Skip to main content

உலகக்கோப்பை 2023 ஏன் சோபிக்கவில்லை?



அ) 2019 50 ஓவர் உலகக்கோப்பை ஜாலியாக இருந்தது. இந்தியா, நியுசிலாந்தின் சிறப்பான ஆட்டம், ஆஸ்திரேலியாவின் பின்னடைவு என எதிர்பாராமைகள் இருந்தன. அதுவும் அந்த இறுதிப்போட்டி ஒரு கிளாஸிக். நியுசிலாந்து கடைசியில் இங்கிலாந்துடன் மோதும், அதுவும் இரண்டு ஓவர் அடிதடியாக மாறும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதிலும் ஒரு திருப்பம், ஒரு அநீதி இருந்தது, அதுவும் அந்த முடிவை கிளாஸிக் ஆக்கியது. ஆனால் 2023 உலக்கோப்பையில் பெரிய ஜாம்பவான்கள் ஆதிக்கம் செய்ய பலவீனமான அணிகளின் பின்வாங்கின. ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் அரை இறுதியை எட்டும் என எதிர்பார்த்தார்கள். நடந்தது. தென்னாப்பிரிக்காவின் எழுச்சியே ஆச்சரியப்படுப்பத்தியது. ஆனால் அதையும் ஒரு முற்றிலும் எதிர்பாராத அதிசயம் எனக் கூற முடியாது. மிக வலுவான அணி அவர்களுடையது. சுந்தரேசா எனக் கூப்பிட்டதும் ஓடி வந்து எண்ணெய்யைப் பார்க்காமல் வழுக்கி விழுந்துவிடுவார்கள் என்பதைத் தவிர.

ஆ) பல போட்டிகள் ஒருதலைபட்சமாக இருந்தன. முதலில் மட்டையாடிய அணியை வெகு நெருக்கமாக விரட்டி சென்று போட்டியை விறுவிறுப்பாக்கியது நியுசிலாந்து மட்டுமே (ஆஸிக்கு எதிராக). மற்ற போட்டிகளில் ஒரு அணி முதலில் மட்டையாடி 350க்கு மேல் அடித்தால் எதிரணி 100 ரன்களுக்கோ அதற்கு மேலான ரன்களுக்கோ தோற்கும் என்பது நியதி. அதே போல எதிரணி 250க்கு சுருண்டு அடுத்து மட்டையாடுபவர்கள் 40 ஓவர்களுக்குள் அதை அடித்துவிடுகிறார்கள். இப்படி புரூஸ் லீயின் சண்டைக் காட்சி போல கண்ணிமைக்கும் நேரத்தில் முடிந்து போகின்றன. மைதானத்துக்கு சென்ற பார்வையாளர்களைக் கண்டால் பரிதாபமாக இருந்தது.

ஈ) ஆல்ரவுண்டர்களால் ஜொலிக்க இயலவில்லை. ஆல்ரவுண்டர்களின் எழுச்சிக்கும் ஒரு போட்டித்தொடர் பரபரப்பாவதற்கும் ஒரு தொடர்பு உள்ளது. சட்டென ஒரு போட்டியை திசைதிருப்புவார்கள். தோற்கும் அணியை மட்டையாடி ஜெயிக்க வைப்பார்கள். ஆனால் இம்முறை உலகக்கோப்பை முழுக்கவே நிபுணர்களின் ஆதிக்கமாக இருக்கிறது. அதற்கு ஆட்டச்சூழலும் ஒரு முக்கிய காரணம் - ஆட்டங்களில் பந்து போகப் போக திரும்புவதில்லை. சில போட்டிகளில் போகப்போக மட்டையாட்டம் சுலபமாகிறது. சில போட்டிகளில் பனித்துளிகள், வேறு சில போட்டிகளில் சீதோஷ்ணம், ஆனால் பொதுவாகவே ஆடுதளங்கள் மட்டையாட்டத்துக்கே உதவின. ஆகையால் முதல் 5 மட்டையாளர்கள் சற்று பொறுமை காட்டினால் கடைசி 20 ஓவர்களில் வெளுத்து வாங்க முடிந்தது. அடுத்து ஆடும் மட்டையாளர்கள் ஒன்று நல்ல ஆட்டநிலையில் இருந்தால் இலக்கை நெருங்கி வந்தார்கள். இல்லாவிடில் விரைவில ஆட்டம் இழந்தார்கள். என்ன நடந்தாலும் கடைசி வரை இழுத்துக்கொண்டு போகலாம் என்பது 50 ஓவர் போட்டிகளின் இலக்கணம். வைத்தால் குடுமி, அடித்தால் மொட்டை என்பது டெஸ்ட் மேட்ச் மனநிலை. இம்முறை உலகக்கோப்பையில் 50 ஓவர் போட்டிகள் டெஸ்ட் மேட்ச் போல் ஆகி விட்டன. இது ஒரு ஏமாற்றம்! இந்தியாவைப் பொறுத்தவரையில் ஹர்த்திக்கின் காயம் கூட அவர்களை அசர வைக்கவில்லை. ஹர்த்திக்கை மிஸ் பண்ணவே இல்லை, இதுவரையிலும். இது ஒரு அதிசயம். அஷ்வினையும் இதனாலே ஆட வைக்கத் தேவைப்படவில்லை.

