என்னுடைய முழுப்பெயர் அபிலாஷ் சந்திரன். அந்த பெயரொட்டு என் அப்பாவின் பெயரொட்டும் தான். அப்படியே எனக்கு கையளித்துவிட்டார்கள். என்னுடைய தாத்தாவின் காலத்தில் அது பிரசித்தமாக இருந்திருக்க வேண்டும். என்னுடைய சித்தப்பாவுக்கும் அந்த பெயரொட்டு உண்டு. என்னுடைய அப்பாவின் பெயரின் பின்னுள்ள சாதிப் பெயரொட்டு எனக்கு என் அப்பா அளிக்கவில்லை. சொல்லப்போனால் என்னுடைய ஊரில் என் தலைமுறையில் யாருக்கும் சாதிப் பின்னொட்டை அவர்களுடைய பெற்றோர் அளிக்கவில்லை. அவ்விதத்தில் நாங்கள் குமரி மாவட்டத்தினர் என்றாலும், என்னதான் காங்கிரஸ், ஆர்.எஸ்.எஸ் தாக்கம் அதிகமாக இருந்தாலும் நல்லவேளையாக திராவிட அரசியலின் நீட்சியாகவே எங்கள் பண்பாடும் இருந்தது. இன்னொரு விசயம், சாதியைப் பின்னொட்டாக வைப்பது நவீன விழுமியம் அல்ல, அது நவீன வாழ்க்கையை வாழப் போகும் பிள்ளைகளுக்கு இடைஞ்சலாக இருக்கும் என ஒரு நம்பிக்கை அன்று இருந்திருக்கலாம். ஆனால் 90களில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி, ரெண்டாயிரத்தில் நிகழ்ந்த அடுத்த பொருளாதார அலையினால் சாதிப்பெருமை, மதப்பெருமை என் தலைமுறையினரிடம் மேலெடுத்தது. ஒருவித பதற்றம், அடையாளக் குழப்பம், அவர்கள் சாதி, மதத்தின் பின்னால் போய் ஒளிந்துகொண்டனர் என நினைக்கிறேன். என்னுடைய சமகாலத்தவர்களில் சிலர் சாதிப்பின்னொட்டை புதிதாக வைத்துக் கொண்டதை கவனித்தேன். தமிழகம் முழுக்கவும் கடந்த பத்தாண்டுகளில் இது ஒரு தனி அலையாக உருவாகியது - சாதிப் பின்னொட்டை சமூகவலைதளங்களிலும், சாதியின் பின் திரளும் முயற்சிகளையும் முன்னெடுத்தனர் என்னுடைய மற்றும் அடுத்த தலைமுறையினர்.
இந்த அலைகளால் நனைக்கப்படாதவனாகவே நான் இருந்தேன். ஆனால் எனக்கு மற்றொரு பிரச்சினை இருந்தது. பெயரின் பொருள் - இந்த 'சந்திரன்'. 'அபிலாஷ்' என்றால் அபிலாஷை. அது என் அடிப்படையான குணத்திற்கு ஒத்துப் போனது. ஆனால் சந்திரன் எதற்காக என்னுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறான் எனப் புரியவில்லை. அதற்காக என் அப்பாவை மனதுக்குள் நான் வையாத நாளில்லை. அதனாலேயே நான் பிரசுரிக்கத் துவங்கியதும் 'ஆர். அபிலாஷ்' என்று மட்டுமே வைத்துக் கொண்டேன். வேலையிடங்களில் சான்றிதழ் காரணமாக முழுப்பெயருடன் விளங்கினேன். அங்கு இப்பெயர் காரணமாக உள்ளுக்குள் நான் என்னை மற்றொருவனாகவே உணர்ந்தேன். பேஸ்புக்கிலும் இரண்டாம் பெயராக யோசிக்காமல் 'சந்திரனை' அளித்துவிட்டதால், அதை இப்போது மாற்றினால் குழப்பம் வரும் என்பதாலும் இங்கு சிலர் என்னை 'அபிலாஷ் சந்திரன்' என்று அழைக்கும் போது அட இந்த கொசுத்தொல்லை விடாது போல என கடுப்பாகும்.
இந்த பெயர் பற்றி பேச்செழும் போது என் அம்மா 'உனக்கு நாங்க அஜய் கோஷ் எனப் பெயரிடலாம் என நினைத்திருந்தோம்' என்பார். அதென்ன கோஷ் என்றால் அப்போது அது பேஷனாகத் தோன்றியது என்றார். ஒருவேளை அப்பெயரை இட்டிருந்தால் என்னைப் பலரும் வங்காளி என நினைத்து உள்ளூரில் நான் இந்திக்காரன் என்றும், வெளியூரில் நான் வங்காளி என்றும் நினைக்கப்பட்டிருப்பேன். அதற்கு சந்திரனோடே குடும்பம் நடத்தித் தொலைக்கலாம்!
Comments