Skip to main content

மோடி எதிர்ப்பாளர்களின் தயக்கம்



அரசியல் பேட்டிகளில் நான் ஒரு விசயத்தை தொடர்ந்து கவனித்து வருகிறேன். அரசியல் அதிகாரத்தில் உச்சம் பெற்றவரை துணிந்து நின்று கேள்வி கேட்கும் பாங்கு எதிர்க்கட்சிகளுக்கே குறைந்துவிட்டது. தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிர்-பேச்சை செயல்திட்டமாக வைத்துக்கொண்டு பேசுவதை சொல்லவில்லை. தவறுகளைப் பார்க்கும் போது சோ கால்ட் அறவுணர்வுடன் அதை எதிர்ப்பதை சொல்கிறேன். கடந்த இரு பாராளுமன்ற தேர்தல்களில் பெற்ற வெற்றியைக் கொண்டு மோடி தன்னை ஒற்றை அதிகார பிம்பமாக நிறுவிக்கொண்டார். அதற்கான நிதியை அதானியைக் கொண்டு முறையற்ற வழியில் பல லட்சம் கோடிகளாக சம்பாதித்துக் கொண்டார். நெடுஞ்சாலை, துறைமுகம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளையும் மோனோபோலியாக அதானியைக் கொண்டு செய்ய வைத்து அவருக்கு 15% கொடுத்துவிட்டு மீதியை அவரே வைத்துக்கொண்டார். விமான நிலையம், துறைமுகங்களையும் வாங்கிக்கொண்டார். துறைமுகங்களின் வழி ஆறாக ஒழுகும் போதை மருந்து வியாபாரமும் இப்போது அவரது கட்டுக்குள் இருக்கிறது. இப்படி கண்ணுக்குப் புலப்படாத புலப்படுகிற பல்லாயிரம் வழிகளில் மோடியிடம் பணம் குவிந்துகொண்டே இருக்கிறது. இன்று உலகின் முதல் 5 பெரும்பணக்காரர்களின் பட்டியலில் இருப்பது உண்மையில் மோடி தான். அவர் அடுத்து இப்பணத்தைக் கொண்டு எதிர்க்கட்சிகளின் உதிரி தலைவர்களை, எம்.பிக்களை, கூட்டணிக் கட்சிகளை விலைக்கு வாங்கினார். ஜனநாயக அமைப்புகளை மண்டியிட வைத்தார். ஊடகங்களின் பங்குகளை வாங்கி சதா தன் புகழை மட்டும் பாட வைத்தார். அடுத்து இணைய தளங்களை, சமூகவலைதளங்களில் சம்பளத்துக்கும் சம்பளமில்லாமலும் பல லட்சம் பேர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கிறார். இவர்களே சமூக வலைதளங்கள் எங்கும் டுரோல்களாக மாறியிருக்கிறார். எந்த மொழியிலும் மோடியை விமர்சித்து கருத்து சொல்லப்பட்டால் இவர்கள் கும்பலாக வந்து உட்கார்ந்து மோடியை ஆதரித்து உளறுவார்கள். ரிப்போர்ட் அடிப்பார்கள். கும்பல் கும்பலாக வருவார்கள். மோடியை நடப்புலகில் நேரடியாக போராட்டங்கள் வழி எதிர்த்தால் காவல்துறை, என்.ஐ.ஏ போன்றவர்கள் வந்துவிடுவார்கள் என்றால், இணையம் வழியாக கதிகலங்கடிக்க டுரோல்களை உருவாக்கி வைத்திருக்கிறார். இதனாலே பல யுடியூப் சேனல்களில் கொஞ்சம் பார்த்து பார்த்து தான் விமர்சிக்கிறார்கள்.

பாஜகவில் பல குழுக்கள், ஆர்.எஸ்.எஸ்காரர்கள் மோடி மீது கடுப்பில் இருப்பது இந்த தனிமனித பணம், அதிகார குவிப்பை பார்த்து தான். அவர் யாருக்கும் எதுவும் கொடுப்பதில்லை, அவர் யாரையும் நம்பியிருப்பதில்லை என ஒரு பிம்பத்தை கட்டமைக்கிறார். தோல்வி பயம் வரும் போதெல்லாம் கூட்டணிக் கட்சிகளை நாடுகிறார். ஆனால் கட்சிக்கு உள்ளே அதே அளவுக்கு ஆதரவை அவர் நாடுவதில்லை.

