Skip to main content

கல்வி எனும் மோசடி




கல்வி மட்டுமே நம்மை உயர்த்தும் என்கிறார்கள். சரி. உயர்வு என்றால் என்ன? உயர்ந்த வாழ்க்கைத்தரம், சமூக மரியாதை. இரண்டும் பணத்தினால் கிடைப்பன. எனில் கல்வி நம்மை உயர்த்தும் எனும் போது கல்வியினால் நாம் நிறைய பணத்தைப் பெறலாம் எனக் கூறுகிறார்கள் எனப் புரிந்துகொள்கிறேன். இப்போது நான் கேட்க விரும்பும் கேள்வி எந்த விதமான கல்வி பணத்தை அள்ளிக்கொடுக்கிறது என்பது

எண்பது, தொண்ணூறுகள் வரை அரசு வேலை, அதன் பிறகு தனியாரில் .டி வேலை, வெளிநாட்டு வாழ்க்கை. இதன் நடுவே சொற்பம் பேருக்கு மருத்துவ, ..எஸ் வேலைகள். ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது - பணம் அதன் மதிப்பை இழந்துவிட்டது. நான் என் முதல் வேலையில் பெற்ற சம்பளத்திலிருந்து 25 மடங்கு அதிகப் பணத்தை தம் முதல் சம்பளமாக என் மாணவர்கள் வாங்குகிறார்கள். ஆனால் அப்பணத்தை வைத்து அவர்களால் சேமிக்கவோ அவசர மருத்துவ செலவுகளை சமாளிக்கவோ முடிவதில்லை. ஒருவருடைய சம்பளத்தில் முன்பு ஒரு மத்திய வர்க்க குடும்பமே நன்றாக வாழ முடிந்தது. குழந்தைகளைப் படிக்க வைப்பதில் இருந்து மருத்துவ செலவு, வீடு கட்டுவது, சேமிப்பது எல்லாம் சாத்தியமானது. இன்று இருவர் சம்பாதித்தாலே விழி பிதுங்குகிறது. ஏனென்றால் இன்று நாம் உச்சா போனால் கூட அதைப் பிடித்து அளந்து இவ்வளவு மில்லிக்கு இவ்வளவு வரி என அரசு பிடுங்குகிறது. கக்கா போனால் அதையும் கிராமுக்கு இவ்வளவு ஜி.எஸ்.டி என எடைக்கு எடை வரி போடுகிறது. வாடகை கன்னா பின்னாவென எகிற, வங்கியில் சேமிப்புத் தொகைக்கான வட்டி வெகுவாக குறைந்துவிட்டது. பண வீக்கம் எங்கோ எகிறுகிறது. மக்களுக்கு நிலத்திலோ வங்கியிலோ சேமிக்கும் நம்பிக்கை போனதால் தங்கத்தில் பணத்தைப் போடப்பார்க்க அரசு அதைத் தடுக்க வழிபார்க்கிறது. எல்லாரும் பங்குச்சந்தை பின்னால் ஓடுகிறார்கள். சரியாகப் புரியாமல் முதலீடு பண்ணுகிறவர்கள் ஒருவேளை இச்சந்தை சரியும் நிலை ஏற்பட்டால் எங்கு போவார்கள்? கடுமையாக உழைத்துப் படித்து வேலைக்குப் போய் அங்கும் மாடு மாதிரி உழைக்கும் பலர் வெளியே பார்க்க பளபளப்பாக இருக்கிறார்கள். ஆனால் போய் விசாரித்தால் ரத்தக்கண்ணீர் வடிக்கிறார்கள்


உழைப்பை எடுத்துக் கொள்வோம். இணையம் பரவலாகி திறன்பேசி வரும் வரை, மடிக்கணினிகளில் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் வரை நாம் உழைப்பது அளவாக நியாயமாக இருந்தது. ஆனால் கடந்த பத்தாண்டுகளில்எங்கெங்கு காணினும் உழைப்படாஎன புற்றுநோய் போல உழைப்பு சுரண்டல் பரவிப்பரவி இப்போது நள்ளிரவு ஒருமணிக்கு கூட ஏதாவது ஒரு மின்னஞ்சல் வேலைத் தொடர்பாக வர நாம் அரக்க பரக்க விழித்து அதற்கு பதிலிடவும், அவ்வேலையை செய்துமுடிக்கவும் தலைப்படும் அளவுக்கு ஜோம்பிகளாக மாற்றப்பட்டிருக்கிறோம். ஓய்வே இல்லாமல் 20 மணிநேரம் நம்மையே அறியாமல் வேலை பார்க்கிறோம், ஆனால் சம்பளம் மட்டும் அதே 8 மணிநேரத்திற்குத் தான்.

 எவ்வளவு வேலை பார்த்தாலும் கையிருப்பு பணம் போதாமல் போய்விடுமோ, தெருவுக்கு வந்துவிடுவோமோ எனும் அச்சம் நம்மைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. இன்று பட்டப்படிப்பு முடித்த எத்தனையோ பேர்கள் ஸ்விக்கியில் டெலிவரி பாயாக இருக்கிறார்கள். 50% பேர் பொறியியல் படித்தவர்கள் என்றொரு சேதியை அண்மையில் படித்தேன். பொறியியல் படிக்க முடியாத எத்தனையோ பட்டதாரிகள் உளர். அவர்களுடைய நிலைமை?

