எப்போதுமே எழுதுவதற்கு போதுமான நேரமில்லை எனும் உணர்வு எனக்கிருக்கிறது. ஒரு நாவலை எழுதி முடித்து அதைத் திருத்துவதற்குள் இன்னும் நான்கைந்து நாவல்கள் எழுதக் கேட்டு கதவைத் தட்டுகின்றன. அவற்றை முடிக்காது பாதியில் விட்டுவிடும் போது அவை பேய்களாகி என் உறக்கத்தைக் கெடுக்கின்றன. அதனாலே வார இறுதி நாளை நான் பயணத்தில் செலவழிப்பதில்லை. எழுத்துக்குள் மூழ்கி விடுகிறேன். எங்காவது போவதென்றால், நண்பர்களை சந்திக்க நினைப்பதென்றால் அதற்கு அரைநாள் ஓடிவிடும். இன்னொரு பக்கம் வீட்டிலேயே இருந்தாலும் மனம் ஓய்வுக்காக ஏங்கும். ஞாயிற்றுக் கிழமையை உறக்கமும் வேடிக்கையுமாக கழிக்காவிடில் திங்கள் அன்று பெரும் சோர்வு தோளில் சாய்கிறது. பத்து, இருபது நாட்கள் விடுமுறை கிடைத்தால் உடனடியாக ஒரு நாவல் காத்து நிற்கிறது. எனக்கென்னவோ என்னைப் பற்றி யோசிக்க பழைய படங்களில் வரும் ஐந்து பெண்களை கரை சேர்ப்பதற்காக போராடும் அப்பா / அண்ணன் தனக்கென எதை யோசித்தாலும் ஒவ்வொரு பெண் குழந்தையின் / தங்கையின் முகமாக நினைவுக்கு வரும் காட்சி தோன்றுகிறது. இவ்வளவு புத்தகங்களையும் ‘கரை சேர்க்கும்’ போது இன்னும் பத்து எழுத்துத் திட்டங்கள் புதிதாதக் தோன்றும் என நினைக்கிறேன். ஆனால் என்னுடைய நண்பர்கள் எப்படி ஜாலியாக ஊர் ஊராகப் பயணித்து விழாக்களை சிறப்பிகிறார்கள், நண்பர்களைத் தேடி சந்தித்து அளவளாவுகிறார்கள் எனப் புரியவில்லை. நாவலாசிரியர்கள் குடும்பஸ்தர்களாகவும் மற்ற எழுத்தாளர்கள் பேச்சிலர்களாகவும் இருப்பதுதான் விதியா?
செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....
Comments