Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

பொய்க்குற்றச்சாட்டுகளை அனுமதிக்கும் நடைமுறை

ஒரு மனைவி தன் கணவன் மீது பொய்க்குற்றச்சாட்டைத் தொடுப்பது ஒரு கொடூர செயல் என கொல்கொத்தா உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில் கூறியுள்ளது. ஆனால்
இவ்விசயத்தில் வக்கீலையும் வாதியையும் மட்டும் பழிசொல்வது  சரியல்ல, நீதிமன்றமும் அதன் நடைமுறைகளும் திருமண சட்டமுமே பொய்க்குற்றச்சாட்டுகளுக்கு முக்கிய காரணங்கள்:
1) திருமண மற்றும் 498a மாதிரி சட்டங்கள் ஆணையும் பெண்ணையும் சமமாக பாவிப்பதில்லை.
2) திருமண சட்டம் ஒருவரின் கல்விப்பின்னணி, சாதி அதிகாரம், பொருளாதார நிலையை பாலின அடையாளம் அளவுக்கு பொருட்படுத்துவதில்லை. 
3) மனமொத்துப் போகவில்லை எனும் காரணத்துக்காக ஒருவர் விவாகரத்து கோர சட்டம் அனுமதித்தாலும் நீதிமன்றம் அனுமதிப்பதில்லை, குறிப்பாக பிரதிவாதி அதை ஏற்காத போது. அதற்குப் பதில் வழக்கை வருடக்கணக்காய் இழுத்தடிக்கவே நீதிமன்றம் விரும்புகிறது. இதன் விளைவாக வக்கீல்கள் நிறைய பொய்க்காரணங்களை எழுத தூண்டுவார்கள். அடித்தார், துன்புறுத்தினார், பாலின்பம் தரவில்லை என்று கோரினால் தான் விவாகரத்து அளிப்பார்கள் எனக் கூறுவார்கள். குற்றம் சாட்டுபவர் அதைத்தானே சொல்ல நேரிடும்? நாவலாசிரியர்களை விட தீவிரமாக புனைவெழுதுவோர் வக்கீல்களே. ஏனெனில் இச்சூழல் அவர்களை புனைவெழுத்தாளர் ஆக்குகிறது. நீங்கள் ஒரு அலுவலகத்தில் விடுப்பு எடுக்க ஊழியர்களை அனுமதிக்காமல் இருந்தால் அவர்கள் தாத்தா செத்துவிட்டார், அப்பா தவறி விழுந்துவிட்டார், மாரடைப்பு என்று பொய் சொல்லித் தானே விண்ணப்பிப்பார்கள். பொய் சொன்னால் அதற்கு தனிமதிப்பு எனில் பொய் மட்டுமே தான் சொல்வார்கள். அது யாருடைய தவறு?

4) உள்ளே வழக்கை விரைவில் முடிக்காமல் வெளியே செட்டில்மெண்ட் பண்ணப்படுவதை நீதிமன்றம் விரும்புகிறது. செட்டில்மெண்ட் என்றால் பணம் அல்லது சொத்து. இதற்கு பிரதிவாதியைத் தள்ளுவதற்காகவே மோசமான பொய்க்குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. வக்கீல்களுக்கும் இதில் கட்டிங் கிடைப்பதால் அவர்கள் வழக்கை முடிக்க விரும்புவதில்லை. ஒருவர் தன் கணவர் தன்னைக் கொல்லப் பார்த்தார், வரதட்சிணை கேட்டு பெல்ட்டால் அடித்தார் என்று கோரி விட்டு அதை வைத்து பல லட்சங்களை வாங்கி செட்டில்பண்ண முடியுமெனில், குற்றச்சாட்டுகள், விசாரணை கேலிக்கூத்தாகாதா? வரதட்சிணை தடுப்பு சட்டத்தின் கீழ் பொய்க் குற்றச்சாட்டை வைத்து மிரட்டி பெருந்தொகையை வாங்க இயலுமெனில் யாராக இருந்தாலும் சபலம் வரும் தானே? சபலப்பட வைப்பது எது சட்டம் தானே?  நீதிமன்றம் தானே? இதைத் தடுக்க முதலில் செட்டில்மெண்ட் கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும். 