உ) பாகிஸ்தான், இங்கிலாந்து, நியுசிலாந்து போன்ற முதன்மையான அணிகளின் வேகவீச்சாளர்களால் பந்தை ஸ்விங் செய்யவோ ரிவர்ஸ் ஸ்விங் செய்யவோ முடியவில்லை. அது ஏனென்று தெரியவில்லை. பந்தின் அமைப்பில் ஏதோ கோளாறு என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் இந்திய வீச்சாளர்களால் அற்புதமாக ஸ்விங் பண்ணி முதல் பத்து ஓவர்களிலே விக்கெட்டுகளை வீழ்த்தவும் மத்திய ஓவர்களில் ரிவர்ஸ் ஸ்விங் (ஷமி, சிராஜ்) பண்ணவும் முடிந்தது. இது நிச்சயமாக ஒரு ஏற்றத்தாழ்வை உண்டாக்கியது. ஆட்டங்கள் ஒருதலைப்பட்சமாக ஆகின.
நம்மால் முடிந்தது ஏன் பிறரால் முடியவில்லை? நான் கவனித்த வரையில், நம்மவர்கள் சரியான நீளத்தில் வீசுகிறார்கள். என்ன நடந்தாலும் முதல் பத்து ஓவர்களுக்குள் முழுநீளத்திலோ சற்று இழுத்து நல்ல நீளத்திலோ வீசுகிறார்கள். குறைநீளத்துக்கு பெரும்பாலும் போவதே இல்லை. மேலும் பந்தின் தையல் நேராக இருக்க வீசுகிறார்கள். நல்ல தாள லயத்துடன் ஓடி வருகிறார்கள். வசீம் அக்ரம் சொல்லும் ஒரு காரணம் இந்திய வேக வீச்சாளர்கள் பந்தின் நடுவே தையல் நேராக அவரும் படி பற்றிக்கொண்டு வீசுகிறார்கள் என்பது.

பிற நாட்டு வேகவீச்சாளர்களால் இது முடியவில்லை. அவர்கள் இதற்குத் தயாராக வரவில்லை, தடுப்பாட்ட மனநிலையுடனே வந்தார்கள், சுழலர்களே அதிகமாக வீசுவார்கள் எனத் தவறாக கணித்தார்கள் என நினைக்கிறேன். ஆனால் இந்தியாவோ இந்த ஆடுதளங்களில் வேகவீச்சாளர்களுக்கு முக்கிய இடமிருக்கும் என கணித்து அதிகமாக வேகவீச்சாளர்களைக் கொண்டு வந்ததுடன் அவர்களுடைய பயிற்சிக்கும் ஆட்டநிலைக்கும் முக்கியத்துவம் அளித்தது. பும்ரா, ஷமிக்காக தவமிருந்தார்கள், ஹர்த்திக்கை அவரது பந்துவீச்சுக்காகவே பாதுகாத்தார்கள், ஷர்துலுக்கு இடமளித்தார்கள், சிராஜை ஓராண்டுக்கு மேலாக வளர்த்தெடுத்தார்கள். இந்தியா சரியாக திட்டமிட்டு நிறைவேற்றியதைப் போல மற்ற அணிகள் பண்ணவில்லை. பாகிஸ்தான் வீச்சாளர்கள் இங்கு பந்துவீசி அனுபவமில்லாதது அவர்களை பாதித்தது. இலங்கைக்கோ வேகவீச்சாளர்களின் காயங்கள் பின்னடைவாயின.

ஊ) இந்தியாவின் குல்தீப், ஜடேஜாவையும் ஆஸ்திரேலியாவின் ஸாம்பாவையும் தவிர வேறு முதன்மை அணிகளின் சுழலர்கள் சோபிக்கவில்லை. அவர்கள் டி20 மனநிலையிலே பந்துவீசியதும் காயம் மற்றும் வேறு காரணங்களால் சிறந்த ஆட்டநிலையில் இல்லாததும் உதவவில்லை. பந்து மெதுவாக வரும் ஆடுதளங்களில் தூக்கிப் போடுவதை விட ஸ்டம்புக்குள் வீசுவதும், வேகத்தை மாற்றுவதும், சில நேரங்களில் சற்று கூடுதல் வேகத்தில் வீசுவதும் முக்கியம். அதை இந்தியர்கள் சரியாக செய்தார்கள். ஆனால் யார் சுழற்றிப் போட்டாலும் பந்து திரும்பவில்லை. நல்ல சுழலர்களுக்கு மட்டுமே திரும்பியது. இதனாலே இரண்டுக்கு மேல் சுழலர்களே சுபிட்சம் என்றாகியது. 30 ஓவர்களுக்கு மேல் வேக, மிதவேக வீச்சாளர்களின் உள்-ஸ்விங், பவுன்சர், யார்க்கர் பந்துகளே எடுபட்டன, சுழல் அல்ல. அதனாலே இந்தியா அஷ்வினை - அவர் என்னதான் நன்றாக வீசியிருப்பார் என்றாலும் - ஆடவைக்கவில்லை.

