கிரிக்கெட்டில் இருவகையான சுழலர்கள் உண்டு - ஒருவகையினர் பந்தைக் காற்றில் சுழற்றி நீண்ட நேரம் மிதக்கவும் (drift) இறங்கவும் (dip) வைத்து அதன் போக்கை, திசையை கணிக்க சிரமாக்கி அதன் வழியாக மட்டையாளரை முறியடித்து வெளியேற்றுவார்கள். பிரச்சன்னா, பேடி, வார்ன், அஷ்வின் இந்த பாணியைச் சேர்ந்தவர்கள். மற்றொரு வகையினர் சந்திரசேகர், கும்பிளே, இன்றைய ஜடேஜா, கார்ன்வெல், நேதன் லயன், ஷோயப் பஷீர் போன்றவர்கள். இவர்கள் பந்தை வேகமாகவும் ஆடுதளத்தில் தளர்வாக உள்ள பகுதிகளில் கூர்மையாகவும் வீசுவார்கள். எப்போதாவது கொஞ்சம் பந்தைத் தூக்கி வீசவும் (flight) செய்வார்கள். ஆடுதளத்தின் மாறுபட்ட தன்மையை பயன்படுத்தி பந்தை எகிற வைத்து ஷார்ட் லெக், பைன் லெக் ஆகிய பகுதிகளில் கேட்ச் எடுப்பார்கள். எல்.பி.டபிள்யூ முறையில் அதிகம் விக்கெட் எடுப்பார்கள். பொதுவாக நல்ல வேகமும், துள்ளலும் கொண்ட, ஆனால் அதிகமான மாறுபட்ட தன்மையில்லாத ஆடுதளங்களில் முதல்வகையினர் சோபிப்பார்கள். அவர்கள் ஆடுதளத்தை அதன் வேகத்துக்காக மட்டுமே நம்பியிருப்பார்கள். குறைவாகத் திரும்பினாலும் சுலபத்தில் விக்கெட் எடுப்பார்கள். முதல் நாள் ஆடுதளத்தில் கூட மூன்று விக்கெட் எடுப்பார்கள். ஆனால் கடந்த பத்தாண்டுகளில் உலகம் முழுக்க ஆடுதளங்கள் சுழலர்களுக்கு மெத்தனமாகி வருகின்றன. ஆகையாலே இரண்டாம் வகையினர் இன்று அதிகமாக ஆடி விக்கெட் எடுத்துவருகிறார்கள். இவர்களைப் பார்த்தால் நாம் நல்ல சுழலர்களாக பாவிக்க மாட்டோம். ஆனால் இவரக்ளே இன்றைய மேட்ச் வின்னர்கள். ஒரு உதாரணம் சொல்கிறேன்: ஒரு மெதுவான, துள்ளல் குறைந்த ஆடுதளத்தில் நான்காவது நாள் ஆட்டம் நடக்கிறது. பந்து திரும்புகிறது, ஆனால் மெதுவாகத் திரும்புவதால் அஷ்வினைப் போன்ற மெதுவான, மரபான சுழலர் மட்டையாளரை பந்தின் மிதப்பிலும் திசைமாற்றத்திலும் முறியடித்தாலும் அவர் பின்னங்காலுக்கு சென்று தடுத்தாடவோ ஒற்றை ரன்னுக்கு பந்தை ஸ்கொயர், பாயிண்ட் பகுதியில் தட்டிவிடவோ செய்வார். ஆனால் ஜடேஜாவின் பந்தால் அவர் முறியடிக்கப்பாட்டாலோ அவரால் பின்னங்காலுக்குப் போய் சமாளிக்க முடியாது; பந்தின் வேகம் அதை அனுமதிக்காது. அதனாலே குல்தீப் யாதவ் தன் வேகத்தை 70களில் இருந்து கிட்டத்தட்ட தொண்ணூறுகளின் துவக்கத்திற்கு மாற்றவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இப்போது சுழலும் தளங்களில் அவரை ஆடுவது மிகவும் சிரமமாகிவருகிறது. இதை மிகச் சீக்கிரமாகப் புரிந்துகொண்ட மேதையென தோனியைச் சொல்லலாம். அவர் ஒருநாள் சுழலரான ஜடேஜாவை டெஸ்ட் போட்டியில் அறிமுகப்படுத்தியபோது பலராலும் அதன் தர்க்கத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் மெதுவான துள்ளல் குறைந்த ஆடுதளங்களில் ஜடேஜா அஷ்வினை ஆபத்தானவராக விளங்கினார்.
நான் 2013இல் சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டி ஒன்றை மைதானத்துக்கு சென்று ஆட்டத்தைப் பார்த்தேன். ஆஸ்திரேலியா முதலில் ஆடி 380 அடிக்க இரண்டாவது ஆடிய இந்தியாவுக்காக தோனி பந்துவீச்சாளர்களுடன் சேர்ந்து கடைசிவரை நின்று இரட்டை சதம் (265 பந்துகளில் 224) அடித்தார். அந்தப் போட்டியில் தான் நான் ஜடேஜாவின் பந்துவீச்சில் ஒரு விசித்திரத்தை கவனித்தேன். அவர் பந்தைத் திருப்புவதைவிட திருப்பாமல் இருப்பதே ஆஸி அணித்தலைவர் கிளார்க்கை சிரமப்படுத்தியது. ஜடேஜா எதையும் நுணுக்கமாக கற்பனையுடன் செய்யவில்லை. அவர் ஒரே இடத்தில் பந்தை ‘அடித்துக்கொண்டே’ இருந்தார். அஷ்வினே அன்று பத்துக்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்தார் என்றாலும் ரன்களைக் கட்டுப்படுத்தியதிலும் ஆட்டத்தைக் கட்டில் வைத்திருந்ததிலும் அவர் முக்கிய பங்காற்றினார். அந்தத் தொடர் முழுக்க அஷ்வினே அவரை விட அதிக முறைகள் ஐந்துவிக்கெட்டுகள் வீழ்த்தினார் எனினும் ஜடேஜா இரண்டு, மூன்று எனத் தொடர்ந்து விக்கெட்டுகள் எடுத்துக்கொண்டே வந்து தொடரின் கடைசியில் தில்லியில் நடந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் மட்டும் (ஆடுதளம் மோசமானபோது) ஐந்தாவது விக்கெட்டுகள் எடுத்தார். ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் அத்தொடரில் அஷ்வின் 29 விக்கெட்டுகள் எனில் ஜடேஜா 24 விக்கெட்டுகள். இதைத்தான் நான் தோனியின் ஜீனியஸ் எனக் கருதுகிறேன்.
