Skip to main content

என் பள்ளி அனுபவங்கள் - ஆர். அபிலாஷ்

 டிசம்பர் 2023இல் கனவு ஆசிரியர் இதழில் வெளியான கட்டுரையின் முழுமையான வடிவம்

குமரி மாவட்டத்தில் உள்ள தக்கலையின் அருகில் உள்ள பத்மநாதபுரம் எனும் கிராமம் என் சொந்த ஊர். என்னுடைய ஆரம்ப கல்வியை அமலா கான்வெண்ட் எனும் கிறித்துவ கன்னியாஸ்திரிகள் நிர்வகித்த பள்ளியில் படித்தேன். அங்கு என்னுடைய உடற்தகுதியைக் காட்டி (நான் ஒரு மாற்றுத்திறனாளி இருப்பதால்) இடமாற்று சான்றிதழ் வாங்கிக் கொண்டு போக நிர்பந்தித்தார்கள். அச்சம்பவம் இன்னும் எனக்கு வியப்பாக இருக்கிறது - அங்கு எனக்கு எந்த விபத்தும் நிகழவில்லை. ஆனாலும் நிர்வாகிகளுக்கு யாருடைய கண்காணிப்பும் இல்லாமல் போனால் நான் இருக்கையில் இருந்து தவறி விழுந்துவிடுவேனோ எனும் அச்சம். அங்கிருந்து நான் இந்து வித்யாலயா எனும் மற்றொரு தனியார் பள்ளிக்குப் போனேன். ஏதோ ஒரு விதிமுறைக் குழப்பத்தால் நான் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளில் முதலில் இருந்து மீண்டும் அமரும் கட்டாயம் ஏற்பட்டது. அது ஒரு சிறிய அழகான பள்ளி. ஆனால் அங்கு எட்டாம் வகுப்புக்கு மேல் இல்லை என்பதால் என்னை தக்கலை உயர்நிலைப் பள்ளியில் சேர்த்தார்கள். இந்த மூன்று பள்ளிகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் கழிப்பறைகள் இல்லை என்பதால் நாள் முழுக்க நீரருந்தாமல் இருக்கும், சிறுநீரை அடக்கி வைக்கும் பழக்கம் எனக்கு அங்கு ஏற்பட்டு பின் அது மறைய நீண்ட காலம் ஆகிற்று.
பெரும் வளாகம், மைதானம், பெரிய சம்புடத்துடன் மாணவர்கள் வரிசையாக அமர்ந்து சத்துணவு சோற்றையும் அதில் ஊற்றப்படும் ஆற்றொழுக்கு சாம்பாரையும் மிகுந்த ஆர்வத்துடன் உண்ணும் நீண்ட சிமிண்டு திண்ணைகள். பெரிய சிறைச்சாலையை நினைவுறுத்தும் வரிசை வரிசையான வகுப்பறைகள். பிரம்புடன் நடந்து வரும் தலைமை ஆசிரியரை அஞ்சி அடங்கி ஒடுங்கி செல்லும் மாணவர்கள்.
நான் சென்ற புதிய பள்ளியில் பல நூறு மாணவர்கள் படித்தார்கள். இஸ்லாமியர், கிறித்துவர்கள், அவர்களிடையே வசதியானவர்கள், மத்திய வர்க்கத்தினர், ஏழைகள். விடிகாலையில் வயலுக்கும் தோப்புக்கும் மண்வெட்டியுடன் கிளைக்க சென்றுவிட்டு சாப்பிடாமலே வகுப்புக்கு வருபவர்கள், பிரச்சினைக்குரிய பின்னணியில் இருந்து வருபவர்கள் இருந்தனர். அவர்களுடைய பேச்சும் நடவடிக்கையும் எனக்குப் பழக காலமெடுத்தது. நான் அதுவரை எங்கும் கேட்டிராத கெட்டவார்த்தைகள், விவரணைகளைக் கேட்டேன். பெஞ்சில் ஏறி நின்று வகுப்பறையில் உள்ள பொருட்கள் மீது சிறுநீர் கழிக்கும் வினோத நடத்தைகளைக் கண்டேன். அதே போலத்தான், பார்த்ததுமே என்னை நட்புடன் ஏற்றுக்கொண்டு பழகிய நண்பர்களும் கிடைத்தனர். அங்கு தான் சற்று முரட்டுத்தனமான, அழகான, வெகுளியான பெண்களைக் கண்டேன். என் முதல் பதின்வயதுக் காதல் அங்குதான் மலர்ந்தது.
