நான் இந்த அரையாண்டில் கற்பிக்கும் வகுப்புகளில் ஒன்று முனைவர் பட்டப் படிப்பு முதலாண்டு மாணவர்களுக்கான இலக்கிய கோட்பாடுகள். அதன் முதல் பாடமே சாக்ரடீஸின் "ரிபப்ளிக்". இந்த நூலை நான் ஒரு கல்லூரி மாணவனாக முதலாண்டு படிக்கையில் வாசித்து சாக்ரடீஸின் தர்க்கவியல், கருத்துமுதல்வாதம் மீது பித்துகொண்டேன். இதையெல்லாம் ஏன் யாரும் படித்து விவாதிப்பதில்லை என்று வியந்தேன். ஏனென்றால் அவர் கூறும் பல கருத்துக்கள் என் சமகாலத்தில் செல்லுபடியாகக் கூடியவை என அப்போது எண்ணினேன். 26 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக நான் அதே நூலின் பகுதிகளை மாணவர்களுக்கு கற்பிக்கிறேன் என்பதால் இந்த அரையாண்டு மிகவும் உற்சாகமாக ஆரம்பித்தது. கேள்விகளாக தொடர்ந்து எழுப்பி மாணவர்களை சிந்திக்க வைப்பதே என் பாணியாக இருந்தது. சற்றே நாகார்ஜுனரின் தர்க்கத்தை பயன்படுத்தி சாக்ரடீஸின் கருத்துக்களை சொல்லித் தந்தேன். எல்லாவற்றையும் கேள்வி கேட்க, ஒவ்வொரு கருத்தின் பின்னுள்ள அபத்தத்தத்தையும் வெளிப்படுத்த அவர்களைத் தூண்டுவேன். ஒரு சில வகுப்புகளில் மாணவர்கள் இந்த வகை விவாதத்துக்குப் பழகிப் போனார்கள். இது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. ஒருநாள் மாணவர்களில் சிலர் என்னிடம் வந்து கேட்டார்கள், "சார், சாக்ரடீஸைப் பொறுத்தமட்டில் வாழ்க்கையின் இலக்கு மகிழ்ச்சி. ஆனால் நமக்கு மகிழ்ச்சி அளிக்கும் ஒவ்வொன்றையாக அவர் முரணானது, போலியானது என அம்பலப்படுத்தினால் பிறகு என்னதான் எஞ்சும்? இலக்கியமும் கலைகளுமே நம்மைத் தேவையற்ற குழப்பங்களுக்கும் துன்பத்துக்கும் ஆளாக்குகிறது என்றும் கூட சொல்லலாம். அப்போது நாங்கள் எதைத்தான் பற்றிக் கொள்வது? ஒன்றுமே இல்லாத போது பதற்றமாகவும் பயமாகவும் இருக்காதா? அது மகிழ்ச்சியை எப்படித் தரும்?"
எனக்கு அந்த கேள்விகள் மிகவும் பிடித்திருந்தன. ஏனென்றால் ஒரு பாடத்தை வெறும் உலர்வான தகவலாக மட்டுமே கொள்ளாமல் வாழ்க்கையின் அஸ்திவாரத்தைப் பற்றி பரிசீலிக்கவும் உதவ வேண்டும். ஒரு பாடம் நம்மைக் குழம்பவும் கோபப்படவும் வைக்க வேண்டும். நான் மாணவர்களிடம் அவர்களின் கேள்விகளை சாக்ரடீஸ் எப்படி எதிர்கொள்வார் என விளக்கினேன். சாக்ரடீஸின் தத்துவத்தின் பலவீனத்தையும் குறிப்பிட்டேன்.
இந்த வகுப்பில் ஒரு மாணவி மகிழ்ச்சியும் ஆர்வமும் பொங்க கவனித்துக் கொண்டிருப்பார். அவர் தன் அப்பாவிடம் சென்று என் வகுப்பில் பேசப்படுவபற்றை சொல்வாராம். கடந்த வாரம் அம்மாணவி என்னிடம் வந்து சொன்னார், "சார் என் அப்பாவுக்கு உங்களைத் தெரியும்ணு சொன்னார்." "என்னையா?" "ஆமாம், உங்க கட்டுரைகளைப் படித்திருக்கிறாராம். ஆனால் ஒரு பிரச்சினை." "என்ன?" "அவர் உங்க பெயர் ஆர். அபிலாஷ் என்றார். நான் சொன்னேன் உங்க பேரு ஆர். அபிலாஷ் இல்லை, அபிலாஷ் சந்திரன் என்று." தன் போனில் ஒரு கட்டுரையின் படத்தைக் காட்டினார். அது நான் அண்மையில் 'உயிரெழுத்தில்' எழுதியது. நான் அவரிடம் இருவரும் ஒரே ஆள் தான் என்றேன்.
என்னுடைய அனுபவத்தில் முதன்முறையாக ஒரு மாணவர் என்னை எழுத்தாளராக அறிகிறார், என்ன தன் அப்பாவின் வழியாக. ஒருநாள் ஒரு மாணவர் என்னை நேரடியாகவே அறிந்து "நீங்க தானா அது சார்?" எனக் கேட்க வேண்டும் என்பதே என் ஆசை.

Comments