நான் அடிக்கடி பார்க்கும் ஒன்று இது. இரண்டு கிறித்தவர்கள் சந்திக்கும் போது தற்செயலாக ஒரு விவிலிய மேற்கோளையோ கதையையோ குறிப்பிட்டு விட்டால் மற்றொருவர் அதன் பொருளை மறுத்தோ திருத்தியோ பேசுவார். தொடர்ந்து விவாதித்துக் கொண்டே இருப்பார்கள். இன்னொரு கிறித்தவரும் அங்கு வந்துவிட்டால் அங்கு ஒரு பெரிய சர்ச்சையே எற்படும். சட்டென்று எனக்குள் இருக்கும் அவநம்பிக்கையாளன் விழித்துக் கொண்டாலும் அவர்களுடைய ஈடுபாட்டை நான் எப்போதுமே வியப்பேன்.
ஆனால் நான் ஒரு போதும் பார்க்காதது என்ன தெரியுமா? இரண்டு பேர் சந்திக்கும் போது திருக்குறளை குறிப்பிடுவார்கள். ஆனால் யாரும் அதன் பொருளை மறுத்து விவாதித்து என் வாழ்க்கையில் ஒருமுறை கூட நான் கண்டதில்லை. இத்தனைக்கும் உலகப் பொதுமறை என்கிறார்கள். குறளை சைவ, வைண, பௌத்த, ஜைன பார்வைகளில் மறுத்தும் ஏற்றும் யாரும் சர்ச்சித்து கேட்டதில்லை. என் பள்ளியிலும் எந்த ஆசிரியரும் கேட்டதில்லை. தமிழர்கள் விவிலியத்தை, குரானைக் கற்கும் ஆழத்துடன் குறளைக் கற்பதோ பேசுவதோ இல்லை என்பதே உண்மை. அதன் ஒலியழகைத் தாண்டி அதில் ஈடுபாடு கொள்வதில்லை.
எத்தனை நூறு நூறு உரைகள் வந்துவிட்டன. எத்தனை ஆயிரம் மாணவர்களை மனனம் செய்ய வைத்து அழகு காண்கிறோம், பரிசு கொடுக்கிறோம். ஆனால் ஏன் அதன் பொருள் பற்றின அக்கறை இல்லை?
வெள்ளத்தனைய மலர்நீட்டம் என ஏன் கூறுகிறார்? ஒன்றை சார்ந்து மட்டுமே உயர்வு என ஏன் கூறுகிறார்? இது dependent co-orginationஆ என்று யாரும் கேட்டுப் பார்த்ததில்லை. ஏன் கல்வியை தகவலாக அன்றி நிலத்தடி நீராக, தொட்டனைத் தூறும் மணற்கேணியாகக் கூறுகிறார்? நவீன கல்வி அப்படி கூறவில்லையே? இப்படி நான் எதை சிந்தித்தாலும் நான் ஏற்கனவே கற்ற குறள்கள் என் மனதுக்குள் உழன்றுகொண்டே இருக்கின்றன. பௌத்தத்தை, நவீன பிரச்சினைகளை என்னால் குறளைத் தாண்டி பார்க்க முடிந்ததில்லை. ஆனால் இந்த கேள்விகளை நான் வெகுமக்களின் அன்றாட உரையாடலில் நான் கண்டதே இல்லை. சிவனடியாரைப் போலத் தோன்றும் வள்ளுவர் ஏன் சிவனைப் பற்றி பேசுவதில்லை எனக் கேட்பதில்லை. மோடியின் உச்சரிப்பை கிண்டல் பண்ணி சிரிப்பதுடன் நிறுத்திக் கொள்கிறோம்.
இந்த உலகில் எந்த ஊரிலாவது மக்கள் தாம் மனனம் செய்த ஒன்றைப் பற்றி யோசிக்கவோ பேசாமலோ இருக்கிறார்களா? ஒரு சமாதானத்துக்காக இந்த விசயங்கள் நம் கூட்டு நனவிலியில், உபமனத்தில் உள்ளன என கூறிக்கொள்ளலாம். ஆனால் நிற்க அதற்குத் தக என்றால் என்னவென்று தெரியாமல் எப்படி நிற்க முடியும்? சிறுபான்மையினர் தன் மறைநூல்களை கற்கும் அளவில் பத்து சதவீதம் கூட ஏன் தமிழர்கள் தம் மறைநூலான குறளை பொருளுணர்ந்து கற்பதோ விவாதிப்பதோ இல்லை?
இசை, இலக்கியம் மட்டுமல்ல ஒரு மறைநூலையும் டிராபிக் சிக்னலைப் போலத் தான் டீல் பண்ணுகிறோம் போல!
Comments