Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

மதமும் சர்வாதிகாரமும்: அந்தரங்கத்தில் இருந்து பொதுவெளிக்கு - ஆர். அபிலாஷ் (2)



நீங்கள் கடவுளை வழிபடும் போது உங்களுக்கும் கடவுளுக்குமான ஒரு அந்தரங்கமான தீவிர உறவே அங்கு தோன்றுகிறது. இதன் பெயரே பக்தி. பக்தி இலக்கியம் முழுக்க இதையே பேசுகிறது. வேதங்கள், உபநிடங்களிலும் தனிமனிதனின் ஆன்மாவும், அதற்கும் பரமாத்மாவுக்குமான உறவே முன்னிலைப்படுகிறது. எங்குமே “இந்துக்கள்” இல்லை, “இந்துவே” இருக்கிறார். பகவத் கீதையில் கூட கிருஷ்ணர் ஓரிடத்தில் கூட இந்துக்களை தமது செயல்களின் வழி ஒரு பொதுவான பிரஜையாக சித்தரிக்க முயல்வதில்லை. அதாவது நாம் இன்று அறிந்துள்ள அரசியல் ஜீவியான இந்து வேதங்கள், உபநிடங்கள், கீதையில் எங்குமே இல்லை. பக்தியின் அடிநாதமே அதன் அந்தரங்கமான, பொதுமொழியில் கடத்த முடியாத மருளுணர்வு (mystic) தான். இந்த உணர்வுரீதியான இந்துவை அவரது அந்தரங்கமான வெளியில் இருந்து, அந்தராத்மாவில் இருந்து வெளிக்கொணர்ந்து கடவுளிடம் உரையாடாத கடவுளிடம் அரசர் / பிரதமர் வழியாக உரையாடும் இந்துவாக மாற்றுவதே இந்துத்துவ செயல்திட்டம். அதற்கு போகிற போக்கில் தற்காலிக எதிரியாக பயன்படுவோர் மட்டுமே இஸ்லாமியர் எனும் மற்றமையே அன்றி இஸ்லாமியர் இந்துத்துவாவின் இலக்கே அல்லர். அதனாலே பாஜக தொடர்ந்து இந்துக்கள் எப்படி வழிபடுகிறார்கள் என்பதில் தலையிடுகிறது, ஆர்வம் செலுத்துகிறது, அதை வரையறுக்க, வடிவமைக்க முயல்கிறது. வீட்டுக்குள் பூஜையறைக்குள் எப்படி வழிபட வேண்டும் என்பதை சொல்லித் தருகிறது. (இஸ்லாமியரின் போக்குகளைப் பற்றி குறைவாகவே அக்கறைப்படுகிறது.) இவ்வளவு முறைகள் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும், இவ்வளவு திரிகள் கொண்ட விளக்குகளை இந்த நேரத்தில் ஏற்றி வைக்க வேண்டும் என்று அவர்கள் சொல்லும் போது ‘அப்போது கூட எங்களையும் நினைத்துக்கொள்ளுங்கள்’ என்று ரகசியமாகக் கேட்கிறார்கள். இந்த பிரச்சாரத்தின் போது முழுக்க இஸ்லாமியரும் கிறித்துவர்களும் விலக்கப்படுவது அவர்கள் ஒரு பொருட்டே அல்ல என்பதாலே. அவர்களுடைய மதங்கள் ஏற்கனவே ஒரு பொதுச்சடங்காகவும் தனிச்சடங்காகவும் அவர்களுடைய இறை உரையாடலை மாற்றி வைத்திருக்கிறது என்பதால் அவர்கள் இந்துச் சடங்குகளைப் பின்பற்றுவதே அவர்கள் இந்துத்துவர் ஆகி தேச முன்னேற்றத்தில் ஈடுபட ஒரே வழியாக இருக்கிறது. இந்து தோற்றத்தை ஏற்று குஷ்பு பொதுவெளியில் தோன்றுவது, வேறு இஸ்லாமிய பாஜக அரசியல் தலைவர்களின் சடங்காச்சாரமான செயல்கள் - இந்துவற்றவர்களும் பொது இந்துவாக தம்மை நிகழ்த்திக் காட்டிக் கொள்வது - இதற்கு உதாரணமாக உள்ளன.
