“நான் கூச்சத்துடன்தான் ஆரம்பித்தேன் என்றாலும், இளமையின் துடிப்பு என்னை ஏதேதோ பேசவைத்தது. நான் பேசியதன் சாரம் இதுதான்: ‘சுந்தர ராமசாமியின் கவிதைகள் என் மனதுக்கு நெருக்கமானவையாக இல்லை. கலாப்ரியாவின் கவிதைகளில் இருக்கும், என்னை ஈர்க்கும் உணர்வுபூர்வமான ஒரு அம்சம் சு.ரா. கவிதைகளில் இல்லை. புத்தி தூக்கலாக அமைந்திருப்பது, ஒருவிதத் தடையாக இருக்கிறது.’ பொதுவாக, அவருடைய கவிதைகள் குறித்து எதிர்மறையான கருத்துகளே அன்று அங்கு முன்வைக்கப்பட்டன. இறுதியில் சு.ரா. பேசினார். பேச்சின் துவக்கத்தில் இறுகியிருந்த அவருடைய முகம், பேச்சில் சுருதி ஏற ஏற பிரகாசம் பெற்றது.” - சுந்தர ராமசாமி: சில நினைவுகள்” நூலில் சி. மோகன்
இன்று நீங்கள் ஒரு எழுத்தாளரின் கூட்டத்தில் அவரை நிராகரித்து இன்னொருவரைப் பாராட்டினால் அவர் உங்களை ஜென்மவிரோதியாக பாவித்து வாழ்வெல்லாம் வெறுப்பார். பெரிய அடிதடி கூட ஆகலாம். பல மாதங்கள் உங்களைப் பற்றி பிறரிடம் புகார் சொல்வார். தம் படைப்பை பற்றிய மிகச்சிறிய எதிர்மறை கருத்தைக் கூட ஏற்க முடியாத தொட்டாச்சிணுங்கிகளாக படைப்பாளிகள் இன்று மாறிவிட்டார்கள்.
ஆனால் சு.ரா எப்படியான கனவானாக இருந்திருக்கிறார், தான் நடத்தும் கூட்டத்தில் தன்னை நிராகரிக்கும் சுதந்திரத்தை ஒரு இளம் படைப்பாளிக்கு அளிக்கிறார். மகத்தான மனிதர்.
பி.கு: இன்னொரு பிரச்சினை பெண்கள் பேசினால் ஊன்றி கவனித்து ரசிக்கும் ஆண் படைப்பாளிகள் தம்மை சந்திக்க வரும் சகபாலினத்தவர்களை விஜயகாந்த் பாகிஸ்தான் தீவிரவாதிகளை எதிர்கொள்வதைப் போன்றே பார்க்கிறார்கள். இப்படியான சிக்கல்கள் முன்பு இலக்கிய சந்திப்புகளில், கூட்டங்களில் இல்லை
Comments