Skip to main content

பொருள் வயின் வாழ்க்கை




PS II முதல் பாகத்தை விட பார்க்கும்படியாக இருக்கிறது. சில காதல் காட்சிகள் “காற்று வெளியிடையை” நினைவுபடுத்தின. அப்படத்தில் வரும் காதலின் வதை, சரணடைதலின் துன்பம், தன்னை இழத்தலின் திளைப்பு எனக்குப் பிடித்திருந்தது. இதிலும் தான். வேறு சில காட்சிகள் பரபரப்பாக இருந்தன. “பொன்னியின் செல்வனை” காட்பாதர் பாணியில் எடுக்கும் மணிரத்னத்தின் முயற்சி புன்னகையை வருவித்தது. முதல் பாகத்தைப் போல சில இடங்களாவது துண்டுத்துண்டாக அல்லாமல் ஒருமித்த தன்மையைக் கொண்டிருந்தன. சில பாடல்கள் பிடித்திருந்தன.

ஆனால் இதை மீறி நூறு குறைகளை என்னால் சொல்ல முடியும். இரண்டு பாகங்களையும் பார்க்கையில் இப்படத்தின் கதையமைப்பிலும் எழுத்திலும் உள்ள கோளாறுகள் எனக்கு மட்டுமல்ல பல்லாயிரம் மக்களுக்கும் புரிந்திருக்கும். ஏனென்றால் இதன் கோளாறு மிக மிக அடிப்படையானது: சினிமாவில் இரு மணிநேரங்களில் நீங்கள் ஒரு பெருங்கூட்டத்தின் கதையை பல பார்வைகள் வழி சொல்லக் கூடாது. ஒருவருடைய பார்வையில், அவரது மன அமைப்பின் பிழையின் அடிப்படையில் தோன்றும் தேடலின் போக்கில் ஒரு பெருங்கூட்டத்தின் சித்திரத்தை வழங்கலாம். இதுவே PSஇன் மிகப்பெரிய பிழை. பத்து கல்யாணங்களில் ஒரே சமயம் ஒரே இடத்தில் நடக்க அதில் திடீரென அமளி ஏற்பட்டு யார் மணப்பெண் எனத் தெரியாமல் தாலி கட்டி குழப்பம் வருவதைப் போல் ஒரு மனநிலை. இது நமக்கே புரியும் போது சினிமாவுக்குள் மூன்று பத்தாண்டுகளுக்கு மேல் இருக்கிற இயக்குநருக்குத் தெரியாதா? நிச்சயமாகத் தெரிந்திருக்கும். எனில் அவரது நோக்கம் வேறு - அது என் மரமண்டைக்கு இப்போதுதான் புரிந்தது.

இயக்குநர் இந்த படத்தின் வணிக இலக்கை துல்லியமாக புரிந்து வைத்திருக்கிறார்: (1) பொன்னியின் செல்வனை அப்படியே திரையில் அளிப்போம்; (2) நிறைய நட்சத்திரங்களை பங்களிக்க வைப்போம். இந்த இரண்டும் சேர்ந்தால் அது பெரும் கவனம் பெறும், வசூலும் கிடைக்கும். இப்படி எடுக்கையில் என்னென்ன குறைகள் நேரும் என்பதும் அவருக்குத் தெரிந்திருக்கும். எனில் இதை ஒரு கச்சிதமான திரும்பத் திரும்ப பார்க்கக் கூடிய வணிகப் படமாக எடுக்க முடியாது. எடுக்கவும் கூடாது. இவ்வகை படத்தை அதன் வணிக கட்டமைப்புக்கு வெளியே இப்படத்தை யாரும் பெரிதாக ரசிக்கவோ கொண்டாடவோ மாட்டார்கள். ஆனால் ஒன்றைப் பெற இன்னொன்றைக் கொடுத்தாகத் தான் வேண்டும். 

கேள்வி: இதை ஏன் ஒரே படமாக எடுத்தார், இதில் 5 படங்களேனும் இருக்கின்றனவே? 

அப்படி எடுத்தால் ஒருவேளை பெரும் பொருட்செலவோ பரபரப்போ தொடர்ந்து இருக்கப் போவதில்லை. வந்தியத்தேவனின் கண்ணோட்டத்தில் மட்டும் விரியும் கதை, கரிகாலனின், பொன்னியின் செல்வனின் கதைகள் என எடுத்தால் அதை அப்படங்களின் தரத்தின் அடிப்படையில் மட்டுமே ஓட வைக்க வேண்டும். அதன் லாபம் இந்தளவுக்கு பெரிதாக இருக்காது. இயக்குநருக்கு இப்படி ஒரு வெற்றி தேவைப்பட்டது. அதை அவர் பெற்றுவிட்டார்.

கேள்வி: PS 1 அளவுக்கு PS 2 கவனிக்கப்படவில்லையே? இத்தனைக்கும் பின்னது முன்னதை விட நன்றாக இருக்கும் போது? அது தோல்வி அல்லவா?

அதையும் இயக்குநர் எதிர்பார்த்திருப்பார். பரபரப்பு அடங்கிய நிலையில் இவ்வளவு தான் போகும். இப்போது இயக்குநர் “நாயகனை” எடுத்திருந்தால் அது PS போலத்தான் அமைந்திருக்கும். ஏனென்றால் காலமும், அவரது துறையின் தேவைகளும் வியாபார இலக்கும் மாறிவிட்டது.

இந்த கோணத்தில் பார்க்கையில் PSஇன் குறைகள் எவையும் குறைகளே அல்லவெனத் தோன்றுகிறது. 
சில நேரங்களில் ஒரே ஒரு கோணத்தில் இருந்து ஒரு படத்தைப் பார்ப்பது தவறு என நினைக்கிறேன் - பல நோக்கங்கள், இலக்குகள் ஊடுபாடுகிற பெரும் வணிக முயற்சி ஒன்றில் மிகச்சிறிய அங்கம் தான் நாம் எதிர்பார்க்கிற ஒன்றாக இருக்கும்.

எனக்கு இதில் தவறு இல்லை எனத் தோன்றுகிறது. தன் குறிக்கோள் குறித்து மணிரத்னம் கொண்டிருக்கிற தெளிவைப் பாராட்டவே தோன்றுகிறது. பொருள் வயின் வாழ்க்கை. கலை வயின் அல்ல. (இதில் எந்த கிண்டலும் இல்லை. சீரியஸாகத் தான் சொல்கிறேன்.)

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...