இப்படி இந்துக்களை பாஜக இருவகையாக பகுக்கிறது - 1) உணர்வு வடிவிலான இந்துக்கள், 2) கருத்து வடிவிலான இந்துக்கள். அல்லது 1) அகவயமான இந்துக்கள், 2) புறவயமான இந்துக்கள். பாஜக அகவயமான இந்துக்களை, பக்தர்களை, புறவயமாக, சமூக வயமான இந்துக்களாக உருமாற்ற விழைகிறது. பாஜகவின் நோக்கம் உண்மையில் இந்தியாவுக்கு காவிச் சாயம் பூசுவதோ, வைதீக ஒற்றை அடையாளத்தின் கீழ் இந்துக்களைக் கொண்டு வந்து பன்மைத்துவத்தை அழிப்பதோ அல்ல. முதலில், காவிச்சாயத்தினால் பாஜகவுக்கு தேர்தலிலோ நிர்வாகத்திலோ எந்த லாபமும் இல்லை. பாஜகவின் எழுச்சிக்கு முன்பே கூட இந்தியாவில் காவிமயம் இருந்தது. பாஜகவின் எழுச்சிக்கு முன்பே இங்கு வைதீக-மைய இந்து மத ஆதிக்கம் இருந்தது. இவை இரண்டும் பாஜக ஆட்சிக்கு வர உடனடியாக உதவவில்லை. மேலும் அவைதீக இந்து பன்மைத்துத்தைக் கண்டு பாஜக அஞ்சுவதாகத் தெரியவில்லை, மாறாக அதை எளிதாக ஸ்வீகரிக்க அதற்குத் தெரியும். ஆனால் இந்தியாவின் நகரமயமாக்கல், பொருளாதார வளர்ச்சி, அதனால் தோன்றிய மிதமிஞ்சிய ஏழை-பணக்கார வித்தியாசம், பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூகப்பொருளாதார நிச்சயமின்மையால் வளர்ந்த தேசியவாதம், மதவாதம் ஆகிய காரணிகளை பயன்படுத்தி அது இந்து மக்களை இந்து எனும் கருத்தின் கீழ் திரட்டியது, புறவயப்படுத்தியது, அந்த கருத்தை கருத்தியலாக்கி, அதன் அரசியல் அதிகார சுவையைக் காட்டி அடிமைப்படுத்தியது, கூடவே நவதாராளவாதத்தின் கேள்வியின்றி ஆதரிப்பது குறித்த கனவைக் கட்டியெழுப்பியது, அக்கனவை ஊழலற்ற இந்தியா, வளர்ந்த தேசமான இந்தியா எனும் லட்சியமாக வடித்துத் தந்தது, இந்து அடையாளம் எனும் கருத்தியலால் கட்டற்ற வளர்ச்சியைக் கட்ட முடியும் என இரண்டு சம்மந்தமில்லாத லட்சிய இழைகளைப் பின்னி கயிற்றரவாக மாற்றியது - இதுவென்றால் அது, அதுவென்றால் இது, கடைசி வரை எதற்காக ஆதரிக்கிறோம் என்று கண்டுபிடிக்க முடியாதபடியான ஒரு புதிர் விளையாட்டாக அது அரசியல் பிரச்சாரத்தை மாற்றியது, ஒன்றுமே புரியாத போது கடந்த காலத் தவறுகளை கற்பனை செய்து அதைத் திருத்தும் விளையாட்டை உண்டு பண்ணி அளித்தது, அப்படித்தான் பாஜக ஆட்சியைப் பிடித்தது, தக்க வைத்தது.
