Skip to main content

ஜெயமோகன்: இலக்கிய ஹிட்லர்


 

நினைவில் இருந்து சொல்கிறேன். தவறாக இருக்க வாய்ப்பு உண்டு. வாசகசாலை அமைப்பையும் அவர்கள் நடத்தும் விமர்சன கூட்டங்களையும் மிக மோசமாக ஜெயமோகன் விமர்சித்து எழுதினார். இன்று அவர்களை விருந்தினர் என்று அழைக்கிறார். வாசகசாலை ஒரு அமைப்பாக வளர்ந்திருக்கிறது என்பதற்கு இது சான்று என எடுக்கலாமா??


- MMuralidhar Balaprakash

ஜெயமோகன்: இலக்கிய ஹிட்லர்

ஜெயமோகன் 'வாசக சாலையை' செரித்துக்கொள்கிறார் - பல அரசியல் / வணிக அமைப்புகள் செய்வதுதானே. இந்த சிறிய அமைப்புகளையும் நாம் குற்றம் சொல்லமுடியாது. அவர்களுக்கு இத்தகைய செரிப்புகளால் அதிக கவனமும் புத்தக விற்பனையும் கிடைக்கும். நஷ்டத்தில் இருப்பவர்களுக்கு இது பெரிய விசயம். கடனில் இருப்பவர்களை கொத்தடிமைகளாக பண்ணையங்கள் வாங்கிக்கொள்வதைப் போல இது நிகழ்கிறது. அவர்களுக்குப் பாவம் வேறுவழியில்லை. வாங்கிய திட்டுகளை மறந்து சேர்ந்துகொள்ள வேண்டியதுதான். உடனே ஜெயமோகன் வா.சா எவ்வளவு மகத்தான இலக்கிய அமைப்பு என்று நீண்ட கட்டுரையொன்றை எழுதுவார். ஜெயமோகனின் எழுத்தென்பது அவரது மூளையிலிருந்து நேரடியாகப் பாய்வது. அவர் எழுதும்போது மனசாட்சி குறுக்கே வரவே செய்யாது. யாரைக்குறித்து அவதூறு செய்தாலும், சேற்றை வாரி இறைத்தாலும், அதே நபர்களை கட்டியணைத்துப் பாராட்டி எழுதினாலும் நீ சொல்வது பொய்யல்லவா என்று அவரது மனசாட்சி கேட்காது. அவரது மனசாட்சிக்கே அவரைப் பார்த்தால் அவ்வளவு பயம். அதையும் திட்டி நூறு அவதூறு பக்கங்கள் எழுதிவிடுவார். அதனால் ஜெயமோகனின் மனசாட்சி பல பத்தாண்டுகளாக மௌனமாக கண்ணீர்வடித்தபடி இருக்கிறது என்று நினைக்கிறேன்.

ஜெயமோகனுக்கே தான் நடத்துவது இலக்கிய அமைப்பல்ல, பண்பாட்டு அதிகார இயக்கம், இலக்கிய கார்ப்பரேட் இயக்கம், அரசியல் இயக்கம் எனத் தெரியும். இன்னும் இரு பத்தாண்டுகளில் தமுஎசவைக் கூட, அனேகமான தமிழ் இதழ்களையும் கூட விஷ்ணுபுரம் செரித்துக்கொண்டால் ஆச்சரியப்படமாட்டேன். மிகச்சில இயக்கங்கள், பதிப்பகங்கள் மட்டும்தான் கடைசிவரை வெளியே இருப்பர். அதாவது சற்றே கார்ப்பரேட்தனமான கட்டமைப்பு, முதலீடு, செயல்திட்டம், சர்வதேசத் தொடர்புகள் உள்ளவர்கள் மட்டுமே விஷ்ணுபுரத்தின்பக்கம் சாயாமல் இருக்கமுடியும்.

ஜெயமோகன் இதை ஒரு பெருமைக்குரிய காரியமாகவே பார்ப்பார். ஒருகாலத்தில் சு.ரா இருந்ததைப்போல, அவரைவிட உயரமான இடத்தில் அவர் இலக்கியச்சூழலில் இருக்கவிரும்புகிறார். சு.ரா எழுதியும், இதழ் நடத்தியும், தன் அன்பாலும் அறிவுமதிப்பாலும் அதை சாதித்தார் என்றால் ஜெயமோகன் தன் இயக்கபலத்தைக்காட்டி சு.ராவையும் கடந்து ஒரு 'இலக்கிய மோடியாக' மாறவிரும்புகிறார்.