 வெளிநாட்டை எடுத்துக்கொண்டால் இங்கிலாந்து போன்ற சில மேற்கத்திய தேசங்களிலும் மத்திய வர்க்க வாழ்க்கை இவ்வாறுதான் உள்ளதென சொல்கிறார்கள். கனடாவுக்கு புலம்பெயர்ந்து வேலை வாங்கி செல்வோர் வாடகைக்கு வீடு கிடைக்காமல், நோய்க்கு மருத்துவர் இல்லாமல், எந்த அடிப்படை வசதியும் இன்றி அலைவதாக, அப்படி வாடகைக்கு வீடு கிடைத்தாலும் சம்பளத்தில் 50% அதற்கே போய்விடுவதாகவும் கேள்விப்பட்டேன். ஒரு சிறிய சதவீதத்தினர் மட்டுமே படித்து நல்ல வசதியாக இருக்கிறார்கள். அதுவும் கொரோனாவுக்குப் பிறகு உழைப்பு சுரண்டல், வரியின் பெயரிலான பணத்திருட்டு, உழைக்கும் நேரம் கடுமையாக அதிகரித்துவிட்டது. வேலை நீக்க பயம் ஒரு கத்தியைப் போல எல்லார் தலைமேலும் தொங்க அதைக் காட்டியே இரட்டிப்பு நேரம் நம்மை வேலை செய்ய கட்டாயப்படுத்துகிறார்கள். என்ன விசித்திரம் என்றால் பாதி வேலை நேரம் நேரடியானதாகவும், மிச்ச நேரம் மாயமாகவும் உள்ளது. அது ஏற்படுத்தும் பதற்றம், நெருக்கடியால் உடல், மனநோய்கள் அதிகரிக்க, அந்த அவதிகளைக் கடப்பதற்காக அதிகமாக குடித்து, புகைப்பிடித்து, முறைகேடான உறவுகளில் ஈடுபட்டு, இணையத்தில் சூதாடி, உறக்கம் ஒழிந்து இளமையிலேயே வயோதிகம் பெற்று சீரழிகிறோம். இதை எப்படி முன்னேற்றம் என்பது?


 நாம் தமிழகத்தில் தொடர்ந்து படிப்பின் மகத்துவத்தைக் கொண்டாடிக் கொண்டே இருக்கிறோம், ஆனால் அதன் இன்னொரு இருண்ட பக்கத்தைப் பற்றி பேச மாட்டோம் என்கிறோம். கல்வி ஒரு சம்பாதிக்கும் மார்க்கமாக இன்றொரு பெரிய மோசடியாகி விட்டது என்பதே உண்மை.


அதற்கு காரணம் கல்வி அல்ல, பொருளாதார அமைப்புதான். கடுமையாக உழைப்பவர்களுக்கு ஓய்வு நேரம், சேமிப்பு, எதிர்கால பாதுகாப்பு, மனநிம்மதியை அளிக்க வேண்டியது ஒரு சமூகத்தின், அரசின் கடமை. முக்கியமாக மாத ஊதியத்தில் 40% மேல் செலவு செய்யத் தேவையிராத வேலையே நல்ல வேலை. (அப்போதே சேமிக்கும் பணத்தை வைத்து சொத்து, வீடு, அடுத்த தலைமுறைக்கான முதலீடு எனப் பண்ணி முன்னேற முடியும்.) அதுவே ஆரோக்கியமான பொருளாதாரம். ஆனால் நாம் சீனாவைப் போல அடிமை தேசமாக மாறிக்கொண்டிருக்கிறோம். எந்த அடிப்படைத் தேவையையும் உத்தரவாதம் செய்யாத ஒரு அரசின் கீழ் வாழும் நாம் கல்வி கல் என குழந்தைகளை பிடிவாதமாகத் தள்ளிவிடுவது அடிமைக்கப்பலுக்கு விலைக்கு பிள்ளைகளை அனுப்புவதற்கு சமம். இதன் பொருள் யாரும் படிக்காதீர்கள் என்பதல்ல. நம் நிலைமை ஏன் இப்படி இருக்கிறது எனக் கேளுங்கள் என்கிறேன். அதற்குப் பதிலாக சினிமா பேட்டிகளையும் குக் வித் கோமாளியையும் பார்த்து கெக்கேபிக்கேவென சிரித்து கவனம் திருப்புகிறோம் என்கிறேன். நியாயமாக நமக்கு கோபம் வர வேண்டும், ஆனால் இன்று இம்மாதிரி திசைதிருப்பும் சூழ்ச்சிகள் நம்மை சுரணையற்றவர்களாக மாற்றுகின்றன.


 இன்று ஏழைகளின் நிலை இன்னும் மோசம் - முன்பு ஏழைகளால் சமாளித்து வாழ முடிந்தது. இன்று அவர்கள் மேலும் மேலும் நசுக்கப்படுகிறார்கள்.


இவ்வளவு படித்து ஸ்விக்கியில் வண்டி ஓட்டாமல் படிக்காமலே ஓட்டலாமே என்பதே என் கேள்விபடிப்பிற்கு மதிப்பு குறைந்துவிட்டே போகிறது எனில் அது ஏன்?


 நாம் படிப்பை வழிபடுவதை சற்று நிறுத்தி விட்டு இந்த பொருளாதார அமைப்பைப் பற்றி சிந்தித்து அதைக் கேள்வி கேட்க வேண்டும்

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...