5) பொய் வழக்குத் தொடுப்போரை நீதிமன்றம் சிலநேரம் தண்டிப்பதுண்டு. ஆனால் இதற்கு என தனிசட்டம் இல்லை. வக்கீல் சொல்லித் தந்தது எனில் அவரும் தண்டிக்கப்படுவதற்கு சட்டம் வேண்டும். தகுதி குறைப்பு புள்ளிகளைக் கொண்டு வர வேண்டும். ஒரு அளவுக்கு மேல் புள்ளிகளைப் பெறும் வக்கீல்கள் குறிப்பிட்ட ஆண்டுகள் பணியாற்ற தடை வேண்டும். அப்போது இந்த போக்கு மட்டுப்படும்.

6) ஒரு வழக்கின் போது முதல் கட்டத்திலே மனு போடுவது, புகார் தொடுப்பது, பதில் மனு போடுவது என இல்லாமல் சம்மந்தப்பட்ட ஜோடியுடன் துணை நீதிபதியும் ஆலோசனையாளரும் வக்கீல்கள் இன்றி அமர்ந்து பேசி என்ன பிரச்சினைக் கேட்டறிந்து அதற்குத் தீர்வாக விவாகரத்து கொடுக்கலாமா வேண்டாமா என இரண்டு மூன்று வாரங்களுக்குள் தீர்மானிக்கும், ஒருவேளை அவ்வழக்கு நிஜமாகவே குற்ற நடவடிக்கைகள் சம்மந்தப்பட்டது, ஆதாரங்களும் உண்டு எனில் அதை மட்டுமே விசாரணைக்கு எடுக்கும், எடுத்தால் கண்டிப்பாக தண்டனை அளிக்கும் (செட்டில்மெண்ட் இன்றி) நடைமுறை வர வேண்டும். இதற்கு கீழ்த்தட்டினர் தவிர பிறர் ஒரு கட்டணத்தை நீதிமன்றத்தில் செலுத்தவும் வேண்டும் (அப்போதுதான் ஊதிய செலவை, விசாரணைக்கான நேரத்தை நியாயப்படுத்த முடியும்.) இப்போதுள்ளது விவாகரத்து கொடுக்க வேண்டுமா என்பதையே வருடக்கணக்காய் தீர்மானிக்கும் மோசமான நடைமுறை. விவாரத்து வேண்டுமா என்பதை நீதிபதி அல்ல, சம்மந்தப்பட்ட கணவன், மனைவியே தீர்மானிக்க வேண்டும். திருமணத்துக்குள் குற்றங்களை விசாரிப்பதும், ஜீவனாம்சம் வழங்குவதையுமே நீதிபதி பரிசீலிக்க வேண்டிய விசயங்களாக இருக்க வேண்டும். இப்போது எல்லா பிரச்சினைகளையும் ஒரே சட்டியில் போட்டு கொதிக்க வைப்பதால் ஊரில் உள்ள எல்லா குற்றங்களையும் ஒருவர் மீது மற்றவர் ஏற்றி விவாகரத்துக்கு கோருகிறார்கள். நீதிமன்றத்தின் அபத்தமான அணுகுமுறையே பொய்க்க்குற்றச்சாட்டுகளுக்கு பிரதான காரணமாகிறது.

7) திருமண சட்டம் ஒரு கணவனோ மனைவியோ நேரடியாக வழக்காட வேண்டும், அதற்கு வக்கீல் ஒரு ஆலோசகர் மட்டுமே பிரதிநிதி அல்ல என்கிறது. ஆனால் நீதிமன்ற நடைமுறை அப்படி இல்லை. நேரடியாக ஒரு சாமான்யரால் தன் பிரச்சினையை முன்வைக்க முடியாதபடி சட்டத்தின் மொழியும், நீதிமன்ற சடங்குகள் உள்ளிட்ட நடைமுறையும் உள்ளது. ஆகையால் ஒருவரால் தன்னிடத்தில் வக்கீலை மட்டும் பேச வைக்கவும் முடியாது, அவர் தனியாக வழக்கை நடத்தவும் முடியாது. ஆகையால் வக்கீலும் வாதி / பிரதிவாதியும் ஒவ்வொரு ஹியரிங்குக்கும் செல்வது அவசியமாகிறது. இது ஒரு மறைமுக வதையாகிறது. நீதிமன்றம் ஒரு ஆப்பைத் தயாரித்து வா உனக்காகத் தான் ஸ்பெஷலா ஒரு வசதி இருக்கு, வந்து உட்கார்ந்து மாட்டிக்கொள் என அழைப்பதைப் போல இருக்கிறது. இந்நடைமுறையை எளிமையாக்கி வங்கிக்கு சென்று ஒரு வேலையை செய்வதைப் போல வழக்கை நடத்த முடிய வேண்டும். நீதிமன்றமே ஒரு அலுவலரை அமர்த்தி அவர் வழியாக எளிய விவாகரத்து விண்ணப்பங்களைத் தொடுக்க வைக்கலாம். வன்முறை, வரதட்சிணைக் கொடுமை ஆகியவற்றுக்கு வக்கீல் தேவை தான். ஆனால் அவை தனி வழக்குகளாக - விவாகரத்துக்குப் பின்னரே - நடத்தப்பட வேண்டும், விவாகரத்துடன் இணைத்துப் பார்க்க கூடாது.

