கர்நாடக சங்கீதத்தின் உயிர்நாடி பக்தி ரசம், அதை கடவுள் மறுப்பாளர் பாட முடியுமா என எஸ்.எம் கிருஷ்ணாவைப் பற்றின குறிப்பில் சாரு நிவேதிதா கேட்கிறார். இது ஒரு முக்கியமான கேள்வி. நான் கவனித்த வரையில் கிருஷ்ணா மட்டுமல்ல, சஞ்சய் சுப்பிரமணியம், ரஞ்சனி காயத்ரியிடம் கூட நம்மால் முழுமையான பக்தி ரசத்தின் சரணாகதி நிலையைப் பார்க்க முடிவதில்லை. தியாகராஜர் கீர்த்தனைகள் கூட இவர்கள் பாடும் போது காதலாக, பாசமாக, அன்பின் உருக்கமாகவே தெரிகிறது. இது நவீன காலத்தின் பிரச்சினையாக இருக்கலாம். ஆனால் சாருவின் கருத்தில் என்னைக் கவர்ந்தது கலைக்கும் பக்திக்குமான தொடர்புதான்.
பக்தி என்றால் என்ன? இறைவன் மீதான பற்றா? இல்லை. பக்தி என்றால் மீபொருண்மைவாதம் - எது ஒன்று இவ்வுலகில் இல்லையோ, அதன் பால், அது இவ்வுலகில் இல்லையென்பதாலே பற்று கொள்வது. அதை நோக்கி மனம் ஏகுவது, பொருளுலகின் போதாமை குறித்து இரங்கி, அதை நிவர்த்தி செய்ய இல்லாத ஒரு காலத்தை நோக்கி ஏங்கி மருகுவது, நிகழாத ஒன்று, நிகழ சாத்தியமில்லாத ஒன்றை நோக்கி செயலால் நெருங்க முயல்வது, அணுக அணுக விலகிப் போகும் ஒன்றை அந்த தொலைவின் காரணத்தாலே நேசிப்பது, தன் இயலாமையை எண்ணி மனம் உடைந்து அதையே மகத்துவப்படுத்துவது, கொண்டாடுவது. இதுதான் மறைபொருள் மீதான வெளிப்படையான காமம். இதுவே கடப்புநிலைவாதம். கடவுள் பக்தியான இதுவே கற்பனாவாத காலத்தில் இயற்கை மீதான காதலானது. இதுவே நவீன காலத்தில் காதலுக்காக தவமானது. சமூக மாற்றத்திற்கான தியாகமானது. தானல்லாத மற்றமை, தானல்லாத சமூகம் (எளியோர், பாமரர், சாமான்யர்), தானல்லாத சமூக அமைப்பு (ஜனநாயகம், நீதி, சமத்துவ கனவுகள், வளர்ச்சி, முன்னேற்றத்திற்கான செயல்திட்டங்கள்) என மாறியது. சமகாலத்தின் பக்தி தான் ஜனநாயகம். சமகாலத்தின் கடவுள் தான் பிரதமர், ஜனாதிபதி, மக்கள் தலைவர்கள், மக்களாட்சி எனும் மக்களுக்கு அதிகாரமில்லாத ஆட்சிமை முறையைக் கொண்டாடும் மனநிலை. என்ன பிரச்சினை என்றால் நவீன காலத்தில் பக்தி பௌதீக உலகத்தின் மீதான ஒரு போலி மீபொருண்மைவாதம் ஆகிவிட்டது. நமது சுயத்தின் பிரக்ஞையை உடைத்துக்கொண்டு இன்மையை நோக்கி லயிக்க நவீன மனிதர்களான நம்மால் முடிவதில்லை என்பதே பின்நவீனத்தின் பெரிய புகாராக இருக்கிறது. அதனாலே பின்நவீனம் நவீன அரசு, சமூகம், கல்விக்கு முன்பான கற்பனாவாத காலத்தை, செவ்வியல் சிந்தனைகளைக் கொண்டாடுகிறது. கடவுளற்ற பக்திக்கு கடவுள் இருக்கும் பக்தியே மேலானது எனக் கூறுகிறது (பார்க்க கீர்க்கெகாட் மீதான வாசிப்புகள்).
