நாம் கிராமங்களை விமர்சனம் செய்த அளவுக்கு நகரங்களை செய்ததில்லை. கேட்டால் மாற்றம், முன்னேற்றம், மரகதமணி என்கிறார்கள். அப்படியென்ன முன்னேற்றம் வந்துவிட்டது என்பதில் எனக்கு நிறைய ஐயம் உள்ளது - நான் காற்று மாசு, தண்ணீர் பஞ்சம் பற்றியெல்லாம் பேசவில்லை; கட்டிடங்களாக கட்டிக்குவிப்பதால் நேரும் புவி வெப்பமாதல் பற்றிக் கேட்கவில்லை; நான் கேட்பது ஒரு சாதாரண கேள்வி: நகரங்களில் சமத்துவம் இருக்கிறதா? எல்லாருக்குமான தரமான உணவு, எல்லாருக்குமான தரமான தங்குமிடம் உள்ளதா? உழைத்து பணம் சம்பாதித்தால் கிடைக்கும், இது ஒரு லிபரலான வணிக சந்தை என்கிறார்கள். எனில் மறைமுகமாக இங்கு சம்பாதிக்க முடியாதவர்கள் அடிப்படையான உணவு, இட வசதி இல்லாமலே வாழ்ந்தாக வேண்டும் என்கிறார்கள். ஒரு அறையை நான்கைந்து பேர் பகிர்ந்து வாழ்வது, மொட்டைமாடியில் தகர ஷீட்டுக்கு கீழே குடும்பமாக வாழ்வது, வாசலில் சாக்கடை ஓடும் வீடுகளில் வாடகை கொடுத்து வாழ்வது, நடைபாதையில் குழந்தை, அப்பா, அம்மா என உறங்குவது எல்லாம் நகரங்களிலே நான் முதன்முதலாகப் பார்த்தேன். விளையாடுவதற்கு, பொழுதுபோக்குவதற்கு இடமில்லாமல், ஒவ்வொன்றுக்கும் பணம் செலுத்தியே அனுபவிக்க முடியும் எனும் நிலையை இங்கு தான் பார்த்தேன். சரி உழைத்து சம்பாதிக்கலாம் என்றால் அதற்கு சமூக முதலீடு வேண்டுமே? பணம் அடிப்படையாக வேண்டுமே. அப்படியே சம்பாதித்தாலும் தெருவோரத்தில் இருந்து ஒரு குருவிக்கூண்டுக்குப் போக முடியுமே ஒழிய எந்த பெரிய வளர்ச்சியும் இராது. நகரங்களின் வளர்ச்சியைப் பற்றி பேசுவோர் யாருமே அதை வர்க்கரீதியாக விமர்சிப்பதில்லை. அந்த சொல்லையே வெறுக்கிறார்கள். முற்போக்கு அரசியலின் பெயரில் இப்படி விமர்சனமின்றி சந்தை பொருளாதாரத்தை நெஞ்சாரத் தழுவிப் பாராட்டும் இவர்கள் ஒருவித புரோக்கர்கள் என நினைக்கிறேன்.
மேலும் இவர்கள் வேலையாலோ வியாபாரத்தாலோ ஓரளவுக்கு பொருளாதார ரீதியாக நிலைப்பெற்றவர்கள் அல்லது எந்த கவலையுமின்றி இருக்குமளவுக்கு சமூக, குடும்ப ஆதரவு பெற்றவர்கள். மாசம் வாடகைக்கு காசில்லையெனில் எங்கு போவது எனும் நெருக்கடியில்லாமல் வாழ்கிறவர்கள் அல்லர். இவர்கள் பெரும்பாலும் மத்திய, மேல்மத்திய வர்க்கத்தினர்.
