இந்துமதி உதவி கேட்டதோ அவருக்கு துர்கா ஸ்டாலின் உணவுப்பொட்டலம், தண்ணீர் கேன்களை அனுப்பி, பின்னர் அவரை வெள்ளத்தில் இருந்து ஜீப் மூலம் வெளியே கொண்டு வந்து தனியார் விடுதியில் விட்டதோ ஒரு குற்றமா என்றால் இல்லை. தொடர்புகளை மக்கள் இவ்வாறு பயன்படுத்துவது நடைமுறையில் இல்லையா? உண்டு. அதில் எந்த நியாய தர்மமும் வேண்டாமா என்று கேட்டால் வேண்டும், ஆனால் நிஜத்தில் அது இல்லை.
அவரிடத்தில் நம்மில் யார் இருந்திருந்தாலும் எதாவது ஒரு சந்தர்பத்தில் அழைத்துக் கேட்டிருப்போம். ஏற்றத்தாழ்வே இல்லாத உன்னத சமூகத்தில் நாமோ இவ்வுலகில் எவருமே வாழ்ந்ததோ வாழ்வதோ இல்லை. நம்மை எரிச்சலூட்டியது நமது மத்திய வர்க்க பொறாமை. அதை ஏழைகளின் தலையில் சுமத்தி தப்பிக்கப் பார்க்கிறோம்.
இந்துமதியின் மொழியில் - இரா. முருகவேள் குறிப்பிட்டதைப் போல - ஒரு சாதிய மேட்டிமைத்தனம் உள்ளது. ஜெயலலிதா இதே உதவியை செய்திருந்தால் அவரை ஜில்ஜில் ரமாமணியுடன் ஒப்பிட்டிருப்பாரா? மகாபெரியவரை, அடுத்தடுத்த மடாதிபதிகளை? ம்ஹும். ஏனென்றால் அரசியல் பொருளாதார வலிமையை மீறி நாம் நம்மை ஒருவிதத்தில் நடப்புலகில் படிநிலைப்படி காட்டத்தான் செய்கிறோம், அதன்படி நடத்தப்படுகிறோம், இது நம் உபமனம் சார்ந்து நம்மையே அறியாமல் நடக்கிறது, இது சூழலை, பண்பாட்டைப் பொறுத்து மாறும் என்பதை நான் என் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். ஒரு அவமானம் நமக்கு அழகாகக் கூடத் தெரியும். அதுதான் வாழ்க்கையாக இருக்கிறது.
பலரிடமும் இந்த 'மோகனா - ரமாமணி' மனநிலை' உண்டு. இன்றைய தலைமுறையில் நாம் இதை அரசியல் சரிநிலை கொண்டு மறைக்கிறோம், மிக மிக அந்தரங்கமான வெளிகளில் மட்டும் காட்டுகிறோம், இந்துமதியின் தலைமுறையினருக்கு இந்த தந்திரம் தெரியாது, ஒன்று சாஷ்டாங்கமாக விழுவார்கள் அல்லது விழக் கோருவார்கள். அதில் எந்த கள்ளங்கபடமும் இராது. பண விசயத்திலும் இப்படி நேரடியாக மேட்டிமைத்தனம் காட்டிவார்கள், நான் ஒரு சமத்துவ பணக்காரன் என கைகட்டி நிற்க மாட்டார்கள். மனதில் இருப்பதை அப்படியே எழுதிவிடுவார்கள்.
இதையெல்லாம் விவாதித்து சீர்படுத்த முடியாது. காபியில் சர்க்கரை சேர்க்கலாம். அது ஒரு பொருள். மனித நடத்தை, பேச்சு, சிந்தனையில் ஒரு ஸ்பூன் சர்க்கரை கலக்க முடியாது. சமூகம் எப்படியோ அதற்குள் அதன்படித்தான் இருக்கிறோம். எதிர்காலம் எப்படி இருந்தாலும் அதில் நாம் இருக்கப் போவதில்லை. இப்போது என்ன உள்ளதோ அதை மாற்ற இயலாது. நம் எதிர்வினைகளும் முழுக்க நம் கட்டுப்பாட்டில் இல்லை. அதனாலே இத்தனை நூற்றாண்டுகளாக சாதிய, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்து எதிர்த்து அதை விட மோசமான இடத்தில் அதே மறுமலர்ச்சி, புரட்சி கற்பனைகளுடன் வாழ்கிறோம். நினைப்பது ஒன்று, சொல்வது வேறு, செய்வது இன்னொன்று என மூன்றாக உடைந்து கிடக்கிறோம்.
ஜெய்பிரகாஷ் நாராயண் பற்றி நூல் ஒன்றைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அவரும் முழுமையான புரட்சிக்காக தான் உழைப்பதாக சொல்கிறார். அவருடன் நிற்கும் ஆர்.எஸ்.எஸ்ஸும் அதையே சொல்கிறது. தானும் புரட்சிக்காகவே இதைச் செய்வதாக சொல்லி நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்கிறார் இந்திரா. தனக்குத் தன் தாயின் சோஷலிஸ சமத்துவத்தில் நம்பிக்கை இல்லை, தன் புரட்சி நவீனமானது என்று சொல்லி சஞ்சய் காந்தி பல புரட்சிகளை செய்கிறார். மார்க்ஸிஸ், இந்திய கம்யூனிஸ்டுகளும் இரு முகாம்களிலோ வெளியிலோ நின்று புரட்சி பேசுகிறார்கள். கூடவே எல்லாரும் இன்னொருவரை சர்வாதிகாரி என்கிறார்கள். ஜனநாயகத்தை ஒழித்து சர்வாதிகாரத்தை ஜெ.பி கொண்டு வரக் கூடாது என்றே இந்திரா நெருக்கடியை பிரகடனம் பண்ணுகிறார். ஜெ.பி நாங்க தான் சொன்னொமே அந்தம்மா ஒரு சர்வாதிகாரி என்று என்கிறார் ஜெயிலில் இருந்துகொண்டு. ஒட்டுமொத்தமாக ஒரு அபத்த நாடகம்.
இன்றும் நாம் அதே இடத்தில் தான் நிற்கிறோம். புரட்சி, மாற்றம், சமத்துவம், சர்வாதிகாரம், ஜனநாயகம் எனும் சொற்கள் நம்மைச் சுற்றிச் சுற்றி வருகின்றன. சொல்வதற்கும் செய்வதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
இந்துமதியிடம் ஒரு நல்ல விசயம் அவரிடம் இந்த மும்முகங்கள் இல்லை என்பது. ஒரே முகம் தான். அதைப் பார்க்க நமக்கு கொடூரமாக இருக்கிறது. அது யார் தப்பு? இந்துமதி நமக்கு ஒரு கண்ணாடியைக் காட்டுகிறார். அது குரங்கு பொம்மையல்ல. நாமே தான்.
இப்படியெல்லாம் கொந்தளித்து நம்மையே ஏமாற்றிக்கொள்ளாமல் மகிழ்ச்சியாக இருப்பதே ஒரே வழி.
Comments