பவா ‘பிக்பாஸில்’ சமைத்தபடியே சொல்லுகிற ‘பெண்களோட சமையலைப் பாராட்டாதீங்க, அவங்களை தந்திரமா சமையலறையில முடக்காதீங்க’ மாதிரியான போலி முற்போக்கு பெண்ணிய கருத்துக்கள் ஏன் ஆபத்தானவை என்று சொல்கிறேன் - முதலில், அந்த காலத்துப் பெண்கள் அதிகமாக சமையலறையில் முடங்கிப் போனது அவர்களுடைய சமையல் ஆர்வத்தினாலோ அதை ஆண்கள் பாராட்டித் தூண்டிவிட்டதாலோ அல்ல. இன்று வளரும் சிறுமிகளையும் இளம்பெண்களையும் எடுத்துக்கொண்டால் அவர்கள் சமையலைக் கற்காமலே வளர வேண்டும் எனப் பெற்றோர்கள் விரும்புகிறார்கள்; திருமணமாகியோ தனியாகவோ வாழும் கணிசமான இளம்பெண்களுக்கு ஒரு தோசை சுடக்கூடத் தெரியாது. ஆண்கள் ஏன் இவர்களிடம் போய் “உன் ரசம் அருமையா இருக்கு” என்று சொல்லித் தூண்டிவிட்டு சமையல் நிபுணிகளாக்கி சமையலறையிலே முடங்கிப் போக வைக்கவில்லை? ரசம் போல காபி போடக் கூட தெரியாதவர்களாக இவர்கள் எப்படி மாறினார்கள்? இந்த இரண்டு நிலைகளுக்கும் ஒரே அடிப்படை தான்: சமூகப்பொருளாதார கட்டமைப்பு.
முன்பு பெண்கள் வேலைக்குப் போவதற்கான அளவுக்கு சந்தையில் இடங்கள் இல்லை. இன்றுள்ள எண்ணிக்கையில் பெண் பட்டதாரிகள் அன்று இருந்திருந்தால் 70, 80களின் வேலையில்லாதத் திண்டாட்டம் இன்னும் பலமடங்காகி இருக்கும். ஆனால் உலகமயமாதலுக்குப் பின்னர் நிலைமை மாறியது. (இந்த மாற்றம் 80களிலேயே ஆரம்பித்துவிட்டது என்றாலும் கூட.) உற்பத்தியிலும் பண்ட நுகர்விலும் ஈடுபட பெரும் எண்ணிக்கையில் மக்கள் தேவைப்பட்டார்கள். அதனாலே இந்தியாவைப் போன்ற கல்வி அறிவு பெற்ற மூன்றாம் உலக நாடுகள் முக்கியத்துவம் பெற்றன. பெண்களின் கல்வி, முன்னேற்றம் என நாம் ஒரேயடியாக முற்போக்கு பேசியது இந்த சந்தையின் பசியை ஆற்றத்தான். பெண்களுக்கான இலவச பேருந்து, உதவித்தொகை, பாராளுமன்ற, சட்டமன்றங்களில் இட ஒதுக்கீடு எல்லம் இதற்காகத் தான். இத்தகைய நல்ல விளைவுகளை நான் மறுக்கவில்லை, ஆனால் நமது முற்போக்கு மண்டைகள் இந்த பொருளாதார பரிமாணத்தை முழுக்க மறைத்து உரையாடுவது ஒருவித பாசாங்கு, செண்டிமெண்டல் மனப்பான்மை. பெண் விடுதலைக்கும் சமையலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இது முழுக்க முழுக்க சமூகப்பொருளாதார கருத்தியல்களால் தீர்மானிக்கப்படுவது. ஏன் அன்று பெண்கள் சமைத்தார்கள், ஆண்கள் செய்யவில்லை என்றால் அன்று ஆண்கள் வேலைக்காக வெளியே சென்றார்கள். இன்று ஏன் இளம் பெண்கள் மிக மிக குறைவாக சமைப்பவர்களாகவும், காபி, மோரைக் கூட ஸ்விக்கியில் வாங்குகிறவர்களாக மாறியிருக்கிறார்கள் என்றால் இன்று அவர்கள் வேலைக்காக வெளியே போகிறார்கள். இந்த இளம்பெண்களை சமைக்கும்படி யாராலும் வலியுறுத்த முடியாது. இதற்கான பெருமையை பெண்ணியமோ முற்போக்கு சிந்தனையோ எடுத்துக் கொள்ள முடியாது.
