Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

செக் லிஸ்ட்




இன்று ஏராளமானோர் அரசியல் விவாதங்களை யுடியூப் சேனல்கள் வழியாக பின் தொடர்கிறார்கள் என்று அறிவேன். குறிப்பாக இளைஞர்கள். அவர்கள் செய்தி வாசிப்பதையோ செய்தி சானல்கள் வழி கேட்பதையோ விட ‘செய்தி விவாத சேனல்கள்’ வழி அறிவதையே விரும்புகிறார்கள். இது தமிழ் நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுக்க உள்ள நிலைதான் என்பதை ஒரு கல்வியாளனாக நன்கறிவேன். இந்த பின்னணியில் தான் ‘வார் ரூம்’ எனப்படும் போலி செய்தி பரப்பாளர்கள் கட்சிகளால் பணம் கொடுத்து அமர்த்தப்படுகிறார்கள். அவர்களைக் கையாளும் தரகர்களும் உருவாகி உள்ளார்கள். இவர்களுடைய இடுபணி ஒரு கதையாடலை உருவாக்குவது (திமுக ஊழல் கட்சி, பாஜக முன்னேறி வருகிறது, இந்த குற்றவாளி நிஜத்தில் நல்லவர், அவர் மீது பொய்ப் புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன, இந்த கொலையே அடிப்படையில் ஒரு நாடகம், அவர் தானாகவே ….) எனக்கு மதன் மீதுள்ள ஆர்வம் அவர் இவர்களில் சிலரையாவது அம்பலப்படுத்தி உள்ளார், அவர் தானும் இத்தகைய வார் ரூம் ஒன்றில் இருந்தவரே என ஒப்புக்கொள்வதாலே (அவர் இப்போதும் யாரோ ஒருவரின் ஊதிய பட்டியலில் இருப்பதாகவே எண்ணுகிறேன்). சவுக்கு, மாதேஷ், பீலிக்ஸ், முக்தார், மணி என ஏராளமானோர் அம்பலப்பட்டு வந்துள்ள நிலையில் நான் இப்போது இந்த சேனல்களில் பேசுகிற யாரையும் நம்புவதில்லை என்பதால் ஒரு செக் லிஸ்டை உருவாக்கி உள்ளேன். அதை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்:
1) ஒரு அரசியல் சேனலில் திரும்பத் திரும்ப ஒருவரே விருந்தாளராக அழைக்கப்பட்டால் அவரும் அந்த சேனல் நிர்வாகிகளும் கூட்டுக்களவாணிகள்.
2) ஒரு அரசியல் விமர்சகர் பயங்கரமாக கண்களை உருட்டி, குரலில் ஏற்றத்தாழ்வுகளுடன் நாடகீயமாக உணர்ச்சிப்பெருக்குடன் பேசினால் அவர் ஒரு போலி. விரலை உயர்த்தி எதையாவது சொன்னாலே ஒரு புன்னகையுடன் நகர்ந்துவிட வேண்டும்.
3) எந்த பின்னணியும் தெரியாத ஒருவர் ‘மூத்த பத்திரிகையாளர்’ எனும் அடையாளத்துடன் திடீரென அறிமுகப்படுத்தப்பட்டால் கவனம். ஏனென்றால் அவரது பின்னணியின்மை ஒரு களங்கமின்மையை கட்டுவிக்க உதவுகிறது. அதை வைத்து அவரை நம் மனத்தில் விதைத்து பின்னால் அறுவடை பண்ணப் பார்க்கிறார்கள்.
4) ஒருவர் தொடர்ந்து பல சேனல்களில் தோன்றி நேர்முகம் எனும் பெயரில் ஒரு அரசியல் தலைவரையோ அரசியல்வாதியையோ திரும்பத் திரும்ப விமர்சிக்கிறார் என்றால் அவர் சம்மந்தப்பட்டவரை ‘மிரட்டுகிறார்’ எனப் புரிந்து கொள்ள வேண்டும். மிரட்டப்படும் நபர் இவரைத் தொடர்பு கொண்டு ‘ப்ளீஸ் நிறுத்துங்க’ என கெஞ்சும் வரை மிரட்டுவார்கள். ஒரு தொகையை செட்டில்மெண்டாக வாங்கிய பின்னர் அவரைத் திட்டுவதை நிறுத்தி விட்டு இன்னொருவரை ‘மிரட்ட’ ஆரம்பிப்பார். அல்லது ஏற்கனவே கடுமையாக விமர்சித்த அந்த நபரைப் பற்றி பட்டும்படாமலோ பாராட்டியோ (“அண்ணாமலை செஞ்சது சரிதாங்க, ஆமா நானே தாங்க சொல்றேன், இந்த விசயத்தில சரிதான்!”) அவரது பிம்பத்தை விமர்சித்தபடியே மிகைப்படுத்தியோ (“அண்ணாமலைய குறைச்சு மதிப்பிடாதீங்க”) பேசினால் அவர் அந்த நபரின் ஊதிய பட்டியலுக்கு வந்துவிட்டரெனப் பொருள். நீங்கள் பின் தொடரும் ஒருவருடைய ஒரு வருட காணொளிகளின் பட்டியலை சும்மா பார்த்தாலே இந்த மாற்றத்தைப் புரிந்து கொள்ளலாம்.
5) பேட்டி எடுப்பவரின் பெயரை ஸ்வாதீனமான அழைத்து பேசினாலோ அவர் இவர் பேச எடுத்துக் கொடுப்பதாகத் தோன்றினாலோ இவர்கள் கூட்டுக்களவாணிகள் தாம்.
6] “என்னுடைய சோர்ஸ்படி”, “நான் என்னோட இத்தனை வருச பத்திரிகை அனுபவத்தில சொல்றேன்” என ஆரம்பித்தாலும் இவர்கள் மோசடிப் பேர்வழிகளே.
