Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

உலகின் மிகப்பெரிய மனநல விடுதி



மனிதர்களை நான் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று பிரிப்பதில்லை. மாறாக, கருத்துமுதல்வாதிகள் / லட்சியவாதிகள், பௌதீகவாதிகள் / நடைமுறைவாதிகள் எனப் பிரிக்கிறேன். அரசியல் அடிப்படையில் வெளியில் இருப்பவர்களுக்கு லட்சியவாதமாகவும் உள்ளே இருப்பவர்களுக்கு நடைமுறைவாதமாகவும் உள்ளது. அரசியலில் வெளியே இருப்பவர்கள் ஏழைகளாகவும், அதிகாரமற்றவர்களாகவும், துயருறுபவர்களாகவும், உள்ளே அதிகார மையத்தில் இருப்பவர்கள் பணமும் அதிகாரமும் படைத்தவர்களாகவும் இருக்கிறார்கள். மீண்டும் சொல்கிறேன் - இதில் நல்ல அரசியல்வாதி, மக்கள் தலைவர், கெட்ட அரசியல்வாதி, ஊழல்வாதி எனும் பாகுபாடுகள் அபத்தமானது. காந்தியின் காலத்திலேயே அரசியலை நடத்தியவர்கள் எந்த கலவரத்திலும் சாகவில்லை, மந்திரிகள் பட்டினி கிடக்கவில்லை. இன்னொரு விசயம் அந்த காலத்திலேயே வணிகர்களின் முகவர்களாகவே அரசியல் தலைவர்களும் ஆட்சியாளர்களும் இருந்தனர். அவர்கள் மக்களை நெறிப்படுத்தி வணிகர்களின் நலனுக்கு ஏற்ப நடப்பவர்களாக மாற்றினர். தொண்ணூறுகளுக்குப் பிறகே பெரும் வணிக ஸ்தாபங்களின் வளர்ச்சியும் பரவலும் காரணமாக மிக விரைவில் அரசியல் தலைவர்களும் மிகப்பெரும் பணக்காரர்களாக உதவியது. இதை நாம் ஊழல் என்று புரிந்துகொள்வது அபத்தமானது - இதை வியாபார வளர்ச்சியில் ஒரு ஆட்சியாளர் பெறும் பங்கு என்று சொல்வதே தகும். இந்த பங்குதான் சொத்தாகிறது. சொத்து கட்சியின் வழி பாதுகாக்கப்பட்டாலும் அங்கு போட்டியும் ஸ்திரமின்மையும் அதிகம். எம்.ஜி.ஆருக்குப் பின் என்ன ஆனது என்று பார்த்தோம். ஜெயலலிதாவுக்கு என்ன ஆனது எனப் பார்த்தோம். (ஜீயின் சொத்துக்களும் இவ்வாறே சிதறப் போகின்றன.) ஆக, குடும்ப வாரிசுகளை அதிகாரத்தில் கொண்டு வராமல் சொத்தை பாதுகாக்க முடியாது. இது தவிர்க்க இயலாமல் குடும்ப அரசியலுக்கு வழிவகுக்கிறது.
இந்த வணிக-அரசியல் நிர்வாக கூட்டமைப்பில் வாக்களிப்போருக்கு எந்த அசலான பிரதிநுத்துவமும் இருக்க முடியாது. ஏனென்றால் இது மக்களுக்கான ஆட்சி அல்ல, வணிகர்களுக்கான ஆட்சி மட்டுமே. இந்தியாவில் என்றில்லை உலகம் முழுக்க இதுவே உண்மை நிலைமை. உங்களுக்கு ஐயமிருந்தால் 1940கள் வரையில் முக்கிய கட்சிகளை நடத்தியது யார் எனப் பாருங்கள், அவர்கள் பெரும் சொத்துப் படைத்தவர்களாகவோ, வணிகர்களாகவோ இருப்பார்கள். ஏன் என்று கேட்டால் சல்ஜாப்பு பேர்வழிகள் அன்று பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை, அதிகாரம் இருந்தது என்று சொல்வார்கள். அது முழு உண்மை அல்ல - உரிமை இருந்ததெனில் அவர்கள் ஏன் அரசியல் பக்கமாக ஒதுங்க வேண்டும்? வணிகர்கள் தமக்கு பயனில்லாத ஒன்றை செய்வார்களா? தம் வணிக நலன்களையும், சொத்துக்களையும் பாதுகாக்கும் நோக்கிலேயே அவர்கள் தேசிய கட்சிகளை கைப்பற்றினார்கள். இன்று வரை அந்நிலை தான் தொடர்கிறது. நடுவே கார்ப்பரேட்டுகள் தமது முகவர்களைக் கொண்டு ஆட்சியாளர்களைக் கட்டுப்படுத்த ஆரம்பித்தார்கள். பின்னர் ஆளுங்கட்சியை தீர்மானிக்கும் அளவுக்கு அவர்களுடைய அதிகாரம் வளர்ந்தது. பாஜக இதை அடுத்த நிலைக்கு கொண்டு போய் தம்முடைய கட்சி விசுவாசிகளையே (பினாமி) கார்ப்பரேட்டுகளாக வளர்த்துவிட்டு முதலீட்டை கட்டுப்படுத்தியது. இன்னொரு பக்கம் கட்சிக்கு வெளியே தம் நேரடி பினாமிகள் அல்லாத அம்பானிகளையும் பாதுகாத்தது.
