கேள்வி: ஹாய் அபிலாஷ், ஏன் கதையில் காரண-காரிய விளைவுகளின் தர்க்கம் முக்கியம் எனக் கூறுகிறார்கள். நம் வாழ்வில் எதற்கும் காரண-காரிய நோக்கம் இருப்பதில்லையே. வாழ்க்கையே அபத்தம் தானே. சம்மந்தமில்லாமல் ஒருவர் நம்மை புண்படுத்தி விடுகிறார், நாம் சிலரை காயப்படுத்தி விடுகிறோம், நமக்கு அநியாயமாக சில விசயங்கள் நடக்கின்றன, காரணமில்லாமல் சில நியாயங்கள் நடந்தேறுகின்றன, பல நிகழ்வுகள் நம்மைச் சுற்றி அபத்தமாகவே தோன்றுகின்றன. அந்தரங்க உறவில் இருந்து தேர்தல் வரை. சொல்வதொன்று செய்வது இன்னொன்று என்றே இருக்கிறோம். இதிலெங்கும் புகார் சொல்லாத நாம் ஒரு கதையில் மட்டும் தர்க்க ஒழுங்கு இல்லையென்றால் ஏன் புகார் சொல்ல வேண்டும்?
பதில்: பேருந்தில் நின்று கொண்டு வரும் போது பக்கத்தில் நிற்பவர் என் காலை மிதித்து விடுகிறார். நான் கோபமாக திரும்பிப் பார்க்கும் முன்பே அவர் “சாரி சார், தெரியாம மிதிச்சிட்டேன்” என்கிறார். “பரவயில்லை”, நான் அமைதியாகிறேன். ஆனால் இதுவே அவர் கண்டும் காணாதது போல நின்றால் என் கோபம் அதிகமாகிக் கொண்டே செல்லும். ஏன்? அந்த மன்னிப்பில் என்ன இருக்கிறது? அந்த மன்னிப்பில் காரண-விளைவை ஏற்கும் கோரல் இருக்கிறது. அது நமக்கு தேவையாக இருக்கிறது. அது இல்லாவிடில் எனக்கு ஏன் இந்த வேதனை ஏற்பட வேண்டும் எனும் கேள்வி வருகிறது. அவர் பொறுப்பேற்காவிடில் நான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். (ஏன் இவ்வளவு கூட்டமான பேருந்தில் ஏறினோம்? ஏன் என் பைக் ரிப்பேர் ஆனது? அல்லது எனக்கு சொந்தமாக ஒரு பைக் இருந்தால் இப்படி மிதிபட நேரிடுமா? எனக்கு ஏன் ஒரு பைக் வாங்கும் அளவுக்கு கூட வக்கில்லாமல் போனது? நான் என் வாழ்க்கையை வீணடித்து விட்டேனா? - இப்படி பல கேள்விகளை அடுத்த சில வினாடிகளை நாம் சிந்திக்க வேண்டி வரலாம்.) அல்லாவிடில் காரணமற்ற ஒரு தண்டனையைப் பெற்றது நமக்கு மிதிபட்டதை விட அதிக வலியளிக்கலாம். வாழ்க்கை அபத்தமானது தான். ஆனால் அதை ஏற்க விரும்பாததாலே நாம் எதார்த்த கதைகளைப் படித்து வாழ்வில் அர்த்தத்தை தேட தலைப்படுகிறோம்.
ஈ.எம். பாஸ்டர் தனது Aspects of the Novel புத்தகத்தில் “நாம் ஒருநாள் தூங்கி விழித்ததில் இருந்தே பல்வேறு காரண-விளைவுகளை மனதுக்குள் உருவாக்கியபடியே தான் காலத்தை புரிந்து கொள்கிறோம்” என்கிறார். நான் இத்தனை மணிக்கு எழுந்தேன், அதனால் எனக்கு இன்று பல்துலக்கி குளித்து சாப்பிட்டு வேலைக்கு கிளம்ப அவகாசம் இருக்கிறது. பல்துலக்கியதால் வாய் சுத்தமாகியது, குளித்ததால் உடம்பு சுத்தமாகி, புத்துணர்ச்சி வருகிறது, சாப்பிட்டதால் பசியாறி தெம்பு வருகிறது … இப்படித் திட்டமிடாமலே நாம் காரண விளைவுகளைக் கொண்டே தொடர்பற்ற செயல்களை தொகுத்து நம்முடைய காலத்துக்கு ஒரு அர்த்தத்தை, நேர்கோட்டு வடிவை அளிக்கிறோம். அதனாலே கடிகாரம் இருப்பதற்கே ஒரு நியாயம் உண்டாகிறது. இதனாலே ஒரு நாவலை எழுதும் போது நாம் காலத்தை உருவாக்குவதில் கவனமாக இருக்க வேண்டும், காலத்துக்கு வெளியே ஒரு நாவலை எழுதவே முடியாது, அப்படி முயன்றால் அது வாசிக்கத்தக்கதாக இருக்காது என ஈ.எம். பாஸ்டர் கோருகிறார். அவர் கெர்டிரூட் ஸ்டெயின் அப்படி காலத்துக்கு அப்பால், காரண-விளைவு தர்க்கத்துக்கு அப்பால் தன் நாவலை கட்டமைக்க முயன்று தோல்வி உற்றார் என நம்மை எச்சரிக்கிறார்.
கதையின் தர்க்கத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள “நாவல் வகுப்பில்” இணையுங்கள். வகுப்பு இன்னும் மூன்று நாட்களில் ஆரம்பிக்கவுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு 9790929153 எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள். அல்லது இன்பாக்ஸில் கேளுங்கள்.
Comments