"கூழாங்கல்" படத்தின் டிரைலர் பார்த்த போது ஏற்பட்ட எதிர்பார்ப்பு முழுப்படத்தில் நிறைவேறவில்லை. டிரைலரை நன்றாக தொகுத்திருந்தார்கள், ஆனால் படத்தில் சொதப்பி விட்டார்கள். கதையோட்டத்தில் ஒரு சலிப்பு வருகிறது - அது திரைக்கதையில் உள்ள பிரச்சினையால் தான். அந்த தகப்பன் பாத்திரம் கடைசி வரையில் மாறுவதில்லை. அதனாலே அவரும் சரி அவரது மகனின் பாத்திரமும் சரி ஒருவித கெட்டி அட்டையால் செய்யப்பட்ட மனிதர்களாக இருக்கிறார்கள். அது அப்படம் முழுக்க எல்லா பாத்திரங்களுக்கும் இருக்கிற பிரச்சினை.
இப்பிரச்சினை ஒரு அரசியலும் தான். ஆண்கள் அடிப்படையில் கொடியவர்கள் என்று சொல்வதில் ஒரு முற்போக்கு சிலிர்ப்பு உள்ளது. அது தன்னைக் குறித்து நவீன மனத்திற்கு உள்ள குற்றவுணர்வில் இருந்து வரும் சிலிர்ப்பு. அது ஒரு பாசாங்கு நாடகம். தானாகவே இருந்துகொண்டே தன்னை மறுத்து நவீன ஆண் ஆடும் போலி நாடகம். நீங்கள் இந்த நாடகத்தை 70, 80களில் எழுத ஆரம்பித்த முற்போக்கு படைப்பாளிகளிடமும் அவர்களின் வழித்தோன்றலாக தம்மைக் கருதும் இன்றைய ஆண் படைப்பாளிகளிடமும் பார்க்கலாம். அவர்களை வாசித்து ஏற்பட்ட செயற்கையான அரசியல் இந்த இயக்குநரிடமும் தெரிகிறது. ஏனென்றால் ஆண் பாத்திர அமைப்பில் ஒரு உள்முரண, மாற்றம் இல்லாமல் இறுகிப் போய் இருக்கிறது. பெண்கள் நிரந்தர இரைகளாக காட்டப்படுகிறார்கள். அந்த சூழலில் அப்படித்தான் இருக்க முடியும் எனக் கூற முடியாது. ஏனென்றால் எந்த சூழலிலும் மனிதர்கள் வேட்டையாளர்கள், வேட்டை இரைகள் என கராறான டப்பாக்களுக்குள் இருக்க மாட்டார்கள். மாறிக்கொண்டே, முரண்பட்டுக்கொண்டே இருப்பார்கள். அப்போதே அது உண்மைக்கு பக்கத்தில் வரும். தமிழ் முற்போக்கு சிறுகதைகளில் உள்ள பாத்திர வார்ப்பில் உள்ள அதே பிரச்சினை இப்படத்திலும் உள்ளது. இதிலும் இருந்து கிடைக்கும் பாடம் இளம் இயக்குநர்கள் உத்தம முற்போக்கு தமிழ் படைப்பாளிகளைப் படிக்காமல் நடைமுறையில் மனிதர்கள் எப்படி இருக்கிறார்கள் என கவனிக்க வேண்டும் என்பது.
அந்த குழந்தையின் பாத்திரம் இன்னும் கொடுமை - ரொம்ப நல்லத்தனமாக இருக்கிறது. குழந்தைகளிடமே நாம் உச்சபட்சமான தீமையின் வெளிப்பாட்டைக் காண்போம். அதுவே உளவியல் சொல்வது. அழிவு விழைவு குழந்தைகளின் அடிப்படை உந்துதல். ஆனால் இந்த குழந்தை ஷெல்லி, வெர்ட்ஸ்வொர்த்தின் பழைய கற்பனாவாத காலத்து குழந்தை உருவகம் போல இருக்கிறது. குழந்தை ஏசுவைப் போல இருக்கிறது. சற்று பயமாக கூட இருக்கிறது. இந்த முற்போக்காளர்கள் ஒரு புதிய உலகைப் படைத்தால் அது ரொம்ப பயங்கரமாக இருக்கும் போல.
சவால், அதை எதிர்கொள்ளும் முயற்சி, அதனால் கிடைக்கும் படிப்பினை, அதனால் வரும் மாற்றம் என பாத்திர அமைப்பில் சில சிறிய மாற்றங்களைப் பண்ணியிருந்தால் இப்படம் ஒரு கிளாஸிக் ஆகியிருக்கும். ஆனால் அவசர கதியில் கதையை எழுதி படமாக்கியதைப் போலிருக்கிறது. கதை மொழியில் வேலை செய்திருக்கிறார்கள், நிறைய உருவகங்களை இறைத்திருக்கிறார்கள், ஆனால் கதையுடன் பொருந்தி வர முடியாததால், கதையே முழுமையற்றது என்பதால், கதையே தட்டையாக உள்ளதால் இந்த உருவகங்கள் உயிரிழந்து விடுகின்றன.
ஏமாற்றம்!

Comments