இம்மாதிரியான கட்டமைப்புக்குள் நீங்கள் போய் “நான் குடிமகன், வாக்காளன், வரி செலுத்துபவன்” என்றால் சிரித்து தலையில் தட்டி அனுப்பிவிடுவார்கள். இதுதான் எதார்த்தம். வணிகர்கள் அல்லாதவர்களின் வரி அதிகமாகிக் கொண்டே போவதும் பெருவணிகர்களின் வரி குறைந்து கொண்டே போவதுமே நிஜ ஜனநாயகம். பெருவணிகர் தன் பணத்தை சுலபத்தில் வெளிநாடுகளில் முதலீடு பண்ணி அதை வரியின்றி பாதுகாப்பதும், ஒரு சாதாரண குடிமகன் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை வரி மற்றும் பண வீக்கத்திடம் இருந்து பாதுகாக்க முடியாமல் பங்குச் சந்தை, தங்கம் என காப்பாற்ற போராடுவதும், அவர்களுக்கும் கீழ் உள்ளோர் எவ்வளவு சம்பாதித்தாலும் போதாமல் அடிப்படைத் தேவைகளுக்குக் கூட வட்டிக்கு பணம் வாங்கி பொருளாதார அடிமையாக மாறுவதே எதார்த்தம். பெருவணிகர்கள் வருடாவருடம் கோடானுகோடி மடங்கு வளர்வதும், அவர்களுக்கு கீழே உள்ளவர்கள் அதே பொருளாதாரத்தில் அண்டிராயர் உருவப்படுவதுமே எதார்த்தம். ஒரு தரப்பினருக்கு பொருளாதாராம் செழிப்பதும் மற்றவர்களுக்கு அது வீங்கி நட்டமடைவதுமே இங்குள்ள விளையாட்டு.
இந்த உண்மையை வெகுஜனம் புரிந்து கொள்ளாமல் இருக்க ஊடகங்கள் உதவுகின்றன. அடுத்து கல்வி நிலையங்கள். அவர்கள் தொடர்ந்து பொருளாதார ரீதியாக சிந்திக்க திறனில்லாத தொடர்ந்து அடிமை வேலை மட்டும் பார்க்கும் வர்க்கத்தினரை உற்பத்தி பண்ணி விடுகிறார்கள், முதலீடு ஒரு சிலரிடம் மட்டுமே இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்கள். கடைசியாக, அரசியல் சித்தாந்தவாதிகள். இவர்களை மக்களாட்சியின் பூசாரிகள் என்று சொல்வேன் - இவர்கள் கடந்த 80 ஆண்டுகளில் ஏழைகள் எந்தெந்த சுட்டெண்கள் படி வளர்ந்திருக்கிறார்கள் தெரியுமா, அன்று சைக்கிள் கூட இல்லாதவர்கள் இன்று பைக் ஓட்டுகிறார்கள் தெரியுமா, மன்னராட்சியின் போது மக்கள் அடிமைகளாக இருக்க இன்றோ அவர்கள் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் இடத்தில் இருக்கிறார்கள் தெரியுமா என்றெல்லாம் கேட்டு “ஓம் கிரீம்” என மந்திரம் கூறி மக்களாட்சி எனும் கண்காணா தெய்வத்துக்கு யாகம் செய்வார்கள். முக்கியமாக இவர்கள் ஒரு போதும் அதிகாரத்துக்கும் பொருளாதாரத்துக்குமான நுட்பமான தொடர்பைப் பற்றி பேச மாட்டார்கள். அன்று கோமணம் அணிந்தவன் இன்று கால் சட்டை அணிந்துவிட்டான் என்பதே இவர்களே “ஓம் கிரீம்” ஆக இருக்கும். இவர்கள் கடவுள் இல்லாத உலகில் கடவுளை ஏதாவது ஒரு அரசியல் லட்சியத்தைக் கொண்டு ஈடு செய்பவர்கள். மக்கள் நடைமுறைவாதிகளாகி, ‘நாத்திகர்களாகி’ (பொருளாதார அறிவு பெற்றவர்கள் ஆகி) விடக் கூடாதே என வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்பவர்கள். தமிழ்நாட்டில் இவர்கள் சமூக நீதி, மக்களின் பங்கேற்பு என்றும், தேசிய அளவில் ஆங்கில ஊடகங்களில் இவர்கள் தேசிய