Skip to main content

மனிதர் உணர்ந்து கொள்ள இது மக்களின் கதையோ உண்மையோ அல்ல


தன் காலத்தின் பிரச்சினை ஒன்றை கமல் பேசினார் என்றால் அது “மகாநதியில்” மட்டும் தான் என நினைக்கிறேன் - பொருளாதார மோசடிகளை ஒட்டிய விழுமியங்களின் வீழ்ச்சி, தீமையின் பரவல். ஆனால் பிரச்சினை தன் வசம் தான், நடப்புலகை தான் புரிந்துகொள்ளவில்லை எனப் புரிந்துகொள்ளும் நாயகன் என்ன பண்ணக் கூடும் என்பதுதான் கதையே. ஆனால் காலம் கெட்டுப் போச்சு எனும் புலம்பல், பாரதியார் கவிதைகள், லட்சியவாதம், பழிவாங்குதல் என கதையை அவர் சில நூற்றாண்டுகள் பின்னுக்கு அழைத்து சென்றுவிடுவார். ஏன் மக்கள் அவ்வளவு எளிமையாக மோசடியில் போய் விழுகிறார்கள் எனும் கேள்விக்கு, அதன் சமூகப்பொருளாதார காரணிகள் என்ன என அவர் சென்றிருந்தால் அது தமிழ் சினிமாவின் வரலாற்றில் மிக முக்கியமான படமாகியிருக்கும். ஆனால் கமல் எல்லா கொடுமைகளுக்கும் ஒரு சில கெட்டவர்களே - புரோக்கர்கள், ஏமாற்றுப் பேர்வழிகள், குழந்தைகளுடன் பாலுறவு கொள்பவர்கள் - காரணம் என்றாக்கி கதையை திசைதிருப்பியிருப்பார். உ.தா., தமிழகத்தில் எத்தனை குடும்பங்களில் இருந்து குழந்தைகள் கடத்தப்பட்டு கொல்கொத்தாவுக்கு கொண்டு போய் பாலியல் அடிமையாக்கப்பட்டிருக்கிறார்கள்? பல நூறு பேர்கள் கடத்தப்பட்டிருந்தால் அது செய்தியாகி இருக்குமே. கமல் தன் மகனை இழந்து கழைக்கூத்தாடிகளிடம் கண்டெடுப்பதும் என்னதான் நெகிழ்ச்சியான காட்சியென்றாலும் அது நடக்க சாத்தியமற்றது எனும் உணர்வே ஒட்டுமொத்தமாக பார்வையாளர்களுக்கு எழும். ஒரு கொடுங்கனவைப் போன்ற சம்பவங்களின் கோவையே அப்படம். “பராசக்தியில்” சிவாஜியின் பாத்திரம் பிச்ச்சைக்காரனும், பைத்தியமும் ஆவதைப் போல மிகையான ஒன்று. ஆனால் அந்த காலத்து நிலைமையோடு கதையின் பல இடங்கள் ஒத்துப் போனதால் அப்படம் வெற்றி பெற்றது. “மகாநதிக்கு" அப்படி சொல்ல முடியாது. தனிப்பட்ட முறையில் என்னை மிகவும் ஈர்க்கிற, நான் திரும்பத் திரும்ப பார்க்கிற படமாக அது இருந்தாலும், கதையமைப்பிலும் காட்சியமைப்பிலும் பல சிறப்பான விசயங்கள் இருந்தாலும் நமது வாழ்க்கைக்கும் அப்படத்துக்கும் ஒரு பெரிய இடைவெளி உண்டு. கமல் தானாக எழுதியோ இயக்கியோ உருவாக்கிய படங்களுக்கு இப்படியான அந்நியத்தன்மை உண்டு - அவை தமிழகத்தில் நடப்பதாகவோ தோன்றாது. “பேசும் படத்தை” எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு மிகவும் பிடித்த படம். ஆனால் அதை என்னால் தமிழ்ப் படமாகவே எடுத்துக்கொள்ள முடியவில்லை. “அவ்வை சண்முகி” தழுவல் படைப்பு, “பம்மல் கெ சம்மந்தம்” - நகைச்சுவை படம் எனப் பார்க்கப்பட்டாலும் அவற்றில் அவர் பாலின அரசியலின் பெயரில் குடும்பங்கள் உடைவதை விமர்சித்திருந்தது பாராட்டத்தக்கது. ஆனால் அப்படங்களிலும் அவர் மேலோட்டமாகவே பிரச்சினையைத் தொட்டிருந்தார். பெண்ணிய இயக்கத்தின் நோக்கம் ஆண்களே வேண்டாம், பெண்கள் தனியாக வாழ வேண்டும் எனப் பேசுவதா? இல்லையே. பெண்ணிய இயக்கம் பொருளாதார சார்பை முன்னெடுத்தபடியே நவீன பெண்களின் பொறுப்பின்மைக்கு, சுயநலத்துக்கு, ஆண்களின் சுரண்டலுக்கு இடமளிக்கிறது என்பதே பிரச்சினை. ஆண்களை ஒட்டுமொத்தமாக கொடுமைக்காரர்களாக முத்திரை குத்துவதும் பிரச்சினை தான். ஆனால் அதைப் பேசாமல் இல்லாத ஒரு பிரச்சினையை மேலெடுத்து நகைச்சுவையாக்கி அந்த விமர்சனத்தையே கமல் காலி பண்ணி விடுவார். இப்படி எல்லாவற்றையும் அரைகுறையாக தொட்டு வைப்பதே அவரது பாணியாக இருக்கிறது. அது வணிக நிர்பந்தங்களால் அல்ல. அவருக்கே உள்ள ஆதாரமான தயக்கத்தினால், அச்சத்தினால் என நினைக்கிறேன்.