இஸ்லாமியர், கிறித்தவர்களுடன் நெருங்கிப் பழகியது அதுவே முதன்முறை. எனக்கு அப்போது அவர்களிடம் ஏற்பட்ட நெருக்கமே மாற்றுமதத்தவரைக் கண்டதும் ஒட்டிக்கொண்டு நட்பாகும், மிக வறிய சூழலில் இருந்து வருகிறவர்களை எளிதாகப் புரிந்துகொள்ளும் மனப்பாங்கை இப்போது ஏற்படுத்தியுள்ளது என நினைக்கிறேன். இது அரசுப்பள்ளியின் தனிச்சிறப்புகளில் ஒன்று.
அங்கு ஆசிரியர்கள் கண்டிப்பானவர்கள். அதுவரைப் படித்த தனியார் பள்ளிகளில் அடிக்க மாட்டார்கள். எங்களிடம் தவறிருந்தால் கூட மென்மையாக சொல்லித் திருத்துவார்கள். அங்கு நான் திட்டுவாங்கியதாகவே நினைவில்லை. இங்கோ தினமும் கேள்வி கேட்டு எல்லா மாணவர்களையும் நிற்க வைத்து பிரம்பால் அடிப்பார்கள். தேர்வுத்தாள்களைத் தரும் போது அடி, பேசினால் அடி, ஆசிரியர்களுக்குத் தோன்றும் போதெல்லாம் அடி. ஒரு மாணவி அறிவியல் ஆசிரியரின் மகள். அப்பா தன் வகுப்புக்கு புத்தகத்துடன் வந்தாலே அவள் முகம் இறுக்கமாகிவிடும். கப் சிப்பென்று இருப்பாள். ஆனால் அவளும் தவறாமல் அடிவாங்குவாள். (இன்று மாணவர்களை அடிப்பது குற்றம். அன்று அடிப்பவரே நல்லாசிரியர்.) நான் அடிவாங்கியதற்கு ஒரு காரணம் என் முந்தின பள்ளியில் எனக்கு சரியான கல்வி போதிக்கப்படவில்லை என்பதை உணர்ந்து கடுமையாக உழைக்கத் தொடங்கினேன். ஓராண்டிலேயே வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்கும் நிலையை அடைந்தேன்.
அங்கு பெரும் எண்ணிக்கையில் படித்த மாணவர்கள் பல வர்க்கங்களை, பின்னணிகளை சேர்ந்தவர்கள். இடைவேளைகளின் போது மைதானத்தில் மாணவர்களில் சிலர் மோதிக் கொள்வார்கள். நான் அதுவரை என் பள்ளியில் பார்த்தது மாணவர்கள் சும்மா கையால் அடித்துக்கொள்வது. இது நிஜமான சண்டை. என் கண் முன்னால் ஒரு பையனை பேனா கத்தியால் குத்தியதைப் பார்த்தேன். ஆழமாகப் படவில்லை. அவன் மெதுவாக வயிற்றைத் தாங்கியவாறு நடந்து பள்ளி வளாகத்துக்கு வெளியே போய்விட்டான். யாரிமும் புகார் சொல்லவில்லை. இச்சூழலே பிரம்பு விளையாட்டில்லாமல் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது எனும் எண்ணத்தை ஆசிரியர்களிடத்து ஏற்படுத்தியிருக்கக் கூடும். இன்னொரு பக்கம், அங்கு ஆசிரியர்கள் கூடுதல் அறிவு படைத்தவர்களாக, அருமையாக பாடம் நடத்தக்கூடியவர்களாக, அன்பானவர்களாக இருந்தார்கள். நான் முன்பு பார்த்த தனியார் ஆசிரியர்களை விட தம் மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுத்து உருப்பட வேண்டும் எனும் அசலான அக்கறை இவர்களிடம் இருந்தது. படிக்காத மாணவர்களிடையே கொஞ்சமேனும் திறமை உள்ளவர்களைக் கண்டால் திருத்தி நெறிப்படுத்த முயல்வார்கள். அந்த அன்பைக் கண்ட போது அவர்கள் எங்களைத் தம் மாணவர்களாக அல்ல பிள்ளைகளாகவே காண்கிறார்கள் எனப் புரிந்துகொண்டேன்.
