முருகேச பாண்டியனுடன் போனில் நிறைய பேசியிருக்கிறேன், இலக்கிய கூட்டங்களில் சந்தித்திருக்கிறேன். ஆனால் இன்றே அவருடன் அருகில் அமர்ந்து அளவளாவும் வாய்ப்பு கிடைத்தது.
முருகேச பாண்டியனிடம் ஒரு வாலிப ஹிப்பித்தனம் உள்ளது, அதை இன்று தான் கவனித்தேன். இலக்கியவாதிகளிடம் உரையாடும் போது ஒரு சொல்லுக்கு பல அர்த்தங்களை வைத்திருப்பார்கள், புன்னகையிலும் பார்வையிலும் உச்சரிப்பின் அழுத்தத்திலும் அரசியலின் கூர்விளிம்பு பளபளத்தபடி இருக்கும். ஓ அப்படி நினைத்து சொல்லிட்டாரோ, நாமதான் அவசரப்பட்டு பதில் சொல்லிட்டோமோ என நாக்கை கடிக்கத் தேவையிருக்கும். ஆனால் முருகேச பாண்டியனிடம் இந்த சதுரங்க விளையாட்டெல்லாம் கிடையாது. அவர் பேசும் போதே மனதில் என்ன நினைக்கிறார் எனத் தெரிந்து போகும், நினைப்பதை நம்மிடம் சொல்லிவிட்டே அதை நினைக்கும் அளவுக்கு சரளமானவர். எனக்கு அவரது இந்த வெளிப்படைத்தன்மை, கள்ளங்கபடமற்ற மனப்போக்கு பிடித்திருந்தது. அவரது கருத்துக்களில் ஒரு குழந்தைத்தனமான மூர்க்கமும் உள்ளது. அதை ரசித்தேன். ஒரு 17 வயது பையனிடம் பேசுவதைப் போன்றே தோன்றியது. அதே தைரியம், அலட்சியம், தன்னம்பிக்கை, ஏதோ வாழ்க்கையின் கோட்டைக் கதவுகள் இனிமேல் தான் திறக்கப் போகின்றன என்பதாக நம்பும் வந்தியத்தேவன் மனோபாவம்!
ஒரு இலக்கிய பேச்சாளராக அவரது ரசனையான, அதகளமான பேச்சு எனக்குப் பிடிக்கும். கவிதை, நாவல், கதைகள் என பரவலாக அறிமுகப்படுத்தி எழுதியவர். தன் எழுத்தில் துளியும் அலுப்பு தோன்றாமல் எழுதத் தெரிந்தவர். நேரில் பேசும் போது விமர்சகர் எனும் தோரணை சிறிதும் தெரியாமல் "ஹா ஹா அது வந்து..." என ஆரம்பிக்கக் கூடியவர் என்பதையும் குறிப்பிட வேண்டும்!
Comments