Skip to main content

கலைக்கு பக்தி அவசியமா?


கர்நாடக சங்கீதத்தின் உயிர்நாடி பக்தி ரசம், அதை கடவுள் மறுப்பாளர் பாட முடியுமா என எஸ்.எம் கிருஷ்ணாவைப் பற்றின குறிப்பில் சாரு நிவேதிதா கேட்கிறார். இது ஒரு முக்கியமான கேள்வி. நான் கவனித்த வரையில் கிருஷ்ணா மட்டுமல்ல, சஞ்சய் சுப்பிரமணியம், ரஞ்சனி காயத்ரியிடம் கூட நம்மால் முழுமையான பக்தி ரசத்தின் சரணாகதி நிலையைப் பார்க்க முடிவதில்லை. தியாகராஜர் கீர்த்தனைகள் கூட இவர்கள் பாடும் போது காதலாக, பாசமாக, அன்பின் உருக்கமாகவே தெரிகிறது. இது நவீன காலத்தின் பிரச்சினையாக இருக்கலாம். ஆனால் சாருவின் கருத்தில் என்னைக் கவர்ந்தது கலைக்கும் பக்திக்குமான தொடர்புதான்.
பக்தி என்றால் என்ன? இறைவன் மீதான பற்றா? இல்லை. பக்தி என்றால் மீபொருண்மைவாதம் - எது ஒன்று இவ்வுலகில் இல்லையோ, அதன் பால், அது இவ்வுலகில் இல்லையென்பதாலே பற்று கொள்வது. அதை நோக்கி மனம் ஏகுவது, பொருளுலகின் போதாமை குறித்து இரங்கி, அதை நிவர்த்தி செய்ய இல்லாத ஒரு காலத்தை நோக்கி ஏங்கி மருகுவது, நிகழாத ஒன்று, நிகழ சாத்தியமில்லாத ஒன்றை நோக்கி செயலால் நெருங்க முயல்வது, அணுக அணுக விலகிப் போகும் ஒன்றை அந்த தொலைவின் காரணத்தாலே நேசிப்பது, தன் இயலாமையை எண்ணி மனம் உடைந்து அதையே மகத்துவப்படுத்துவது, கொண்டாடுவது. இதுதான் மறைபொருள் மீதான வெளிப்படையான காமம். இதுவே கடப்புநிலைவாதம். கடவுள் பக்தியான இதுவே கற்பனாவாத காலத்தில் இயற்கை மீதான காதலானது. இதுவே நவீன காலத்தில் காதலுக்காக தவமானது. சமூக மாற்றத்திற்கான தியாகமானது. தானல்லாத மற்றமை, தானல்லாத சமூகம் (எளியோர், பாமரர், சாமான்யர்), தானல்லாத சமூக அமைப்பு (ஜனநாயகம், நீதி, சமத்துவ கனவுகள், வளர்ச்சி, முன்னேற்றத்திற்கான செயல்திட்டங்கள்) என மாறியது. சமகாலத்தின் பக்தி தான் ஜனநாயகம். சமகாலத்தின் கடவுள் தான் பிரதமர், ஜனாதிபதி, மக்கள் தலைவர்கள், மக்களாட்சி எனும் மக்களுக்கு அதிகாரமில்லாத ஆட்சிமை முறையைக் கொண்டாடும் மனநிலை. என்ன பிரச்சினை என்றால் நவீன காலத்தில் பக்தி பௌதீக உலகத்தின் மீதான ஒரு போலி மீபொருண்மைவாதம் ஆகிவிட்டது. நமது சுயத்தின் பிரக்ஞையை உடைத்துக்கொண்டு இன்மையை நோக்கி லயிக்க நவீன மனிதர்களான நம்மால் முடிவதில்லை என்பதே பின்நவீனத்தின் பெரிய புகாராக இருக்கிறது. அதனாலே பின்நவீனம் நவீன அரசு, சமூகம், கல்விக்கு முன்பான கற்பனாவாத காலத்தை, செவ்வியல் சிந்தனைகளைக் கொண்டாடுகிறது. கடவுளற்ற பக்திக்கு கடவுள் இருக்கும் பக்தியே மேலானது எனக் கூறுகிறது (பார்க்க கீர்க்கெகாட் மீதான வாசிப்புகள்).