உலகின் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு வகைமாதிரி என்றால் அது நகர அமைப்பு தான். வேறெங்காவது பாதுகாப்பு எனும் பெயரில் எல்லா இடத்திலும் காவலாளிகளை இந்தளவுக்கு நிறுத்தி வைப்பார்களா? வேறெங்காவது வேலையில், குடும்பத்தில், உள்கட்டமைப்புகளில் இந்தளவுக்கு ஸ்திரமின்மை இருக்குமா? மழை பெய்தால் இரண்டு வாரத்திற்கு வெளியே போக முடியாது, சாப்பாடு, தண்ணீர் கிடைக்காதே என மக்கள் அஞ்சி ஆவலாதிப்படுவதை நான் நகரத்திற்கு வந்த பிறகே பார்க்கிறேன். மீண்டும் சொல்கிறேன் - இது ஒட்டுமொத்தமான பிரச்சினை அல்ல. பெரிய அரசு அதிகாரிகள், பணக்காரர்களுக்கு நகரம் எப்போதும் சொர்க்கமே. இது வர்க்கரீதியான பிரச்சினை மட்டுமே. நீங்கள் எல்லா இந்திய நகரங்களிலும் இதைப் பார்க்க முடியும். ஜப்பான் மாதிரியான மிக வளர்ந்த நாடுகளின் நகரங்களிலும் இதே அவலங்களை காண முடியும். அண்மையில் கனடாவுக்கு படிக்கவும் வேலை பார்க்கவும் சென்ற இந்தியர்கள் பலர் குடியிருக்க வீடு கிடைக்காமல் சாலையில் தங்கும் நிலை ஏற்பட்டதைப் பற்றி கேள்விப்பட்டேன். அமெரிக்காவிலும் இப்போது பொருளாதார நிலை மோசமான பின் பலரும் வேலையிழந்த நிலையில் திரும்ப இந்தியாவுக்கு வருகிறார்கள் என்று ஒரு நண்பர் சொன்னார். அங்கு நீண்ட காலமாகவே மிக அதிக வீட்டு வாடகை எனும் அவலம் வானுயர நின்று கொடிகட்டிப் பறக்கிறது. அதனால் மக்கள் நீண்ட தூரம் தினமும் பயணித்து புற நகரத்து வீடுகளுக்குப் போகிறார்கள். கீழ்மத்திய வர்க்கத்தினர் காரில் வாழ்கிறார்கள். இன்சுலின் வாங்க பணமில்லாமல் சாகிறார்கள். இதெல்லாம் ஒரு கிராமத்தில் நடந்தால் ஊரே வந்து அங்கலாய்க்கும். அமெரிக்க நகரம் என்பதால் கண்டுகொள்ள மாட்டார்கள்.
கூடுதலாக தனிமனிதர்களுக்கு எந்த சமூக அடையாளமும் தராத கட்டமைப்பையே நகரங்கள் ஊக்குவிக்கின்றன. என் வீட்டருகே மிக மோசமான சூழலில் கீழ்த்தட்டினர் வசிக்கிறார்கள். ஆனால் அவர்கள் மட்டுமே தன் வீட்டுக்கு எதிரேயுள்ள பகுதியில் தினமும் அமர்ந்து ஆடுபுலியாட்டம் ஆடுகிறார்கள். திருமண வைபவங்களை நடத்துகிறார்கள். கோயில் நிகழ்வுக்காக ஆடு வெட்டுகிறார்கள். ஒற்றுமையாக இருக்கிறார்கள். மத்திய, மேல் வர்க்கத்தினரின் குடியிருப்புகளில் சமூகமாக்கத்துக்கு, கேளிக்கை எந்த இலவச வெளிகளும் இருக்காது. அவர்கள் தனிமைப்பட்டு பரஸ்பர வெறுப்புடன் வீட்டுக்குள் வாழ்வார்கள். மேல் வர்க்கத்தினரின் பகுதிக்குப் போனால் கீழ்த்தட்டினரின் ‘வசதிகள்’ அவர்களுக்கும் இருக்கும் - சந்திக்க, கேளிக்கை அனுபவிக்க, கொண்டாட, தம் வெளி மீது உரிமை கொண்டாட அவர்களுக்கும் முடியும்.
இப்படி சில வர்க்கங்களுக்கு மட்டும் வேலை, உள்கட்டமைப்பு, தங்குமிட வசதி, சமூக முதலீடு ஆகியவற்றை நிரந்தரமாக அனுமதிப்பதும், பிறருக்கு இவற்றை தற்காலிகமாக மட்டும் அனுமதிப்புமே நகரங்களின் இயல்பு. இந்த கண்ணாடிக் கதவை யாராலும் சுலபத்தில் உடைக்க முடியாது.
ஆம் நகரங்களிலே வாய்ப்புகள் உள்ளன. ஆனால் சமத்துவமான நியாயமான நிலையான வாழ்க்கையையும் எதிர்பார்ப்பதில் என்ன தவறு?
