அண்மையில் “சீவக சிந்தாமணியைப்” படித்துக்கொண்டிருக்கும் போது சிந்தாமணி என்றால் என்ன பொருள் என யோசித்து அதைத் தேடினால் அது ஒரு பௌத்த சொல்லாடல் (money jewel symbol) என்றும் உலகம் முழுக்க பௌத்தம் சென்றுள்ள இடங்களில் “மணி” எனும் சொல் போயுள்ளது எனும் தகவல் கிடைத்தது. ஐந்து உலக அனுபவ திரட்சிகளான ஸ்கந்தங்களை மூன்று வித விடங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்ட உதவுவதே இந்த மணியின் / மாணிக்க கல்லின் பயன். இந்த கல்லை கலங்கிய நீரில் வைத்தால் நீர் தெளிவாகி குடிக்கத் தகுந்ததாகும், இருளில் அது உலகைத் துலக்கமாக்கி வழிகாட்டும் எனக் கூறப்படுகிறது. இது மேற்சொன்ன ஆன்மீகப் பயிற்சிக்கான குறியீடு மட்டுமே. இந்த ஸ்கந்தமே கந்தம் என பாலியிலும் அதில் இருந்து தமிழில் கந்தன் எனும் சொல்லும் வருகிறது. சரி “சிந்தா” என்றால் என்னவெனில் “சிந்தி”, “சிந்தனை” என்பதில் இருந்து வருகிறது. இதை பௌத்தத்தில் பருவுலகை நோக்கிய பிரக்ஞையின் உந்துதல், விசை, அக ஊக்கம் (will) என விளக்குகிறார்கள். அதாவது தன்னைத் தெளிவாக்கி துக்கத்தை அறுத்து வாழ்வதற்கான மனநிலை வாய்க்கப்பெற்றவரே ‘சிந்தாமணி’, சிந்திக்கும் மாணிக்கம். என்னவொரு அபாரமான கற்பனை. எந்த மந்திரமும் அற்புதமும் நமது அக விசையில் இருந்து மட்டுமே தோன்ற முடியும் என்கிறது பௌத்தம். ஜைனம் பௌத்தத்தில் இருந்து நிறைய கருத்துருவங்களை, உவமைகளை கடன்பெற்றுக்கொண்டது என்பதாலே இந்த சிந்தாமணி அவர்களிடம் சென்று சீவகனின் பெயருடனும் நூலில் சேர்ந்து கொள்கிறது என நினைக்கிறேன். இன்றும் சிந்தாமணி கோயில்கள் சில ஜைனர்களுக்கு உள்ளன. இந்த சிந்தாமணியின் மணி தான் “மணிமேகலையிலும்” வருகிறது என நினைக்கிறேன்.
என்னை வெகுவாகத் தூண்டியது சிந்தி, சிந்தனை செய் ஆகிய பிரயோகங்களின் பொருள் வெறுமனே ஒரு விசயத்தை கருத்தில் கொள்வதோ பகுத்தறிவை பயன்படுத்துவதோ மட்டுமல்ல, சிந்திப்பது இருத்தலுக்கு இணையான செயல்பாடு, அதுவே இருத்தலின் அடிப்படையாக இருக்கிறது என்பதே. நீங்கள் ஒரு பெண்ணை அணைக்கும் போது அவளை ‘சிந்திக்கிறீர்கள்’. நடக்கும் போது உலகை ‘சிந்திக்கிறீர்கள்’. என்ன வியப்பு எனில் ஹைடெக்கரும் அனேகமாக இப்போருளில் தான் சிந்தனையை விளக்குகிறார். அவர் சிந்திப்பதை எளிய பகுத்தறிவு சார்ந்த யோசனைக்கு எதிரான ஒன்றாக வைக்கிறார். Dwelling of the presence-of-what-is-present within myself என விளக்குகிறார். நீங்கள் இந்த பார்வையை நீட்சேயிடமும் பார்க்க முடியும். நல்லா சிந்திச்சுப் பாரு என ஒருவர் சொல்லும் போது முழுமையாக இவ்வுலகில் இருக்கப் பயில் என்றும் பொருள் வருகிறது. நமது மொழி அவ்வளவு ஆழமானது. ஒரு சொல்லுக்குப் பின்னால் அவ்வளவு ஆழமான தத்துவம், வாழ்க்கைப் பார்வை உள்ளது.
Comments