Skip to main content

எழுத்தாளர் கர்வமாக இருக்கவேண்டுமா?




நமக்கு சில நேரங்களில் பேச்சுவார்த்தையின் நுணுக்கம் புரிவதில்லை - இரு தரப்பும் பரஸ்பரம் ஏற்றுக்கொண்டு பேசி ஒரு கைகுலுக்கும் புள்ளிக்கு வரவேண்டும். பிளேட்டோ தன் டயலாக்ஸ் நூலிலே இதை நிறுவியிருப்பார். சாக்ரடீஸ் தான் கருத்தியல்ரீதியாக உடன்படாத ஒருவரிடம் விவாதிக்கும் முன்பு அந்த எதிர்த்தரப்பின் சிறப்புகளை எடுத்துரைத்துவிட்டே கேள்விகளைக் கேட்பார். இதைப் பார்க்க புகழ்ச்சியைப் போலத் தெரியும். ஆனால் இது அதுவல்ல. இது எதிர்தரப்பின் கதவுகளைத் திறந்து அவரை நம் பக்கம் இழுப்பது. இதை நமது இந்திய தத்துவ மரபிலும் காணமுடியும். முதல் எதிர்த்தரப்பின் கருத்துக்களை, சாதனைகளைத் தொகுத்துச் சொல்லிவிட்டு தாம் உடன்படாத விசயங்களுக்கு வருவார்கள். "நீலகேசி" நல்ல உதாரணம். நவீன இலக்கியம் தோன்றியதும் எதிர்த்தாடுவது முக்கிய மரபாகியது. எதிர்த்தரப்பை எள்ளி நகையாடுவது, முழுக்க மறுப்பது என. ஆனால் இது உரையாடலுக்கான உத்தியல்ல, இது மற்றமையை உருவாக்கி திரள் சேர்ப்புக்கான உத்தி. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. துரதிஷ்டவசமாக எழுத்தாளர்கள் எல்லா இடங்களிலும் முறுக்கிக்கொண்டு எதிர்த்தாடிக்கொண்டு இருக்கவேண்டும் எனும் மூடநம்பிக்கைத் இதனால் தோன்றியது. இதை இலக்கியவாதியின் கர்வம் என நாம் வரையறுக்கிறோம். முரட்டுத்தனம் வேறு கர்வம் வேறு. சில சந்தர்பங்களில் நாம் அரசியல் நோக்கில் திரளை நம் பக்கம் சேர்க்க முரட்டு அடி அடிக்கலாம், சமரசமற்றுப் பேசலாம். ஆனால் எல்லா சந்தர்பங்களிலும் இது அவசியமில்லை. ஒன்று கண்ணியம், இன்னொன்று பிரச்சாரத்துக்கான வீரம், வெளிப்படைத்தன்மை. நம்மூரில் சிலர் கண்ணியத்தை, பேச்சுவார்த்தையை கோழைத்தனம் எனக் கருதுகிறார்கள்
இவ்வளவு பெரிய முகாந்திரம் எதற்கெனில் அண்மையில் எழுத்தாளர்கள் சிலர் இணைந்து அரசிடம் கோரிக்கையொன்று வைத்தோம். அதற்கு வைத்த மனுவில் ஆளும் அரசு கடந்தகாலத்தில் மொழிக்காகவும் இலக்கியத்துக்காகவும் செய்த பங்களிப்புகளைக் குறிப்பிட்டோம். அவை வரலாற்றுத் தகவல்களே, இட்டுக்கட்டப்பட்டவை அல்ல. வேறு கட்சியெனில் சுத்தமாக மதிக்கமாட்டார்கள், இவர்கள் தமிழுக்கான சிறப்பு அந்தஸ்து, மாநிலம் முழுக்க புத்தக விழா, எழுத்தாளர்களுக்கு இல்லம் என பல விசயங்களைச் செய்திருக்கிறார்கள். கடந்த முதல்வருக்கும் இன்றைய முதல்வருக்கும் இதிலொரு தொடர்ச்சி உண்டென்று சொல்லிவிட்டு எங்களுடைய முக்கியமான