இந்து மதக் கோயில்களுக்குள் நீங்கள் ஒரு மாற்றுத்திறனாளியாகவோ வேறு கால் பிரச்சினைகள் உள்ள முதியவராகவோ இருந்து நடப்பதற்கோ நகரவோ செருப்பு உள்ளிட்ட உபகரணங்கள் தேவைப்பட்டால் அனுமதிக்க மாட்டார்கள். சரி செருப்பு பயன்பாடு பற்றி இந்து மத புராணங்களிலோ வேதங்களிலோ எதையாவது சொல்லியிருக்கிறார்களா என்றால் இல்லை. பசுவதை ஒழிப்பு பற்றி சொல்லியிருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. மாறாக மாடுகளை யாகத்தின் பெயரில் கொன்று தின்பதைப் பற்றி நிறைய இருக்கிறது. இப்படியான பூர்வ வைதீக இந்துக்கள் ஒரு கட்டத்தில் அகிம்சையை வலியுறுத்திய பௌத்தத்தின் புகழைக் கண்டு அந்தப் பழக்கத்தை வரித்துக்கொண்டனர். பௌத்தத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் புலால் உண்ணாமையை ஒரு முக்கிய கொள்கையாகவும், சாதிய ரீதியாக படிநிலையை உருவாக்கவும் பயன்படுத்தினார்கள். இதன் நீட்சியாகவே மாட்டின் தோல் பயன்படுத்தப்படுகிறது என்பதற்காக செருப்புகளை இந்துகோயில்களில் தடை செய்கிறார்கள். கூடுதலாக புத்தர் தன் மரணத்திற்கு பின்பும் தம்முடன் இருக்கிறார் எனும் நம்பிக்கையின் படி அவரது பாதங்களை சிலையாக்கி வழிபடும் மரபை பூர்வ பௌத்தர்கள் உருவாக்கினார்கள். அந்த பாதங்களையும் பௌத்த வீழ்ச்சிக்குப் பின்னர் இந்துமதம் எடுத்துக்கொண்டது. காலைத் தொட்டு வணங்கும் வழக்கம் இந்துக்கள் இடையே உருவானது. பிக்பாஸில் பாருங்கள், தவறாமல் கமலின் காலில் விழுந்தே உள்ளே வருகிறார்கள், வெளியே போகிறார்கள். இந்த வைதீகப் பண்பாட்டுக்கு வெளியே உள்ளோர் மட்டுமே பரஸ்பரம் வணங்கி மரியாதையை வெளிப்படுத்துகிறார்கள். இப்படித் தன்னிச்சையாக உருவான வரலாற்றின் விளைவாகவே கால்கள் புனிதமாகி சுத்தமான கால் படைத்தவர்கள், அசுத்த கால் படைத்தவர்கள் எனும் எதிர்வு உருவானது. கால்களைப் பயன்படுத்த முடியாதவர்களை கோயிலுக்கு வெளியே நிற்க / உட்கார வைக்கும் ஒரு கொடிய வழக்கமும் ஏற்பட்டது. இன்று நீங்கள் போலி தோல் (faux leather) செருப்புகளையே அதிகமாக பயன்படுத்துகிறீர்கள் என்றாலும் அனுமதிக்க மாட்டார்கள். ஏனெனில் அது ஒரு குறியீடு. இந்துக்களுக்கு அந்த பூர்வ பௌத்த குறியீட்டைப் புரிந்துகொள்ளத் தெரியாது என்பதாலே அவர்கள் அதை விளக்கவோ மறுக்கவோ தெரியாமல் திகைத்து நிற்கிறார்கள், திகைக்கும் போது பயத்தில் நாம் இன்னும் இறுக்கமாக ஒரு குறியீட்டைப் பற்றிக் கொள்வோம்.
இதனாலே, இந்து மத சீர்திருத்தவாதிகள் கூட இப்பிழையைத் திருத்தி ஜனநாயகத் தன்மை கொண்டதாக கோயிலை ஆக்க முயலவில்லை. ஏனென்றால் இது திருப்பதி பிரகாரத்தினுள் வீற்றிருக்கும் தெய்வத்தின் அலங்காரங்களை அகற்றிக் காட்டுவதற்கு சமமாக ஆபத்தானது. எவ்வளவு விதிமுறை மாற்றங்களைக் கொண்டு வந்தாலும் கணிசமானோர் மாற்றுத்திறனாளிகளை கோயிலுக்குள் சுலபமாக அனுமதிக்க மாட்டார்கள். இதற்கு ஒரு தீர்வு பௌத்தர்களின் குறியீடே அது எனப் புரிந்துகொண்டு, எந்த புனிதமும் இல்லை என்பதே புத்தரின் கால்களின் சிறப்பு என்றும், பூமியில் இந்த மண்ணில் கால் பதித்து வாழ்வதே மானுட இருப்பு என்றும், சொர்க்கமோ நரகமோ இல்லையெனவும் அவர் சொல்லியிருக்கிறார் என்றும், அந்நோக்கிலே புத்தரின் கால் வழிபடப்படுகிறது, அவரே தேவைப்படும் போது புலாலும் உண்ணலாம் என அனுமதித்தவர் எனவும் ஏற்றுக் கொள்வதே. இந்த கால்கள் இந்து மதத்தில் இருந்து வெளியேறினால் கணிசமான மாற்றுத்திறனாளிகள் நிம்மதியடைவர். ஏனென்றால் அவர்கள் மத்தியிலும் பக்தர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கும் தெய்வ தரிசனம் செய்ய ஆசையாக இருக்கும் இல்லையா? ஒரு பழைய பௌத்த நம்பிக்கையை, தொன்மத்தைக் காட்டி அவர்களை வெளியேற்றுவது என்ன ஒரு அபத்தம்!
Comments