Skip to main content

பெருத்த அவமானம்



பெருத்த அவமானம்

பெட்ரோ அல்மொதோவரின் 1989இல் வெளியான Time Me Up, Tie Me Down படத்தை காப்பி அடித்து “குணாவை” கமல் எடுத்தார் என்று சொல்வது கமலுக்கு அவமானம் அல்ல. அது அல்மொதோவருக்கே அவமானம். ஏனென்றால் அது “குணாவை” விட பலமடங்கு மேலான சமகாலத்தன்மை கொண்ட படம். “குணாவில்” அடிப்படையான தர்க்க ஒழுங்கே இல்லை. மிகையான கற்பனாவாதத்தைக் கொண்டு வந்து, மத நம்பிக்கைகளுடன் கலந்து, மிகையான காதலையும், அதன் பாலான தியாகத்தையும் காட்டியிருப்பார் கமல். அதனாலே அப்படம் வெல்லவில்லை. “குணாவில்” யாரும் இயல்பான உலகில் இல்லை. குணா எதற்காக காதலில் விழுகிறான் என்பதும் தெளிவாக நிறுவப்படவில்லை. மோசமான திரைக்கதையை வைத்து நல்ல படம் எடுக்க முடியாது. அது திருடப்பப்பட்ட கதையோ இல்லையோ.
அல்மொதோவரின் படத்திலோ ரிக்கி எனும் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞனின் வாழ்க்கை வெறுமையிலே துவங்குகிறது. இறுதிக் காட்சியில் அவன் தன் குடும்ப வீட்டின் இடிபாடுகளை நோக்கிக் கொண்டு நின்றிருப்பான். அப்போது தான் அவனைத் தேடி அவன் காதலி திரும்பி வருவாள். அதுதான் அவன் பிரச்சினை. அதுதான் அவளின் பிரச்சினையும். இருவரும் வாழ்க்கையின் அடித்தளமும் இடிபாடுகள் தாம்.