அதே நேரம் பவா செல்லத்துரை, ச. தமிழ்ச்செல்வன் (அவரும் இவ்வாறு பேசுவதைக் கண்டிருக்கிறேன்) போன்ற முற்போக்கு எழுத்தாளர் சங்க படைப்பாளிகள் இது குறித்த குற்றவுணர்வைக் கொண்டவர்கள். அவர்கள் அதைப் போக தம் சமையல் ஆர்வத்தை முற்போக்கு முயற்சியாக மாற்றுகிறார்கள். பெண்களை சமைக்க வைப்பது அடிமைத்தனம் எனக் கூறுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் தம்மை தம் காலத்து ஆண்களின் பிரதிநிதியாகப் பார்த்து குற்றவுணர்வை சுமக்கிறார்கள். அதை நம் மீதும் கடத்துவதும் போது ஒரு விஷக் கருத்து ஆகிறது. ஏனென்றால் அந்தக் ‘குற்றவுணர்வை’ எங்கள் தலைமுறையினரும், அடுத்த தலைமுறை ஆண்களும் சுமக்க வேண்டிய எந்த நடைமுறைத் தேவையும் இல்லை. மாறாக இன்று இரு பாலினத்தாரும் சமைக்கத் தெரியாமல் அதிகமாக ஓட்டல், ஸ்விக்கி என்று பணத்தையும் ஆரோக்கியத்தையும் அழிக்கிறார்கள், குழந்தைகள் இன்று உடல் பருமன், கற்றல் குறைபாடு, டவுண்ட் சிண்டுரோம் கொண்டவர்களாக மாறுகிறார்கள். 30 வயதுக்குள் பலருக்கும் இதய நோய் வருகிறது, பிறந்து விழுந்த குழந்தையே “எனக்கு மன அழுத்தம்” என்கிறது. இதெல்லாம் சமையலை வெறுத்த ஒரு தலைமுறையின் வரங்கள். ஆகையால் நாங்களும் எங்களுடைய அடுத்த தலைமுறை ஆண்களும் “பெண்களுக்கு ரசம் வைக்கத் தெரியும்னு சொன்னா அவங்களை தந்திரமா அடிமைப்படுத்துறோம்னு அர்த்தம்” என கண்ணீர் வடிக்கத் தேவையில்லை; அது மட்டுமல்ல, இன்று ஆண்கள் அதிகமாக சமைக்க முன்வருகிறார்கள். குற்றவுணர்வினால் அல்ல, வேறு எப்படியும் சுவையான உணவு கிடைக்காது என்பதாலே. ஆனால் அங்குதான் நவீனப் பெண்கள் அதற்கும் ஆப்படிக்கிறார்கள் - ஆண் சமையலறைக்குள் சென்று அல்லாடினால் அவர்கள் வேலையைப் பகிர்ந்து உதவுவதற்குப் பதிலாக “நீங்களே சமைச்சுக் கொடுங்க” என கெஞ்சுவதைப் போல நஞ்சைக் கலக்கிறார்கள். (இந்த வார ‘நீயா நானாவில்’ விவாதத் தலைப்பே இதுதான்.) பெண்ணைச் சுரண்டுவதைப் போல ஆணைச் சுரண்டுவதும் தப்பு தானே என்றால் ‘எத்தனைத் தலைமுறைகளாக இப்பெண்கள் சுரண்டப்பட்டார்கள், இப்போது அவர்களுக்காக நீங்கள் சற்று வியர்வை சிந்தலாமே’ என்பார்கள் பவா, ச.த.செ போன்றவர்கள். அப்படியே தம் குற்றவுணர்வை நம் மீது திருப்பிவிடுவார்கள். உங்களுக்குத் தேவை சமத்துவமா அல்லது சுரண்டலா?
சமையல் ஒரு வேலை. ஆண் மட்டும் வேலைக்கு சென்றால் அதைப் பெண்ணும், இருவருமே வேலைக்குப் போனால் சமையலை இருவருமே பகிர்ந்து செய்வதுமே சரி.
தனது தவறுக்காக ஒருவர் வருந்தலாம், ஆனால் தனக்கு முன் வாழ்ந்தவர்களின் தவறுக்காக வருந்தி தலைகுனிவது ஒரு மனநோயாகும். நம் முந்தின தலைமுறையினரின் சுரண்டலுக்கு அவர்கள் பதில் சொல்லட்டும். இன்றைய தலைமுறை ஆண்கள் ஏன் அதற்கு கண்ணீர் சிந்த வேண்டும்? கண்ணீர் சிந்தி அவர்கள் ஏன் அடிமைகள் ஆக வேண்டும்? அதற்கு முகாந்திரம் அமைப்பவர்களாக இந்த முற்போக்காளர்களும் பெண்ணியவாதிகளும் இருக்கிறார்கள் என்பதே என் புகார். குற்றவுணர்வின் மீது தோன்றும் எந்த மாற்றமும் நியாயமாகவோ சமத்துவத்தைத் தருவதாகவோ இருக்காது. அது மற்றொரு சுரண்டலாகவே முடியும். விடுதலை என்பதே குற்றவுணர்வில்லாதவர்கள் உணர்வதுதான்.
மேலும் குற்றவுணர்வு நம்மை கடவுள் பக்தி, தேச பக்தி என பல விஷக்கருத்துக்களுக்கும் அடிமையாக்கும். பழமைவாதத்தை விட ஆபத்தானது குற்றவுணர்வு என நீட்சே கூறக் காரணம் அதுதான். இன்று பொது அரங்கில் ஆண்கள் தம்முடைய அழுத்தங்களை, துயரங்களைப் பேச அஞ்சுகிறார்கள். தமக்குள் ரகசியமாக புலம்பித் தீர்கிறார்கள். ஏனென்றால் வாயைத் திறந்தாலே குற்றவுணர்வை வாயில் வைத்து அடித்துத் திணிக்கிறார்கள். குற்றவுணர்வு வியாபாரிகள் இன்று சீரியல் கில்லர்களைப் போல ஒரு பீதியைக் கிளப்பியிருக்கிறார்கள்.
முதலில் நமக்குத் தேவை நோயில் இருந்து விடுதலை; போலி முற்போக்கு குற்றவுணர்வில் இருந்து விடுதலை. நமக்குத் தேவை வெளியே சாப்பிடுவது குறித்த குற்றவுணர்வு. இக்குற்றவுணர்வே பல கோடி பேர்களை மன அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பில் இருந்தும், குழந்தைகளை கற்றல் குறைபாடு, மூளை வளர்ச்சியின்மை, டவுன் சிண்டிரோம்களில் இருந்தும் காப்பாற்றும்.
பெண் விடுதலையே சந்தையே பார்த்துக் கொள்ளும்.
Comments