர்களா? எனில் நீங்கள் சென்னையில் பெஸண்ட் நகர், போட் கிளப் போன்ற பகுதிகளுக்கு செல்லுங்கள். பெங்களூரிலும் பாரம்பரியமான பகுதிகளுக்கு சென்று பாருங்கள். அங்கு அனேகமாக கூட்டமே இருக்காது. மரங்களும் அமைதியும் காற்றோட்டமும் இருக்கும். அங்கு குடிபோக நீங்கள் பணக்காரர்களாக இருக்க வேண்டும்


அதெப்படி அவர்களுக்கு மட்டும் அப்படியான இடங்கள் வாய்க்கின்றன என்றால் அவர்கள் அதற்கு ஏற்ப நிலத்தின் மதிப்பை ஏற்றி வைத்துக் கொள்கிறார்கள். விலையேற்றத்தை பயன்படுத்தி நகரத்தின் எல்லா சிக்கல்களில் இருந்தும் தம்மைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள். நகரத்தின் நடுவே ஒரு சொர்க்கபுரியை அமைத்து வாழ்கிறார்கள். நானும் கண்ணனும் சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு பிரசித்தமான மெஸ்ஸுக்குப் போயிருந்தோம். ஒரே ஒரு ஆட்டோ நுழைந்தால் திரும்ப முடியாதமாதிரி ஒரு தெரு அது. ஆனால் அங்கே பாதி தெருவை அடைத்துக் கொள்ளும் அளவுக்கு பெரிய வீடொன்றைப் பார்த்தோம். அதற்குள் இரண்டு கார்கள் நிறுத்தும் அளவுக்கு இடமும் உண்டு.

ரியல் எஸ்டேட் விசயத்தில் அரசு தலையிடாததால் இப்படியான பாகுபாடுகள் தோன்றுகின்றன


நகரங்களில் மக்கள் சாதி பார்க்காமல் வாழ்கிறார்கள் என்று சொல்கிறவர்களுக்கு கண்ணில் ஏதோ பிரச்சினை இருக்கிறது. இங்கு சாதியும் வர்க்கமும் பிணைந்து கிடக்கிறது. என் வசிப்பிடத்தின் அருகிலேயே தலித்துகள் அதிகமாக வாழும் பகுதி இருக்கிறது. அங்கு எப்போது பார்த்தாலும் ஒரு மோசமான நெடி இருக்கும். இத்தனைக்கும் அங்கு குப்பைக்கூளங்களை நான் காண்பதில்லை. தெருவில் வீசப்படும் குப்பையையும் மாநகராட்சி தினமும் வந்து சுத்தம் பண்ணிவிடும். இந்த குமட்ட வைக்கும் நெடி எங்கிருந்து வருகிறது?


சூழலிலியல் சார்ந்து, குறிப்பாக லேண்ட் பில்ஸ் எனப்படும் நிலநிரப்பல் குப்பை மலைகளைப் பற்றி, ஆய்வு செய்யும் என் மாணவி ஒருவரிடம் கேட்ட போது அப்பகுதியில் ஒரு குப்பை பதப்படுத்தல் ஆலை ஒன்று இயங்குவதாகவும், அதன் புகை காற்றில் கலந்து துர்நாற்றத்தை ஏற்படுத்துவதாக சொன்னார். ஆனால் ஆலை கண்ணுக்கு புலப்படாமல் மறைந்திருக்கிறது போலும். சற்று தள்ளிப் போனால் சுத்தமாக பளிச்சென்று இருக்கும் நகரம் இங்கு வந்தால் அழுக்கு, நெடி, நெரிசடி என்றாகி விடுகிறது. ஒரு கிலோமீட்டரில் முக்கியமான மென்பொருள் நிறுவனங்கள், கல்லூரி இருக்கிறது. அங்கு இந்த ஆலையை வைக்காமல் ஏன் இப்பகுதியில் வைக்கிறார்கள் என யோசித்தால் நான் சொல்ல வருவது புரியும்


