Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

குழந்தைகள் குறித்த குறிப்புகள் 2 - பெண்களும் குழந்தைகளும்

குழந்தைகள் விசயத்தில் அதிகமாக முட்டாளாக்கப்படுவது பெண்களே. என்னை மிகவும் வியப்படைய வைப்பது கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாக அனேகப் பெண்ணியவாதிகள் இந்த உண்மையை ஏற்றுக்கொள்வதோ பெண்களைக் குழந்தைப் பெறவேண்டாம் என்று கேட்டுக்கொள்வதோ இல்லை என்பதே (அரசின்மைவாதியான பெரியார் மட்டுமே விதிவிலக்கு). ஐரோப்பிய பெண்ணியவாதத்தை எடுத்துக்கொண்டால் ஷுலாமித் பயர்ஸ்டோன் பெண்கள் ஒருநாள் குழந்தைப்பேறை எந்திரங்களிடம் விட்டுவிடவேண்டும் என்று கனவு கண்டார். சிமன் டி பூவர் தாய்மையின்பக்திகுறித்து தனதுஇரண்டாம் பாலினம்நூலில் தெரிவித்த கருத்துக்கள் மிக முக்கியமானவை - தாய்மையின் காரணமாகவே பெண்கள் நிரந்தரமாகத் தம் பௌதீக அடையாளத்தை இழப்பதுடன், தம்மைக் கடந்து தம் உடலைத் தரிசிக்கும் ஒரு தெய்வீக நிலைக்குத் தள்ளப்படுவதாகவும், இதுவே மிக மோசமான அடிமைத்தனம் என்றும் கூறினார் அவர். உதாரணமாக, நம்மால் ஒரு தாயின் பாலியல் இச்சையை ஒருபோதும் கருதமுடியாது. பாலியல் பௌதீகமானது என்பதால் பெண்ணைத் தன் பௌதீக உடலைக் கடந்துச் செல்லத் தூண்டும்வகையில் தாய்மை எனும் கருத்துருவாக்கம் ஏற்பட்டது. ஒரு கல்லை அதன் அசலான நிலையை மறுத்து கடவுளாக ஆக்குவதைப் போல பெண் தன்னை மறுத்து தாய் தெய்வமாக்கப்பட்டாள். தாய்மையெனும் கடப்புநிலையின் வழியாக அவள் தனது பாலியல் இச்சையை மறுத்து தன்னை மீறிச்செல்ல வேண்டும் என சமூகம் கோரியது. இதுவே ஆணாதிக்கம் என்று பூவர் விளக்கினார். ஆனால் ஆட்ரியன் ரிச்சோ குழந்தைகளை ஆணாதிக்க மனநிலைப்படிப் பரிசீலிக்கும்போதே அது அடக்குமுறையாகிறதே ஒழிய, அடிப்படையில் குழந்தைப்பேறோ வளர்ப்போ பெண்களுக்குப் பாதகம் அல்லவென்றார். பேட்ரிஷியா ஹில் காலின்ஸ், ஆலிஸ் வாக்கர், மிரியம் ஜான்ஸன் போன்றவர்களில் இருந்து நமது அம்பை வரை இந்த தாய்மை-ஆதரவு நிலைப்பாடு கொண்டவர்களே. சிமன் டி பூவரின் கருத்துக்கள் பின்னிலைப்பெற்று தாய்மை-ஆதரவு பெண்ணியமே இன்று கோலோச்சுகிறது.

ஆண்களின்றி வாழலாம் என்று கோரும் பெண்ணியவாதிகள் கூட இன்று குழந்தைகளின்றி வாழலாம் என்று பிரச்சாரம் செய்வதில்லை. இது மிக மிக வினோதமானது - ஆண்களை விட நவீனப் பெண்களை மிகமோசமாக சுரண்டுவதும், அவர்களுடைய உடல், மன ஆரோக்கியத்தைச் சீரழிப்பது குழந்தைகளே. குழந்தைகளை நேரடியாகச் சாட முடியாதபோது பெண்கள் மொத்த கோபத்தையும் ஆண்களிடம் காட்டுகிறார்கள். ஏன் குழந்தைகள் தமது நேரத்தை, பணத்தை, ஆரோக்கியத்தை சுரண்டும் ஒருவித ஒட்டுண்ணிகள் எனும் உண்மை பெண்களுக்குப் புரிவதில்லை? ஏன் குழந்தைகள் விசயத்தில் அவர்களால் சுயநலமாக இருக்கமுடிவதில்லை? என்னதான் பல பெண்கள் சொந்த அம்மாவையோ மாமியாரையோ சிலநேரங்களில் கணவனையோ குழந்தை வளர்ப்புக்குப் பயன்படுத்தி தப்பித்துவிட்டாலும் பெரும்பான்மையினருக்கு குழந்தை கழுத்தில் சதா தொங்கும் தூக்குக்கயிறுதான். அவர்கள் கண்ணுக்குத்தான் அது புலப்படுவதில்லை

அண்மையில் தாயான எனது தோழி ஒருவர் தன் ஆறுமாதக் குழந்தையுடன் தன் வேலைசார்ந்த பணிகளுக்காக பயணித்து, குழந்தையையும் வேலையையும் சேர்ந்து சமாளிக்கமுடியாமல் திணறுவதைக் கண்டபோது மேற்சொன்ன கேள்வி எனக்குள் எழுந்தது. பெண்களுக்கு குழந்தையின் முக்கியத்துவம்தான் என்ன?

