PS II முதல் பாகத்தை விட பார்க்கும்படியாக இருக்கிறது. சில காதல் காட்சிகள் “காற்று வெளியிடையை” நினைவுபடுத்தின. அப்படத்தில் வரும் காதலின் வதை, சரணடைதலின் துன்பம், தன்னை இழத்தலின் திளைப்பு எனக்குப் பிடித்திருந்தது. இதிலும் தான். வேறு சில காட்சிகள் பரபரப்பாக இருந்தன. “பொன்னியின் செல்வனை” காட்பாதர் பாணியில் எடுக்கும் மணிரத்னத்தின் முயற்சி புன்னகையை வருவித்தது. முதல் பாகத்தைப் போல சில இடங்களாவது துண்டுத்துண்டாக அல்லாமல் ஒருமித்த தன்மையைக் கொண்டிருந்தன. சில பாடல்கள் பிடித்திருந்தன.
ஆனால் இதை மீறி நூறு குறைகளை என்னால் சொல்ல முடியும். இரண்டு பாகங்களையும் பார்க்கையில் இப்படத்தின் கதையமைப்பிலும் எழுத்திலும் உள்ள கோளாறுகள் எனக்கு மட்டுமல்ல பல்லாயிரம் மக்களுக்கும் புரிந்திருக்கும். ஏனென்றால் இதன் கோளாறு மிக மிக அடிப்படையானது: சினிமாவில் இரு மணிநேரங்களில் நீங்கள் ஒரு பெருங்கூட்டத்தின் கதையை பல பார்வைகள் வழி சொல்லக் கூடாது. ஒருவருடைய பார்வையில், அவரது மன அமைப்பின் பிழையின் அடிப்படையில் தோன்றும் தேடலின் போக்கில் ஒரு பெருங்கூட்டத்தின் சித்திரத்தை வழங்கலாம். இதுவே PSஇன் மிகப்பெரிய பிழை. பத்து கல்யாணங்களில் ஒரே சமயம் ஒரே இடத்தில் நடக்க அதில் திடீரென அமளி ஏற்பட்டு யார் மணப்பெண் எனத் தெரியாமல் தாலி கட்டி குழப்பம் வருவதைப் போல் ஒரு மனநிலை. இது நமக்கே புரியும் போது சினிமாவுக்குள் மூன்று பத்தாண்டுகளுக்கு மேல் இருக்கிற இயக்குநருக்குத் தெரியாதா? நிச்சயமாகத் தெரிந்திருக்கும். எனில் அவரது நோக்கம் வேறு - அது என் மரமண்டைக்கு இப்போதுதான் புரிந்தது.
இயக்குநர் இந்த படத்தின் வணிக இலக்கை துல்லியமாக புரிந்து வைத்திருக்கிறார்: (1) பொன்னியின் செல்வனை அப்படியே திரையில் அளிப்போம்; (2) நிறைய நட்சத்திரங்களை பங்களிக்க வைப்போம். இந்த இரண்டும் சேர்ந்தால் அது பெரும் கவனம் பெறும், வசூலும் கிடைக்கும். இப்படி எடுக்கையில் என்னென்ன குறைகள் நேரும் என்பதும் அவருக்குத் தெரிந்திருக்கும். எனில் இதை ஒரு கச்சிதமான திரும்பத் திரும்ப பார்க்கக் கூடிய வணிகப் படமாக எடுக்க முடியாது. எடுக்கவும் கூடாது. இவ்வகை படத்தை அதன் வணிக கட்டமைப்புக்கு வெளியே இப்படத்தை யாரும் பெரிதாக ரசிக்கவோ கொண்டாடவோ மாட்டார்கள். ஆனால் ஒன்றைப் பெற இன்னொன்றைக் கொடுத்தாகத் தான் வேண்டும்.
கேள்வி: இதை ஏன் ஒரே படமாக எடுத்தார், இதில் 5 படங்களேனும் இருக்கின்றனவே?
அப்படி எடுத்தால் ஒருவேளை பெரும் பொருட்செலவோ பரபரப்போ தொடர்ந்து இருக்கப் போவதில்லை. வந்தியத்தேவனின் கண்ணோட்டத்தில் மட்டும் விரியும் கதை, கரிகாலனின், பொன்னியின் செல்வனின் கதைகள் என எடுத்தால் அதை அப்படங்களின் தரத்தின் அடிப்படையில் மட்டுமே ஓட வைக்க வேண்டும். அதன் லாபம் இந்தளவுக்கு பெரிதாக இருக்காது. இயக்குநருக்கு இப்படி ஒரு வெற்றி தேவைப்பட்டது. அதை அவர் பெற்றுவிட்டார்.
கேள்வி: PS 1 அளவுக்கு PS 2 கவனிக்கப்படவில்லையே? இத்தனைக்கும் பின்னது முன்னதை விட நன்றாக இருக்கும் போது? அது தோல்வி அல்லவா?
அதையும் இயக்குநர் எதிர்பார்த்திருப்பார். பரபரப்பு அடங்கிய நிலையில் இவ்வளவு தான் போகும். இப்போது இயக்குநர் “நாயகனை” எடுத்திருந்தால் அது PS போலத்தான் அமைந்திருக்கும். ஏனென்றால் காலமும், அவரது துறையின் தேவைகளும் வியாபார இலக்கும் மாறிவிட்டது.
இந்த கோணத்தில் பார்க்கையில் PSஇன் குறைகள் எவையும் குறைகளே அல்லவெனத் தோன்றுகிறது.
சில நேரங்களில் ஒரே ஒரு கோணத்தில் இருந்து ஒரு படத்தைப் பார்ப்பது தவறு என நினைக்கிறேன் - பல நோக்கங்கள், இலக்குகள் ஊடுபாடுகிற பெரும் வணிக முயற்சி ஒன்றில் மிகச்சிறிய அங்கம் தான் நாம் எதிர்பார்க்கிற ஒன்றாக இருக்கும்.
எனக்கு இதில் தவறு இல்லை எனத் தோன்றுகிறது. தன் குறிக்கோள் குறித்து மணிரத்னம் கொண்டிருக்கிற தெளிவைப் பாராட்டவே தோன்றுகிறது. பொருள் வயின் வாழ்க்கை. கலை வயின் அல்ல. (இதில் எந்த கிண்டலும் இல்லை. சீரியஸாகத் தான் சொல்கிறேன்.)
Comments