Skip to main content

அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன்

 


நான் இந்த அரையாண்டில் கற்பிக்கும் வகுப்புகளில் ஒன்று முனைவர் பட்டப் படிப்பு முதலாண்டு மாணவர்களுக்கான இலக்கிய கோட்பாடுகள். அதன் முதல் பாடமே சாக்ரடீஸின் "ரிபப்ளிக்". இந்த நூலை நான் ஒரு கல்லூரி மாணவனாக முதலாண்டு படிக்கையில் வாசித்து சாக்ரடீஸின் தர்க்கவியல், கருத்துமுதல்வாதம் மீது பித்துகொண்டேன். இதையெல்லாம் ஏன் யாரும் படித்து விவாதிப்பதில்லை என்று வியந்தேன். ஏனென்றால் அவர் கூறும் பல கருத்துக்கள் என் சமகாலத்தில் செல்லுபடியாகக் கூடியவை என அப்போது எண்ணினேன். 26 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக நான் அதே நூலின் பகுதிகளை மாணவர்களுக்கு கற்பிக்கிறேன் என்பதால் இந்த அரையாண்டு மிகவும் உற்சாகமாக ஆரம்பித்தது. கேள்விகளாக தொடர்ந்து எழுப்பி மாணவர்களை சிந்திக்க வைப்பதே என் பாணியாக இருந்தது. சற்றே நாகார்ஜுனரின் தர்க்கத்தை பயன்படுத்தி சாக்ரடீஸின் கருத்துக்களை சொல்லித் தந்தேன். எல்லாவற்றையும் கேள்வி கேட்க, ஒவ்வொரு கருத்தின் பின்னுள்ள அபத்தத்தத்தையும் வெளிப்படுத்த அவர்களைத் தூண்டுவேன். ஒரு சில வகுப்புகளில் மாணவர்கள் இந்த வகை விவாதத்துக்குப் பழகிப் போனார்கள். இது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. ஒருநாள் மாணவர்களில் சிலர் என்னிடம் வந்து கேட்டார்கள், "சார், சாக்ரடீஸைப் பொறுத்தமட்டில் வாழ்க்கையின் இலக்கு மகிழ்ச்சி. ஆனால் நமக்கு மகிழ்ச்சி அளிக்கும் ஒவ்வொன்றையாக அவர் முரணானது, போலியானது என அம்பலப்படுத்தினால் பிறகு என்னதான் எஞ்சும்? இலக்கியமும் கலைகளுமே நம்மைத் தேவையற்ற குழப்பங்களுக்கும் துன்பத்துக்கும் ஆளாக்குகிறது என்றும் கூட சொல்லலாம். அப்போது நாங்கள் எதைத்தான் பற்றிக் கொள்வது? ஒன்றுமே இல்லாத போது பதற்றமாகவும் பயமாகவும் இருக்காதா? அது மகிழ்ச்சியை எப்படித் தரும்?" 
எனக்கு அந்த கேள்விகள் மிகவும் பிடித்திருந்தன. ஏனென்றால் ஒரு பாடத்தை வெறும் உலர்வான தகவலாக மட்டுமே கொள்ளாமல் வாழ்க்கையின் அஸ்திவாரத்தைப் பற்றி பரிசீலிக்கவும் உதவ வேண்டும். ஒரு பாடம் நம்மைக் குழம்பவும் கோபப்படவும் வைக்க வேண்டும். நான் மாணவர்களிடம் அவர்களின் கேள்விகளை சாக்ரடீஸ் எப்படி எதிர்கொள்வார் என விளக்கினேன். சாக்ரடீஸின் தத்துவத்தின் பலவீனத்தையும் குறிப்பிட்டேன்.
இந்த வகுப்பில் ஒரு மாணவி மகிழ்ச்சியும் ஆர்வமும் பொங்க கவனித்துக் கொண்டிருப்பார். அவர் தன் அப்பாவிடம் சென்று என் வகுப்பில் பேசப்படுவபற்றை சொல்வாராம். கடந்த வாரம் அம்மாணவி என்னிடம் வந்து சொன்னார், "சார் என் அப்பாவுக்கு உங்களைத் தெரியும்ணு சொன்னார்." "என்னையா?" "ஆமாம், உங்க கட்டுரைகளைப் படித்திருக்கிறாராம். ஆனால் ஒரு பிரச்சினை." "என்ன?" "அவர் உங்க பெயர் ஆர். அபிலாஷ் என்றார். நான் சொன்னேன் உங்க பேரு ஆர். அபிலாஷ் இல்லை, அபிலாஷ் சந்திரன் என்று." தன் போனில் ஒரு கட்டுரையின் படத்தைக் காட்டினார். அது நான் அண்மையில் 'உயிரெழுத்தில்' எழுதியது. நான் அவரிடம் இருவரும் ஒரே ஆள் தான் என்றேன். 
என்னுடைய அனுபவத்தில் முதன்முறையாக ஒரு மாணவர் என்னை எழுத்தாளராக அறிகிறார், என்ன தன் அப்பாவின் வழியாக. ஒருநாள் ஒரு மாணவர் என்னை நேரடியாகவே அறிந்து "நீங்க தானா அது சார்?" எனக் கேட்க வேண்டும் என்பதே என் ஆசை.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...