அந்த மாணவி புற நகர்ப்பகுதிகளில் உள்ள குப்பை மலைகளை ஆய்வு செய்கையில் அங்கு இதைவிட மோசமான காற்று மாசு உள்ளதை கண்டறிந்தார். அங்கும் தாழ்த்தப்பட்டவர்கள் அதிகமுள்ள பகுதிகளிலே இந்த குப்பை மலைகளை உருவாக்குகிறார்கள். இந்த மலைகள் போகப்போக நிலத்தோடு தாழ்ந்துவிடும். அப்போது அதன் மேல் புதிய மலைகளை உருவாக்குவார்கள். விளைவாக ரசாயனக் கழிவு உள்ளிட்ட மோசமான குப்பைகள் நிலத்தில் புதைந்து நிலத்தடி நீரை மாசுபடுத்து விடுகின்றன. எந்தளவுக்கு என்றால் அங்குள்ள நீரை எடுத்து ஆய்வு செய்தால் அதில் மனிதர்கள் குடித்தால் ஏகப்பட்ட நலக்கேடுகள் விளைவிக்கும் ரசாயனங்கள் கலந்துள்ளதை அம்மாணவி கண்டுபிடித்தார். அங்குள்ள குப்பை பதப்படுத்தும் ஆலைகள் இன்னொரு பக்கம் காற்றை விஷமாக்கி விடுகின்றன. இதைப் பற்றி அவர் ஒரு அறிக்கையை தயாரித்து மாநகராட்சிக்கு அனுப்பி விசாரித்திருக்கிறார். உடனே அவர்கள் அந்த குப்பை மலையை சுற்றி காவலர்களை நியமித்து அழுக்கையும் விஷத்தையும் பாதுகாக்கும் வேலையில் இறங்கி விட்டனர். நான் சில மாதங்களுக்கு முன் சென்னைக்கு வந்திருந்த போது வடசென்னை பகுதிகளிலும் இதேவிதமான நெடியைக் கண்டிருக்கிறேன். அங்கு நிற்கும் குப்பை லாரிகளால் தான் என நினைத்தேன். இப்போது தான் புரிகிறது

 சரி நகரத்துசேரிகளில்தான் இப்படி நிலையா என்றால் நீங்கள் இப்போது இருக்கும் இடம் கூட முன்பு ஒரு குப்பை மலை தான் என்றார் அம்மாணவி. அவர் ஒரு செய்தியைக் காட்டினார். நாங்கள் இருப்பதற்கு அருகில் உள்ள நிம்ஹான்ஸ் மருத்துவமனை வளாகங்களை அமைப்பதற்காக அப்பகுதியில் தோண்டிய போது மிகப்பெரிய கருங்கற்கள் தடுத்திருக்கின்றன. என்னடா இங்கு இவ்வளவு பெரும் பாறைகளா என மேலும் தோண்டிப் பார்த்தால் அவை பல ஆண்டுகளுக்கு முன்பு புதைந்து போன குப்பை மலைகளின் இறுகிப் போன கல்வடிவம். இப்படித்தான் நகரங்கள் உருவாகின்றன - குப்பைக்கு மேல் குப்பை, மலைக்கு மேல் மலைகள்.


உணவு:


சென்னையிலோ உணவு ஓரளவுக்கு பரவாயில்லை. பெங்களூரில் உணவகங்களில் கிடைக்கும் உணவை ஒரு ஆண்டு தினமும் சாப்பிட்டால் நிச்சயமாக பல நோய்கள் ஏற்படும். அவ்வளவு தரமற்ற அசுத்தமான உணவு. நான் அண்மையில் ஒரு உணவகத்துக்குப் போனேன். பிரசித்தமான கேரள பிராண்ட் ஒன்றின் உணவகம் அது. ஒரு தோசை கேட்டேன். உள்ளே போன பரிசாரகரை காணவில்லை. சற்று நேரத்தில் சமையலறையில் இருந்து ஒரு பெரிய பெருச்சாளி குறுக்கே ஓடி என்னைக் கடந்து போனது. அதைத் தொடர்ந்து அந்த பரிசாரகர் வந்துஎன்ன தோசை சார் சொன்னீங்க?” என்கிறார். நான் வெறும்சாயாபோதும் என்று சொல்லி தப்பித்துவிட்டேன்


அசுத்தம் மட்டும் பிரச்சினை அல்ல, இவர்கள் பயன்படுத்தும் பழைய எண்ணெய், பழைய பொருட்கள். நான் வழக்கமாக மீன்வாங்கும் கடையில் விற்காத பழைய மீனை எப்படி அப்புறப்படுத்துவார்கள் என்று கேட்டேன். வார இறுதியில் ஓட்டல்காரர்கள் வந்து பாதி விலைக்கு வாங்கிப் போவார்கள் என்றார் கடைக்காரர். “நாத்தமடிக்காதா?” “இல்லீங்க, அவங்க அதுக்கேத்தாபிடி மசாலா போட்டு பொரிச்சி வெச்சிருவாங்க சார்.” இந்த அழுகிய மீன்களையா வறுத்து ஒரு துண்டு 130 ரூபாய் என விற்கிறார்கள் இந்த சேட்டன்கள்?


