Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

எழுத்தாளர் கர்வமாக இருக்கவேண்டுமா?




நமக்கு சில நேரங்களில் பேச்சுவார்த்தையின் நுணுக்கம் புரிவதில்லை - இரு தரப்பும் பரஸ்பரம் ஏற்றுக்கொண்டு பேசி ஒரு கைகுலுக்கும் புள்ளிக்கு வரவேண்டும். பிளேட்டோ தன் டயலாக்ஸ் நூலிலே இதை நிறுவியிருப்பார். சாக்ரடீஸ் தான் கருத்தியல்ரீதியாக உடன்படாத ஒருவரிடம் விவாதிக்கும் முன்பு அந்த எதிர்த்தரப்பின் சிறப்புகளை எடுத்துரைத்துவிட்டே கேள்விகளைக் கேட்பார். இதைப் பார்க்க புகழ்ச்சியைப் போலத் தெரியும். ஆனால் இது அதுவல்ல. இது எதிர்தரப்பின் கதவுகளைத் திறந்து அவரை நம் பக்கம் இழுப்பது. இதை நமது இந்திய தத்துவ மரபிலும் காணமுடியும். முதல் எதிர்த்தரப்பின் கருத்துக்களை, சாதனைகளைத் தொகுத்துச் சொல்லிவிட்டு தாம் உடன்படாத விசயங்களுக்கு வருவார்கள். "நீலகேசி" நல்ல உதாரணம். நவீன இலக்கியம் தோன்றியதும் எதிர்த்தாடுவது முக்கிய மரபாகியது. எதிர்த்தரப்பை எள்ளி நகையாடுவது, முழுக்க மறுப்பது என. ஆனால் இது உரையாடலுக்கான உத்தியல்ல, இது மற்றமையை உருவாக்கி திரள் சேர்ப்புக்கான உத்தி. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. துரதிஷ்டவசமாக எழுத்தாளர்கள் எல்லா இடங்களிலும் முறுக்கிக்கொண்டு எதிர்த்தாடிக்கொண்டு இருக்கவேண்டும் எனும் மூடநம்பிக்கைத் இதனால் தோன்றியது. இதை இலக்கியவாதியின் கர்வம் என நாம் வரையறுக்கிறோம். முரட்டுத்தனம் வேறு கர்வம் வேறு. சில சந்தர்பங்களில் நாம் அரசியல் நோக்கில் திரளை நம் பக்கம் சேர்க்க முரட்டு அடி அடிக்கலாம், சமரசமற்றுப் பேசலாம். ஆனால் எல்லா சந்தர்பங்களிலும் இது அவசியமில்லை. ஒன்று கண்ணியம், இன்னொன்று பிரச்சாரத்துக்கான வீரம், வெளிப்படைத்தன்மை. நம்மூரில் சிலர் கண்ணியத்தை, பேச்சுவார்த்தையை கோழைத்தனம் எனக் கருதுகிறார்கள்
இவ்வளவு பெரிய முகாந்திரம் எதற்கெனில் அண்மையில் எழுத்தாளர்கள் சிலர் இணைந்து அரசிடம் கோரிக்கையொன்று வைத்தோம். அதற்கு வைத்த மனுவில் ஆளும் அரசு கடந்தகாலத்தில் மொழிக்காகவும் இலக்கியத்துக்காகவும் செய்த பங்களிப்புகளைக் குறிப்பிட்டோம். அவை வரலாற்றுத் தகவல்களே, இட்டுக்கட்டப்பட்டவை அல்ல. வேறு கட்சியெனில் சுத்தமாக மதிக்கமாட்டார்கள், இவர்கள் தமிழுக்கான சிறப்பு அந்தஸ்து, மாநிலம் முழுக்க புத்தக விழா, எழுத்தாளர்களுக்கு இல்லம் என பல விசயங்களைச் செய்திருக்கிறார்கள். கடந்த முதல்வருக்கும் இன்றைய முதல்வருக்கும் இதிலொரு தொடர்ச்சி உண்டென்று சொல்லிவிட்டு எங்களுடைய முக்கியமான பங்களிப்புகளையும் குறிப்பிட்டு எதிர்காலத்தில் நிம்மதியாக வாழவும், வாழ்க்கையையும் நடத்தவும் உதவி தேவைப்படுவதாக கேட்டிருந்தோம். இதுதான் உரையாடலின் முறைமை. இதை ஊடகத்தில் படித்த ஒரு நண்பர் என்னைத் தொடர்புகொண்டு என்ன எழுத்தாளருக்கான கர்வம் இல்லாமல் அவர்களைப் பாராட்டிவிட்டு உதவி வேண்டியிருக்கிறீரே என்று கேட்டார். நான் சொன்னேன், "நாங்கள் மட்டுமே மேலானவர்கள் என்று சொல்லி எவரிடமும எதையும் கேட்க முடியாது. சொந்த மனைவி, பிள்ளையிடம் கூட இன்று யாரும் தவௌலத்தாகப் பேச முடியாது. இன்னொருவரை மதித்து ஏற்றுக்கொண்டு அவர்களிடம் நம் பெருமையையும் போதாமையையும் சொல்வதே உலகம் தழுவிய மரபு. அவர்களை நாம் மதிக்காவிடில் அவர்கள் ஏன் நம்மை மதிக்கப்போகிறார்கள். இதை எதையும் எதிர்பாராமலே இந்த அரசு, அமைச்சர், அதிகாரிகள் முதற்கொண்டு மிக கௌரவமாக எங்களை நடத்தும்போது நாங்களும் அவர்களிடம் கண்ணியமாக மதிப்பளித்துப் பேசுவதே நாகரிகம். இதன்பெயர் கூஜா தூக்குவதல்ல. இது உரையாடல் உத்தி."