கமல் அளவுக்கு தமிழ் வாழ்க்கையில் இருந்து, இந்திய வாழ்க்கையில் இருந்து விலகி நின்று படமெடுக்கிறவர்கள் மிகவும் குறைவு. “தசாவதாரத்தில்” அந்த ரங்கராஜன் ராமானுஜ நம்பி பெருமாளின் சிலைக்காக தன் உயிரை விடுவது எந்த மக்களின் பிரச்சினைக்காக? வரலாற்றில் தமிழர்கள் அதை எந்த ஒடுக்குமுறையுடன் பொருத்திப் பார்க்க வேண்டும்? இங்கு எத்தனை ஆழ்வார்கள் அந்த வரலாற்று நினைவோடு இருக்கிறார்கள், அவர்கள் யார்? சொல்லப்போனால் இங்கு சைவத்தை தம் அடையாளமாக பார்ப்பவர்களும், அது வைணவத்தால் ஒடுக்கப்படுகிறது என கவலைப்படுகிறவர்களுமே அதிகம். ஒட்டுமொத்த தமிழ் தேசியமும், அதன் மீது கட்டப்பட்ட திராவிய இயக்கமும், அதன் மீது தோன்றிய வெகுமக்கள் சிந்தனை, பண்பாடும் அ-வைணவத் தன்மை கொண்டதே. இன்னொரு பக்கம், வரலாற்றில் பௌத்த ஆலயங்கள் வைணவர்களால், சைவர்களால் கைப்பற்றப்பட்டு இந்து கோயில்கள் ஆக்கப்பட்டதும், புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டதே அதிகம். இன்றுள்ள அனேகமான கோயில்களில் அதற்கான சான்று உள்ளது. ஆனால் வைண கோயில்கள் சைவ கோயில்களாக மாற்றப்பட்ட சான்றுகள் உள்ளனவா? எத்தனை நூறு கோயில்கள்? கமல் சிறுபான்மை சாதியினரின் துயரத்தை தாராளமாக படமாக்கலாம். யூதர்கள் அப்படி தம்முடைய மதம், சிக்கல்கள் பற்றி படமெடுப்பதுண்டு. ஆனால் அவர்கள் அதை பொதுப்பிரச்சினையாக காட்டினால் அது மோசடியாகி விடும். கமல் ஒரு சிறுபான்மை வைணவர்களின் ஒரு சிறிய வரலாற்று ஒடுக்குமுறையை ஒரு படத்தின் மையமாக்குவதும், அனைத்து பாத்திரங்களின் அல்லலுக்கும் அதை மையமாக்குவதும், அதை தமிழகத்தை புரட்டிப்போடும் சுனாமியின் விளைவுகளில் இருந்து மீட்புக்கு காரணமாகுவதும் மோசடி தான். அவருக்கு ‘இதுதான் என் அடையாளம், 11ஆம் நூற்றாண்டில் நடந்த சைவ-வைணவ சச்சரவை ஒரு வைணவனாக என் சமூகத்தின் ஒரு வரலாற்று காயமாகப் பார்த்துப் பேசுகிறேன்’ என்று சொல்லும் தைரியம் இல்லை. ஏனென்றால் நம் வரலாறு முழுக்க வைணவர்களின் பெரும் வெற்றிகளையே காண்கிறோம். தமிழகத்திலும் ஐயர்களை விட ஐயங்கார்களே உசத்தி எனும் எண்ணம் உள்ளது. பிராமணர்களே மற்ற எல்லாரையும் விட உசத்தி என்பதே நம் சாதியத்தின் வரலாறு. இது எல்லாரையும் விட உயர்ந்தவர்களாக கருதப்படுபவர்கள் எப்படி ஒடுக்கப்பட முடியும்? அது என்னவிதமான வரலாறு? என்ன சான்று? எத்தனை ஆயிரம் பிராமணர்கள் நம் வரலாற்றில் கழுவிலேற்றப்பட்டார்கள்? பிராமணர்களுக்காக மற்றவர்கள் ஒடுக்கப்பட்டதே இங்குள்ள வரலாறு. இன்றும் ராமர் கோயிலையே பாஜக கட்டுகிறது, சிவன் கோயிலை அல்ல. பாஜகவின் தலைமையைத் தீர்மானிப்பதே பிராமணர்கள் தானே. தமிழகத்தில் திமுக அரசே பிராமண அதிகார வர்க்கத்தின் அறிவுறுத்தலின்படி நடக்கிறது என ஒரு பேச்சு உண்டு. எங்கெங்கு நோக்கினும் வைண ஆதிக்கம் என்பதே எதார்த்தமாக இருக்கும் போது ஒரு வைணவரை பாதிக்கப்பட்டவராக காட்டுவது என்ன விதமான சமூக எதார்த்தம்? இதில் ரங்கராஜன் ராமானுஜ நம்பி தான் நம்பும் கடவுளின் சிலையோடு பிணைக்கப்பட்டு சைவர்களால் (தமிழ் தேசியர்களால் / திராவிடர்களால்) கடலுக்குள் இறக்கப்படும் காட்சியை எதன் குறியீடாகப் புரிந்துகொள்வது? தமிழக வெகுமக்கள் இதனுடன் எப்படி ஒன்றுவது? கமல் தொடர்ந்து தன் படங்களில் பாதிக்கப்பட்டவர்களாக காட்டுவோரை இப்படி எந்த தெளிவும் இன்றி குழப்பமாக வெகு அபத்தமாக நிறுவியிருப்பார்.