உலகிலேயே இனிக்காத பழங்கள் பெங்களூரில் தான் கிடைக்கும். இந்த பருவத்தில் கிடைக்கும் மாம்பழங்களைப் பாருங்கள். பார்க்க பழுத்திருக்கும், ஆனால் அவை நிஜத்தில் காய்களே. அரைகுறையாக ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மாம்பழங்களை தினமும் கடந்து போகிறேன். வாழைப்பழங்களும் அப்படித்தான். வாசனையில்லாத வாழைப்பழங்கள். என் இளமையில் எங்கள் ஊரில் ஒரு வாழைக்குலை பழுத்தால் வீடு முழுக்க மணந்துகொண்டே இருக்கும். அங்கு கடைகளில் பாதி பழுத்த குலைகளை தொங்கவிட்டிருப்பார்கள். அவை மெல்ல மெல்ல பழுக்கும்வரை இணுக்க மாட்டார்கள். மக்களும் தோல் கறுத்த பழங்களையே வாங்குவார்கள். இங்கு கிடைக்கும் பழங்களை எடுத்து முகர்ந்தால் கூட பச்சைத்தோலின் வாசனை. ஆனால் இங்கு மக்கள் தோல் கறுத்திருந்தால் அதை வாங்க மறுக்கிறார்கள் என்றால் வாழைப்பழங்களை பழுக்க விடவே கடைக்காரர்கள் தயங்குகிறார்கள். ஒரு வாழைப்பழத்தைக் கூட எப்படி வாங்க வேண்டும், சாப்பிட வேண்டும் என்று தெரியாத மக்கள் எப்படி இருக்க முடியும் என எனக்குப் புரியவில்லை. வாழைப்பழமே இப்படி எனும் போது வேறு உணவுகளைப் பற்றி சொல்லவே தேவையில்லை. பிளாஸ்டிக்கில் இட்லி செய்து கொடுத்தால் கூட வாங்க வாயில் போட்டு தண்ணீரைக் குடித்துக்கொண்டு போய்க்கொண்டே இருப்பார்கள்.


ஒரு நகரமே மொத்தமாக முட்டாளாக்கப்படுகிறது


பொருளாதாரம்:


நகரங்களின் ஒரே சிறப்பு பொருளாதாரம். அங்குள்ள நிதியாதாரம். ஆனால் பெங்களூர் போன்ற நகரங்களில் நம் ஊதியத்தில் மூன்றில் ஒரு பகுதி வாடகையிலே போய்விடுகிறது. இன்னொரு பகுதி ஷாப்பிங்கிலும் மளிகை சாமான் வாங்குவதிலும் போய்விடுகிறது. மீதமிருக்கும் பணத்தில் பல்வேறு கட்டணங்களை செலுத்திவிட்டுப் பார்த்தால் ஒன்றும் எஞ்சுவதில்லை. ஒன்று நீங்கள் லட்சங்களில் சம்பாதிக்க வேண்டும், அல்லது கணவன், மனைவி உழைத்து இரட்டை சம்பளம் வேண்டும்

முதல் பிரச்சினை, நிலத்தின், வீட்டின் மதிப்பை அரசு தீர்மானிக்காமல் ரியல் எஸ்டேட் சந்தையையும் வீட்டுரிமையாளர்களின் மாபியாவும் முடிவெடுக்க அனுமதிப்பதே. மென்பொருள் துறையிலும் சிலர் மட்டுமே லட்சங்களில் சம்பாதிக்கிறார்கள். ஆனால் அவர்களை மனதில் கொண்டே வாட்கையை உரிமையாளர்கள் தீர்மானிக்கிறார்கள். மற்றவர்கள் எங்கே போவது என யோசிப்பதில்லை. நான்கு வீடுகள் சொந்தமாக இருந்தால் வாடகையிலேயே 80,000 வந்துவிடும். தொண்ணூறுகளுக்கு முன்பு வீட்டை வாங்கிப் போட்டவர்கள் இப்படி உட்கார்ந்தே தின்று கொண்டுஇந்த வெளியூர்க்காரங்களே சரியில்லஎன நாட்டாமை பண்ணுகிறார்கள். இது கூட பரவாயில்லை - என் தோழி ஒருவர் தன் வாடகை வீட்டுக்கு 60,000 மாத வாடகை கொடுக்கிறார். அப்படி அந்த வீட்டில் என்னதான் இருக்கிறது என்றால் அதே இரண்டு படுக்கையறை, ஒரு ஹால் வகை வீடுதான். அது ஒரு பெரிய வளாகத்தில் நீச்சல் குளம், ஜிம் என இருக்கும் அபார்ட்மெண்ட். காவலாளி, சோதனைக்கான படக்கருவி எல்லாம் உண்டாம். ஆனால் அடிப்படையில் அதே இரண்டு படுக்கையறை வீடுதான். அதே குருவிக்கூடுதான். என் ஊரில் இதே வீடு 6000க்கு போகும். அங்கு கண்காணிக்க காவலர் எல்லாம் வேண்டாம். எதிர்வீட்டு கிழவியே கண்கொத்தி பாம்பாக பாத்திருப்பார். நீச்சல்குளம் வேண்டாம். நடந்து போனாலே குளம் வந்து விடும்.