7) அறச்சீற்றத்தை நம்பாதீர்கள்.
8] ஒரு செய்தி சேனலில் வேலை பார்த்து பெயர் வாங்கிவிட்டு அந்த வேலையில் இருந்து வந்து ஒருவர் யுடியூப் சேனல் ஆரம்பித்து தன் தொடர்புகளை பயன்படுத்தி பேட்டி அது இதுவென பரபரப்பாக இயங்கினால் அவர் ஒரு மோசடிப் பேர்வழியே. ஒரு சேனலை சொந்தமாக நடத்த ஒரு நல்ல முதலீடு வேண்டும். சுலபத்தில் யாராலும் அப்படி பண்ணிட முடியாது.
9) ஒருவர் பகிங்கரமாக ஒரு கட்சியை ஆதரித்தோ (திமுகவோ தமிழ் தேசியவாத கட்சியோ) எதிர்த்தோ (பாஜக) தன் யுடியூப் சேனலில் களமாடினால் அவரும் மோசடிக்காரரே. ஏனென்றால் உங்கள் கட்சி அனுதாபத்தை / வெறுப்பை சுரண்டி ஒரு நடுநிலையாளர் பிம்பத்தை உருவாக்கி உங்கள் மனதுக்குள் நீங்கள் ஆதரிக்கிற கட்சிக்கு எதிரான கதையாடலை விதைப்பதே இவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இடுபணி. இவர்களும் பாஜகவின் ஊதியப் பட்டியலில் இருப்பவரே. திமுகவுக்கான ஊதியப்பட்டியலில் இருந்தவர்கள் தேர்தலுக்குப் பின்பு நீக்கப்பட்ட நிலையில் இப்போது அண்ணாமலையின் பட்டியலுக்கு போயிருக்கிறார்கள். நாளை இன்னொருவரின் பட்டியலுக்குப் போவார்கள். நம்முடைய மறதியும் அக்கறையின்மையுமே இவர்களுடைய முதலீடு.
10) இவர்களை ஆதரித்து யுடியூபிலும் பேஸ்புக், டிவிட்டரிலும் கள்மாடுபவர்கள் ஒன்று இவர்களால் தாம் ஆதரிக்கும் கட்சிக்கு லாபமிருக்கும் என அப்பாவித்தனமாக நம்பும் ரசிகர்கள். Passive supporters. இவர்களைப் பொருட்படுத்தாதீர்கள்.
எனக்கு எந்த சார்பும் இல்லை, நான் வெறுமனே ஆளுங்கட்சியின் ஆட்கள் பற்றி கசிய விடப்படும் ருசிகரமான தகவல்களுக்காகவே பார்க்கிறேன் என்றால் உங்களையும் அவர்கள் சில மாதங்களுக்குள்ளாகவே மூளைச்சலவை பண்ணிவிடுவார்கள். நீங்கள் மதத்தைப் பற்றி அறியும் அறிவார்ந்த நோக்கத்துக்காக ஒரு கார்ப்பரேட் சாமியார் / காஸ்பல் பேச்சாளரின் கூட்டங்களுக்கு தொடர்ந்து போனால் என்னவாகுமோ அதுவே இங்கும் நடக்கும். உங்கள் வாழ்க்கைக்கு என்ன தேவையோ அதைத் தெரிந்து கொண்டு முன்னேறுங்கள். அரசியல் பற்றி கட்சிப் பேச்சாளர்கள் சொல்வதை கவனியுங்கள். மரபான செய்தித்தாள்களைப் படியுங்கள். செய்திச் சான்ல்களைப் பாருங்கள் (விவாத நிகழ்ச்சிக்குள் போகாதீர்கள்).
ஒருமுறை அண்ணாமலை தமிழக ஊடகங்களை வழிக்கு கொண்டு வரப்போகிறேன் என்று சொன்னார். அவர் ஊடக கட்டுப்பாடு, தடை எனப் போகப்போகிறார் என நினைத்தால் மாறாக முதலில் ஊடக முதலாளிகளை தில்லிக்கு அழைத்து சென்று ஒரு விருந்து அளித்து நிறைய கையூட்டை உத்தரவாதம் பண்ணினார். அதன் பிறகு ஊடக்காரர்களிடம் உங்கள் விலை என்ன என்று ஒரு சந்திப்பின் போது நேரடியாகக் கேட்டு அது பிரச்சினை ஆனது. ஆனால் அவர் நிஜமாகத் தான் கேட்டிருக்கிறார் போல. அவர் அடுத்து உள்ளூர் யுடியூபர்களை வளைத்துப் போடும் பொறுப்பை சில தரகர்களுக்கு அளித்தார். அவர் மட்டுமல்ல திமுக நிர்வாகமும் தான் இதை கடந்த தேர்தல் காலத்தில் செய்துள்ளது - என்ன கொடுமை என்றால் ஒரே தரகரே இரு கட்சிகளுக்காகவும் வேலை பார்த்திருக்கிறார். இப்போது திமுகவுக்கு இவர்களைத் தேவையில்லை, ஆனால் பாஜகவின் அண்ணாமலைக்கு தேவை உள்ளது. அவர் கட்சியை விட்டுப் போனதும் இவர்கள் மீண்டும் ஒவ்வொருவர் வீட்டுக்கதவாக மீண்டும் தட்டுவார்கள். ஏதாவது ஒரு தலைவரிடம் போய் அண்டிக்கொள்வார்கள், யாரையாவது மிரட்டி செட்டில்மெண்ட் வாங்குவார்கள். இவர்களுக்கு நாம் இரையாகி நம்மை மறைமுகமாக பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. நாம் பார்ப்பதால் உருவாகும் சில லட்சம் பார்வைகளே இவர்களுடைய பிம்பம்.
சனியன்கள்! மருந்தடித்தாலும் சாகாத கரப்பான்கள். இவர்கள் ஒழிய வேண்டும்.

