Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

குப்பை மலை மீது அமைந்த நகரங்கள்




நாம் நகரங்களை ரொம்பவே ரொமாண்டிசைஸ் பண்ணுவதாகத் தோன்றுகிறது - குறிப்பாக நகர சமூகமே முற்போக்கு சமூகம், எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு, அதுவே வளர்ச்சி, அதுவேமாற்றம், முன்னேற்றம், அன்பு மணிஎன்றெல்லாம் நினைத்துக் கொள்கிறோம். இடதுசாரி மனநிலை கொண்டவர்களுக்கு நகரங்களை விமர்சிப்பதில் பெரிய மனத்தடை உள்ளது. எழுத்தாளர்கள் இன்னொரு பக்கம் நினைவேக்கத்திலேயே வாழ்வதால் அவர்களும் இப்பிரச்சினைகளை பேசுவதில்லை. ஊடகங்களுக்கோ நகரங்களை விமர்சித்தால் தம்மை பிற்போக்கு என்று கூறிவிடுவார்களோ எனும் தயக்கம் வேறு.

 நகரத்தின் பிரச்சினைகளை நாம் பேசுவதே இல்லை. நகரத்தில் எல்லாருக்கும் நியாயமான அடிப்படையான வசதிகள் வேண்டும் என நாம் கோருவதே இல்லை. கொடுக்கிற அஞ்சு பத்து பிச்சைய எப்படி கொடுத்தா என்ன என்று கவுண்டமணி ஒரு படத்தில் கேட்பார், அப்படி இருக்கிறது நாம் நகரத்தை அணுகும் முறை. வாய்ப்பு கிடைத்தால் நகரத்தில் இருந்து தப்பித்து ஊருக்கு ஓடிவிடலாம் என நினைப்பவர்கள் ஏராளம், அதற்கு காரணம் நன்றி மறக்கும் குணம் அல்ல, நகரத்தில் நமக்கு மூச்சுமுட்டுவது, அவ்வாறு இங்குள்ள வாழ்க்கைத்தரம், குறைபாடுகள், போதாமைகள் உள்ளதுதான்.


ஒவ்வொன்றாக பார்ப்போம்.

இடம்: நான் இடப்போதாமையை பற்றி சொல்லவில்லை. திட்டமிட்டு இங்கு இடங்கள் அமைக்கப்படும் முறையைப் பற்றி சொல்கிறேன். மத்திய வர்க்கமோ, மேல் மத்திய வர்க்கமோ இங்கு வாழும் நிலையைப் பார்த்தால் அவலமாக இருக்கிறது. பெங்களூரை எடுத்துக் கொண்டால் எவ்வளவு இருட்டான, சிறிய குறுகிய அறைகளைக் கொண்ட வீடுகளைக் கட்டி வைக்கிறார்கள். மூன்று பேர் சேர்ந்து நின்றால் பரஸ்பரம் இடித்துக் கொள்ள வேண்டியதுதான். அதே போலத்தான் இங்குள்ள தெருக்களும். இரவோ பகலோ தெரியாதபடியான வீடுகள் இவை. தஸ்தாவஸ்கி தன் நாவல்களில் வர்ணித்த பீட்டஸ்பர்க் தெருக்களைப் போல இருக்கிறது. நீங்கள் மின்விளக்கை அணைத்துவிட்டால் பெரும்பாலான வீடுகள் பகலிலும் இரவாகத் தோன்றும்


மாசு:

வெளியே போனால் தூசும், பறக்கும் குப்பைக்கூளங்களும், கட்டுமானப் பணிகளின் சிமெண்ட் துகள்களும், இன்னொரு பக்கம் செத்துக்கொண்டிருக்கும் தெருவோர மரங்களின் மகரந்த துகள்களும். இவையெல்லாம் சேர்ந்து ஏற்படுத்தும் காற்று மாசினால் இங்கு பல ஆயிரம் பேர்களுக்கு ஒவ்வாமை வியாதிகள் வந்து விடுகின்றன, அதன் விளைவால் நுரையீரல் பிரச்சினைகளுடன் அலைபவர்கள் அதிகம். குறிப்பாக இளைஞர்கள்.