அப்படியே இலக்கியத்துக்கு வருவோம் - இலக்கியம் உள்ளிட்ட கலை வடிவங்களுக்கு கடவுள் பக்தி அவசியமா? ஆம், அவசியமே. நமக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, கடவுளை நம் படைப்பில் ஏற்கிறோமோ மறுக்கிறோமோ தன்னைக் கடந்து தானற்றத்தை நோக்கி கற்பனையை செலுத்துவது கலையின் ஆதார விசையாக இருக்கிறது. அது இல்லாத போது ஒரு படைப்பு உயிரற்றதாக இருக்கிறது. தத்துவார்த்த ரீதியாக பிழையாக உள்ள ஒன்று - கடப்புநிலைவாதம், இல்லாத ஒன்றுக்கான பரவசமான அபத்தமான முயற்சி - கலைக்கு அவசியமாக இருக்கிறது. அது இல்லாத இலக்கியம் எனில் என்னால் இருத்தலியல் கதைகளையும் (ஆல்பர்ட் காமு, சார்த்தர்), வரலாற்றுவாத எழுத்தையும் (தல்ஸ்தாய்), ஓரளவுக்கு மார்க்ஸிய இலக்கியத்தையும் சொல்லலாம். இந்த பொருண்மைவாத இலக்கியங்களில் நம்மை மனம் பேதலிக்க வைத்து உடைய செய்கிற எதுவோ ஒன்று இருக்காது.
பக்தி என்பது இறைவனிடம் அடிபணிவது அல்ல; பருப்பொருட்களாலான இவ்வுலகில் இருந்துகொண்டே சில நொடிகள் இல்லாமல் ஆகிக்கொண்டே இருமையை மீறிப் போவதுதான் ‘பக்தி’. அது தர்க்கரீதியாக பிழையானது. அதனாலே பிழையான சிந்தனை கலைக்கு அவசியம் எனத் தோன்றுகிறது.
கடவுளற்ற பக்தி கூட சாத்தியமே - கற்பனாவாத இலக்கியத்தை விட இது சிறப்பாக நம் சங்கக் கவிதைகளில் - அகப்பொருள் பாடல்களில் - சிறப்பாக தெரிகிறது. தானாக இருந்துகொண்டே இயற்கையில், அன்றாட உலகின் பொருட்களில், செயல்களில் தலைவி தானற்றும் போகிறாள். அதையே காதலாக அவள் முன்வைக்கிறாள்.
பின்நவீன இலக்கியத்தில்? அங்கும் தான் இந்த கடப்புநிலைவாதம் மற்றொரு தோற்றம் கொள்கிறது. அங்கு சாராம்சமான ஒரு பொருள் இல்லையென்றாலும், தொடர்ந்து இருப்பில் இருந்து இன்மை நோக்கி, அமைப்பில் இருந்து அமைப்பின்மை நோக்கி ஒரு தாவல் இருக்கிறது. புக்காவஸ்கியின் “தபால் நிலையம்” நாவலை ஒரு எளிய உதாரணமாக கொள்ளலாம் - அதில் வரும் கதைசொல்லி தன்னை பலவீனமான பாவப்பட்ட ஒருவர் என்று காட்டிக்கொண்டே அதற்கு நேரெதிரான ஒருவராக செயல்படுவார், தன்னைக் குறித்த மிகையான பாவனையை - வலிமையும் தன்னம்பிக்கையும் மிக்க ஆண்மகன் - பண்ணிக்கொண்டே சுயபச்சாதாபம் கொண்ட முதுகெலும்போ சுயமரியாதையோ இல்லாதவராக இருப்பார், அப்படி இருப்பது குறித்து, தன் அவலம் குறித்து பெருமையும் கொள்வார். இதை புக்காவஸ்கி ஒரு அதிர்ச்சியான நகைச்சுவையாக வெளிப்படுத்துவார். இதுவென எண்ணும் போது அதுவாகவும், அதுவெனும் போது இதுவாகவும் இருந்து, அதைக் குறித்த விளக்கங்கள் கொடுக்காமல் இருப்பதும் ஒரு கடப்புநிலைவாதமே. ஆனால் தன்னைக் கடந்து போகும் கடப்புநிலைவாதம் அல்ல, தனக்குள்ளே ஆழ்ந்து செல்லும், அந்த தன்னையே மறுக்கும் கடப்புநிலைவாதம்.
மீண்டும் சொல்கிறேன் - தத்துவார்த்தமாக இது பிழையானது; ஆனால் இப்பிழையின்றி இலக்கியம் இல்லை.
Comments