குழந்தை ஒரு சமூக கௌரவத்தைகுடும்ப அதிகாரத்தை பெண்களுக்கு அளிக்கிறது.

சிலநேரங்களில் குடும்பத்துக்குள் பேரம் பேசி தம்வசம் முடிவெடுக்கும், கணவனைப் பணியவைக்கும் அதிகாரத்தை வைத்துக்கொள்ள உதவுகிறது. ஆனால் இதுவும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் உதவாது.

வாழ்க்கையில் அர்த்தம் இருப்பதாக ஒரு பிரமையைக் கொடுக்கிறது.

மிக முக்கியமாக, குழந்தைகளே தேசியத்தின் அடித்தளம். பெண்கள் தம்மைத் தேசத்தின் பிரநிதியாக உணர குழந்தைகள் உதவுகிறார்கள். இதனாலே தேசியத்திற்கும் பெண்ணியத்துக்கும் ஒரு நுணுக்கமான தொடர்பு உள்ளது. தேசியம் குடும்பம் என்பது அரசியல் அலகு என்று நினைக்கும். தேசப்பற்றைக் காட்ட குடும்பமே விளக்கேற்ற வேண்டும் என்று மோடி கேட்பது இதனாலே. குடும்பம் என்பது அரசியல் கருத்தியல் என்பதே பெண்ணியத்தின் அடிப்படையும். குடிமைச் சமூகத்திற்கான விழுமியங்களை குடும்பத்திலும் எதிர்பார்க்கவேண்டும் என்று ஜான் ஸ்டுவர்ட் மில் கோரியது இதனாலே. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் தோன்றும் காதல் அவர்களை அடிமை-ஆண்டான் மனநிலையைக் கொண்டாட வைக்கலாம். ஆனால் இதைப் பெண்ணியம் கடுமையாக எதிர்க்கும். அரசியல் சரிநிலையை அந்தரங்கமான தளங்களில் பின்பற்றக் கேட்கும். இப்படிக் குடும்பத்தை அரசியல்மயமாக்கும் போது குழந்தைகளே எதிர்காலப் பிரஜைகளாக அதற்கு அத்தாட்சியாக மாறுகிறார்கள். அவர்கள் குடும்பத்தை ஒரு குட்டித் தேசமாக்குகிறார்கள். தாய் தேசத்தாயாகிறாள் (‘பாரத மாதா’). இந்த இறையாண்மை அதிகாரமும் பெண்களை நுணுக்கமாக இயக்குகிறது. ஆணுக்கு ஒருபோதும் கிடைக்காத அரசியல் அதிகாரம் பெண்ணுக்கு தாய்மை வழியாகக் கிடைகிறது. இதனாலே வளர்ந்துவரும், வளர்ந்த தேசங்களில் தாய்மைக்கு எதிராகப் பேச பெண்ணியவாதிகள் துணிவதில்லை. அவர்கள் தேசிய புரோஜெக்டின் முகவர்களாகத் தம்மை மாற்றிக்கொள்கிறார்கள்.

ஆனால் இதற்காக பெண்கள் இழப்பவை எவை?

உடல் எடை அதிகரித்து, ஹார்மோன் குளறுபடிகள் நேர்ந்து, மன அழுத்தம் ஏற்பட்டு சீர்குலைகிறார்கள்.

பாலூட்டுவது, உணவூட்டுவது, குளிப்பாட்டி வளர்ப்பது என நிறைய நேரத்தை வீணடிக்கிறார்கள். (இந்தப் பணிகளை ஆண்களும் தாய்மையுணர்வால் செய்து முட்டாளாகிறார்கள்.)

 முதல் சில ஆண்டுகள் வேலை, குழந்தைவளர்ப்பு என சமாளிக்கத் திணறுகிறார்கள். இதனால் வேலையிடத்தில் நெருக்கடி அதிகரிக்கிறது. நிச்சயமாக அவர்களுடைய பதவியுயர்வு, தனிநபர் வளர்ச்சி சில வருடங்களாவது பின்னோக்கி செல்கிறது

மெல்லமெல்ல இளமைக் கரைந்துவிட்டதாக தன்னிரக்கமும் பதற்றமும் கொள்கிறார்கள்.