தில்லி இதைவிட மோசமான காற்று மாசைக் கொண்ட ஊர் என்கிறார்கள். மும்பை இன்னும் நெரிசலான நகரம். சென்னை சற்று பெரிய நகரம், காற்றோட்டமானது என்பதால் மக்கள் தப்பிக்கிறார்கள். ஆனால் அங்கும் குப்பைக்கூளத்தின் நடுவே, மிகச்சிறிய அறைகளில் தான் வாழ்கிறோம், நான்கு பேர் சேர்ந்து நடக்க முடியாத தெருக்களில் தான் நடக்கிறோம்


சரி நகரம் என்றால் சற்று நெரிசடியாகத் தான் இருக்கும், அங்கு நிறைய பேர் வேலை தேடி வருகிறார்கள அல்லவா என்று சொல்கிறீர்களா? எனில் நீங்கள் சென்னையில் பெஸண்ட் நகர், போட் கிளப் போன்ற பகுதிகளுக்கு செல்லுங்கள். பெங்களூரிலும் பாரம்பரியமான பகுதிகளுக்கு சென்று பாருங்கள். அங்கு அனேகமாக கூட்டமே இருக்காது. மரங்களும் அமைதியும் காற்றோட்டமும் இருக்கும். அங்கு குடிபோக நீங்கள் பணக்காரர்களாக இருக்க வேண்டும்


அதெப்படி அவர்களுக்கு மட்டும் அப்படியான இடங்கள் வாய்க்கின்றன என்றால் அவர்கள் அதற்கு ஏற்ப நிலத்தின் மதிப்பை ஏற்றி வைத்துக் கொள்கிறார்கள். விலையேற்றத்தை பயன்படுத்தி நகரத்தின் எல்லா சிக்கல்களில் இருந்தும் தம்மைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள். நகரத்தின் நடுவே ஒரு சொர்க்கபுரியை அமைத்து வாழ்கிறார்கள். நானும் கண்ணனும் சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு பிரசித்தமான மெஸ்ஸுக்குப் போயிருந்தோம். ஒரே ஒரு ஆட்டோ நுழைந்தால் திரும்ப முடியாதமாதிரி ஒரு தெரு அது. ஆனால் அங்கே பாதி தெருவை அடைத்துக் கொள்ளும் அளவுக்கு பெரிய வீடொன்றைப் பார்த்தோம். அதற்குள் இரண்டு கார்கள் நிறுத்தும் அளவுக்கு இடமும் உண்டு.

ரியல் எஸ்டேட் விசயத்தில் அரசு தலையிடாததால் இப்படியான பாகுபாடுகள் தோன்றுகின்றன


நகரங்களில் மக்கள் சாதி பார்க்காமல் வாழ்கிறார்கள் என்று சொல்கிறவர்களுக்கு கண்ணில் ஏதோ பிரச்சினை இருக்கிறது. இங்கு சாதியும் வர்க்கமும் பிணைந்து கிடக்கிறது. என் வசிப்பிடத்தின் அருகிலேயே தலித்துகள் அதிகமாக வாழும் பகுதி இருக்கிறது. அங்கு எப்போது பார்த்தாலும் ஒரு மோசமான நெடி இருக்கும். இத்தனைக்கும் அங்கு குப்பைக்கூளங்களை நான் காண்பதில்லை. தெருவில் வீசப்படும் குப்பையையும் மாநகராட்சி தினமும் வந்து சுத்தம் பண்ணிவிடும். இந்த குமட்ட வைக்கும் நெடி எங்கிருந்து வருகிறது?


