பள்ளியில் தத்துவக் கல்வி இல்லாததன் போதாமையையே ஜக்கி, நித்தி, இப்போது மகாவிஷ்ணுவைப் போன்ற மோசடிக்காரர்கள் நிரப்புகிறார்கள். தத்துவம் என்பது ஆன்மீகம் அல்ல. பக்தி யுகத்திலும் பின்னர் கண்ணதாசன் பாடல்களாலும் அப்படி ஒரு மயக்கம் இங்கு ஏற்பட்டிருக்கிறது. தத்துவக் கல்வியானது வாழ்க்கை நெறிக்கல்வியோ யோகா பயிற்சியோ அல்ல. தத்துவம் என்பது தர்க்கம், அறம், உளவியல், பிரக்ஞையியல், தோற்றப்பாட்டியல் என பல விசயங்களை போதிப்பது. அது நம் மாணவர்களை புதிய சிந்தனை, கண்டுபிடிப்புகளை நோக்கி நகர்த்தும். வாழ்வின் சாராம்சம் என்ன, பொருள் என்ன, நோக்கம், இலக்கு என்ன, சுயம், மனம், உடல் என்றால் என்ன ஆகிய கேள்விகளை புறவயமாக ஆராய தத்துவக் கல்வி உதவும். தத்துவம் பயிலாமல் நேரடியாக மாணவர்கள் அறிவியலுக்கும் தொழில்நுட்பக் கல்விக்கும் போகும்போது ஒரு பெரும் வெற்றிடத்தை அகத்தே உணர்வார்கள். அதை அவர்கள் போதைப் பழக்கம், உடலீர்ப்பின் மயக்கம், பொழுதுபோக்கு மயக்கத்தின் பாற்பட்டு நிரப்ப முயல்வார்கள். அப்போதும் நுட்பமானவர்களுக்கு போதாமை தென்படும். அவர்கள் கள்ள சாமியார்களிடம் சிக்குவார்கள். அடிமையாகி அழிவார்கள். ஆனால் தத்துவப் பயிற்சி தரும் சிந்தனைத் தெளிவும் மொழிக்கூர்மையும் மகத்தானது, ஒப்பற்றது. இந்தியா முழுக்க எந்த பள்ளியிலும் கல்லூரியிலும் மாணவர்களுக்கு இப்பயிற்சி தரப்படுவதில்லை. அதை பயன்படுத்தித் தான் ஜக்கி மிகப்பெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியிருக்கிறார்.
ஒரு காலத்தில் ஆந்திராவில் இருந்தும் காஞ்சியில் இருந்தும் மகத்தான தத்துவவாதிகள் நளந்தாவுக்கு சென்று வாயிலில் காற்று நிற்கும் தத்துவவாதி காவலர்களை வாதில் வென்று உள்நுழைந்து பயின்று பெரும் பௌத்த மெய்யியலாளர்களாகி உலகையே வெல்லும் தத்துவத்தை உருவாக்கியிருக்கிறார்கள். நாகார்ஜுனர் ஒரு உதாரணம். திக்நாகர், தம்மபாலர் வேறு சில முக்கிய மெய்யியலாளர்கள். பௌத்த ontologistகளின் சாயலில் தோன்றிய ஹுசர்ல், ஷோப்பன்ஹெர், நீட்சே, ஹைடெக்கர் போன்றோரை உலகமே இன்று படிக்கிறது. ஆனால் நாம் மகாவிஷ்ணு போன்றோர் உளறுவதை கேட்டுக்கொண்டு குழப்பமாக வீற்றிருக்கிறோம். ஊழ் என ஒன்று உண்டா என்பதற்கே நம்மால் தர்க்கரீதியாக எதிர்கொள்ள முடியவில்லை. அதை சரியாக பொருள்படுத்தி வாயை அடைக்க முடியவில்லை. வெறும் தொழில்கல்வியில் மட்டும் கவனம் செலுத்தியதன் விளைவே இது.
முன்பு தத்துவம் பொன்போல விளைந்த மண் என்று நினைத்தாலே வியப்பாக இருக்கிறது. இப்போது கோமாளிகள் மட்டுமே எஞ்சியிருக்கிறார்கள். பெரும் அதிகாரமும் பணமும் படைத்த போலிகள் மெய்யியல் முகமூடி அணிந்து கல்லா கட்டுகிறார்கள்.
Comments