சமூகத்துக்கு முழுக்க வெளியே இருந்தாலோ பெரும் செல்வந்தராக இருந்தாலோ (இரண்டுமே ஒன்றுதான்) ஒழிய நீங்கள் வெற்றுத் திமிருடன், தௌலத்தாகப் பேசிக்கொண்டு திரியமுடியாது. நமக்குத் தகுதியுள்ள ஒன்றைக்கூட கேட்டுத்தான் பெறவேண்டும். ஒப்பாரிகூட வைக்கலாம், தப்பில்லை என்பது என் பார்வை. எழுத்தாளர் அரசையும், நிறுவனங்களையும் எதிர்ப்பதில்தான் அவரது திமிரும் ஆணவமும் இருக்கவேண்டும், பேச்சில் அல்ல. ஆனால் எழுத்தாளருக்கு நிமிர்வு வேண்டும் எனச் சொல்லும் ஜெயமோகனையும் அவரை ஒத்தவர்களும் எழுத்தாளர் அரசையோ நிறுவனங்களையோ எதிர்க்கக்கூடாது, பொதுச்சமூகத்தில் மட்டும் முரட்டுக்காளையாகத் திரியவேண்டும், ரோட்டில் எதிரே வரும் மாமாவையோ தாத்தாவையோ காலரைப் பிடித்து உலுக்கி "நான் யாருக்கும் முதுகுவளைக்காத எழுத்தாளன், எவனையும் மதிக்கவேண்டிய அவசியம் எனக்கு இல்லை, புத்தகம் வாசிக்காத அற்பப் பதிரே நான் யாரெனத் தெரியுமா, எனக்கு முன்னால் வந்து நிற்கிறாயோ எனக்கே அட்வைஸ் பண்ணுறாயோ?" எனக் கத்தவேண்டும் என்கிறார்கள். இம்மாதிரி முட்டாள்தனத்தில் எனக்கு உடன்பாடில்லை. எழுத்தாளர் பொதுசமூகத்தில் கண்ணியமாகவும் பணிவாகவும் தன் நடத்தையில் இருக்கவேண்டும், எழுத்திலும் எதிர்ப்பரசியலிலும் மட்டுமே சமரசமற்றுத் திமிராக இருக்கவேண்டும். அப்போதும் கூட தாம் எதிர்க்கும் நிறுவனம் ஒன்றிடம் உரையாடும்போது கண்ணியமாகப் பேசவும் பொதுப்புள்ளியைக் கண்டடையவும் முயலவேண்டும்.
செயல்பாட்டில் எதையும் சாதிக்காமல் நடத்தையில் மட்டும் உதார்விடுவது மிகப்பெரிய கோழைத்தனம்! மேலும் நடத்தையில் யாருடனும் ஒட்டாமல், எல்லாரையும் அவமதிக்கும்படியாகப் பேசுவது முற்றதிகாரத்தின் பண்பு. கோழை முற்றதிகாரிகளே அப்படி நடந்துகொள்வார்கள் என்பது வரலாறு. இப்படியான திமிரான பேச்சையும் மனதைப் புண்படுத்தும் நடத்தையையும் கொண்டே அவர்கள் பிறரை அச்சுறுத்தி தமக்கு அடிமையாக்கி முற்றதிகார குழுக்களை உருவாக்குவார்கள் அல்லது அதற்கான சூழலை உண்டுபண்ணுவார்கள். தம் பேச்சுக்கும் கருத்துக்கும் ஆதாரமே தேவையில்லை, தாம் யாருடனும் உரையாடத் தேவையில்லை என நம்புவார்கள். உரையாடலை முறிப்பதே முற்றதிகாரத்தின் முதல் படி. நம் ஊரில் ஓஷோவிலிருந்து ஜக்கிவரை, இந்திராவில் இருந்து மோடிவரைப் பாருங்கள். இப்படித்தான் 'கர்வமாக' இருந்தார்கள், இருக்கிறார்கள். இலக்கியத்தில் முன்பு ஜெயகாந்தன், அடுத்து நம் ஆசான். விமர்சனத்தில் வெங்கட் சாமிநாதன் உள்ளிட்டவர்கள். இவர்கள் யாருமே வலதுசாரி சிந்தனைகளை, மதவாதத்தை, முதலீட்டியமும், தாராளவாதமும் அரசையும் மதத்தையும் பயன்படுத்தி மக்களைச் சுரண்டுவதைக் கேள்விகேட்காதவர்கள். அதேநேரம் பண்பாட்டுரீதியாக 'அறத்தை' நிறுவி அதை நடைமுறையில் இருந்து விலக்கியவர்கள். மதம், தேசியம், இறையாண்மை போன்ற விசயங்களில் Status quoவைப் பாதுகாக்க செண்டிமெண்டான எழுத்தைப் பயன்படுத்தியவர்கள். ஆனால் இன்னொரு பக்கம் இடதுசாரிகளும் சமூக சீர்திருத்தவாதிகளும் இப்படி 'கர்வமாக' இருந்ததில்லை. எதிர்த்தரப்புக்கு மதிப்பளித்து உரையாடுவதும் கொடுத்து வாங்குவதும் மக்களுக்கு அணுக்கமாக இருப்பதே அவர்களுடைய பாணி. பாரதியும் பு.பியும் கூட பல்வேறு விட்டுக்கொடுத்தல்களின் ஊடேதான் வாழ்ந்தார்கள். 'பெரிய ரௌடிகள்', 'தாதாக்கள்' கூட பண்பாகவும் நாகரிகமாகவுமே உரையாடுவார்கள். திமிராக அல்ல.
அதனாலே எழுத்தாளர் எல்லாரிடமும் கர்வம் காட்டவேண்டும் எனும் இந்தத் தரப்போ பொருட்படுத்தத் தேவையில்லை. கூடவே எழுத்தாளருக்குத் திமிர் வேண்டும், மூஞ்சியைத் தூக்கிக்கொண்டு நடக்கவேண்டும் எனும் கதையாடலையும். முரட்டுத்தனம் ஒரு தகுதியல்ல. சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் பொருட்படுத்துவோர் அப்படி இருக்கமாட்டார்கள். அரசும் நமது சமூகத்தின் பகுதி. அரசை எதிர்க்கும்போதே அரசிடம் கண்ணியமாகவும் பணிவாகவும் உதவியும் நாடலாம். நம் வரிப்பணம் தானே அரசு. தாராளமாகக் கேட்கலாம். கேட்கக் கூடாது என நினைக்கும் எலைட், முற்றதிகார மனநிலை நமக்கெதற்கு? இது இறங்கிவருவதல்ல, யாருக்குமே மேலாக நிற்க முயலாதது.

