இலக்கியத்தில் எல்லாமே கரார்தான். ஒரு நாவல் (அல்லது சிறுகதை) சுமாராக இருந்தால் கூட அங்கீகரிக்க மாட்டார்கள். ஆனால் சினிமா விசயத்தில் நம் ஆட்கள் அவ்வளவு கரார் இல்லை. ரொம்ப ரொம்ப சுமார் என்றாலே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். ஓரளவுக்கு சுமாராக ஓடின முற்போக்குப் படமென்றால் அதற்கு உலகமெங்கும் எதாவது விருதுகள், மட்டற்ற புகழ், ஏகப்பட்ட பணம். சிறந்த படமென்றால் சொல்லவே வேண்டாம், அந்த தாஜ்மஹால் என்ன விலை, அதானி சொத்தை விலைக்கு கேளு எனும் ரகத்தில் ரசிகர்கள் குதிப்பார்கள். உலகின் அத்தனை விருதுகளும் உடனே வேண்டும் என்பார்கள். இல்லாவிட்டாலும் கவலையில்லை, ஆயிரம் கோடி வசூல், ஆயிரம் லட்சம் கோடி வசூல் எனப் புளகாங்கிதம் அடைவார்கள், அதனால் தமக்கென்ன லாபம் எனக் கேட்க மாட்டார்கள். பிடிக்காத படத்தைக் கூட திரையரங்கில் கொண்டாடும் ரசிகர்களை நண்பர்களாகப் பெற்றிருக்கிறேன். ஏன் அப்படி செய்கிறார்கள் எனக் கேட்டால் அவர்களுக்கு சொல்லத் தெரியாது. மிக மிக மட்டமான இரண்டு மூன்று தோல்விப் படங்களை எடுக்கும் இயக்குநர்களைப் பார்க்கிறோம். ஒவ்வொரு படத்துக்கும் சம்பளம் என ஒன்றை வாங்கி விடுவார்கள். ரசிகர்கள் மட்டும் ரொம்ப மென்மையாக வலிக்காததைப் போல கலாய்த்து விட்டுப் போய்விடுவார்கள். ஏன் இவ்வளவு மட்டமாக எடுத்து வைத்து ஏமாற்றினீர்கள் என மனம் காயப்பட்டு எந்த பார்வையாளரும் கடுமையாகத் திட்டி நான் பார்த்ததில்லை.
இதுவே இலக்கியத்தை எடுத்துக் கொண்டால் ஒரு சிறந்த நாவலை / கதையை நீங்கள் எழுதி 10000 பேர்களுக்கு அது போனால், 50 விமர்சனங்கள் இணையத்தில் வந்தால் பெரிய விசயம். எங்காவது ஒரு சிறந்த நாவலுக்கு விருதுகள் கொடுத்ததுண்டா? தோல்வி அடைந்தால் யாராவது திட்டிக்கொண்டோ விமர்சித்துக் கொண்டோ இருப்பார்கள். ஏதோ அவர்களுடைய சொத்தை நீங்கள் மோசடி செய்து அபகரித்ததைப் போலத் திட்டுவார்கள்.
ஒரு லட்சம் பெறுமதியான விருதுக்கு, அதனால் கிடைக்கும் ஒரு கோடி மதிப்பிலான வீட்டுக்கு அல்லது தேசிய அங்கீகாரம் தரும் விருதுக்கு எவ்வளவு போட்டி, மோதல், அரசியல்! நாற்பதாண்டுகள் தொடர்ச்சியாக பங்காற்றும் படைப்பாளிகள் கூட இதற்காக வரிசையில் நின்றிருக்க வேண்டும். சினிமா இயக்குநர்களுக்கு, நடிகர்களுக்கு அட்டுப்படத்தில் கேவலமாக பங்காற்றினால் கூட இதெல்லாம் வருடத்திற்கு ஒருமுறையேனும் மிக சுலபமாக கிடைக்கிறது.
ஒரு சாதாரண மசாலா படத்தை எடுத்த இரண்டு தரப்புகளுக்கு இடையே படத்தயாரிப்பு சார்ந்த ஒரு பணப் பஞ்சாயத்து. அதைப் பற்றி ஒரு மாதம் மொத்த சமூகமும் மாய்ந்து மாய்ந்து யோசிக்கிறார்கள், விவாதிக்கிறார்கள், அதனால் தமக்கு கால் பைசா லாபமில்லை என்றாலும். ஆனால் ஒரு விருது வாங்கும் விசயத்தில் எவ்வளவு சதித்திட்டங்கள், சிக்கல்கள். சம்மந்தப்பட்ட எழுத்தாளர் இந்நேரம் அந்த விருது வந்தால் ஆறுதல் அடைந்து உடல் நலம் இன்னும் மேம்படக் கூடும் என்று ஜெயமோகன் எழுதுகிறார். இப்படியான அவல நிலை உலகில் எந்த மொழியிலும் எந்த எழுத்தாளனுக்கும் இராது.
ஒன்றை சீரியஸாக எடுக்காததால் சதா கொண்டாடுகிறார்கள், விமர்சிப்பதே இல்லை, மற்றொன்றை சீரியஸாக எடுப்பதால் மிக மிக அரிதாக மிகச்சிலரே கொண்டாடுகிறார்கள், கொஞ்சம் ஏமாற்றமானால் கத்தியைத் தூக்கிக் கொண்டு விரட்டுகிறார்கள் என்று விளக்கம் சொல்லலாம்.
ஆம் ஒன்று பொழுதுபோக்கு, வியாபாரம், இன்னொன்று கலையனுபவம், வியாபாரம் அல்லாத பண்பாட்டு இயக்கம். மறுக்கவில்லை, ஆனால் அதற்கு இவ்வளவு வித்தியாசம் வேண்டுமா?
என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தால் நான் இதை எழுதவில்லை - இலக்கியத்தில் பெரும் படைப்பாளிகளே சறுக்கும் போது வாசகர்கள், விமர்சகர்களால் கடுமையாகத் துண்டாடப்படுவதைப் பார்க்கும் போது, சினிமாவால் நிலை நேர்மாறாக இருப்பதைக் காணும் போது, ஒரு இடத்தில் சில்லறை விழுந்தால் பிடிக்க ஆயிரம் பேர் புழுதியில் விழுந்து புரள, செத்தால் அது நாற்பது பேருக்கான சேதி என இருக்க, இன்னொரு இடத்தில் பணத்திலே விழுந்து புரண்டு, தும்மினாலே செய்தி எனும் நிலையில் மக்கள் இருப்பதைக் காணும் போது எழுந்த வினா இது.
என்ன கழிசடையான சமூகம் இது! சென்னைக்கு வந்த வெள்ளத்தை விட நூறு மடங்கு பெரிய வெள்ளம் மொத்த தமிழகத்துக்கும் வந்து ஒரு மாதம் மூழ்க வேண்டும்! இப்படி ஒரு மாநிலமே பூமி மீது இருக்கக் கூடாது. எதற்கு இப்படி ஒரு சமூகம், இப்படி ஒரு மொழி! ஆனால் அற்புதமான நெடிய பண்பாடு, மிகச்சிறந்த இலக்கியம் நமக்குள்ளது. நாம் அழிந்தால் அதுவும் அழிந்து போகும். அல்லாவிடில் மனம் உவந்து சபித்து விடலாம்.
Comments