Comments

Popular posts from this blog

நடிகையரின் பிம்பச்சிறை - அழகு ஏன் ஒரு பிரச்சினையாகிறது?

  ( இது நவம்பர் 2025 இல் எழுதப்பட்ட கட்டுரை . டிசம்பர் 2025 உயிர்மையில் வெளியானது . ஆனால் இப்போதும் படிக்கத்தக்க ஒரு முக்கிய பிரச்சினைதான் இது என்பதால் பகிர்கிறேன் .) அண்மையில் கௌரி கிஷன் தன்னைக் குறித்து ஒரு யுடியூபர் உருவக்கேலிக் கேள்வியை எழுப்பியதாகச் சொல்லி அதை விமர்சித்த சம்பவத்தைப் பார்த்தேன் . தன் திறமையாலே தான் ஜொலிக்க விரும்புவதாகவும் , செறிவான வேடங்களிலே நடிக்க முயல்வதாகவும் அவர் கூடுதலாகச் சொன்னார் . எனக்கு இதுதான் பிரச்சினையின் மையம் , அவரது உடல் எடை அல்ல என்று தோன்றுகிறது . ஏன் ஆண்கள் மீது என்றுமே இவ்வகை கேள்விகள் வைக்கப்படுவதில்லை என்றால் தமிழ் சினிமா அவர்களை மட்டுமே நடிகர்களாகக் காண்கிறது . நடிகைகள் பார்வை இன்பம் அளிக்கிற பொம்மைகள் . அவர்கள் எவ்வளவுதான் புகழ் பெற்றாலும் விதவிதமான பாத்திரங்களை அவர்களால் பூண முடியாது . வந்து சிரித்து கவர்ச்சியாக நடனமாடி க்யூட் முகபாவனைகள் காட்டிவிட்டுப் போய்விட வேண்டும் . முப்பது படங்களில் நடித்தாலும் அந்த முப்பதும் ஒரே வேடம்தான் . வணிகப் பட நாயகர்கள...

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

சாகும்வரை பொழுதுபோக்கு

  "Indeed, we may have reached the point where cosmetics has replaced ideology as the field of expertise over which a politician must have competent control." - Amusing Ourselves to Death, Neil Postman "ஒரு அரசியல் தலைவர் முழுமையான ஆளுகை கொண்டிருக்க வேண்டும் என நம்பிய கருத்தியலை வெளித்தோற்றம் பதிலீடாக்கி விட்ட ஒரு புள்ளியை நாம் இன்று எட்டி விட்டிருக்கிறோம்." "சாகும்வரை பொழுதுபோக்கு", நீல் போஸ்ட்மேன்