கமல் அளவுக்கு தமிழ் வாழ்க்கையில் இருந்து, இந்திய வாழ்க்கையில் இருந்து விலகி நின்று படமெடுக்கிறவர்கள் மிகவும் குறைவு. “தசாவதாரத்தில்” அந்த ரங்கராஜன் ராமானுஜ நம்பி பெருமாளின் சிலைக்காக தன் உயிரை விடுவது எந்த மக்களின் பிரச்சினைக்காக? வரலாற்றில் தமிழர்கள் அதை எந்த ஒடுக்குமுறையுடன் பொருத்திப் பார்க்க வேண்டும்? இங்கு எத்தனை ஆழ்வார்கள் அந்த வரலாற்று நினைவோடு இருக்கிறார்கள், அவர்கள் யார்? சொல்லப்போனால் இங்கு சைவத்தை தம் அடையாளமாக பார்ப்பவர்களும், அது வைணவத்தால் ஒடுக்கப்படுகிறது என கவலைப்படுகிறவர்களுமே அதிகம். ஒட்டுமொத்த தமிழ் தேசியமும், அதன் மீது கட்டப்பட்ட திராவிய இயக்கமும், அதன் மீது தோன்றிய வெகுமக்கள் சிந்தனை, பண்பாடும் அ-வைணவத் தன்மை கொண்டதே. இன்னொரு பக்கம், வரலாற்றில் பௌத்த ஆலயங்கள் வைணவர்களால், சைவர்களால் கைப்பற்றப்பட்டு இந்து கோயில்கள் ஆக்கப்பட்டதும், புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டதே அதிகம். இன்றுள்ள அனேகமான கோயில்களில் அதற்கான சான்று உள்ளது. ஆனால் வைண கோயில்கள் சைவ கோயில்களாக மாற்றப்பட்ட சான்றுகள் உள்ளனவா? எத்தனை நூறு கோயில்கள்? கமல் சிறுபான்மை சாதியினரின் துயரத்தை தாராளமாக படமாக்கலாம். யூதர்கள் அப்படி தம்முடைய மதம், சிக்கல்கள் பற்றி படமெடுப்பதுண்டு. ஆனால் அவர்கள் அதை பொதுப்பிரச்சினையாக காட்டினால் அது மோசடியாகி விடும். கமல் ஒரு சிறுபான்மை வைணவர்களின் ஒரு சிறிய வரலாற்று ஒடுக்குமுறையை ஒரு படத்தின் மையமாக்குவதும், அனைத்து பாத்திரங்களின் அல்லலுக்கும் அதை மையமாக்குவதும், அதை தமிழகத்தை புரட்டிப்போடும் சுனாமியின் விளைவுகளில் இருந்து மீட்புக்கு காரணமாகுவதும் மோசடி தான். அவருக்கு ‘இதுதான் என் அடையாளம், 11ஆம் நூற்றாண்டில் நடந்த சைவ-வைணவ சச்சரவை ஒரு வைணவனாக என் சமூகத்தின் ஒரு வரலாற்று காயமாகப் பார்த்துப் பேசுகிறேன்’ என்று சொல்லும் தைரியம் இல்லை. ஏனென்றால் நம் வரலாறு முழுக்க வைணவர்களின் பெரும் வெற்றிகளையே காண்கிறோம். தமிழகத்திலும் ஐயர்களை விட ஐயங்கார்களே உசத்தி எனும் எண்ணம் உள்ளது. பிராமணர்களே மற்ற எல்லாரையும் விட உசத்தி என்பதே நம் சாதியத்தின் வரலாறு. இது எல்லாரையும் விட உயர்ந்தவர்களாக கருதப்படுபவர்கள் எப்படி ஒடுக்கப்பட முடியும்? அது என்னவிதமான வரலாறு? என்ன சான்று? எத்தனை ஆயிரம் பிராமணர்கள் நம் வரலாற்றில் கழுவிலேற்றப்பட்டார்கள்? பிராமணர்களுக்காக மற்றவர்கள் ஒடுக்கப்பட்டதே இங்குள்ள வரலாறு. இன்றும் ராமர் கோயிலையே பாஜக கட்டுகிறது, சிவன் கோயிலை அல்ல. பாஜகவின் தலைமையைத் தீர்மானிப்பதே பிராமணர்கள் தானே. தமிழகத்தில் திமுக அரசே பிராமண அதிகார வர்க்கத்தின் அறிவுறுத்தலின்படி நடக்கிறது என ஒரு பேச்சு உண்டு. எங்கெங்கு நோக்கினும் வைண ஆதிக்கம் என்பதே எதார்த்தமாக இருக்கும் போது ஒரு வைணவரை பாதிக்கப்பட்டவராக காட்டுவது என்ன விதமான சமூக எதார்த்தம்? இதில் ரங்கராஜன் ராமானுஜ நம்பி தான் நம்பும் கடவுளின் சிலையோடு பிணைக்கப்பட்டு சைவர்களால் (தமிழ் தேசியர்களால் / திராவிடர்களால்) கடலுக்குள் இறக்கப்படும் காட்சியை எதன் குறியீடாகப் புரிந்துகொள்வது? தமிழக வெகுமக்கள் இதனுடன் எப்படி ஒன்றுவது? கமல் தொடர்ந்து தன் படங்களில் பாதிக்கப்பட்டவர்களாக காட்டுவோரை இப்படி எந்த தெளிவும் இன்றி குழப்பமாக வெகு அபத்தமாக நிறுவியிருப்பார்.