சர்வாதிகாரமும் திரள் மனிதனின் அந்நியமாதலும்:
மேற்சொன்ன புதிர் விளையாட்டு ஒரு அந்நியமாதலின் மீது அமைந்திருக்கிறது. மனிதன் தன்னளவில் தனது அன்றாட வாழ்க்கை, குடும்பம், நட்பு வட்டம், ஊர், சமூகம் எனப் பிணைந்திருக்கிறான். அவன் தனித்தோ அந்நியமாகவோ இருப்பதில்லை. இன்றும் பெரும்பாலான காடுகளில் வசிக்கும் பழங்குடிகளுக்கு தனிமை, அலுப்பு, அந்நியமாதல் போன்ற மனநிலைகள் கிடையாது என்கிறார்கள். இவை நவீன வாழ்வின் தவிர்க்க இயலாத அங்கங்கள் மட்டுமே. தொழிற்சாலையிலும் பல்வேறு நிறுவனங்களிலும் துண்டுத்துண்டான வேலைகளில் ஈடுபடுத்தப்படும் நவீன மனிதன், பணம் எனும் சுழற்சியில் தன் உழைப்பு எங்கே போய் சேர்ந்து பொருளாக தன்னிடம் வருகிறது எனப் புரியாமல் குழம்பி, அதனாலே தன் உழைப்பில் இருந்து, அதன் பலனான பணத்தில் இருந்து அந்நியப்படுகிறான். அடுத்து அவன் ஒரு மனிதனாக தன் சாராம்சத்தில் இருந்து, விழுமியங்களில் இருந்து அந்நியப்படுத்தப்பட்டு தனக்குப் புறமே இருக்கும் தேசம் எனும் கருத்தாக்கத்தை நோக்கி ஈர்க்கப்படுகிறான். தனக்குள் உள்ள பெரும் வெறுமையை அவன் தேசியவாதத்தால் இட்டு நிரப்ப பார்க்கிறான். இந்த தேசியவாதம் ஒரு கருத்தியலாகி, நிறுவனமாகி, தேசத்திற்காக அல்லாமல் தேசியவாதத்திற்காகவே மனிதர்கள் உழைக்கும் நிலை வரும் போது அங்கு சர்வாதிகாரம் தோன்றுகிறது என்கிறார் ஹானா ஆரெண்ட். இந்தியாவில் கடந்த கால் நூற்றாண்டாக முன்னெப்போதும் இல்லாத தனிமையும், அதன் விளைவான போதாமை, அவநம்பிக்கை, மன அழுத்தம், மன உளைச்சல் மக்கள் ஆட்சிப் படைக்கிறது. தனித்தனியாக வீடுகளுக்குள் பூட்டப்பட்டிருக்கும் மக்களுக்கு டீவி வழியாக பிரதமரும், கார்ப்பரேட் குருக்களும், சாமியார்களும் ஆன்மீக உரை, பூஜை, யோகா, நடனம், கொண்டாட்டம் வழியாக இத்தனிமையைப் போக்க முனைகிறார்கள். அதாவது ஏற்கனவே அந்நியப்பட்டு வெதும்பியிருக்கும் அவர்களைத் தம்மில் இருந்து அந்நியப்படுத்தி, உள்-தனிமைக்கு ஆட்படுத்தி ‘தனியான பொதுவெளிக்கு’ நகர்த்துகிறார்கள். அங்கும் அவர்கள் தனியாகவே இருப்பார்கள், ஆனால் அங்கு தம்மை நிகழ்த்துவதன் வழியாக அவர்கள் ஒரு மாயையான சமூகத்தைக் கண்டடைவார்கள். அவர்களுக்கு அப்போது அசலான சமூகம் அல்ல, அதனிடத்து கருத்தியல் ரீதியாக உருவாக்கப்பட்ட இயக்கமே கிடைக்கும். அதாவது பக்தர்களான இந்துக்களின் சமூகத்தில் இருந்து அந்நியப்படும் அவர்களுக்கு பக்தியற்ற புறவயமான இந்துக்களின் சமூகம், இந்துத்துவர்களின் உலகம் அவர்கள் இடமாற்றப்படுவார்கள். அந்த இயக்கத்தினுள் அவர்களுக்கு என்று உறுதியான அடையாளமும், தெளிவான இலக்கும் அளிக்கப்படும். இந்த இயக்கமே இந்து ராஜ்ஜியம். இதில் இணையும் ஒரு இந்துவுக்கு இதற்கு வெளியே ஒரு உலகமோ, வாழ்க்கையோ சாத்தியம் அல்ல. அவர் முழுமையாக கடவுளை இழந்து விடுவார். அவர் இந்து ராஜ்ஜியத்தில் தனது உறுப்பினர் பதவியைத் தக்க வைப்பதற்காக தன் உயிரையும் கொடுக்க, தன் குடும்பத்தையும் இழக்கத் தயாராகக் கூடும், தமது மரண சாசசனத்தைக் கூட அவர்கள் மகிழ்ச்சியுடன் எழுதக் கூடும். ஐரோப்பிய வரலாற்றின் அடிப்படையில் இதைப் பற்றி சொல்லும் ஆரெண்ட், காந்தம் தன் ஈர்ப்பை இழந்ததும் அதில் ஒட்டியிருந்த துகள்கள் உதிர்வதைப் போல, லட்சியவாத கொள்கைகளின் அடிப்படையிலான இயக்கம் உடைந்ததும் அதன் உறுப்பினர்களாக தம்மைக் கருதி வந்த மக்கள் சர்வாதிகாரத்தின் மீதான நம்பிக்கையை முழுமையாக இழந்து வெளியேறுவார்கள். அதற்கு எதிராகப் பேசவும் கூட தலைப்படுவார்கள் என்கிறார்.