Comments

Popular posts from this blog

நடிகையரின் பிம்பச்சிறை - அழகு ஏன் ஒரு பிரச்சினையாகிறது?

  ( இது நவம்பர் 2025 இல் எழுதப்பட்ட கட்டுரை . டிசம்பர் 2025 உயிர்மையில் வெளியானது . ஆனால் இப்போதும் படிக்கத்தக்க ஒரு முக்கிய பிரச்சினைதான் இது என்பதால் பகிர்கிறேன் .) அண்மையில் கௌரி கிஷன் தன்னைக் குறித்து ஒரு யுடியூபர் உருவக்கேலிக் கேள்வியை எழுப்பியதாகச் சொல்லி அதை விமர்சித்த சம்பவத்தைப் பார்த்தேன் . தன் திறமையாலே தான் ஜொலிக்க விரும்புவதாகவும் , செறிவான வேடங்களிலே நடிக்க முயல்வதாகவும் அவர் கூடுதலாகச் சொன்னார் . எனக்கு இதுதான் பிரச்சினையின் மையம் , அவரது உடல் எடை அல்ல என்று தோன்றுகிறது . ஏன் ஆண்கள் மீது என்றுமே இவ்வகை கேள்விகள் வைக்கப்படுவதில்லை என்றால் தமிழ் சினிமா அவர்களை மட்டுமே நடிகர்களாகக் காண்கிறது . நடிகைகள் பார்வை இன்பம் அளிக்கிற பொம்மைகள் . அவர்கள் எவ்வளவுதான் புகழ் பெற்றாலும் விதவிதமான பாத்திரங்களை அவர்களால் பூண முடியாது . வந்து சிரித்து கவர்ச்சியாக நடனமாடி க்யூட் முகபாவனைகள் காட்டிவிட்டுப் போய்விட வேண்டும் . முப்பது படங்களில் நடித்தாலும் அந்த முப்பதும் ஒரே வேடம்தான் . வணிகப் பட நாயகர்கள...

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

சாகும்வரை பொழுதுபோக்கு

  "Indeed, we may have reached the point where cosmetics has replaced ideology as the field of expertise over which a politician must have competent control." - Amusing Ourselves to Death, Neil Postman "ஒரு அரசியல் தலைவர் முழுமையான ஆளுகை கொண்டிருக்க வேண்டும் என நம்பிய கருத்தியலை வெளித்தோற்றம் பதிலீடாக்கி விட்ட ஒரு புள்ளியை நாம் இன்று எட்டி விட்டிருக்கிறோம்." "சாகும்வரை பொழுதுபோக்கு", நீல் போஸ்ட்மேன்