இதையெல்லாம் யாரும் விமர்சிப்பதில்லையே எனும் விமர்சனம் எனக்கு இருந்தது. சில மாதங்களுக்கு முன் ஒரு கருத்தரங்கின் போது தான் முதன்முறையாக நகரமயமாக்கல் மீதான விமர்சனங்களை ஒரு ஆய்வாளர் தன் உரையில் குறிப்பிடும் போது கேட்டேன். எனக்கு அப்போது ஒன்று நினைவுக்கு வந்தது - எண்பதுகள் வரை நம் இலக்கியத்திலும் இத்தகைய விமர்சனங்கள் உண்டு. உலகமயமாக்கல் ஆரம்பித்த பின்னரே நாம் முழுமையான புரோக்கர்கள் ஆகிவிட்டோம். பாலியல் புரோக்கர்களைப் போன்றே இந்த நகரத்தை எல்லாரிடமும் போய் நைசாகப் பேசி விற்றுக்கொண்டிருக்கிறோம். அவர்களுக்கும் இதனால் என்ன பயன் எனப் புரியவில்லை. நீங்கள் இரண்டாம் உலகப்போர் காலத்திலான உலக இலக்கியம் முழுக்க நகரங்கள் மீதான புகார்களைப் பார்க்க முடியும். இந்திய இலக்கியத்திலும் பார்க்க முடியும். ஆனால் பின்நவீன இலக்கியமும், அதை ஒட்டிய புதிய எதார்த்த இலக்கியமும் தோன்றிய பிறகே நகரங்களை விமர்சித்தாலே அவர் ஒரு பிற்போக்கு, வளர்ச்சிக்கு எதிரானவர், சமத்துவத்துக்கு எதிரானவர் என கொரில்லா தாக்குதல் தொடுக்கும் போக்கு வளர்ந்துள்ளது. உ.தா., சென்னைக்கு வந்து வென்று வீடு வாங்கியவர்களுக்கு அந்த வாழ்க்கையை கொண்டாடும் மனப்போக்கு இருக்கலாம். ஆனால் அப்படி வெல்ல முடியாதவர்களின் மனப்போக்கு எப்படியானது? நாம் தமிழ் சமூகம், தமிழ் சமூகம் என்று கூறும் போது வெல்ல முடியாதவர்களை பொருட்படுத்துவதே இல்லையே. ஏன்? இப்படி சுயவர்க்க விசுவாசத்துடன் மத்திய, மேல் மத்திய வர்க்கம் இருப்பதே நம்மூரில் முற்போக்குவாதம் ஒரு பக்க சார்பாக இருக்கிறது - அவர்களுக்கு ஏழையென்றால் கிராமத்தில் இருப்பவர்கள். நகரத்தில் ஏழ்மையே இல்லை. நகரத்தில் போதாமையே இல்லை. குப்பை அள்ளி வாழ்கிறவன், சாக்கை விரித்து தூங்குகிறவன், 400 சதுர அடிகளுக்குள் குடும்பமாக வாழ்கிறவர்களே இல்லை. இங்கு நிகழும் இயற்கை அழிப்பை, நீர், காற்று மாசை யாராவது எதிர்த்தால் அவர்களும் இவர்களைப் பொறுத்தவரையில் பிற்போக்காளர்கள். நகரங்களின் விலைவாசி உயர்வை விமர்சித்தால் அவர்கள் முன்னேற்றத்தின் விரோதிகள்.
துரதிஷ்டவசமாக, தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளும் சரி, இடதுசாரி கட்சிகளும் சரி நகர வாழ்க்கையை சொர்க்க வாழ்க்கையாக பார்த்தே பழகிவிட்டனர். எதைக் கேட்டாலும் 300 ஆண்டுகளுக்கு முன் சோறே இல்லாமல் கஷ்டப்பட்டோம் தெரியுமா என்கிறார்கள். ஏன் அப்படியே ரெண்டு லட்சம் ஆண்டுகளுக்குப் பின்னால் போனால் பதினெட்டாம நூற்றாண்டு கூட சிறப்பாகத் தெரியும். இதெல்லாம் ஒரு லாஜிக்கா? பிடிக்கலைன்னா கிராமத்துக்குப் போ என்கிறார்கள். ஆனால் நான் கிராமம் வேண்டும் என்றா கேட்கிறேன். இந்து மதத்தை விமர்சித்தால் கிறித்துவக் கூலி என்பதைப் போலத் தான் இதுவும். விமர்சிக்கவே கூடாது, பாராட்ட மட்டுமே வேண்டுமெனில் நீங்கள் என்ன கோயில் அர்ச்சகர்களா? நகரம் என்ன கடவுளா? நீங்கள் எல்லாரும் எந்த அக்கிரகாரத்தை சேர்ந்தவர்கள்?
என்னைப் பொறுத்தவரையில் நகரத்தையே கிராமத்தை விட கடுமையாக விமர்சித்து கட்டுப்படுத்தி சீர்திருத்த வேண்டும், நியாயமான வாழ்க்கையை அனைவருக்கும் பெற்றுத் தர முயலவேண்டும். இதை உலகப் பொதுமையான பிரச்சினையாக கண்டு, இதன் பின்னுள்ள வர்க்க எற்றத்தாழ்வை பேச வேண்டும். விமர்சனமற்ற எதிலும் சொகுசு இருக்கும், சமத்துவம் இராது.
Comments