கருண் நாயர் நல்ல மனவெளியில் (mental space) இருக்கிறார் என்பதை இன்று நடந்து கொண்டிருக்கும் விஜய் ஹசாரே கோப்பை அரை இறுதியில் அவரது மட்டையாட்டத்தைப் பார்க்கையில் உணர்ந்தேன். அவர் விதர்பா அணிக்கு மாறியபின்னர் பாதுகாப்பாக, நிம்மதியாக உணர்கிறார். அந்த அணியில் வேக வீச்சாளர்களும் துவக்க மட்டையாளர்களும் நன்றாக ஆடி வருவதும், அணி அக நிறைவுடன் இருப்பதும் கூட கருண் நாயருக்கு உதவலாம். இப்போது அவர் தன்னை நிரூபிக்கும் அழுத்தத்தில் இல்லை, தான் யாரெனும் குழப்பங்கள் இல்லை. இந்திய அணியில் அவருக்கு இப்ப்படியான சாதக நிலை அவர் அறிமுகமானபோது இல்லை. அங்குள்ள அரசியலையும் நெருக்கடியையும் அவரால் சமாளிக்க முடியவில்லை. மேலும் அவரது காலாட்டத்திலும் குறைகள் உள்ளன - கொஞ்சம் சீம் அசைவு உள்ள ஆடுதளத்தில் தரமான வேகவீச்சுக்கு எதிராக அவரது காலாட்டம் ஸ்தம்பித்துப் போகும் என்பதை ஆஸ்திரேலியா இந்தியா வந்தபோது கவனித்தேன். அதனால்தான் 62.3 சராசரி இருந்தும் அவர் டெஸ்ட் அணியில் தொடர்ந்து ஆடவில்லை, ஆனால் முப்பது சராசரி உள்ள கே.எல் ராகுல் ஆடுகிறார். கே.எல் ராகுலின் காலாட்டம் வேகவீச்சுக்கு எதிராக மேலானது. (சர்பராஸுக்கு நடப்பதுதான் முன்பு கருணுக்கு நடந்தது. அவர் மீது நம்பிக்கை ஏற்படவில்லை.)
இப்போதும் கருண் நாயரை டெஸ்டை விட ஒருநாள் போட்டியிலே எடுக்க வாய்ப்பதிகம். ஆனால் அதற்கு விராத் கோலி ஓய்வுபெற வேண்டும். கருண் அதுவரை இப்படியே ரன்களாக அடித்துக் குவிப்பாரா? தெரியவில்லை. ஆனால் மார்ச்சில் நடக்கப்போகும் ஐ.பி.எல்லில் இந்த ஆட்டநிலையை அவர் தொடர்ந்தால் அல்லது ஆட்டவாய்ப்பு கிடைத்தால் ஒருவேளை அவர் இவ்வாண்டே இந்திய அணிக்குள் வந்துவிடுவார்.
பிரேட் மேனுக்கு கிட்டத்தட்ட நிகராக சராசரியை ஒரு காலத்தில் வைத்திருந்தும் சர்பராஸ் கான் இந்திய அணிக்குள் இடம்பெற முடியாமல் போனது போலத்தான் கருணின் நிலையும். ரன் அடிப்பதை
விட இந்திய அணிக்குத் தேவையான ஒன்றை இவரால் தரமுடியுமா என்பதே கேள்வி - வித்தியாசமான ஸ்டைல், தரமான பந்துவீச்சை சமாளிக்கும் தடுப்பாட்டம் அல்லது அடித்தாடும் திறன், அதீதமான ஸ்டிரைக் ரேட், ஆல்ரவுண்ட் திறன் இப்படி எதாவது ஒன்று இருக்க வேண்டும்.
கருண் நாயரைப் போலவே இருந்து ஒரே ஒருவர்தான் அதிக வாய்ப்புகளைத் தொடர்ந்து எல்லா வடிவங்களிலும் பெற்றார் - அவர் ஷுப்மன் கில். ஆனால் அவர் இந்திய கிரிக்கெட்டின் செல்லப்பிள்ளை. எல்லாருக்கும் அந்த கொடுப்பினை இராது. மற்றவர்கள் எல்லாம் கடுமையாகப் போராடித்தான் வந்தார்கள்.
கருண் தன் நம்பிக்கையை கைவிடக் கூடாது. தினேஷ் கார்த்திக் மீள்வருகை நிகழ்த்தி உலக்க்கோப்பை தன் 35வது வயதுக்கு மேல் இந்திய அணியில் இடம்பெறவில்லையா? நடக்கும். ஆனால் இதுவரை வாய்ப்பு மறுக்கப்படுவது சதித்திட்டத்தாலோ பாரபட்சத்தாலோ அல்ல எனும் தெளிவு அவருக்கு இருக்க வேண்டும்.
Comments