கடந்தமுறை இங்கிலாந்து இந்தியாவுக்கு டெஸ்ட் தொடர் ஆடவந்தபோது இங்கு ஆடுதளங்கள் போதுமானபடிக்கு நீர்த்தெளிக்கப்படாமல் அதிகமாமல் திரும்பும்படி அமைக்கப்பட்டன. இம்மாதிரி ஆடுதளங்களில் (மெதுவான ஆடுதளங்களைப் போன்றே) பந்தை அதிகமாக மெதுவாக சுழற்றுகிறவர்கள் அல்லர், சுழற்றாமல் வேகமாக வீசுகிறவர்களே வெல்வார்கள். இங்கிலாந்து இதைக் கணித்து வேகமாய் பந்தை ஆடுதளத்தில் ‘அடிக்கிற’ சுழலர்களாக ஷோயப் பஷீரையும் ஹார்ட்லியையும் கொண்டுவந்தார்கள். அவர்கள் ஜடேஜாவின் பாணியில் வீசி விக்கெட்டுகளை அள்ளினார். அஷ்வினும் ஜடேஜாவும் இணைந்து அத்தொடரில் 45 விக்கெட்டுகள் எடுத்தால், இந்த இளைஞர்களோ 39 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
வரும் ஈராண்டுகளில் அஷ்வினும் ஜடேஜாவும் ஓய்வுபெற இருப்பதால் அஷ்வினின் இடத்தை குல்தீப்பை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் அடுத்த ஜடேஜாவாக யார் இருப்பார் எனும் கேள்வியெழுந்துள்ளது. இந்தப் பின்னணியில் யோசிக்கையில் அண்மையில் துலீப் கோப்பை போட்டியொன்றில் நான் கண்ட மும்பையை சேர்ந்த ஆப் ஸ்பின்னர் தனுஷ் கோட்டியானே அந்த நபர் என்று தோன்றியது. அவர் ஆறடிக்கு மேல் உயரமாக இருக்கிறார். பந்தை வேகமாக ‘அடிக்கிறார்’. எகிற வைக்கிறார். பெரும்பாலான மட்டையாளர்களால் அவரது திரும்பும் பந்தை சுதாரித்தாட முடியவில்லை. வேகம் அதை அனுமதிக்கவில்லை. கடந்த ரஞ்சிக் கோப்பையில் மும்பைக்காக நன்றாகப் பந்துவீசினார். இத்தனைக்கும் அவரிடம் வழக்கமான சுழலர்களிடம் உள்ள லூப், டிரிப்ட் எல்லாம் கிடையாது. ஆனால் அந்த காலத்து ஜடேஜாவைப் பார்ப்பதைப் போலுள்ளது. (சுமாரான தொழில்நுட்பம் கொண்டவர் எனினும் நிறைய ரன்கள் அடித்தார். ஒரு போட்டியில் பத்தாவது எண்ணில் ஆட வந்து சதமும் அடித்திருக்கிறார்.) கோட்டியான் துளு மொழி பேசும் குடும்பத்தை சேர்ந்தவர். கர்நாடக மாநிலத்தில் பிறந்து மும்பைக்கு சென்றவர். அவரது தகப்பனார் டிவிஷன் கிரிக்கெட் ஆடியவர்.
இந்தியாவில் இப்போது உருப்படியான ஆப் ஸ்பின்னர்களும் கிடையாது. அடுத்த பத்தாண்டுகளில் ஆடுதளங்களில் இன்னும் தளர்ச்சியடையுமே ஒழிய வேகம்பெறாது. குல்தீப்பின் பாணி பந்துவீச்சு எல்லா ஆடுதளங்களிலும் எப்போதும் எடுபடாது. அக்ஸரும் பந்துவீச்சாளராக நல்ல ஆட்டநிலையில் இல்லை. மேலும் இருவரும் இடதுகை சுழலர்கள் வேறு. அவருக்குப் பதிலாக சாய் கிஷோரை எடுக்கலாம். அவரும் இடதுகையாளரே. இவர்களுக்கு அடுத்துள்ள கால்சுழலர்கள் டி20யில் மட்டும் நன்றாக வீசக்கூடியவர்கள். ஆகையால் வரும் ஆண்டுகளிலும் கோட்டியான் தொடர்ந்து மும்பைக்காக நன்றாக வீசினால் நிச்சயமாக இந்தியாவுக்காக டெஸ்ட் ஆடுவார் என்றும், அப்படி ஆடினால் ஒரு கலக்கு கலக்குவார் என்றும் தோன்றுகிறது.
Comments