சூழலிலியல் சார்ந்து, குறிப்பாக லேண்ட் பில்ஸ் எனப்படும் நிலநிரப்பல் குப்பை மலைகளைப் பற்றி, ஆய்வு செய்யும் என் மாணவி ஒருவரிடம் கேட்ட போது அப்பகுதியில் ஒரு குப்பை பதப்படுத்தல் ஆலை ஒன்று இயங்குவதாகவும், அதன் புகை காற்றில் கலந்து துர்நாற்றத்தை ஏற்படுத்துவதாக சொன்னார். ஆனால் ஆலை கண்ணுக்கு புலப்படாமல் மறைந்திருக்கிறது போலும். சற்று தள்ளிப் போனால் சுத்தமாக பளிச்சென்று இருக்கும் நகரம் இங்கு வந்தால் அழுக்கு, நெடி, நெரிசடி என்றாகி விடுகிறது. ஒரு கிலோமீட்டரில் முக்கியமான மென்பொருள் நிறுவனங்கள், கல்லூரி இருக்கிறது. அங்கு இந்த ஆலையை வைக்காமல் ஏன் இப்பகுதியில் வைக்கிறார்கள் என யோசித்தால் நான் சொல்ல வருவது புரியும்


அந்த மாணவி புற நகர்ப்பகுதிகளில் உள்ள குப்பை மலைகளை ஆய்வு செய்கையில் அங்கு இதைவிட மோசமான காற்று மாசு உள்ளதை கண்டறிந்தார். அங்கும் தாழ்த்தப்பட்டவர்கள் அதிகமுள்ள பகுதிகளிலே இந்த குப்பை மலைகளை உருவாக்குகிறார்கள். இந்த மலைகள் போகப்போக நிலத்தோடு தாழ்ந்துவிடும். அப்போது அதன் மேல் புதிய மலைகளை உருவாக்குவார்கள். விளைவாக ரசாயனக் கழிவு உள்ளிட்ட மோசமான குப்பைகள் நிலத்தில் புதைந்து நிலத்தடி நீரை மாசுபடுத்து விடுகின்றன. எந்தளவுக்கு என்றால் அங்குள்ள நீரை எடுத்து ஆய்வு செய்தால் அதில் மனிதர்கள் குடித்தால் ஏகப்பட்ட நலக்கேடுகள் விளைவிக்கும் ரசாயனங்கள் கலந்துள்ளதை அம்மாணவி கண்டுபிடித்தார். அங்குள்ள குப்பை பதப்படுத்தும் ஆலைகள் இன்னொரு பக்கம் காற்றை விஷமாக்கி விடுகின்றன. இதைப் பற்றி அவர் ஒரு அறிக்கையை தயாரித்து மாநகராட்சிக்கு அனுப்பி விசாரித்திருக்கிறார். உடனே அவர்கள் அந்த குப்பை மலையை சுற்றி காவலர்களை நியமித்து அழுக்கையும் விஷத்தையும் பாதுகாக்கும் வேலையில் இறங்கி விட்டனர். நான் சில மாதங்களுக்கு முன் சென்னைக்கு வந்திருந்த போது வடசென்னை பகுதிகளிலும் இதேவிதமான நெடியைக் கண்டிருக்கிறேன். அங்கு நிற்கும் குப்பை லாரிகளால் தான் என நினைத்தேன். இப்போது தான் புரிகிறது

 சரி நகரத்துசேரிகளில்தான் இப்படி நிலையா என்றால் நீங்கள் இப்போது இருக்கும் இடம் கூட முன்பு ஒரு குப்பை மலை தான் என்றார் அம்மாணவி. அவர் ஒரு செய்தியைக் காட்டினார். நாங்கள் இருப்பதற்கு அருகில் உள்ள நிம்ஹான்ஸ் மருத்துவமனை வளாகங்களை அமைப்பதற்காக அப்பகுதியில் தோண்டிய போது மிகப்பெரிய கருங்கற்கள் தடுத்திருக்கின்றன. என்னடா இங்கு இவ்வளவு பெரும் பாறைகளா என மேலும் தோண்டிப் பார்த்தால் அவை பல ஆண்டுகளுக்கு முன்பு புதைந்து போன குப்பை மலைகளின் இறுகிப் போன கல்வடிவம். இப்படித்தான் நகரங்கள் உருவாகின்றன - குப்பைக்கு மேல் குப்பை, மலைக்கு மேல் மலைகள்.