விதவிதமான ஆசிரியர்களை அங்கு கண்டேன். ஒரு இயல்பியல் ஆசிரியர் வெள்ளை கதர் சட்டை, வேட்டி, தோளில் துண்டு அணிந்து பழைய சைக்கிளில் வருவார். கெட்டியான கறுப்புப்பட்டை கண்ணாடி. வகுப்பில் நகைச்சுவையாக கதைகளை சொல்லி ஏகவசனத்தில் பேசி எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். எளிமையாக அழகாக அவர் சொல்லித் தந்தவை மறந்துவிட்டன என்றாலும் அந்த அனுபவம் மறக்கவில்லை. கணித ஆசிரியராக வேற்றூரில் இருந்து ஒருவர் வந்தார். எழுபதுகளின் நாயகர்களின் ஸ்டைலில் பங்க், முன் தலையில் சுருட்டிவிட்ட முடி, பெரிய காலர் வைத்த, கறுப்புப் புள்ளிகள் கொண்ட சட்டை அணிவார். எகத்தாளமான உடல்மொழி. அற்புதமான ஆசிரியர். உலகின் மிக சிரமமான பாடங்கள் கூட அவர் சொல்லித் தந்தால் புரியும். ஒருநாள் எங்களுக்கு அசெம்பிளி நடந்துகொண்டிருக்க அதில் பங்கெடுக்க முடியாத நான் தனியாக வகுப்பில் இருந்தேன். அவர் என்னைப் பார்த்து வகுப்புக்குள் வந்து என் தோளில் கையிட்டு ஆதுரமாகப் பேசினார். என்னிடம் ஒரு மனிதர் வந்து ஆதரவாக விசாரித்தது என் வாழ்வில் முதன்முறை அது என்பதால் நெகிழ்ந்து போனேன். அவர் ஒரே மாதத்தில் ஒரு பேருந்து விபத்தில் காலமான போது நாங்கள் மாணவர்கள் துயரம் தாளாமல் அழுதோம். அவருடைய நினைவாகவே நான் ஒரு ஆசிரியரான போது வகுப்பில் தனியாக ஒட்டாமல் இருக்கும் மாணவர்களிடம் சென்று நட்பாக விசாரிக்கும் வழக்கத்தை வளர்த்துக்கொண்டேன்.
நான் செல்லும் போது இருந்த தலைமை ஆசிரியை கண்டிப்பானவர். இரும்பு மனுஷி. எல்லாரும் பயந்தார்கள். அவரது பதின் வயது மகன் ஒரு பைக் விபத்தில் காலமான போது அவர் மிகவும் ஒடுங்கிப் போய் ஓய்வு வாங்கிக்கொண்டார். எங்களுக்கு அவருடைய மென்மையான பக்கத்தைக் காணக் கிடைத்த போது அவருக்காக பரிதாபப்பட்டோம். அவரிடத்தில் வந்தவர் இன்னும் படுபயங்கரமானவர். அவரிடம் தினமும் பின்பக்கத்தில் அடிவாங்காத மாணவர்களே இல்லை. அடிக்க அடிக்க மாணவர்கள் முன்னோக்கி வளைந்து தப்பிப்பதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும், அதாவது அவரிடம் நாம் சிக்காத வரையில். அவருக்கு முழுவழுக்கை. நீள்வட்ட தலையமைப்பு. அதனால் அவரை மாணவர்கள் ஒரு பழத்தின் கொட்டையை வட்டப்பெயரிட்டு கேலி செய்தனர். அவர் போய்க்கொண்டிருக்கும் போது பின்னிருந்து அழைத்து மறைந்துகொள்வார்கள். அவர் ஒருநாள் எங்கள் வகுப்புக்குள் புகுந்து விசாரணையை நடத்தினார். பயத்தில் எங்களுக்கு சிறுநீர் கழிந்துவிட்டது. அதன் பிறகு ஒருநாள் வகுப்புக்கு வந்து எங்களுடைய எதிர்காலத்தைப் பற்றின நிஜமான அக்கறையுடன் அறிவுரை தந்தார். ஒரு நல்லாசிரியருக்கு தன்னைத் துன்புறுத்தும் மாணவர்களிடம் ஒருபோதும் வெறுப்பு ஏற்படாது என்று புரிந்துகொண்டேன். ஆனாலும் நீண்ட காலமாக என் நெஞ்சில் அவர் பெயருக்குப் பதில் வட்டப்பெயரே நிலைத்தது. அவமதிப்புடன் அல்ல நிறைய அன்புடன்.
அங்கு தான் நான் பல புதிய விசயங்களைக் கற்றேன், புது மனிதர்களை அறிந்தேன், அப்பள்ளி தான் என் ஆளுமையை புடம் போட்ட ஆட்டக்களம்

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...