இவ்வளவும் செய்தும் நமது குழந்தைகள் நன்றியுணர்ச்சியுடன் இருப்பதோ வளர்ந்த பின்னர் பெற்றோரைப் பார்த்துக்கொள்ள முயல்வதோ இல்லை. அவர்கள் வயதான பெற்றோரை சார்ந்தே இளமையிலும் இருக்கிறார்கள். ஜப்பான் போன்ற நாடுகளில் கணிசமான கல்யாணமாகாத இளம்பெண்களும் ஆண்களும் தமது 40, 50 வயதுவரை பெற்றோருடனே வாழ்வதாக ஒரு புள்ளிவிபரம் உண்டு. இந்தியாவிலும் நகரங்களில் இந்தப் போக்கு வளர்ந்துவருகிறது.


இவ்வளவு பாதகங்கள் இருந்தும் நம்மைக் குழந்தைகள் கட்டிப்போட நமது குடலில் உள்ள நுண்ணுயிர்களும் ஒரு காரணமோ என்று தோன்றுகிறது - நமது குடல் நுண்ணியிர்களே நமது பிள்ளைகளிடமும் அனேகமாக இருக்கின்றன. இயற்கைப் பேறின்போதும் அம்மாவின் பிறப்புறுப்பின் வழியாகவும் ஒரேவிதமான உணவை உண்பதாலும் இது நிகழ்கிறது. இந்த நுண்ணியிர்கள் நம் மூளையைக் கட்டுப்படுத்தும் திறன்பெற்றவை. நமது பிள்ளைகள் நம் நுண்ணுயிர்களின் சந்திதிகளின் வீடுகள். ஆக நாம் நமதுப் பிள்ளைகளை நேசித்து தியாகம் செய்தாலே இந்த நுண்ணியிர்கள் அடுத்தடுத்த தேகங்களில் வழிவழியாகத் தழைக்கமுடியும்

இப்படி, குழந்தைகளைப் பயன்படுத்தி தேசியமும் நுண்ணுயிர்கள் பெண்களை ஏமாற்றிவிடுகின்றன.

Comments

Popular posts from this blog

நடிகையரின் பிம்பச்சிறை - அழகு ஏன் ஒரு பிரச்சினையாகிறது?

  ( இது நவம்பர் 2025 இல் எழுதப்பட்ட கட்டுரை . டிசம்பர் 2025 உயிர்மையில் வெளியானது . ஆனால் இப்போதும் படிக்கத்தக்க ஒரு முக்கிய பிரச்சினைதான் இது என்பதால் பகிர்கிறேன் .) அண்மையில் கௌரி கிஷன் தன்னைக் குறித்து ஒரு யுடியூபர் உருவக்கேலிக் கேள்வியை எழுப்பியதாகச் சொல்லி அதை விமர்சித்த சம்பவத்தைப் பார்த்தேன் . தன் திறமையாலே தான் ஜொலிக்க விரும்புவதாகவும் , செறிவான வேடங்களிலே நடிக்க முயல்வதாகவும் அவர் கூடுதலாகச் சொன்னார் . எனக்கு இதுதான் பிரச்சினையின் மையம் , அவரது உடல் எடை அல்ல என்று தோன்றுகிறது . ஏன் ஆண்கள் மீது என்றுமே இவ்வகை கேள்விகள் வைக்கப்படுவதில்லை என்றால் தமிழ் சினிமா அவர்களை மட்டுமே நடிகர்களாகக் காண்கிறது . நடிகைகள் பார்வை இன்பம் அளிக்கிற பொம்மைகள் . அவர்கள் எவ்வளவுதான் புகழ் பெற்றாலும் விதவிதமான பாத்திரங்களை அவர்களால் பூண முடியாது . வந்து சிரித்து கவர்ச்சியாக நடனமாடி க்யூட் முகபாவனைகள் காட்டிவிட்டுப் போய்விட வேண்டும் . முப்பது படங்களில் நடித்தாலும் அந்த முப்பதும் ஒரே வேடம்தான் . வணிகப் பட நாயகர்கள...

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

சாகும்வரை பொழுதுபோக்கு

  "Indeed, we may have reached the point where cosmetics has replaced ideology as the field of expertise over which a politician must have competent control." - Amusing Ourselves to Death, Neil Postman "ஒரு அரசியல் தலைவர் முழுமையான ஆளுகை கொண்டிருக்க வேண்டும் என நம்பிய கருத்தியலை வெளித்தோற்றம் பதிலீடாக்கி விட்ட ஒரு புள்ளியை நாம் இன்று எட்டி விட்டிருக்கிறோம்." "சாகும்வரை பொழுதுபோக்கு", நீல் போஸ்ட்மேன்