வளர்ச்சி, மதசார்பின்மை, ஏழ்மை ஒழிப்பு, பாலின சமத்துவம், சிறுபான்மை ஆதரவு என்று ஜல்லியடிப்பார்கள். அடிப்படையில் இவர்கள் மாதம் லட்சங்களில் சம்பாதிக்கும் அரசு ஊழியர்களாகவோ, உயர்சாதி நிலப்பிரபுத்துவதாதிகளாகவோ ஆக்ஸ்போர்டில் படித்தவர்களாகவோ, விமானத்தில் பறந்து பறந்து ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் காபி அருந்தியபடி உலக அரசியலை விவாதிப்பவர்களாகவும், பெரும் தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்களுடன் மாமன் மச்சான் உறவு கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுடைய தாத்தா, பாட்டனார் யார் என்று பார்த்தால் அவர்கள் 40களிலேயே பெரிய கட்சிகளில் தலைமையிலோ அதற்கு கீழோ பொறுப்பில் இருந்தவர்களாக இருப்பார்கள். குறைந்தது பாரிஸ்டர்களாக இருப்பார்கள். கேட்டால் “எங்கள் தாத்தா தேசத்துக்கு சேவை செய்தவர்” என்பார்கள்.
இவர்களுடன் இப்போது ஒரு யுடியூப் / புது ஊடக முகவர்களும் இப்போது தோன்றியிருக்கிறார்கள். அவர்களும் ஒரு பக்கம் மக்களுக்காக நான், மக்களாக நான் என்று சொல்லியபடி கள்ளப்பணத்தில் கொழிக்கிறார்கள், வெளிநாட்டு கார்களில் பறக்கிறார்கள்.
இவர்களுக்கும் கீழே காலி ஜேப்புடன் உணர்ச்சிவசப்படும் அப்பாவி கட்சி விசுவாசி லட்சியவாதிகளும், அவர்களிடையே இதை பயன்படுத்தி பெண்களையோ பணத்தையோ உஷார் பண்ணலாம் எனத் திட்டமிடுபவர்களும் உண்டு.
சில நாட்களுக்கு முன்பு ஓலாவில் போய்க் கொண்டிருக்கும் போது இரு மருங்கும் பேரக்ஸ் பேபி போல அரசியல் தலைவர்கள் சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அடுத்து ஐந்து நட்சத்திர விடுதிகளும், ஏக்கர் கணக்காய் விரிந்து கிடக்கும் கால்ப் மைதானமும் வந்தது. அப்போது ஓலா ஓட்டுநர் சொன்னார், “சார் இந்த தலைவர்கள் மீட்டிங் முடிச்சிட்டு பைவ் ஸ்டார் ஹோட்டல்ல இருந்து கால்ப் கிளப் வந்து ஜாலியா விளையாடுவாங்க. நைட் முழுக்க குடிச்சு கூத்தடிப்பாங்க. ஆனால் மீடியாவில் அவர்கள் நாட்டையே காக்க வந்ததைப் போல செய்தி வெளியிடுவார்கள்.” எனக்கு அந்த ஓட்டுநரை மிகவும் பிடித்துப் போனது. அவர் நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட நடைமுறைவாதி. நான் அவரிடம் சொன்னேன், “இவர்கள் ஆட்சிக்கு வருவார்கள், போவார்கள், மேலும் சில அமுல் பேபிகள் ஆட்சிக்கு வருவார்கள், இதே போல கால்ப் விளையாடி, உணர்ச்சி பொங்க மேடையில் பேசிவிட்டு போவார்கள், நீங்கள் மட்டும் கடைசி வரை ஓலா, ஊபர் ஓட்டிக்கொண்டு இருப்பீர்கள். அது மாறாது.” அடுத்து இப்போது எளிமையான தலைவர்கள் இல்லை, கட்சிகள் பணத்தில் கொழுக்கின்றன என அவர் புலம்பினார். நான் சொன்னேன், “அவர்கள் பணம் படைத்திருக்கிறார்கள் என புகார் சொல்வதை விட ஏன் அவர்கள் தவிர்க்க முடியாதபடி அப்படி இருக்கிறார்கள் எனும் கேள்வி முக்கியம்”.
