நானும் என் இளநண்பனும் பேசிக்கொண்டிருக்கையில் அவன் அடிக்கடி கேட்பான்: “நாம் ஏன் தத்துவத்தை வாசிக்கிறோம்?” நான் சொல்வேன், “சும்மா ஒரு ஜாலிக்காக." "தத்துவம் ஏன் முக்கியம்?" "தத்துவம் முக்கியம் அல்ல. அதில் எந்த மகத்துவமும் இல்லை.” என்னுடைய இந்த பதில் அவனை ஆழமாக தொந்தரவு செய்யும் என எனக்குத் தெரியும்.
தத்துவம் ஜாலி பொழுதுபோக்கு என்றால் டிவி பார்ப்பதும் தத்துவ விவாதமும் ஒன்றா? ஆம், ஒன்று மற்றொன்றை விட சவாலானது என்பதைத் தவிர, இரண்டும் அடிப்படையில் ஒன்று தான். ஒவ்வொன்றும் மற்றொன்றின் மீது நின்றிருக்கிறது. தத்துவ விவாதம் பல்வேறு நிபந்தனைகள் மீது அமைந்திருப்பது. இலக்கியமும், எல்லா கலைகளும் அவ்வாறே. ப்பூ என்றால் காணாமல் போய் விடும். (அதனாலே சாக்ரடீஸ் உண்மைக்காக உயிரைக் கொடுத்தது பெரும் பிழை என கருதுகிறேன். இல்லாத ஒன்றுக்காக இருக்கிற ஒன்றை ஏன் கொடுக்க வேண்டும்?) அதை தொடர்ந்து நமக்கே நினைவூட்டி இன்மையை நேசிப்பதே முக்தி.
தத்துவம் பேசுவது போரடிக்கிறது என்றால் போர்ன் பார்க்கலாம். தூங்கலாம், சாப்பிடலாம், பணமீட்டலாம், வேடிக்கை பார்க்கலாம். இவற்றில் மேல் கீழ் எதுவும் இல்லை. நான் இதையெல்லாம் நான் சொன்னாலும் நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் அவன் அக்கேள்வியை கேட்பதை மட்டும் தவிர்க்க மாட்டான்.
Comments