பங்களிப்புகளையும் குறிப்பிட்டு எதிர்காலத்தில் நிம்மதியாக வாழவும், வாழ்க்கையையும் நடத்தவும் உதவி தேவைப்படுவதாக கேட்டிருந்தோம். இதுதான் உரையாடலின் முறைமை. இதை ஊடகத்தில் படித்த ஒரு நண்பர் என்னைத் தொடர்புகொண்டு என்ன எழுத்தாளருக்கான கர்வம் இல்லாமல் அவர்களைப் பாராட்டிவிட்டு உதவி வேண்டியிருக்கிறீரே என்று கேட்டார். நான் சொன்னேன், "நாங்கள் மட்டுமே மேலானவர்கள் என்று சொல்லி எவரிடமும எதையும் கேட்க முடியாது. சொந்த மனைவி, பிள்ளையிடம் கூட இன்று யாரும் தவௌலத்தாகப் பேச முடியாது. இன்னொருவரை மதித்து ஏற்றுக்கொண்டு அவர்களிடம் நம் பெருமையையும் போதாமையையும் சொல்வதே உலகம் தழுவிய மரபு. அவர்களை நாம் மதிக்காவிடில் அவர்கள் ஏன் நம்மை மதிக்கப்போகிறார்கள். இதை எதையும் எதிர்பாராமலே இந்த அரசு, அமைச்சர், அதிகாரிகள் முதற்கொண்டு மிக கௌரவமாக எங்களை நடத்தும்போது நாங்களும் அவர்களிடம் கண்ணியமாக மதிப்பளித்துப் பேசுவதே நாகரிகம். இதன்பெயர் கூஜா தூக்குவதல்ல. இது உரையாடல் உத்தி."
சமூகத்துக்கு முழுக்க வெளியே இருந்தாலோ பெரும் செல்வந்தராக இருந்தாலோ (இரண்டுமே ஒன்றுதான்) ஒழிய நீங்கள் வெற்றுத் திமிருடன், தௌலத்தாகப் பேசிக்கொண்டு திரியமுடியாது. நமக்குத் தகுதியுள்ள ஒன்றைக்கூட கேட்டுத்தான் பெறவேண்டும். ஒப்பாரிகூட வைக்கலாம், தப்பில்லை என்பது என் பார்வை. எழுத்தாளர் அரசையும், நிறுவனங்களையும் எதிர்ப்பதில்தான் அவரது திமிரும் ஆணவமும் இருக்கவேண்டும், பேச்சில் அல்ல. ஆனால் எழுத்தாளருக்கு நிமிர்வு வேண்டும் எனச் சொல்லும் ஜெயமோகனையும் அவரை ஒத்தவர்களும் எழுத்தாளர் அரசையோ நிறுவனங்களையோ எதிர்க்கக்கூடாது, பொதுச்சமூகத்தில் மட்டும் முரட்டுக்காளையாகத் திரியவேண்டும், ரோட்டில் எதிரே வரும் மாமாவையோ தாத்தாவையோ காலரைப் பிடித்து உலுக்கி "நான் யாருக்கும் முதுகுவளைக்காத எழுத்தாளன், எவனையும் மதிக்கவேண்டிய அவசியம் எனக்கு இல்லை, புத்தகம் வாசிக்காத அற்பப் பதிரே நான் யாரெனத் தெரியுமா, எனக்கு முன்னால் வந்து நிற்கிறாயோ எனக்கே அட்வைஸ் பண்ணுறாயோ?" எனக் கத்தவேண்டும் என்கிறார்கள். இம்மாதிரி முட்டாள்தனத்தில் எனக்கு உடன்பாடில்லை. எழுத்தாளர் பொதுசமூகத்தில் கண்ணியமாகவும் பணிவாகவும் தன் நடத்தையில் இருக்கவேண்டும், எழுத்திலும் எதிர்ப்பரசியலிலும் மட்டுமே சமரசமற்றுத் திமிராக இருக்கவேண்டும். அப்போதும் கூட தாம் எதிர்க்கும் நிறுவனம் ஒன்றிடம் உரையாடும்போது கண்ணியமாகப் பேசவும் பொதுப்புள்ளியைக் கண்டடையவும் முயலவேண்டும்.