தில்லியில் நான் ஜன்பத் லேன் சந்தையில் சுற்றிக்கொண்டிருக்கையில் மேற்சொன்ன ஊடகத் தரப்பினர் மைக்குடன் வந்து அடுத்த பிரதமர் யார் என மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்திக் கொண்டிருந்தனர். நான் அவர்களிடம் அகப்படாமல் ஒதுங்கிக் கொண்டேன். ஒரு கடைக்காரர் என்னிடம் தனது அரசியல் கருத்தை சொல்லி “ஒரு மாற்றம் வர வேண்டும்” என்றார். பக்கத்து கடைக்காரர் சேர்ந்துகொண்டார். அவர் ஏற்கனவே அரசியல் நிலைமை சரியாகத்தான் உள்ளது என எதிர்த்தரப்பை எடுத்தார். நான் சொன்னேன், “என்ன நடந்தாலும் நீங்கள் இங்கே இதே கடையில் துணியை கூவி விற்றுக்கொண்டு தான் இருப்பீர்கள். அதனால் உங்கள் சோலியைப் பாருங்கள், ஜேப்பில் பணம் விழுகிறதா என்பதே முக்கியம், அதுவே உங்கள் அதிகாரம்” என்றேன். என்னதான் மதவாதம் ஒழிய வேண்டும் என நான் விரும்பினாலும் மிதமிஞ்சிய அரசியல் கதையாடல் மோகம் ஒருவித கருத்துமுதல்வாதம், மீபொருண்மை லட்சியவாதம், அது நமது முன்னேற்றத்துக்கு பாதகமானது எனும் எண்ணம் எனக்குள் வலுவாகத் தோன்றிவிட்டது.
நமது பெரும் சாபக்கேடு நாம் இன்றும் இந்த மக்களாட்சி அமைப்பை சரிவர புரிந்துகொள்ளவில்லை, அதை கடவுளைப் போல அணுகுகிறோம் என்பதே. எப்படி கோயில் என்பது பணத்தில் நடக்கிறதோ அப்படியே மக்களாட்சியும். கடவுளைக் காட்டி கோயிலின் செயல்பாட்டைப் பற்றி யோசிக்காமல் எப்படித் தடுக்கிறார்களோ அப்படியே சமத்துவம், வளர்ச்சி, நீதி என லட்சியவாதம் பேசி பணக்காரர்களுக்கு அடிமைகளாக நம்மை வைத்திருக்கும் ஜனநாயகம் எனும் பொருளாதார சுரண்டலை, அது ஏற்படுத்தும் ஏற்றத்தாழ்வைப் பற்றி யோசிக்காமல் தடுக்கிறார்கள். எப்போதெல்லாம் மக்கள் காசில்லாமல் அல்லாடுகிறார்களோ அப்போதெல்லாம் அதே ஜனநாயகப் படுகொலை, மதசார்பின்மையின் அழிவு, நீதி வீழ்த்தப்பட்டது, இந்துமதம் தாக்கப்படுகிறது, நமது சாதியினர் தாக்கப்படுகிறார்கள், தேசம் பாதுகாப்பற்று இருக்கிறது என எதையாவது தூக்கி வந்து திசைதிருப்புகிறார்கள் அரசியல் / ஊடக / அறிவுஜீவி புரோக்கர்களும் கடவுளற்ற யுகத்தின் கோயில் புரோகிதர்களும். ஏன் மேற்சொன்ன பிரச்சினைகள் பெரும் வணிகர்களுக்கு மட்டும் வருவதில்லை, ஏன் அவர்களுடைய உலகில் ஜனநாயகம், மதசார்பின்மை, மதவாதம், சாதியம், தேசியவாதம் இல்லை எனும் கேள்வியை யாரும் எழுப்ப மாட்டார்கள்.
இந்த கோணத்தில் பார்க்கையில் இந்த நாடே ஒரு பெரும் மனநோய் விடுதியாகத் தெரிகிறது!

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...