மிக மிக எளிய துப்பறியும் கதைதான். டியாகோ கார்ஸியா எனும் ஒரு தீவுக்கூட்ட தேசத்திலும் கேரளாவிலுமாக நடக்கிறது. கதைநாயகன் கிறிஸ்டி அந்தர்பேர் எனும் இளம் எழுத்தாளர். அவரது பள்ளி நண்பரான செந்திலைக் கொலைசெய்வதை அவர் பார்த்துவிடுகிறார். அதைப் பற்றி விசாரிக்கச் செல்ல பல மர்மங்கள் கட்டவிழ்கின்றன, சில மர்மங்கள் தொடர்கின்றன. இதைப்பற்றி அவர் பாதி எழுதி முடிக்காத நாவலை பென்யாமினுக்கு அனுப்புகிறார். மீத நாவலைக் கண்டுபிடிக்க முடியாதபடிக்கு கிறிஸ்டி காணாமல் போய்விடுகிறார். பென்யாமினும் அவரது நண்பர்களுமாகச் சேர்ந்து கிறிஸ்டியைத் தேடுகிறார்கள், நாவலின் மிச்சத்தையும் தம் விசாரணை வழியாக இட்டுநிரப்புகிறார்கள்.
கதைக்குள் கதைக்குள் கதை எனும் ‘நகுலன்’தன்மைதான் இந்நாவலின் அழகு. நாவலின் முதல் 80% ஒரு நகுலன் கதைக்குள் பயணிப்பதைப் போலிருக்கிறது. கிறிஸ்டியின் மனம் மெல்ல மெல்ல நிலையழிவதை, உண்மைக்கும் கற்பனைக்கும் இடையிலான கோடழிவதை, அவன் ஒரு புனைவுவெளிக்குள் சஞ்சரிப்பதை, அதனால் தோன்றும் பதற்றம், பயம், மர்மத்தை ரசித்தேன். ஆனால் கடைசிப் பகுதியில் நாவல் அதன் பின்நவீனத்துவ மீ-எதார்த்தத்தில் இருந்து சட்டெனக் கீழிறங்கி எதார்த்த நாவலாகிவிடுகிறது. அதுவரைக் கற்பனை என்றும், பிரமையென்றும் இருந்த விசயங்கள் நிஜமாகிவிடுகின்றன. இது கதையை காற்றிறக்கிய பலூனாக, மற்றொரு டாவின்ஸி கோடாக மாற்றிவிடுகிறது. முக்கியமாக இரண்டு நாவல் வகைமைகளைக் கலந்ததைப் போல இருக்கிறது. இதுதான் இந்நாவலின் பிரதான பலவீனம்.
நான் இதை மலையாளத்தில் ஸ்டோரிடெல் செயலி வழியாகக் கேட்டேன். ராஜேவ் புதுமனாவின் வாசிப்பு அற்புதம். குறிப்பாக நகைச்சுவைப் பாத்திரங்களுக்காக அவர் கொண்டுவரும் குரல் மாற்றங்களும் தொனியும்.
Comments