8) ஜீவனாம்ச விசயத்திலும் ஒரு ஆணை மட்டும் பணம் கொடுக்கக் கூடியவன், பெண் பணம் வாங்குபவள் என்று கருதுவது ஒரு முன்முடிவு, தேய்வழக்கு சிந்தனை. இதை நீதிமன்றம் கைவிட வேண்டும். ஒரே கல்வியறிவும், வேலை வாய்ப்பு சாத்தியமும் உள்ள ஆணையும் பெண்ணையும் ஒரே போல நடத்த வேண்டும். அதன் அடிப்படையில் பார்க்கையில் படித்திருந்தும் வேலை பார்க்காமல் இருக்கிற மனைவி ஜீவனாம்சத்துக்காக நாடகம் போடுவதை தடுக்க முடியும். ஆனால் படிப்பறிவில்லாத ஏழைப்பெண்களுக்கு மட்டும் மேற்சொன்ன அனுகூலங்களை சட்டம் வழங்குவது சரிதான். இதை மத்திய, மேல்மத்திய, உயர்த்தட்டு பெண்கள் பயன்படுத்துவது ஒரு சுரண்டல். திருமண சட்டத்தையும் பெண்கள் பாதுகாப்பு சட்டத்தையும் கலந்து கட்டி வழக்கை நடத்துவதே இந்த பேதங்களின் அடிப்படை. இது முதலில் மாற வேண்டும். பெண்களுக்கு குடும்பத்தில் மட்டுமா பாதுகாப்பில்லை? அல்லது குடும்பத்தில் பெண்களுக்கு மட்டும் தான் பாதுகாப்பு இல்லையா?