வருடாவருடம் பெட்ரோல் விலை உயர்வு, பணவீக்கம் என பணத்தின் மதிப்பு குறைந்து கொண்டே போக நகரவாசிகள் மேலும் சம்பள உயர்வு கிடைக்கும் வேலைகளைத் தேடி அலைந்து கொண்டே இருக்கிறார்கள். வீட்டுக்கடன், கார் கடன், பைக் கடன் என கடன்களுக்காகவே வாழ்கிறார்கள். அரசு ஓரளவுக்கு பெட்ரோல் விலையையும் பணவீக்கத்தையும் கட்டுப்படுத்தி, வீட்டு, கடை வாடகைகளையும், நிலத்தின் மதிப்பையும் குறைத்தால் அது பண மதிப்பை அதிகரிக்கும், கறுப்புப்பணத்தை ஒழிக்கும், வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும். ஆனால் செய்ய மாட்டார்கள்.


ஆரோக்கிய கேடு:


மனிதர்கள் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பு சாப்பிட்டு தூங்கும் விதத்தில் அமைக்கப்பட்டவர்கள். இதை circadian rythm என்கிறார்கள். இரவு முழுக்க விழித்திருந்து சாப்பிடுகிறவர்கள் இன்று பெருகி விட்டார்கள். அரசு 11 மணிக்கு மேல் உணவகங்கள் இயங்கக் கூடாது என்று சொல்லிக்கொண்டே மக்கள் புழக்கம் அதிகமான பகுதிகள் மட்டும் சிறப்பு அனுமதி கொடுக்கிறார்கள். ஸொமேட்டோ டெலிவரி ஆட்கள் இரவு முழுக்க உணவுடன் அலைகிறார்கள். நான் சந்திக்கிற யாரிடமும் தூங்கினீர்களா என்று கேட்பேன். ஒருவர் கூட தூங்கினேன் என்று சொல்வதில்லை. மூன்று, நான்கு மணிநேரம் தூங்கினாலே பெரிய விசயம். இன்று கணிசமானோருக்கு உடற்பருமன், ரத்தக்கொழுப்பு, ரத்தக்கொதிப்பு, மன அழுத்தம் ஏற்படுவதற்கு, நாற்பதுகளில் பலரும் இதய அறுவை சிகிச்சை பண்ணுவதற்கு நம் ஒழுங்கீனம் காரணமல்ல, அரசின் நிர்வாகமின்மையால் தோன்றியுள்ள நகரங்களின் நேரங்காலமற்ற வாழ்வே காரணம்.


எந்த நகரத்தையும் முழுக்க சந்தைப்பொருளாதாரத்தின் வசம் ஒப்படைக்காமல் பல விதமான சேரிகளின் தொகுதியாக மாற்றாமல் அரசு பொறுப்பெடுத்து நிர்வகித்தாலே ஓரளவுக்கு சமத்துவமான தரமான வாழ்க்கை இங்கு கிடைக்கும். ஆனால் நகரங்களை நிர்வகிப்பது என்பது கார்ப்பரேட்டுகளுக்கு விளக்கு பிடிப்பது மட்டுமே என அரசுகள் நினைக்கிற வரை எதுவுமே மாறாது.


நம் எழுத்தாளர்களிலும் ஆதவன், அசோகமித்திரனுக்குப் பிறகு யாரும் நகரமயமாக்கலில் அவலங்களைப் பதிவு பண்ணவில்லை. மாறாக ஒன்று நகரங்களைப் பற்றி பேசத் தவிர்க்கிறோம், அல்லது ரொமாண்டிசைஸ் பண்ணுகிறோம். இதே போன்ற வாழத்தகுதியற்ற நகரங்களை பெருக்கினால் சமத்துவம் வந்துவிடும் என கனவு காண்கிறோம். ஆனால் நம் ஆயுள் இங்கு 70இல் இருந்து 50ஆகக் குறைந்து விடுகிறது என்பதை மறந்துவிடுகிறோம். நமது கிராமங்களும் நகரமயமாவதன் சிக்கல்களைப் பேசாமல் அதே பழைய கிராம மனநிலையிலே இருக்கிறோம். நம் கண்முன் நிகழ்வது எதையும் பரிசீலிக்காமல் ஒரு கற்பனையிலே வாழ்வது என்ன மனநிலை?

   

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...