இந்திய வரலாற்றில் இந்தளவுக்கு கட்டுப்பாடின்றி கேள்வியின்றி ஊழல் பண்ணி சில ஆண்டுகளிலேயே பெரும்பணக்காரரான தனிமனித அரசியல் தலைவர் வேறு இல்லை. தன் வசம் எதையும் நேரடியாக வைத்துக்கொள்வதில்லை, குடும்பத்துக்கு எதுவும் செய்வதில்லை என்பதே மோடியின் பாதுகாப்பு அரண். அதாவது பினாமி ஊழல்.

இந்த இரண்டும் சேர்ந்து - அரசாங்க அதிகாரம், கட்டற்ற பணப்புழக்கம் - ஒரு போலியான கடவுள் அந்தஸ்தை மோடிக்கு ஏற்படுத்திவிட்டது. எல்லாம் தற்காலிகம் தான். ஆனால் அவர் மீதான பயமும் ஈர்ப்பும் நிச்சயமானது.

எனக்கு ஆர்வமூட்டுவது மோடி எதிர்ப்பாளர்களிடமும் வெளிப்படும் அச்சம் பொருந்திய ஈர்ப்புதான். “வரும் தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்குமா என்பது சந்தேகம் தான். ஆனால் இன்றும் மோடிக்கு மதிப்புள்ளது, மக்கள் அவருக்காக வாக்களிப்பார்கள்” என்று முரணாகப் பேசுகிறார்கள். அது மட்டுமல்ல, தொழிற்துறையில் வீழ்ச்சி, வேலையின்மை, பணவீக்கம், வறுமை பற்றி பேசுவோரும் மோடி-அதானி உறவு பற்றி பேச பரவலாகவே தயங்குகிறார்கள். இந்திரா காந்தியை நெருக்கடி காலத்தில் எதிர்த்தவர்கள் காட்டிய துணிச்சலில் நூற்றில் பத்து மடங்குகூட இன்று மோடி எதிர்ப்பாளர்கள் காட்டவில்லை. அதே இந்திரா காலத்தில் காங்கிரஸுக்குள்ளே கடும் எதிர்ப்பு இருந்தது. நெருக்கடி நிலை வந்த போது அந்த இந்திரா விரோத மூத்த தலைவர்கள் மண்டியிட்டாலும் இன்னொரு பக்கம் வாய்ப்புக்காக காத்திருந்தார்கள். நெருக்கடி நிலை முடிந்ததும் கும்பலாக வெளியே வந்தார்கள். ஆனால் இவை எதுவும் மோடிக்கு நடக்கவில்லை, நடக்க வாய்ப்பும் இல்லை. ஏனென்றால் மோடியிடம் உள்ள கட்டற்ற பணமும் அதிகாரமும் இந்திராவிடம் என்றுமே இருந்ததில்லை. மோடி எதிர்காலத்தில் தோல்வியுற்றாலும் அவரிடம் உள்ள பணத்தையும் அதிகாரத்தையும் பிடுங்கவே முயல்வார்களே ஒழிய எதிர்க்க மாட்டார்கள். மோடியைப் போல தம்மையும் குட்டி மோடிகளாக உருவாக்கவே இவர்கள் மனதளவில் ஆசைப்படுகிறார்கள்.
ஒருவிதத்தில் இந்த சீரழிவுகளை இவர்கள் மனதளவில் ஏற்றுக்கொண்டு விட்டார்கள் எனத் தோன்றுகிறது. இது ஒரு வினோதமான காலம் - மோடியை ஏற்காதவர்களும் கூட அவருடைய பெரும் மூலதனத்தையும் கடவுளைப் போன்ற அதிகாரத்தையும் மனதுக்குள் விழைகிறார்கள். அதனாலே அவர்கள் மோடி பயன்படுத்திய மோசடி முறைமையை பெரிய அளவில் எதிர்ப்பதில்லை. கேள்வி கேட்பதில்லை. சும்மா அவரை சர்வாதிகாரி என்று சொல்லிக்கொண்டே தனக்கும் சர்வாதிகார ஆற்றல் வராதா என ஏங்குகிறார்கள், அவரிடம் இருந்து சிறிது பிடுங்க முடியுமா என கனவு காண்கிறார்கள். மோடியை ஆதரிப்போரையும் ஆகர்ஷிப்பது அவரது செயலோ சிந்தனையோ அல்ல, அவரிடம் உள்ள இதே பணமும் அதிகாரமும் தான். அதனாலே மோடி தன் பல கோடி மதிப்பிலான விமானம், ஆடைகளைப் பற்றி தம்பட்டம் அடிக்கிறார். குழந்தைகள், பொதுமக்கள், கட்சிக்காரர்களைத் தொடாமல் பேசுகிறார். தன்னைப் போன்ற வெளிநாட்டு ‘அதிபர்களை’ எதிர்கொண்டால் மட்டுமே அணைத்துக்கொண்டு போஸ் கொடுக்கிறார். இதன் மூலம் அவர் சொல்ல வரும் சேதி தான் ஒரு சர்வாதிகாரி என்பதல்ல, தான் ஒரு ஒப்பற்ற சாம்ராட் என்பதையே.