கமல் வைணவ பிராமணரை நாயகனாக்குவது அல்ல பிரச்சினை. முக்குலத்தோரை, வன்னியர்களை நாயகர்களாக்கி படங்கள் வந்துள்ளன. தலித்துகளில் குறிப்பிட்ட சாதிகளையும் அவர்களுடைய நிலப்பகுதியையும் வைத்து படங்கள் வந்துள்ளன. அவற்றில் சில படங்கள் ஒட்டுமொத்த சமூகத்துக்குமான பிரதிநுத்துவ எழுச்சிப் படங்களாக தோன்றும்படி ஒரு சாதியின் கதையை எல்லாருக்குமான குறியீடாக மாற்றியிருப்பார்கள். அதற்கு அவர்களை நாம் வாழும் காலத்தில் வைத்து அவர்களாகவே காட்டி அவர்களுக்கு நடக்கும் நிஜமான அநீதியை கதையின் விசையாக மாற்றியிருப்பார்கள். ஆனால் கமல் “தசாவதாரத்திலும்” சரி “ஹேராமிலும்” சரி ஒரு கற்பனையான புனைவையோ தொன்மத்தையோ அநீதியாக காட்டுகிறார். இந்திய பிரிவினையின் போது தென்னிந்திய பிராமணர்கள் பாதிக்கப்பட்டார்களா? அவர்களுடைய பெண்டிர் இஸ்லாமியரால் பாலியல் தாக்குதலுக்கு ஆளானார்களா? அப்படி தாக்கப்பட்டாலும் அவரக்ள் பல சாதிகளிலும் இருந்தார்கள். அவர்களில் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய பெண்டிரும் இருந்தார்கள். வரலாறு முழுக்க அத்தகைய சித்திரங்கள் நிறைந்துள்ளன. சம்மந்தமில்லாமல் ஏன் ஒரு பிராமண வைணவரை இங்கிருந்து கொல்கொத்தாவுக்கு அனுப்ப வேண்டும்?