உணவு:


சென்னையிலோ உணவு ஓரளவுக்கு பரவாயில்லை. பெங்களூரில் உணவகங்களில் கிடைக்கும் உணவை ஒரு ஆண்டு தினமும் சாப்பிட்டால் நிச்சயமாக பல நோய்கள் ஏற்படும். அவ்வளவு தரமற்ற அசுத்தமான உணவு. நான் அண்மையில் ஒரு உணவகத்துக்குப் போனேன். பிரசித்தமான கேரள பிராண்ட் ஒன்றின் உணவகம் அது. ஒரு தோசை கேட்டேன். உள்ளே போன பரிசாரகரை காணவில்லை. சற்று நேரத்தில் சமையலறையில் இருந்து ஒரு பெரிய பெருச்சாளி குறுக்கே ஓடி என்னைக் கடந்து போனது. அதைத் தொடர்ந்து அந்த பரிசாரகர் வந்துஎன்ன தோசை சார் சொன்னீங்க?” என்கிறார். நான் வெறும்சாயாபோதும் என்று சொல்லி தப்பித்துவிட்டேன்


அசுத்தம் மட்டும் பிரச்சினை அல்ல, இவர்கள் பயன்படுத்தும் பழைய எண்ணெய், பழைய பொருட்கள். நான் வழக்கமாக மீன்வாங்கும் கடையில் விற்காத பழைய மீனை எப்படி அப்புறப்படுத்துவார்கள் என்று கேட்டேன். வார இறுதியில் ஓட்டல்காரர்கள் வந்து பாதி விலைக்கு வாங்கிப் போவார்கள் என்றார் கடைக்காரர். “நாத்தமடிக்காதா?” “இல்லீங்க, அவங்க அதுக்கேத்தாபிடி மசாலா போட்டு பொரிச்சி வெச்சிருவாங்க சார்.” இந்த அழுகிய மீன்களையா வறுத்து ஒரு துண்டு 130 ரூபாய் என விற்கிறார்கள் இந்த சேட்டன்கள்?


உலகிலேயே இனிக்காத பழங்கள் பெங்களூரில் தான் கிடைக்கும். இந்த பருவத்தில் கிடைக்கும் மாம்பழங்களைப் பாருங்கள். பார்க்க பழுத்திருக்கும், ஆனால் அவை நிஜத்தில் காய்களே. அரைகுறையாக ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மாம்பழங்களை தினமும் கடந்து போகிறேன். வாழைப்பழங்களும் அப்படித்தான். வாசனையில்லாத வாழைப்பழங்கள். என் இளமையில் எங்கள் ஊரில் ஒரு வாழைக்குலை பழுத்தால் வீடு முழுக்க மணந்துகொண்டே இருக்கும். அங்கு கடைகளில் பாதி பழுத்த குலைகளை தொங்கவிட்டிருப்பார்கள். அவை மெல்ல மெல்ல பழுக்கும்வரை இணுக்க மாட்டார்கள். மக்களும் தோல் கறுத்த பழங்களையே வாங்குவார்கள். இங்கு கிடைக்கும் பழங்களை எடுத்து முகர்ந்தால் கூட பச்சைத்தோலின் வாசனை. ஆனால் இங்கு மக்கள் தோல் கறுத்திருந்தால் அதை வாங்க மறுக்கிறார்கள் என்றால் வாழைப்பழங்களை பழுக்க விடவே கடைக்காரர்கள் தயங்குகிறார்கள். ஒரு வாழைப்பழத்தைக் கூட எப்படி வாங்க வேண்டும், சாப்பிட வேண்டும் என்று தெரியாத மக்கள் எப்படி இருக்க முடியும் என எனக்குப் புரியவில்லை. வாழைப்பழமே இப்படி எனும் போது வேறு உணவுகளைப் பற்றி சொல்லவே தேவையில்லை. பிளாஸ்டிக்கில் இட்லி செய்து கொடுத்தால் கூட வாங்க வாயில் போட்டு தண்ணீரைக் குடித்துக்கொண்டு போய்க்கொண்டே இருப்பார்கள்.


