கடுமையான மன அழுத்தத்தில், வேலைப் பளுவின் இடையில் கூட நான் தொடர்ச்சியாக எழுதி வந்திருக்கிறேன். எப்போதாவது அமையும் ஓய்வு நாட்களில் தான் என்னால் எழுத முடியாமல், கொம்புகளுடன் ஒரு சோம்பல் வந்து தோளில் அமர்ந்து ‘தூங்கு, வெட்டியாய் இரு, ஒன்றும் செய்யாதே’ என நடத்துகிறது. நீதிமன்றம், வக்கீல் அலுவலகம், பணத்துக்கான தேடல், கடுமையான உடல் வலியைத் தரும் பேருந்து பயணம், புதுப்புது நண்பர்களின் வீடுகளில் சில மணிநேரத் தங்கல் என இருந்த மணமுறிவு கொடுமை நாட்களில் கூட நான் தினமும் எழுதியிருக்கிறேன். இதற்கான காரணத்தைப் பற்றி ஏற்கனவே ‘எழுதியிருக்கிறேன்’ - எழுத்தில் ஒரு பிரத்யேக இன்பம் உண்டு. எழுத்தின் வழி சிந்திக்கும், அறிவைப் பரவலாக்கும் மகிழ்ச்சி. புனைவின் வழி மற்றொருவராக மாறி இன்னொரு அகமொழியில் செயல்படும் சாத்தியம் தரும் திளைப்பு, இதற்கும் போதை மருந்து பயன்பாட்டில் கிடைக்கும் டிரிப்பாகும் அனுபவத்துக்கும் சில தொடர்புகள் உள்ளதாகத் தோன்றுகிறது. நம்முடைய அனுபவ, உணர்வு, சிந்தனை சார்ந்த உள் உலகம முழுக்க மாற்றியமைக்கப்படும் போது நாம் பருவுலகில் ஒரு பக்கமும், அதற்கு சம்மந்தமில்லாத இன்னொரு உலகில் மற்றொரு பக்கமும் வாழ்ந்துகொண்டிருப்போம். அங்கு நடப்பதை எதுவும் இங்கு இருக்கும் உங்களை அசைக்காது. இதற்காகவே நான் தினமும் என் நாவலைத் திறந்து அதனுள் புகுந்து கொள்வேன்.
எனக்கு வேலை, குடும்ப உறவுகள், நட்புறவுகள், சடங்குகள், சமூக அரசியல் செயல்பாடுகள், பயணம், உணவு, கேளிக்கை சார்ந்து பெரிய மகிழ்ச்சி எதையும் இந்த வாழ்க்கை அளிப்பதில்லை. என்ன இன்பம் கிடைத்தாலும் அது மிக மிக சொற்பமே. மேலும் இந்த வாழ்க்கை மீதான ஒரு ஆழமான கசப்பு சிறுவயது முதலே எனக்குள் உள்ளது - சும்மா இருப்பது சுகமே என்பதைக் கடந்து நான் கண்ட வரையில் எல்லாருடைய உலகமும் கடும் வெறுமையிலே உழல்கிறது. அதிருப்தி மட்டுமே மக்களுக்கு எஞ்சுகிறது. இந்த வாழ்வில் தேடும் ஒவ்வொன்றும் நம்மை ஏமாற்றுகிறது. வரலாற்றை வாசிக்கும் போதும் எல்லா காலத்திலும் மக்கள் இதே போல அல்லது இதை விட கொடுமையான நிலையில் தான் வாழ்ந்திருக்கிறார்கள். மானுடவாதிகளும் கற்பனாவாதிகளும் ஒரு கிளுகிளுப்புக்காக மானுட சகோதர திரளல், பேரன்பு, பெருங்கருணை, இயற்கையுடன் ஒன்றுதல் என போலியாக டிரிப் ஆகிக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் சொல்லும் எதுவும் இயல்பாக இங்கு இல்லை. மானுட மேன்மையை உருவாக்கும் முயற்சிகள் கடும் துன்பத்தையே அளித்து வந்துள்ளது என்பதே வரலாறு. இயற்கை என நான் காண்பது எங்கும் உடைபடும் மலைகளும், அழியும் வனங்களுமே தான். ஒருவர் கண்ணீர் விட்டு அழுதால் கூட இன்று அத்துளிகள் மண்ணில் விழாது, காங்கிரீட்டில் தான் விழும். தரையில் கூட அரை அங்குலம் மண்ணைக் காணோம். கடைசியாக அறம். அதுவும் ஒரு பித்தலாட்டமே என என் அனுபவங்கள் கற்றுக் கொடுத்தன. நீங்கள் காதலியுடன் இருக்கையில் அவளை மறக்கவும், நண்பர்களுடன் பேசும் போது அவர்களுடைய சொற்களை, எண்ணங்களைக் கடந்து வேறெங்கோ செல்லவே விரும்புகிறீர்கள். வேலை செய்யும் போது, உணவருந்தும் கூட அப்படித்தான். நீங்கள் சட்டம் கற்றவர்களைப் பாருங்கள் அவர்களுக்கு நீதியிலும் சட்டத்தின் மேன்மையிலும் உள்ள நம்பிக்கை முதலில் போய்விடும், அதன் பிறகே அவர்களால் தொழில் செய்ய முடியும். மருத்துவர்களும் கல்வியாளர்களும் கூட அப்படித்தான். மக்களுக்காக செயல்படும் அதிகாரிகள் மக்களிடம் இருந்து ‘விலகினால்’ மட்டுமே அதிகாரம் செலுத்த முடியும். எல்லாமே தான் நம்பும் ஒன்றை பரிகசிக்கும் முயற்சியாக முடிகிறது. வெற்றுச் சடங்காகிறது. ஆனால் எழுத்தில் மட்டுமே முழுமையான மகிழ்ச்சியும் நிறைவும் கிடைக்கிறது. எழுத்தில் மட்டுமே எழுதும் விசயங்களை மறக்கும் தேவை எழுவதில்லை.
எழுத ஒன்றுமே இல்லை எனும் நிலையும் வந்ததில்லை - எனக்கு இந்த வாழ்க்கை மீது அவ்வளவு கோபமும் கேள்விகளும் உண்டு. வாழ்க்கையுடன் மோதவும், அதிருப்தி கொண்டு அதை மாற்றவும் முயலும் வரை எழுத ஏராளமான விசயங்கள் எனக்கு இருக்கும் என நினைக்கிறேன்.
Comments