ஆரெண்டின் காலத்தில் இன்றைய இணையமும், சமூக வலைதளங்களும் இல்லை ஆகையால் அவர் அதனால் சர்வாதிகாரம் பெறும் விசையை கணிக்க முடியவில்லை. அவர் குறிப்பிட்ட நகரத்து மனிதனின் தனிமையை இணையமும் திறன்பேசிகளும் தோன்றி பெரும் பதற்றமாக, தாழ்வுணர்வாக, திரிபுணர்வு சார்ந்த மனச்சிதைவாக (paranoia) மாற்றின. ஒரு குடும்பம் இன்று உணவருந்த வெளியே கூட்டமாக வருகிறார்கள் எனில் கணவன், மனைவி, குழந்தைகள் என ஒவ்வொருவரும் தனித்தனியாக ஒரு திறன்பேசியுடன் தனித்திருப்பது இயல்பான காட்சி. எங்கு பார்த்தாலும் மக்கள் தம் தனிமையைத் தாங்க இயலாமல் போனில் யாருடனாவது பேசிக்கொண்டோ செயலியில் அரட்டை அடித்துக்கொண்டோ இருக்கிறார்கள். இது அவர்களைத் தாம் யாருமற்று ஏதிலிகளாக இருப்பதான உணர்வை இன்னும் அதிகரிக்கிறது. தமக்கு எதிராக உலகமே திரண்டு நிற்பதாக ஒரு பீதி அவர்களுடைய உபமனத்தை ஆக்கிரமித்திருக்கிறது. வெளியே மிகுந்த தன்னம்பிக்கையும் உள்ளுக்குள் மிகுந்த தாழ்வுணர்வுமாக அவர்கள் திரிகிறார்கள். திறன்பேசிகளில் அவர்கள் கண்டடையும் எந்த ஆதாரமும் அற்ற பொய்த்தகவல்கள், சேதிகள், போலியான காணொளிகள், மிகையான பேச்சுக்களை மக்கள் உடனடியாக நம்புகிறார்கள், அவர்களுடைய மிகையான மனநிலைக்கு இந்த பொய்மையும் புரட்டுமே உண்மையாகத் தோன்றுகின்றன. இந்த இணையத்தின், சமூகவலைதளங்களின் பயன்பாட்டை, பேராற்றலை வேறெந்த அரசியல் தலைவரையும் விட முன்பாகவே உணர்ந்துகொண்டவர் என நரேந்திர மோடியைப் பற்றி சொல்வார்கள். அவரும் அவரது கட்சியும் இந்த இணையத்தையும் புதிய ஊடகங்களையும் செவ்வனே பயன்படுத்தியே தம்மை விட பெரும் கட்டமைப்பும் நிதியாதாரமும் கொண்ட காங்கிரஸை வீழ்த்தினர். இணையத்தினால் ஆட்பட்ட மனிதனிடம் பேசும் புதிய மொழி ஒன்றை அவர்கள் கண்டுபிடித்தனர். அதுவே சர்வாதிகாரத்தின் பிரத்யேக மொழி. அது மந்திரம் போல இந்தியர்களின் பதற்றத்தை, தமது போதாமை குறித்த பேரச்சத்தைப் போக்கி ஆறுதல் அளிப்பதான தோற்றத்தைக் காட்டியது. (இதுவே உலகம் முழுக்க ஒரே சமயம் நடந்து சர்வாதிகாரிகளின் வெற்றிக்கு வழிகோலியது என்பது சுவாரஸ்யமாகும்.)
இன்னொரு சுவாரஸ்யமான விசயம் நீண்ட காலமாக இந்துக்களை அவர்களுடைய அகவயமான பக்தியில் இருந்து துண்டித்து வெளியே கொண்டு வருவது எப்படி எனும் தவித்து வந்த இந்துத்துவர்களுக்கு நவீன தொலைதொடர்பு மாற்றங்கள் வரப்பிரசாதமாகின. இந்துக்களின் உள்-தெய்வத்தைக் கொன்று அவர்களை தெய்வமற்ற அனாதைகள் ஆக்கின இணையமும் திறன்பேசியும்.
(உயிர்மையில் வெளியான கட்டுரையின் இரண்டாம் பகுதி)

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...