ஒரு நகரமே மொத்தமாக முட்டாளாக்கப்படுகிறது


பொருளாதாரம்:


நகரங்களின் ஒரே சிறப்பு பொருளாதாரம். அங்குள்ள நிதியாதாரம். ஆனால் பெங்களூர் போன்ற நகரங்களில் நம் ஊதியத்தில் மூன்றில் ஒரு பகுதி வாடகையிலே போய்விடுகிறது. இன்னொரு பகுதி ஷாப்பிங்கிலும் மளிகை சாமான் வாங்குவதிலும் போய்விடுகிறது. மீதமிருக்கும் பணத்தில் பல்வேறு கட்டணங்களை செலுத்திவிட்டுப் பார்த்தால் ஒன்றும் எஞ்சுவதில்லை. ஒன்று நீங்கள் லட்சங்களில் சம்பாதிக்க வேண்டும், அல்லது கணவன், மனைவி உழைத்து இரட்டை சம்பளம் வேண்டும்

முதல் பிரச்சினை, நிலத்தின், வீட்டின் மதிப்பை அரசு தீர்மானிக்காமல் ரியல் எஸ்டேட் சந்தையையும் வீட்டுரிமையாளர்களின் மாபியாவும் முடிவெடுக்க அனுமதிப்பதே. மென்பொருள் துறையிலும் சிலர் மட்டுமே லட்சங்களில் சம்பாதிக்கிறார்கள். ஆனால் அவர்களை மனதில் கொண்டே வாட்கையை உரிமையாளர்கள் தீர்மானிக்கிறார்கள். மற்றவர்கள் எங்கே போவது என யோசிப்பதில்லை. நான்கு வீடுகள் சொந்தமாக இருந்தால் வாடகையிலேயே 80,000 வந்துவிடும். தொண்ணூறுகளுக்கு முன்பு வீட்டை வாங்கிப் போட்டவர்கள் இப்படி உட்கார்ந்தே தின்று கொண்டுஇந்த வெளியூர்க்காரங்களே சரியில்லஎன நாட்டாமை பண்ணுகிறார்கள். இது கூட பரவாயில்லை - என் தோழி ஒருவர் தன் வாடகை வீட்டுக்கு 60,000 மாத வாடகை கொடுக்கிறார். அப்படி அந்த வீட்டில் என்னதான் இருக்கிறது என்றால் அதே இரண்டு படுக்கையறை, ஒரு ஹால் வகை வீடுதான். அது ஒரு பெரிய வளாகத்தில் நீச்சல் குளம், ஜிம் என இருக்கும் அபார்ட்மெண்ட். காவலாளி, சோதனைக்கான படக்கருவி எல்லாம் உண்டாம். ஆனால் அடிப்படையில் அதே இரண்டு படுக்கையறை வீடுதான். அதே குருவிக்கூடுதான். என் ஊரில் இதே வீடு 6000க்கு போகும். அங்கு கண்காணிக்க காவலர் எல்லாம் வேண்டாம். எதிர்வீட்டு கிழவியே கண்கொத்தி பாம்பாக பாத்திருப்பார். நீச்சல்குளம் வேண்டாம். நடந்து போனாலே குளம் வந்து விடும்.