எ) ஆக்ரோஷமான துவக்க மட்டையாட்டம் + மத்திய வரிசை நிதானமான சதங்கள். அல்லது துவக்க மட்டையாட்ட நிதானமான சதங்கள் + மத்திய வரிசையின் அதிரிபுதிரி ஆட்டம். இப்படி எதாவது ஒரு பார்முலா அவசியம். இந்தியா முதல் திட்டத்தை மேற்கொண்டது. இது இலங்கை 1996 உலகக்கோப்பையில் மேற்கொண்ட உத்தி. பந்து 20 ஓவர்களுக்குப் பிறகு மெதுவாகி நின்று வரும் போது உதவக்கூடியது. எல்லாரும் தூக்கி அடித்தாடும் டி20 ஆட்ட பாணியை பின்பற்றிய அணிகள் துவண்டன. நான் கவனித்த வரையில் பல அணிகளுக்கு டி20 ஹேங் ஓவர் அதிகமாக இருக்கிறது.

ஏ) உடற்தகுதி. நீண்ட தொடர் இது. நிறைய பயணம் இருக்கும். அதனால் உடற்தகுதி முக்கியம் என ரோஹித் துவக்கத்திலே சொன்னார். இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவைப் போல பிற அணிகள் உடற்தகுதியை கவனிக்கவில்லை. அதனாலே அங்கங்கே பஞ்சராகி நின்றார்கள்.

ஒ) இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியுசிலாந்தைத் தவிர பிற அணிகள் தயாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என நினைக்கிறேன். ஆஸ்திரேலியாவுக்கு காயம் காரணமாக பல பிரச்சினைகள் இருந்தன. நல்ல இரண்டாவது சுழலர் (ஆஷ்டன் அகார்) இல்லை. ஆனால் ஒரு கையை, காலை வெட்டிவிட்டாலும் நின்று சண்டையிடும் வீரனைப் போன்ற அணி ஆஸ்திரேலியா. அவர்களை கணக்கிலே எடுக்க முடியாது. இது தயாரின்மை பல அணிகளின் சொதப்பலுக்கு முக்கிய காரணம்.

ஓ) இரண்டாம் நிலை அணிகள் (பாகிஸ்தான், இலங்கை) சொதப்பின, மே.இ தீவுகள் வரவேயில்லை, அவர்களுடைய இடத்தில் மூன்றாம் நிலை அணிகள் நன்றாக ஆட முயன்றன (அப்கானிஸ்தான், நெதர்லாந்து). ஆனாலும் அனுபவமின்மை அவர்களுக்கும் முதன்மை அணிகளுக்கும் இடையில் ஒரு பெரிய இடைவெளியை ஏற்படுத்தியது. ஆஸி-அப்கானிஸ்தான் போட்டி ஒரு நல்ல உதாரணம். ஒரே ஒரு விக்கெட்டை எடுத்திருந்தால் அப்கானிஸ்தான் ஜெயித்திருக்கும். அவர்களுக்கும் தோல்விக்கும் நடுவே 200 ரன்களும் மூன்று விக்கெட்டுகளுமே இருந்தன. என்ன பிரச்சினை என்றால் மேக்ஸ்வெல் அடிக்க ஆரம்பித்ததும் அப்கானிஸ்தானுக்கு எந்த நீளத்தில், திசையில் வீசி எப்படியான ஆடுகளத்தை அமைக்க வேண்டும் எனத் தெரியவில்லை. தூக்கிப் போடுவதைத் தவிர அவர்களுடைய சுழலர்களுக்கு ஆட்டத்தை மெதுவாக்கி தடுத்தாடி மேக்ஸ்வெல்லை எரிச்சலாக்கத் தெரியவில்லை. ஒரு வேகவீச்சாளரைக் கொண்டு வந்து பந்தை வைடாக வீசி அவரது லயத்தை குலைத்து கால்பக்கமாக தூக்கி அடிக்க வைக்கத் தெரியவில்லை. நான் அந்தப் போட்டியைப் பார்க்கும் போது இந்தியா இந்த இடத்தில் இருந்திருந்தால் என்னவெல்லாம் பண்ணி ஆட்டத்தைக் கட்டுப்படுத்தியிருப்பார்கள் என்றே யோசித்தேன். அவ்வளவு அடிவாங்கியிருக்கிறார்கள், அதனாலே அதை எதிர்கொள்ளும் உத்திகளும் அவர்களுக்குத் தெரியும். ஆனால் அப்கானிஸ்தானுக்கு இதுவே முதல் அனுபவம். எனக்கு அவர்களைப் பார்க்க பாவமாக இருந்தது. இதைத் தான் நான் பெரிய இடைவெளி என்றேன்.

2023 உலக்கோப்பை சிறந்த பாடல்கள் இருந்தும் சொதப்பிப் போன கவுதம் மேனன் படத்தைப் போல் ஆகிவிட்டது. அரை இறுதி, இறுதிப்போட்டிகளாவது காப்பாற்றுமா?

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...