தன் அமைப்பினரும் சீடர்களும் கடுமையாக உழைத்தும், தீவிரமாக வேலைசெய்தும் தவிர்க்கமுடியாத சக்திகளாக மாறிவருகிறார்கள், இன்று தமிழ் இலக்கியத்தை விஷ்ணுபுரம் இன்றி ஓரங்குலம் கூட நகர்த்தமுடியாது என்று பெருமையடிப்பார் ஜெயமோகன். ஆனால் அவருக்கே தெரியும் அது பொய்யென்று. அறிவாற்றலோ, எழுத்தாற்றலோ, செயற்திறனோ அல்ல கட்டமைப்பும், ஒழுங்கான சீரான நிகழ்ச்சிகளும், விருது, பதிப்பு, கட்டண உரை போன்ற இதர கவர்ச்சிகளும், நெட்வொர்க்கும், சினிமா தொடர்புகளும் சேர்ந்தே அவர்களை முக்கியமான இயக்கமாக்குகிறது. அதாவது ஒரு ஈவெண்ட் மெனேஜ்மெண்ட் கம்பெனியின் இடம் தமிழ் நவீன இலக்கியத்தில் இருந்தது - அந்த வெற்றிடத்தை இவர்கள் வந்து நிறைவுசெய்தார்கள்.

நாம் இந்த விசயத்தில் விஷ்ணுபுரத்தையும் ஜெயமோகனையும் மட்டும் விமர்சிக்காமல் எந்தமாதிரி சூழல் அவர்களுக்கான தேவையை உருவாக்குகிறது என்று யோசிக்கவேண்டும் - கடந்த சில பத்தாண்டுகளில் வளர்ந்துவரும் நாடாக இந்தியா முற்றதிகாரத்தை நோக்கி நகர்ந்துவருகிறது. 1930-40களில் ஜெர்மனியில் நடந்தது இன்று தமிழ் இலக்கியச் சூழலில் நடக்கிறது. அன்று ஜெர்மானியரக்ள் தம்மை உலகின் தலைசிறந்த இனம் என்று சொல்லிக்கொள்ள பிரமாண்டத்தை வழிபட்டார்கள். கார் உற்பத்தி, சாலையமைப்பு என்று வேறெந்த நாடுகளில் அப்போது இல்லாத வசதிகளைக் காட்டிப் பெருமைப்பட்டுக்கொண்டார்கள். இதற்கான செல்வத்தை சம்பாதிக்க எந்த அண்டை நாட்டையும் பிடித்துக்கொள்ளையடிக்கலாம், மற்றமையினரைக் கொத்துக்கொத்தாகக் கொல்லலாம் என்று நினைத்தனர். சமூகம் ஏழை-பணக்காரர் எனக் கடுமையாகப் பிளவுபட்டிருந்தது, பணவீக்கம் மோசமாக இருந்தது, கடும் தனிமையாலும், மனபிரமைகளாலும் ஜெர்மானியர் பீடிக்கப்பட்டிருந்தனர், அவர்களுக்கு தம் நிஜத்தின் வலியை மறக்க ஒரு கனவுலகம் தேவைப்பட்டது, அதுவே நாஜிக்கட்சி சித்தாந்தம் என ஹேனா ஆரெண்ட் எழுதுகிறார். இந்த சமூக உளவியல் பிரச்சினைகள் இந்தியா முழுக்க மத்திய வர்க்கத்திற்கு ஏற்பட்டதாலே அவர்கள் மோடியைத் தேர்ந்தெடுத்தனர். தமிழ்நாட்டில் அப்பிரச்சினைகள் இயல்பாகவே உள்ளன - குறிப்பாக விரைவில் நகரமயமாகி, நிறைய முதலீடுகளையும், நிச்சயமின்மையையும் எதிர்கொள்ளும் புலங்களில் விஷ்ணுபுரம் சுலபத்தில் வளர்கிறது. பாஜகவும் கூட கிராமங்களை விட நகரங்களில் அதிக செல்வாக்கு பெற்ற கட்சியே. விஷ்ணுபுரமும் அப்படியே. நாஜிக்கட்சியும் அன்று அப்படியே இருந்தது. ஜெயமோகன் இங்கு ஒரு மோடியாக செயல்படுகிறார் - அவர் அதே இயக்கவலிமையை, பணவலிமை, செல்வாக்கு, தொடர்புகள், பண்பாட்டு அதிகாரத்தைக் காட்டி மிரட்டுகிறார்; தன் 'கட்சியில்' சேராவிட்டல் வேறுபோக்கிடமே இல்லையென இளம், மூத்த படைப்பாளிகள் பலரையும் நம்பவைத்து தன்வசம் வரவைக்கிறார். ஹிட்லரின் நாஜிக் கட்சியும் இப்படித்தான் எதிர்க்கட்சியினரைக் கூட செரித்துக்கொண்டு தனிக்காட்டு ராஜாவாக இருந்தனர். அவர்களைக் கொள்கைரீதியாகக் கடுமையாக எதிர்ப்பவர்கள் கூட நாஜிக்கட்சிக்கும், நாஜி அரசுக்கும் வெளியே செயல்படவே முடியாதபடி எல்லா செயல்பாடுகளையும் ஒற்றைப்புள்ளியில் குவித்தார்கள். இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் வீழ்ந்தபின்னரே அவர்களால் தலைதூக்க முடிந்தது. ஜெயமோகன் இன்று விஷ்ணுபுரத்தைவிட்டால் தமிழ் இலக்கியத்திற்கு வக்கில்லை என்று பீற்றுவதைப்போலத்தான், அன்று ஹிட்லரும் தனது இந்த முற்றதிகாரத்தைப் பெரும் சாதனையாக நினைத்து பெருமைகொண்டவர்தான்.