செயல்பாட்டில் எதையும் சாதிக்காமல் நடத்தையில் மட்டும் உதார்விடுவது மிகப்பெரிய கோழைத்தனம்! மேலும் நடத்தையில் யாருடனும் ஒட்டாமல், எல்லாரையும் அவமதிக்கும்படியாகப் பேசுவது முற்றதிகாரத்தின் பண்பு. கோழை முற்றதிகாரிகளே அப்படி நடந்துகொள்வார்கள் என்பது வரலாறு. இப்படியான திமிரான பேச்சையும் மனதைப் புண்படுத்தும் நடத்தையையும் கொண்டே அவர்கள் பிறரை அச்சுறுத்தி தமக்கு அடிமையாக்கி முற்றதிகார குழுக்களை உருவாக்குவார்கள் அல்லது அதற்கான சூழலை உண்டுபண்ணுவார்கள். தம் பேச்சுக்கும் கருத்துக்கும் ஆதாரமே தேவையில்லை, தாம் யாருடனும் உரையாடத் தேவையில்லை என நம்புவார்கள். உரையாடலை முறிப்பதே முற்றதிகாரத்தின் முதல் படி. நம் ஊரில் ஓஷோவிலிருந்து ஜக்கிவரை, இந்திராவில் இருந்து மோடிவரைப் பாருங்கள். இப்படித்தான் 'கர்வமாக' இருந்தார்கள், இருக்கிறார்கள். இலக்கியத்தில் முன்பு ஜெயகாந்தன், அடுத்து நம் ஆசான். விமர்சனத்தில் வெங்கட் சாமிநாதன் உள்ளிட்டவர்கள். இவர்கள் யாருமே வலதுசாரி சிந்தனைகளை, மதவாதத்தை, முதலீட்டியமும், தாராளவாதமும் அரசையும் மதத்தையும் பயன்படுத்தி மக்களைச் சுரண்டுவதைக் கேள்விகேட்காதவர்கள். அதேநேரம் பண்பாட்டுரீதியாக 'அறத்தை' நிறுவி அதை நடைமுறையில் இருந்து விலக்கியவர்கள். மதம், தேசியம், இறையாண்மை போன்ற விசயங்களில் Status quoவைப் பாதுகாக்க செண்டிமெண்டான எழுத்தைப் பயன்படுத்தியவர்கள். ஆனால் இன்னொரு பக்கம் இடதுசாரிகளும் சமூக சீர்திருத்தவாதிகளும் இப்படி 'கர்வமாக' இருந்ததில்லை. எதிர்த்தரப்புக்கு மதிப்பளித்து உரையாடுவதும் கொடுத்து வாங்குவதும் மக்களுக்கு அணுக்கமாக இருப்பதே அவர்களுடைய பாணி. பாரதியும் பு.பியும் கூட பல்வேறு விட்டுக்கொடுத்தல்களின் ஊடேதான் வாழ்ந்தார்கள். 'பெரிய ரௌடிகள்', 'தாதாக்கள்' கூட பண்பாகவும் நாகரிகமாகவுமே உரையாடுவார்கள். திமிராக அல்ல.
அதனாலே எழுத்தாளர் எல்லாரிடமும் கர்வம் காட்டவேண்டும் எனும் இந்தத் தரப்போ பொருட்படுத்தத் தேவையில்லை. கூடவே எழுத்தாளருக்குத் திமிர் வேண்டும், மூஞ்சியைத் தூக்கிக்கொண்டு நடக்கவேண்டும் எனும் கதையாடலையும். முரட்டுத்தனம் ஒரு தகுதியல்ல. சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் பொருட்படுத்துவோர் அப்படி இருக்கமாட்டார்கள். அரசும் நமது சமூகத்தின் பகுதி. அரசை எதிர்க்கும்போதே அரசிடம் கண்ணியமாகவும் பணிவாகவும் உதவியும் நாடலாம். நம் வரிப்பணம் தானே அரசு. தாராளமாகக் கேட்கலாம். கேட்கக் கூடாது என நினைக்கும் எலைட், முற்றதிகார மனநிலை நமக்கெதற்கு? இது இறங்கிவருவதல்ல, யாருக்குமே மேலாக நிற்க முயலாதது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...