லகானிய பார்வையில் விளக்கினால் மோடி தன்னை நாட்டின் “தந்தையாக” மாற்றிக்கொண்டு விட்டதால் பிரஜைகளான அவரது குழந்தைகள் அவர் மீது மிகுந்த பிரேமையும் அச்சமும் கொண்டிருக்கிறார்கள், அவரைக் “கொன்று” அவராக தம்மை மாற்றிக்கொள்ள விழைகிறார்கள். ஆனால் அது எப்போது எப்படி நிகழும் எனத் தெரியவில்லை. அந்த குழப்பமே அவர்களை அவரை வெளிப்படையாக விமர்சிக்கவிடாமல் தடுக்கிறது. மோடியின் விமர்சகர்களில் ஒரு பகுதியினர் தம்மை இத்தேசத்தின் பிள்ளைகளாக, அரசியல் சட்டத்தின் வழித்தோன்றல்களாக காணாமல் “மோடியை எதிர்க்கும் அவரது பிள்ளைகளாக” தம்மைக் காண்பது துரதிஷ்டவசமானது. யோசித்துப் பாருங்கள் - ஒரு குடும்பத்தில் அம்மா, அப்பா, பிள்ளைகள், சில நேரங்களில் தாத்தா, பாட்டி, அத்தை, மாமா எல்லாரும் இருப்பார்கள். இவர்களில் ஒருவர் தன்னை அந்த குடும்பத்தின் ‘தலைவராக’ கருதி ஆதிக்கமாக செயல்பட்டு தானே ‘குடும்பம்’ என நினைத்தால், தனக்கு நிகழ்வது குடும்பத்துக்கும், குடும்பத்துக்கு நிகழ்வது தனக்கும் நிகழ்வதாக நினைத்தால், அதையே மொத்த குடும்பத்தையும் நம்ப வைத்தால்? (என்னவொரு முரண்) அந்த குடும்பத்துக்கே பைத்தியம் பிடிக்கும். முழு அடிமைகளாக மாறுவார்கள். அவரைப் பிடிக்காதவர்களால் கூட அவரது தவறை சுட்டிக் காட்டி விமர்சிக்க முடியாது. ஏனென்றால் அது தம்மையே விமர்சிப்பதாக போய் முடியும். மோடி தேசம் குறித்த கற்பிதத்தை தனிமனிதர் சார்ந்ததாக மாற்றியதுடன் நாட்டின் பொருளாதார வெற்றியையும் தன்னுடைய ஊழல் வளமாக மாற்றிவிட்டார். அவரை மோகிக்காமல் வெறுக்க (எதிராளிகள்), வெறுக்காமல் மோகிக்க (சொந்த கட்சிக்காரர்கள்) முடியாது எனும் நிலையை ஏற்படுத்தி விட்டார். (காங்கிரஸ் கட்சிப் பேச்சாளர்களிடையே / உபதலைவர்கள் இடையே கூட பா சிதம்பரம் போன்ற வெகுசிலரே இதற்கு விதிவிலக்கு.)

தந்தையின் மீதான பிரேமையை மிகை-எதிர்ப்பால் காட்டும் பிள்ளைகளும் உண்டு. அவர்களுடைய பேச்சில் ‘தந்தையின்’ கொள்கை அல்ல, குற்றங்கள் அல்ல, எளிய ஒழுக்கம், நாணயம், கண்ணியம் போன்ற நடவடிக்கைகளே விமர்சன இலக்காக இருக்கும். திரிணாமூல் காங்கிரஸ் எம்.பிக்களை இங்கு குறிப்பிடலாம். அவர்கள் திட்டுவதைப் பார்த்தால் மோடிக்கே உள்ளுக்குள் நான் இவ்வளவு பயங்கரமானவனா என சற்று கெத்தாக இருக்கும்.

இந்த முற்றதிகார உளவியலை முன்பு ஹிட்லரும் முசோலினியும் ஏற்படுத்தி ஆண்டார்கள். முற்றதிகாரம் என்பது ஒருவரை நேரடியாக கட்டுப்படுத்துவதும், கட்டுப்படாதவர்களை காவல்துறையை, ராணுவத்தை வைத்து அச்சுறுத்தி பணிய வைப்பதும் மட்டும் அல்ல. அதை விட சிக்கலானது, ஆபத்தானது.

மோடியிடம் இருந்து விடுபடுவது தேசம் தழுவிய ஒரு கலாச்சார மனநோயில் இருந்து விடுபடுவது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...