அரிஸ்டாட்டில் தனது கவிதையியல் நூலில் முக்கியமான விசயம் ஒன்றைக் கூறுகிறார் - கடைசிக் காட்சியில் யாரையாவது சாகவைத்து மக்களின் அழுகையைத் தூண்டுவது ஒரு பலவீனமான நாடகத்தின் (கதையின்) அறிகுறியாகும். செயலே கதையே தவிர நிகழ்வல்ல. மக்களின் உணர்ச்சியை வெறுமனே தூண்டுவதைத் தவிர இக்கதைகளால் எந்த பயனும் இல்லை. ஏனென்றால் பிரதான பாத்திரம் செயலில் ஈடுபடும்போது, தன் இலக்கை அடைய முயலும்போது அது கதையாகிறது. அதன்வழியாக பார்வையாளருக்கும் முகமை கிடைக்கிறது. நிகழ்வில் ஒருவர் தற்செயலாகப் (கதைக்கு அவசியமின்றி) பலியாகும்போது அங்கு கதையே இல்லை. இல்லாத கதையை இருப்பதாகக் காட்ட நாடக ஆசிரியர்கள் யாரையாவது சாகடித்துக்கொண்டே இருக்கிறார்கள் என அரிஸ்டாட்டில் தன் காலத்தைய மோசமான நாடகங்களைச் சுட்டி விமர்சிக்கிறார்.
அண்மையில் வெளியான வாழை, அமரன் உள்ளிட்டப் படங்களில் இந்த சாவை வைத்து இல்லாத கதையை இருப்பதாகக் காட்டும், காசு சம்பாதிக்கும் போக்கு வலுவாகத் தோன்றுகிறது. Money shotsஇன் அடிப்படையில் உருவாக்கப்படும் போர்னோகிராபி படங்களுக்கும் இப்படங்களும் வித்தியாசம் இல்லை. அப்படங்களில் பெண்ணுடலும் விந்தும் எனில் இப்படங்களில் பிணமும் கண்ணீரும். இரண்டிலும் உடலார்ந்த உணர்ச்சிகளே தூண்டப்படுகின்றன - இச்சையும் அச்சமும். உணர்ச்சி அடங்கியதும் இக்கதையில் ஒன்றுமில்லை எனும் உணர்வை பார்வையாளருக்கு ஏற்படுத்தும்.
இப்படியான படங்களை எடுப்பது சுலபம் - ஏழை, பாதிக்கப்பட்டவர், தியாகி என யாரையாவது காட்டி அவர்களைக் கொன்றுவிட்டு அப்பிணத்தைக் குறித்து புரமோஷனில் அதிகமாகப் பேசி சாவு குறித்த எதிர்பார்ப்பைக் கிளறுவது. மக்கள் எப்போது சாவு விழும் எதிர்பார்ப்புடன், பரபரப்புடன், பதற்றத்துடன் ஆரம்பம் முதலே ஏதோ சாவு வீட்டுக்குள் நுழைந்ததைப்போல உணர்வார்கள். காதல் காட்சி வந்தாலும், நகைச்சுவை தோன்றினாலும் அழத்தயாராகவே இருப்பார்கள். இவை அதனாலே மோசமான சினிமாவாக மட்டுமல்லாமல் மனித முகமையை அழிக்கிற படங்களாக இருக்கின்றன. மக்களில் வாழ்வதில் ஆர்வத்தை இழக்கும் காலத்தில் இத்தகையே படங்களே அதிகம் வரும்போல.

Comments