பிரதீப்பை வைரல் கண்டெண்ட் ஆக்கியது எது? நீதியுணர்வு. அவர் அநீதிதாக வெளியேற்றப்பட்டார் எனத் தோன்ற வைக்கப்பட்டதால் வெர்ச்சுவல் வெகுஜனத்தின் நீதியுணர்வு தூண்டப்பட்டது. இந்த நீதியுணர்வு வெகுகாலமாக நம் இலக்கியவாதிகளின் கண்டெண்டாக இருந்து வந்து, பின்னர் சிலப்பதிகார மேடையுரை, திராவிட கழக மேடை உரை, அண்ணா, கலைஞர் என ஒரு சமூக சக்தியாக வளர்த்தெடுக்கப்பட்டது. இந்தியாவிலும் பல மாநிலங்கள் மக்கள் திரளின், சாதிய திரளின், மதவாத திரளின் நீதியுணர்வு இவ்வாறு திரட்டப்பட்டிருக்கிறது. நிர்பயாவுக்கான நீதியுணர்வு திரட்டப்பட்டதில் பாஜக ஆட்சிக்கு வந்தது. (நான் அண்ணாவையும் மோடியையும் சமப்படுத்தவில்லை.)
ஆனால் நீதியுணர்வில் இருந்து ஒன்று உருவாகும் போது அது மற்றொன்றாக உள்ளது. அது அப்படியே இருக்க முடியும். நடப்புலகில் எதுவும் நீதியின் படி நடப்பதில்லை. பொருளியல், அதிகாரத் தேவைகளின் படியே நடக்கிறது உலகம். ஆனால் அத்தேவைகளின் படி மக்களைத் திரட்டினால் முதலீட்டியத்தால், அதிகார வர்க்கத்தால் நம்மை ஆள முடியாது. எதையும் அதுவாக பார்க்க அனுமதிக்காததே தேர்தல் அரசியல்.
நீதியுணர்வின் பெரிய சிக்கல் அது அரூபமானது, காண இயலாதது, அது ஒரு நவீன மாற்றுக் கடவுள் என்பது. கடவுளுக்கான எல்லா ஏமாற்று சங்கதிகளும் வெகுஜனத் திரளைப் போய் சேரும் நீதியுணர்வுக்கும் உண்டு. இந்நீதி உணர்வின் மற்றொரு பெரிய சிக்கல் அது நம்மை அன்றாட உலகில் அநீதியை எதிர்க்க விடாமல் பண்ணுகிறது என்பது. நாம் இன்று காணும் நீதியுணர்வு மத்திய வர்க்கம் தன் அன்றாட உடனடி உலகில் உள்ள பல்வேறு அநீதிகளை கண்டும் காணாமல் கடந்துவிட செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டது. அது ஒரு மாயக்களிம்பு. குழந்தை இல்லாத ஒருவர் பள்ளிக்கூடத்தின் முன் போய் நின்று குழந்தைகளை நோக்கி ஆறுதலாவதைப் போன்றது. அதுவே அவர்களை குழந்தையே இனி வேண்டாம் என நினைக்க வைத்தால்? ஆம் அதுதான் நவீன நீதியுணர்வின் விசயத்தில் நடக்கிறது. அது நம்மை அநீதியாளர்கள் ஆக்குகிறது. இதை நான் கருத்தளவில் அல்ல அனுபவ ரீதிதாக கண்டே மனிதர்களின் நடத்தையை கவனித்தே சொல்கிறேன். நாய் வளர்ப்பின் போதும் பார்த்திருக்கிறேன் - பிஸ்கட் எனும் சொல் ஒரு நாயை தன் பிஸ்கட்டை மறக்கச் செய்கிறது. சொற்கள் ஆபத்தானவை என அதனாலே நினைக்கிறேன். அதனாலே நீதி விவாதமே நம் ஊரின் பெரிய மோசடி என நினைக்கிறேன். ஒன்று டிராமாவாக, கருத்தாக, தர்க்கமாக சுருக்கியதும் அதை இழந்து அதன் தோற்றத்துடன் சமாதானமாகிறோம். அசல் உலகில் அதன் தோற்றத்திற்கும் கருத்தளவில், பேச்சில், சிந்தனையில் அதன் உருவத்துக்கும் தொடர்பே இல்லாதிருப்பதைக் காண்கிறோம். மிக அதிகமாக அறவுணர்வு பற்றி பேசுகிறவர்கள் தம் நடைமுறையில் எந்த அறவுணர்வும் இல்லாதிருப்பதைக் காண்கிறோம். இதன் உளவியலே அப்படித்தான் போல - பேசப் பேச நாம் அதை விட்டு விலகிக்கொண்டே இருக்கிறோம். சற்றும் கூச்சமற்றவர்களாக பொய் சொல்கிறோம், ஏமாற்றிப் பறிக்கிறோம், துன்புறுத்துகிறோம், ஆனால் பேச்செல்லாம், மனமெல்லாம் நீதியுணர்வு கமழ இருக்கிறோம்.
இது ஒரு பிராமணியமும் தான். பிரம்மத்தின் இடத்தில் நீதி.
அசல் நீதியுணர்வைப் பெற நாம் புலனுலக வாழ்தலுக்குத் திரும்ப வேண்டும். சின்னச்சின்ன நீதிகளுக்கு, உடனடியாக நமக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் பயன் தரும், நம்மால் அனுபவிக்க முடிகிற நீதிக்குத் திரும்ப வேண்டும். பெரும் நீதிகளை உதற வேண்டும். நம் நீதியான அனுபவங்களை உடனடியாக சொல்லுக்குத் திருப்பி மீண்டும் அரூபமாக்காதிருக்க வேண்டும். அநீதியின் குடியிருந்த கோயிலே மொழி தான்.
சரி, மொழி இல்லாவிடில் நமக்கு எது நீதியென எப்படித் தெரியும்? எது நம் புலனுலகில் போதாமையை ஏற்படுத்துகிறதோ அதுவே அநீதி. அதை பௌதீகமாக அறிய முடியும். பணம் போதவில்லையா? ஊதியம் கிடைக்கவில்லையா? தண்ணீர், சாப்பாடு, சூழல் மாசாதல், சொந்த இடத்தில் இருந்து வெளியேற்றப்படுதல், அவமதிக்கப்படுதல் இப்படி நம்மால் காண முடியும் எதுவும் அநீதியே. ஆனால் அதற்கு எதிர்வினையாற்றாமல் பக்கத்து தெருவில், ஊரில், நாட்டில், கிரகத்தில் நடப்பதற்கு கண்ணீர் வடிப்பது சுய-எமாற்று, சுயமோசடி. அவ்விதத்தில் நம் நாட்டில் மத்திய, மேல் வர்க்கத்தினர் நீதியுணர்வற்றவர்களாகவும், தண்ணீர் வரவில்லை, அநியாயமாகக் கொன்று விட்டார்கள் என்றால் குடத்துடன், பிணத்துடன் தெருவில் வந்து நிற்கிறார்களே அவர்களே அசல் நீதியாளர்கள். அவர்கள் பாலஸ்தீனம் பற்றி பேசிக்கொண்டு பொறுப்பை இன்னொருவர் தலையில் போட மாட்டார்கள்.
Comments