கமல் வைணவ பிராமணரை நாயகனாக்குவது அல்ல பிரச்சினை. முக்குலத்தோரை, வன்னியர்களை நாயகர்களாக்கி படங்கள் வந்துள்ளன. தலித்துகளில் குறிப்பிட்ட சாதிகளையும் அவர்களுடைய நிலப்பகுதியையும் வைத்து படங்கள் வந்துள்ளன. அவற்றில் சில படங்கள் ஒட்டுமொத்த சமூகத்துக்குமான பிரதிநுத்துவ எழுச்சிப் படங்களாக தோன்றும்படி ஒரு சாதியின் கதையை எல்லாருக்குமான குறியீடாக மாற்றியிருப்பார்கள். அதற்கு அவர்களை நாம் வாழும் காலத்தில் வைத்து அவர்களாகவே காட்டி அவர்களுக்கு நடக்கும் நிஜமான அநீதியை கதையின் விசையாக மாற்றியிருப்பார்கள். ஆனால் கமல் “தசாவதாரத்திலும்” சரி “ஹேராமிலும்” சரி ஒரு கற்பனையான புனைவையோ தொன்மத்தையோ அநீதியாக காட்டுகிறார். இந்திய பிரிவினையின் போது தென்னிந்திய பிராமணர்கள் பாதிக்கப்பட்டார்களா? அவர்களுடைய பெண்டிர் இஸ்லாமியரால் பாலியல் தாக்குதலுக்கு ஆளானார்களா? அப்படி தாக்கப்பட்டாலும் அவரக்ள் பல சாதிகளிலும் இருந்தார்கள். அவர்களில் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய பெண்டிரும் இருந்தார்கள். வரலாறு முழுக்க அத்தகைய சித்திரங்கள் நிறைந்துள்ளன. சம்மந்தமில்லாமல் ஏன் ஒரு பிராமண வைணவரை இங்கிருந்து கொல்கொத்தாவுக்கு அனுப்ப வேண்டும்?
காந்தியைக் கொல்லத் துடித்தவர்கள் யார்? பிரிவினை கலவரங்களின் போது தம் பெண்டிர் பலாத்காரம் பண்ணப்பட்டதை கண்டவர்கள அல்ல. அது சிலர் வலதுசாரி புனைவுகளில் வந்த கருத்து மட்டுமே. நிஜத்தில் பிரிவினையின் போது மக்கள் தம் வீடுகளை, சொத்துகளை இழந்து அகதிகளாகி ஏதிலிகளாக தெருவில் வசித்தார்கள். இங்கு இஸ்லாமிய பெண்களும் அங்கு இந்துப் பெண்களும் கடத்தப்பட்டது, வலுக்கட்டாயமாக மனைவியாகப்பட்டது இந்த கொடுமைகளின் சிறுபகுதி மட்டுமே. செல்வந்தர்களாக, நிலவுரிமையாளர்களாக இருந்து ஒரே நாளில் ஒன்றுமற்றவர்களாக ஆக்கப்பட்டதே அம்மக்களில் சிலரை அதிகமாக காந்தியை வெறுக்க வைத்ததன் காரணம். காந்தி தேசப் பிரிவினையை ஏற்றுக்கொண்டார் என்பது ஒரு வருத்தம் என்றால், பிரிவினை கலவரங்கள், இழப்புகளுக்குப் பிறகு அவர் பாகிஸ்தானியருக்காக பேசினார் என்பதே கோபத்தின் அளவை பலமடங்காக உயர்த்தியது. அப்போதுதான் இந்துமகா சபையினர் அவரைக் கொல்ல முடிவெடுக்கிறார்கள். கோட்ஸே மட்டுமல்ல வேறு பலரும் தத்தமது குழுக்களுடன் கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள். இதை மனோகர் மல்கோங்கர் தனது “காந்தியைக் கொன்றவர்கள்” நூலில் தெளிவாகவே குறிப்பிடுகிறார். “ஹேராமை” சரியாக எழுதுவதானால் கமல் தன் நாயகனை தென்னகத்து ஐயங்காராக அல்ல, இந்த பிரிவினையின் போது சொத்தையும் செல்வத்தையும் குடும்பத்தையும் இழந்து அனாதையும் அகதியும் ஆக்கப்பட்ட ஒரு தமிழ் குடும்பத்தை சேர்ந்த இளைஞனாக்கி இருக்க வேண்டும். அப்போது அவரது நியாயம் நமக்குப் புரிந்திருக்கும், இஸ்லாமிய வெறுப்பையும் தவிர்த்திருக்கலாம். கதையும் நம்பகத்தன்மை பெற்றிருக்கும்.
ஆனால் அவர் சம்மந்தமில்லாத ஒரு சமூகத்தை, உலகை சேர்ந்தவராக நாயகனை உருவாக்கிய இடத்திலேயே நமக்கும் படத்துக்குமான தொடர்பு அறுந்து விடுகிறது. அவர் பிராமணர் பாத்திரம் என்பதால் அல்ல. அப்படி ஒரு சம்பவமே நிகழவில்லை, நிகழ வரலாற்றில் சாத்தியமில்லை என்பதாலே. இதையே “தசாவதாரத்திற்கும்” சொல்லலாம். அசலான வரலாற்று / சமகால அநீதியைப் குறிப்பிடும்படி ஒரு கதையை உருவாக்கினால் அதற்கு ஒரு தாக்கம் இருக்கும். உ.தா., சமணர்களின் கழுவேற்றம்.
இதைத்தான் தமிழ் / இந்திய வாழ்க்கையில் இருந்து விலகி நின்று அபத்தமாக சிந்திப்பது, கற்பனையாக ஒப்பாரி வைப்பது என்பது.
Comments