அப்படியே இலக்கியத்துக்கு வருவோம் - இலக்கியம் உள்ளிட்ட கலை வடிவங்களுக்கு கடவுள் பக்தி அவசியமா? ஆம், அவசியமே. நமக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, கடவுளை நம் படைப்பில் ஏற்கிறோமோ மறுக்கிறோமோ தன்னைக் கடந்து தானற்றத்தை நோக்கி கற்பனையை செலுத்துவது கலையின் ஆதார விசையாக இருக்கிறது. அது இல்லாத போது ஒரு படைப்பு உயிரற்றதாக இருக்கிறது. தத்துவார்த்த ரீதியாக பிழையாக உள்ள ஒன்று - கடப்புநிலைவாதம், இல்லாத ஒன்றுக்கான பரவசமான அபத்தமான முயற்சி - கலைக்கு அவசியமாக இருக்கிறது. அது இல்லாத இலக்கியம் எனில் என்னால் இருத்தலியல் கதைகளையும் (ஆல்பர்ட் காமு, சார்த்தர்), வரலாற்றுவாத எழுத்தையும் (தல்ஸ்தாய்), ஓரளவுக்கு மார்க்ஸிய இலக்கியத்தையும் சொல்லலாம். இந்த பொருண்மைவாத இலக்கியங்களில் நம்மை மனம் பேதலிக்க வைத்து உடைய செய்கிற எதுவோ ஒன்று இருக்காது.
பக்தி என்பது இறைவனிடம் அடிபணிவது அல்ல; பருப்பொருட்களாலான இவ்வுலகில் இருந்துகொண்டே சில நொடிகள் இல்லாமல் ஆகிக்கொண்டே இருமையை மீறிப் போவதுதான் ‘பக்தி’. அது தர்க்கரீதியாக பிழையானது. அதனாலே பிழையான சிந்தனை கலைக்கு அவசியம் எனத் தோன்றுகிறது.
கடவுளற்ற பக்தி கூட சாத்தியமே - கற்பனாவாத இலக்கியத்தை விட இது சிறப்பாக நம் சங்கக் கவிதைகளில் - அகப்பொருள் பாடல்களில் - சிறப்பாக தெரிகிறது. தானாக இருந்துகொண்டே இயற்கையில், அன்றாட உலகின் பொருட்களில், செயல்களில் தலைவி தானற்றும் போகிறாள். அதையே காதலாக அவள் முன்வைக்கிறாள்.
பின்நவீன இலக்கியத்தில்? அங்கும் தான் இந்த கடப்புநிலைவாதம் மற்றொரு தோற்றம் கொள்கிறது. அங்கு சாராம்சமான ஒரு பொருள் இல்லையென்றாலும், தொடர்ந்து இருப்பில் இருந்து இன்மை நோக்கி, அமைப்பில் இருந்து அமைப்பின்மை நோக்கி ஒரு தாவல் இருக்கிறது. புக்காவஸ்கியின் “தபால் நிலையம்” நாவலை ஒரு எளிய உதாரணமாக கொள்ளலாம் - அதில் வரும் கதைசொல்லி தன்னை பலவீனமான பாவப்பட்ட ஒருவர் என்று காட்டிக்கொண்டே அதற்கு நேரெதிரான ஒருவராக செயல்படுவார், தன்னைக் குறித்த மிகையான பாவனையை - வலிமையும் தன்னம்பிக்கையும் மிக்க ஆண்மகன் - பண்ணிக்கொண்டே சுயபச்சாதாபம் கொண்ட முதுகெலும்போ சுயமரியாதையோ இல்லாதவராக இருப்பார், அப்படி இருப்பது குறித்து, தன் அவலம் குறித்து பெருமையும் கொள்வார். இதை புக்காவஸ்கி ஒரு அதிர்ச்சியான நகைச்சுவையாக வெளிப்படுத்துவார். இதுவென எண்ணும் போது அதுவாகவும், அதுவெனும் போது இதுவாகவும் இருந்து, அதைக் குறித்த விளக்கங்கள் கொடுக்காமல் இருப்பதும் ஒரு கடப்புநிலைவாதமே. ஆனால் தன்னைக் கடந்து போகும் கடப்புநிலைவாதம் அல்ல, தனக்குள்ளே ஆழ்ந்து செல்லும், அந்த தன்னையே மறுக்கும் கடப்புநிலைவாதம்.
மீண்டும் சொல்கிறேன் - தத்துவார்த்தமாக இது பிழையானது; ஆனால் இப்பிழையின்றி இலக்கியம் இல்லை.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...