Skip to main content

நாவலில் பிரம்மாண்டத்தை உருவாக்க இன்னொரு வழி

 


நாவலை விரிவாக்க மற்றொரு பார்முலா பார்வைக் கோணத்தை திருகி விடுவது. பார்வைக் கோணம் என்றால் யார் பார்வையில் கதை சொல்லப்படுகிறது என்பது. “நான்” என்ற ஒரு சுயசரிதை தொனியிலா அல்லது “அவன்”, “அவள்”, “அவர்கள்” எனும் பொது பார்வையிலா? எந்த படைப்பும் இதில் ஏதாவது ஒன்றை மேற்கொள்ளத் தான் வேண்டும். “நான்” என்றும் ”அவன்” என்றும் இரண்டு கோணங்களில் ஒரு கதையை சொன்னால் நிறைய குழப்பங்கள் ஏற்படும். ஆனால் பின்நவீனத்துவ படைப்புகளில் இத்தகைய பரீட்சார்த்தங்கள் செய்யப்படுவதுண்டு. என்னைப் பொறுத்த மட்டில் இந்த பார்வைக் கோணத்தின் விதிகளை தலைகீழாய் கவிழ்த்த ஒரு நாவல் உண்டு: யுவான் ரூல்போவின் “பெட்ரோ பராமோ”. யுவான் பிரசியாடோ தன் அப்பாவான பெட்ரோ பராமோவை தேடி கொமாலா எனும் ஊருக்கு போகிறான். முழுக்க பேய்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஊர் அது. நாவலின் துவக்கத்தில் நாவலாசிரியர் கதை சொல்ல துவங்கி பின்னர் அது நாயகனின் அப்பாவின் கண்ணோட்டத்தில் விரிந்து, பின்னர் நாயகன் பேய்களின் ஊருக்கு செல்ல அங்கு அவனை சந்திக்கும் இறந்தவர்கள் ஒவ்வொருவரின் நினைவுகளும் பல கதைகளை சொல்கின்றன. இந்த நினைவுகளின் வழி பயணிக்கும் போது ஒரு கட்டத்தில் கதையை யார் சொல்கிறார், யார் கதைக்குள் உள்ள கதைக்குள் நாம் இருக்கிறோம் எனும் குழப்பம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் நாயகனே இறந்து ஒரு பேயாகிறான். பேய்கள் இறந்த பின் எந்த காலத்தில் வாழ்கின்றன? இந்த கேள்விக்கு விடையே காண முடியாது. கடந்த காலத்தில் என நீங்கள் சொன்னாலும் அதை பேய்கள் நம்பாது. அவை நிகழ்காலத்திலே வாழ்கின்றன. சரி பேய்களின் கடந்த காலம் உங்களுக்கு என்ன காலம்? பேய்களோடு ஒருவன் பேசும் போது ஒரு கட்டத்தில் தன் நினைவுகளுடன், தன்னுடனே பேசுகிறான். ஒரு பொது கோணத்தில் “அவன் இப்படி செய்தான்” என கதை சொல்லும் நாவலாசிரியர் தனக்குள் பேசும் போது (அதாவது பேயுடன் பேசுவதன் வழி) இந்த கதை யார் வழி சொல்லப்படுகிறது என்பதே தெளிவற்றது ஆகிறது. இந்த காலக்குழப்பம் மற்றும் பார்வைக் குழப்பம் வரலாற்றின் துணையின்றியே நாவலுக்குள் காலம் மற்றும் இடம் சார்ந்த எல்லைகளை விரிக்கின்றன. அதாவது நாவலை பௌதிக தளத்தில் இருந்து மனதின் தளத்துக்குள் நகர்த்துகின்றன. மனதுக்கு தான் கால-இட எல்லைகள் இல்லையே!

மேலும் இதைக் குறித்து விவாதித்து அறிந்துகொள்ள, உங்கள் எழுத்துத் திறனை மேம்படுத்த நாவல் வகுப்பில் சேரவும். ஆர்வமுள்ளோர் இன்பாக்ஸுக்கு வரலாம்; 9790929153 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...