காந்தியைக் கொல்லத் துடித்தவர்கள் யார்? பிரிவினை கலவரங்களின் போது தம் பெண்டிர் பலாத்காரம் பண்ணப்பட்டதை கண்டவர்கள அல்ல. அது சிலர் வலதுசாரி புனைவுகளில் வந்த கருத்து மட்டுமே. நிஜத்தில் பிரிவினையின் போது மக்கள் தம் வீடுகளை, சொத்துகளை இழந்து அகதிகளாகி ஏதிலிகளாக தெருவில் வசித்தார்கள். இங்கு இஸ்லாமிய பெண்களும் அங்கு இந்துப் பெண்களும் கடத்தப்பட்டது, வலுக்கட்டாயமாக மனைவியாகப்பட்டது இந்த கொடுமைகளின் சிறுபகுதி மட்டுமே. செல்வந்தர்களாக, நிலவுரிமையாளர்களாக இருந்து ஒரே நாளில் ஒன்றுமற்றவர்களாக ஆக்கப்பட்டதே அம்மக்களில் சிலரை அதிகமாக காந்தியை வெறுக்க வைத்ததன் காரணம். காந்தி தேசப் பிரிவினையை ஏற்றுக்கொண்டார் என்பது ஒரு வருத்தம் என்றால், பிரிவினை கலவரங்கள், இழப்புகளுக்குப் பிறகு அவர் பாகிஸ்தானியருக்காக பேசினார் என்பதே கோபத்தின் அளவை பலமடங்காக உயர்த்தியது. அப்போதுதான் இந்துமகா சபையினர் அவரைக் கொல்ல முடிவெடுக்கிறார்கள். கோட்ஸே மட்டுமல்ல வேறு பலரும் தத்தமது குழுக்களுடன் கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள். இதை மனோகர் மல்கோங்கர் தனது “காந்தியைக் கொன்றவர்கள்” நூலில் தெளிவாகவே குறிப்பிடுகிறார். “ஹேராமை” சரியாக எழுதுவதானால் கமல் தன் நாயகனை தென்னகத்து ஐயங்காராக அல்ல, இந்த பிரிவினையின் போது சொத்தையும் செல்வத்தையும் குடும்பத்தையும் இழந்து அனாதையும் அகதியும் ஆக்கப்பட்ட ஒரு தமிழ் குடும்பத்தை சேர்ந்த இளைஞனாக்கி இருக்க வேண்டும். அப்போது அவரது நியாயம் நமக்குப் புரிந்திருக்கும், இஸ்லாமிய வெறுப்பையும் தவிர்த்திருக்கலாம். கதையும் நம்பகத்தன்மை பெற்றிருக்கும்.

ஆனால் அவர் சம்மந்தமில்லாத ஒரு சமூகத்தை, உலகை சேர்ந்தவராக நாயகனை உருவாக்கிய இடத்திலேயே நமக்கும் படத்துக்குமான தொடர்பு அறுந்து விடுகிறது. அவர் பிராமணர் பாத்திரம் என்பதால் அல்ல. அப்படி ஒரு சம்பவமே நிகழவில்லை, நிகழ வரலாற்றில் சாத்தியமில்லை என்பதாலே. இதையே “தசாவதாரத்திற்கும்” சொல்லலாம். அசலான வரலாற்று / சமகால அநீதியைப் குறிப்பிடும்படி ஒரு கதையை உருவாக்கினால் அதற்கு ஒரு தாக்கம் இருக்கும். உ.தா., சமணர்களின் கழுவேற்றம்.

இதைத்தான் தமிழ் / இந்திய வாழ்க்கையில் இருந்து விலகி நின்று அபத்தமாக சிந்திப்பது, கற்பனையாக ஒப்பாரி வைப்பது என்பது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...