அவனுடைய வாழ்க்கை அந்த இடிபாடிகளில் இருந்தே துவங்குகிறது. அங்கிருந்து அவன் பார்ப்பதெல்லாம் அபத்தங்களைத் தான். அப்படத்தில் யாருமே இயல்பாக நடந்துகொள்வதில்லை. மனநல மருத்துவமனையின் பிரதான மருத்துவரில் இருந்து சினிமா இயக்குநர்கள், நடிகர்கள், பத்திரிகையாளர்கள், ரோட்டில் வண்டியை பார்க் பண்ணியிருப்பவர்கள், கடையில் பொருள் விற்பவர்கள், தெருவில் போதை மருந்து விற்கும் குற்றவாளிகள் வரை எல்லாருமே அரைப்பைத்தியமாகவே திரிவார்கள். ஏனென்றால் வாழ்க்கை மிகப்பெரிய வெறுமையின் மீது கட்டப்பட்டிருக்கிறது. எதைக் கொண்டு அதை நிரப்பி அர்த்தத்தை காண்பது என்பதே பெரும் சவாலாக இருக்கிறது. நாயகியான போர்ன் நடிகை மெரினாவும் அப்படித்தான். அவளால் செக்ஸிலோ தொழிலிலோ நிம்மதியும் நிறைவும் காண முடியவில்லை. அதனால் தான் தன்னைக் கடத்தும் ரிக்கியிடம் வாழ்வின் பொருளைத் தேடும் அளவுக்கு அவள் இறுதியில் போகிறது. இப்படம் முழுக்க நகைமுரண் மின்சாரம் போல ஓடிக்கொண்டிருக்கிறது. எனக்கு மெரினாவின் பாத்திரத்தைப் பார்க்கும் போது ஓஷோ, ஜக்கி வாசுதேவ், நித்தி போன்றோரின் ஆசிரமங்களில் தம்மை அடிமையாக மாற்றிக்கொண்ட பெண்களே நினைவுக்கு வந்தார்கள். அரசியல் கட்சிக்காக அடித்துக் கொள்கிறவர்கள் நினைவுக்கு வருகிறார்கள். தமக்கு அடிப்படையில் நம்பிக்கையில்லாத மதவாதத்தின், தேசியத்தின் பெயரில் கலவரத்தில் ஈடுபடுகிறவர்கள் நினைவுக்கு வருகிறார்கள். இப்படி எவ்வளவோ சிந்தனைகளை அப்படம் தூண்டுகிறது. ஆனால் இதை நீங்கள் “குணாவுக்கு” சொல்ல முடியுமா? “குணா” இன்று இல்லாத ஒரு பழங்காலத்தின் விழுமியத்தை பேச முயல்கிறது. அப்படம் மட்டுமல்ல கமலின் பல படங்களுக்கும் இது பொருந்தும். அவர் மிக கவனமாக தன் காலத்தின் மனநிலையை, சிக்கல்களை விவாதிக்காமல் வேறெதையோ பேசி ஜல்லியடிப்பார். அதற்குள்ளும் போனால் ஒன்றுமே இருக்காது. கமலை விட வி. சேகர் எவ்வளவோ மேலான இயக்குநர் என்று சொல்வேன் - அவருடைய படங்களில் தன் காலத்தின் சமூக மாற்றங்கள், குடும்ப சிதைவுகள், விழுமியங்களின் நசிவு குறித்த விமர்சனங்கள் இருக்கும். இ.எம்.ஐ, குடி, ஊழல், சுதந்திரத்தின் பெயரிலான பொறுப்பின்மை என நாம் இப்போது நீங்கள் பார்த்தாலும் அட இது சமகாலம் போல இருக்கிறதே எனத் தோன்றும். கமலின் எந்த படத்துக்காக இதை நீங்கள் சொல்ல முடியுமா? “தேவர் மகன்” திரைக்கதை அளவில் நல்ல படம், ஆனால் அது பேசும் சமகாலப் பிரச்சினை என்ன? ஒன்றுமில்லை. “ஹே ராமில்” இருந்து நாம் சமகாலத்திற்கு எதையாவது எடுத்துக்கொள்ள முடியுமா? இஸ்லாமியர் கொடூரமான கொலைகாரர்கள், பலாத்காரம் செய்து துரோகமிழைக்கும் ஆபத்தானவர்கள் என்பதையா? இருந்தும் இந்துக்கள் அவர்களை எதிர்த்து கலவரம் செய்யாமல் மன்னித்து சகித்து போக வேண்டும் என்பதையா? ஏன் பாபர் மசூதி இடிப்பில் இருந்து கமலால் ஒரு படத்தை எடுக்க முடியவில்லை? கமலுக்கு தான் வாழும் காலத்தின் அரசியலைப் பேச மிகுந்த தயக்கம் உள்ளது. அது அவரது இயல்பிலேயே உள்ள பிரச்சினை. அதை அவர் பழைய விழுமியங்களையும் பழைய வரலாற்றையும் கொண்டு மூடி விடுவார். அது அவரது அரசியல் கட்சியின் செயல்பாடுகளிலும் உள்ளது. அதுவே அவரது சினிமாவின் அரசியல் தெளிவின்மையாக நமக்குத் தெரிகிறது. தொழில்நுட்ப சமத்காரங்களைக் கொண்டு அதை அவரால் மறைக்கவும் முடியாது. 


அல்மொதோவரிடம் இம்மாதிரியான குழப்பங்கள் இல்லை. அவர் தான் காணும் உலகின் பிரச்சினைகளை பகடி பண்ணி மரண அடி அடிக்கிறார். அல்மொதோவருக்கு தன் காலம் பற்றி தெளிவான தரிசனம் உண்டு. கமலுக்கு அப்படியான ஒரு தரிசனம் சுத்தமாக இல்லை.

அவரிடம் இருந்து கதையை இவர் திருடி விட்டார் என சொல்வதைப் போல அல்மொதோவருக்கு பெரிய அவமானம் ஒன்றில்லை. விட்டு விடுவோம்!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...