பெரிய வேடிக்கையென்னவென்றால் அவர் இத்தனை ஊழல்களையும் செய்துவிட்டு தன்னை விமர்சிக்கிறவர்களை சமூகவலைதளத்தில் வம்படிப்பவர்கள், பொறுக்கிகள் என்று இடுப்புக்கு கீழே அடிப்பார். அறிவுஜீவிகள் என்றால் வெளிநாட்டிலிருந்து என்.ஜி.ஓ நிதியைப் பெற்று பொறுக்கித் தின்னும் துரோகிகள் என்றும், இலக்கியவாதி என்றால் அற்ப லாபத்துக்காக தன்னை எதிர்க்கிறார்கள் என்றும் கூறுவார். இப்போதெல்லாம் அவர் இலக்கியவாதிகளைத் திட்டுவதில்லை; அவர்கள் அவரை விமர்சிப்பதை முழுவதுமாக நிறுத்திக்கொண்டு விட்டர்கள். அதனால் தன்னை விமர்சிக்கும் இலக்கியவாதிகள் யாராவது ஒன்றிரண்டு பேர்கள் இருந்தால் அவர்களை இலக்கியவாதியே அல்லர் என்று கூறிவிடுவார். இது எப்படி இருக்கு? கவனித்துப் பார்த்தால் இதையெல்லாம் 90 ஆண்டுகளுக்கு முன்பே ஹிட்லர் செய்திருக்கிறார். அவரது "மெயின் கெம்ப்" முழுக்க இப்படியான மட்டையடி சாடல்கள், போலிப் பிரச்சாரங்கள், மற்றமையினரை வரையறுக்கும் வெறுப்பு வாசகங்களே இருக்கும். அதன்பிறகு மோடியின் கீழ் பாஜகவினரும் தம்மை விமர்சிப்பவர்களை தேசத்துரோகிகள், அயல்நாட்டுக் கூலிகள், பேதைகள் என்று அழைத்தனர். இவர்களின் இலக்கியத் தொடர்ச்சியே ஜெயமோகன்.

இந்த சமூக உளவியல் வியாதிகள் ஒருநாள் தீரும். அதன்பிறகு ஒருநாள் மேற்கிந்திய கம்பெனியையையும், அதை விழுங்கிய சூரியன் அஸ்தமிக்காத பிரித்தானிய அரசையும் போல விஷ்ணுபுரம் உடைந்துபோகும். அதுதான் உலக இயல்பு.

பி.கு: இந்தக் குறிப்பை ஜெயமோகன் படித்தால்கூட நான் அவரைப் பாராட்டியதாகவே கருதுவார். அதனால் நான் இதை அவருக்காகவோ அவரது சக-நாஜிக்கட்சியினருக்காகவோ எழுதவில்லை.

- ஆர். அபிலாஷ்

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...