9) குழந்தையை கணவனுக்கு கொடுக்காமல் தண்டிப்பதும் சில நேரங்களில் மனைவியின் நோக்கமாகிறது. அதற்காகவே மிக மோசமான பொய்க்குற்றச்சாட்டுகளை சுமத்துவார்கள். ஆக, இவ்விசயத்தில் குழந்தையை வளர்க்கும் பொறுப்பை கட்டாயமாக அப்பாவும் அம்மாவும் பகிர்ந்துகொள்ள வேண்டும் (அவர்கள் வெவ்வேறு ஊர்களில் வசிக்காத பட்சத்தில்) என சட்டம் வர வேண்டும். அடுத்து, குழந்தையைக் காட்ட அம்மா மறுத்தால் அதற்காக அப்பா நீதிமன்றம் போவது அபத்தமான கொடூரமான நடைமுறை. குழந்தையைப் பார்ப்பதும், வளர்ப்பதும் இருவரின் அடிப்படை உரிமை அவர்கள் குற்றவாளிகளாக அல்லாத பட்சத்தில் என சட்டம் வர வேண்டும். இப்போதைக்கு குழந்தையை வளர்ப்பது பெண்ணின் உரிமையாக மட்டுமே உள்ளது. அந்த உரிமையை கணவனுக்கு அவள் மட்டுமே கொடுக்க முடியும். இந்த பாரபட்சம் ஒரு ஏற்றத்தாழ்வை, பயத்தை ஏற்படுத்துகிறது. சட்டம் பாரபட்சம் இல்லாமல் ஆனால்  தேவையில்லாத / பொய் வழக்குகளை, நேர பண விரயத்தை தவிர்க்கவும், மன உளைச்சலைத் தடுக்கவும் உதவும். இப்போதுள்ள நிலையில் விவாகரத்து என வந்தாலே கணவன் / அப்பாவின் நிலையே வதையாகிறது. உதாரணமாக, ஒருவர் வேலைக்குப் போவதும், தொழில் செய்து சம்பாதிப்பதும் அடிப்படை உரிமை அல்ல. அதை அவர் நீதிமன்றத்துக்குப் போய் தான் அடைய முடியும் என ஒரு சட்டம் இருக்கிறது எனில் இந்த நாட்டில் ஒவ்வொருவரும் நீதிமன்றத்தில் தான் ஆயுள் பூரா குடியிருக்க வேண்டி வரும். (ஏனெனில் அதில் போட்டி உள்ளதே.) திருமணம் என வந்தால் மட்டும் இந்த அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறது. ஆண்களைத் தண்டித்து ஒடுக்கி தன் குழந்தையின் மீது அடிப்படை உரிமையுள்ளதை கோராதவிதமாகவே சட்டங்கள் எழுதப்பட்டுள்ளன. நான் ஒரு விசாரணையை நேரடியாகவே பார்த்தேன். கணவன் குழந்தையைப் பார்க்கலாம் என தீர்ப்பு. காட்ட முடியாது எனக் கூறி அதற்கான பொய்க் காரணங்களை மனைவி தரப்பு அடுக்குகிறது. குழந்தைக்கு அப்பாவைப் பார்க்கவே பிடிக்கவில்லை என அம்மா கூறுகிறார். குழந்தையைக் கொண்டு வாருங்கள் என நீதிபதி சொல்ல, குழந்தை நீதிமன்றத்துக்கு வந்தால் மன உளைச்சல் வரும் என மனைவியின் வக்கீல் சொல்கிறார். அது மட்டுமல்ல தீர்ப்பின் படி குழந்தையைக் காட்டினால் அதனால் குழந்தையின் மனம் புண்படும், அதனால் மனைவிக்கு அசௌகர்யம் வரும் என தீர்ப்பை அவமதிப்பதையே நியாயப்படுத்துகிறார்கள். இதெல்லாம் ஒரு விசாரணையா? ஒருவர் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என தீர்ப்பு வருகிறது. அவரை அடைக்க முடியாது, அதனால் மனம் புண்படும், அசௌகர்யம் ஏற்படும் என சிறைத்துறை கூற முடியுமா? தீர்ப்பின்படி நடக்க முடியாது என எந்த வழக்கிலாவது கூற முடியுமா? யாருக்கும் அடங்காத ஜெயலலிதாவையே சிறையில் அடைத்தார்கள்.  ஆனால் குடும்ப நல நீதிமன்றத்தில் ஆண்கள் தீர்ப்பை நிறைவேற்றுவதை தள்ளிப்போடவும் (ஜீவனாம்சம்) பெண்கள் சுத்தமாக மதிக்காமல் இருக்கவும் (குழந்தையை கணவன் சந்திப்பது) முடியும். இதன் நோக்கமே எதிர்த்தரப்பை ஓட விட்டு மனம் வெறுக்க வைப்பதே. குழந்தை விசயத்தில் பெண்கள் அதிகமாக அப்பாவை அலைய விட்டு உளவியல் வதை பண்ணுகிறார்கள். இதையெல்லாம் ஏன் நீதிமன்றம் என்கிறார்கள்? முதலில் ஒரு தீர்ப்பை பின்பற்றாமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றம் ஆக வேண்டும். அடுத்து ஏன் இப்படியான ஒருதலைபட்சமான சட்டங்கள் உள்ளன? அவை உள்ளதால் தானே நிறைவேற்றாமல் இருக்க இவ்வளவு பொய்களை சொல்கிறார்கள்? 

10)  இறுதியாக ஒரு தீர்வு: இது பழங்குடி சமூகங்களில் உள்ள நடைமுறை. இன்றைய இளைஞர்களும் சேர்ந்து வாழும் உறவின் (லிவ் இன்) பெயரில் இதை முயன்று பார்க்கிறார்கள். திருமணமானதும் முதல் ஆண்டு அதை நிபந்தனையற்ற திருமணமாக பதிவு பண்ணாமல், தற்காலிக ஒப்பந்தமாக கருத வேண்டும். ஒப்பந்த காலமான முதலாண்டில் எல்லா பாதுகாப்பு சட்டங்களும் செல்லுபடியாகும், ஆனால் விவாகரத்து கோரத் தேவையில்லை. பிரிந்து போய் விடலாம். ஒப்பந்தத்தை சட்டரீதியாக திருமணமாக வார்ம் அப் காலத்திற்குப் பின் பதிவு பண்ணவில்லை எனில் அது திருமணமாகாது. இப்படியான நடைமுறை வந்தால் 50% மேல் விவாகரத்துகள் முடிவுக்கு வரும். பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைப்பதும் குறையும்.

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...