வருடாவருடம் பெட்ரோல் விலை உயர்வு, பணவீக்கம் என பணத்தின் மதிப்பு குறைந்து கொண்டே போக நகரவாசிகள் மேலும் சம்பள உயர்வு கிடைக்கும் வேலைகளைத் தேடி அலைந்து கொண்டே இருக்கிறார்கள். வீட்டுக்கடன், கார் கடன், பைக் கடன் என கடன்களுக்காகவே வாழ்கிறார்கள். அரசு ஓரளவுக்கு பெட்ரோல் விலையையும் பணவீக்கத்தையும் கட்டுப்படுத்தி, வீட்டு, கடை வாடகைகளையும், நிலத்தின் மதிப்பையும் குறைத்தால் அது பண மதிப்பை அதிகரிக்கும், கறுப்புப்பணத்தை ஒழிக்கும், வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும். ஆனால் செய்ய மாட்டார்கள்.


ஆரோக்கிய கேடு:


மனிதர்கள் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பு சாப்பிட்டு தூங்கும் விதத்தில் அமைக்கப்பட்டவர்கள். இதை circadian rythm என்கிறார்கள். இரவு முழுக்க விழித்திருந்து சாப்பிடுகிறவர்கள் இன்று பெருகி விட்டார்கள். அரசு 11 மணிக்கு மேல் உணவகங்கள் இயங்கக் கூடாது என்று சொல்லிக்கொண்டே மக்கள் புழக்கம் அதிகமான பகுதிகள் மட்டும் சிறப்பு அனுமதி கொடுக்கிறார்கள். ஸொமேட்டோ டெலிவரி ஆட்கள் இரவு முழுக்க உணவுடன் அலைகிறார்கள். நான் சந்திக்கிற யாரிடமும் தூங்கினீர்களா என்று கேட்பேன். ஒருவர் கூட தூங்கினேன் என்று சொல்வதில்லை. மூன்று, நான்கு மணிநேரம் தூங்கினாலே பெரிய விசயம். இன்று கணிசமானோருக்கு உடற்பருமன், ரத்தக்கொழுப்பு, ரத்தக்கொதிப்பு, மன அழுத்தம் ஏற்படுவதற்கு, நாற்பதுகளில் பலரும் இதய அறுவை சிகிச்சை பண்ணுவதற்கு நம் ஒழுங்கீனம் காரணமல்ல, அரசின் நிர்வாகமின்மையால் தோன்றியுள்ள நகரங்களின் நேரங்காலமற்ற வாழ்வே காரணம்.


எந்த நகரத்தையும் முழுக்க சந்தைப்பொருளாதாரத்தின் வசம் ஒப்படைக்காமல் பல விதமான சேரிகளின் தொகுதியாக மாற்றாமல் அரசு பொறுப்பெடுத்து நிர்வகித்தாலே ஓரளவுக்கு சமத்துவமான தரமான வாழ்க்கை இங்கு கிடைக்கும். ஆனால் நகரங்களை நிர்வகிப்பது என்பது கார்ப்பரேட்டுகளுக்கு விளக்கு பிடிப்பது மட்டுமே என அரசுகள் நினைக்கிற வரை எதுவுமே மாறாது.


நம் எழுத்தாளர்களிலும் ஆதவன், அசோகமித்திரனுக்குப் பிறகு யாரும் நகரமயமாக்கலில் அவலங்களைப் பதிவு பண்ணவில்லை. மாறாக ஒன்று நகரங்களைப் பற்றி பேசத் தவிர்க்கிறோம், அல்லது ரொமாண்டிசைஸ் பண்ணுகிறோம். இதே போன்ற வாழத்தகுதியற்ற நகரங்களை பெருக்கினால் சமத்துவம் வந்துவிடும் என கனவு காண்கிறோம். ஆனால் நம் ஆயுள் இங்கு 70இல் இருந்து 50ஆகக் குறைந்து விடுகிறது என்பதை மறந்துவிடுகிறோம். நமது கிராமங்களும் நகரமயமாவதன் சிக்கல்களைப் பேசாமல் அதே பழைய கிராம மனநிலையிலே இருக்கிறோம். நம் கண்முன் நிகழ்வது எதையும் பரிசீலிக்காமல் ஒரு கற்பனையிலே வாழ்வது என்ன மனநிலை?

   

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...