Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

மதகஜராஜா எனும் பேய்ப்படம்

 


அப்படி என்னதான் இருக்கிறது, 13 ஆண்டுகள் தாமதமாக வந்த ஒரு படம் எப்படி பிரம்மாண்ட வெற்றி பெற்றதெனத் தெரிந்துகொள்ளவே பார்க்க சென்றேன். முதல் அரைமணி நேரத்தில் புரிந்துபோனது. நகைச்சுவை மட்டுமல்ல, இப்போது வெளிவரும் அரசியல் சரித்தன்மை மிக்க, முற்போக்கு பாவனை, woke படங்களின் மீதான வெறுப்பையே இப்படத்தின் வெற்றி மூலமாக மக்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இன்றைய படங்களில் நீங்கள் வறட்டுத்தனமான உணர்ச்சிகளையும் போலியான பரபரப்பையுமே காணமுடிகிறது, அவை பெரும்பாலும் நகரமயமான சூழலில் ஆண்மையற்ற நாயகர்களையும், பெண்மையற்ற நாயகியரையுமே காட்டுகின்றன. கதையில் எந்த உணர்ச்சி ஒன்றுதலும் இருப்பதில்லை, காமம் துளியும் இல்லை, அப்படி வந்தாலும் அக்காமம் துய்க்கக் கூடியதாக அல்லாமல் பிளாஸ்டிக்காக உள்ளது. போலியான சமூகநீதி, சமத்துவம், ஒடுக்கப்பட்டவர் அரசியல் என உணர்ச்சிப்பெருக்கான ஒன்றை உருவாக்கி அதை வைத்து கதை வெறுமையாக உள்ளதை மறைக்கிறார்கள். நாயகன் ஆயிரம் பேர்களை பீரங்கியால் சுடுவது, எந்திரத்துப்பாக்கியால் சுட்டுக்கொண்டேதிரிவது என வன்முறையிலும் பிளாஸ்டிக் தன்மை அதிகமாகிவிட்டது. கொல்பவர்களும் கொல்லப்படுபவர்களும் மனிதர்கள் அல்ல எனும் பிம்பத்தை மக்கள் மனத்தில் விதைக்கும்போது இந்த வீடியோ கேம் தன்மையைத் தாண்டி அசலான படமொன்றை மனிதர்கள் சண்டையிடும், பெண்ணுடலுக்கு ஆசைப்படும், அற்ப ஜோக் அடிக்கும் படமொன்றைப் பார்க்க மக்கள் தவிக்கிறார்கள் அதனாலே தற்செயலாக மிகமிகத் தாமதமாக வெளியான, டிரெண்டுக்கு வெளியே இருக்கும் இப்படத்தை ரசித்துக் கொண்டாடுகிறார்கள். குறிப்பாக திரையரங்கில் சந்தானத்தின் ஆபாச ஜோக்குகளுக்கு ஆண்களும் பெண்களும் சிரிப்பதைக் கண்டபோது எனக்கு அவர்களுடைய ரசனை குறித்து கோபம் வரவில்லை. தமிழிலுள்ள வறட்சியை நினைத்து வருத்தமே ஏற்பட்டது


கடந்த 8 ஆண்டுகளில் குறிப்பாக தமிழ் சினிமாவின் போக்கு வெகுவாக மாறி வெகுஜன மக்களின் ரசனையில் இருந்து விலகிவிட்டது. மொபைலில் இன்ஸ்டா பார்க்கிற, கேம் விளையாடுகிற இளைஞர்களைத் தவிர யாரும் படம்பார்க்க மாட்டார்கள் எனும் மனநிலை தோன்றியதில் சமூகவலைதளத் தாக்கத்தால் 'அர்பன் ரசனைப்' படங்கள் பரவலாகிவிட்டன. அப்படங்களில் எல்லாரும் சும்மா பப்பில் நடனமாடுவார்கள், அல்லாவிட்டால் அரசியல் சரித்தன்மையுடன் வசனம் பேசுவார்கள், அல்லது புரட்சி செய்வார்கள். காதல், சண்டை, சாகசம், நகைச்சுவை எல்லாம் பின்னுக்குப் போய்விட்டன. பல வயதுகளில் இருக்கும் மக்களை திரையரங்குக்கு கொண்டு வரலாம் எனும் நம்பிக்கை இயக்குநர்களுக்குப் போய்விட்டதால் சிறுமி கற்பழிக்கப்படுவதை விகாரமாக மிகையாகச் சித்தரித்து உணர்ச்சிகளைத் தூண்டி படங்களை ஓடவைக்கும் நிலைக்குப் போனார்கள். நகரத்தைத் தாண்டி, 'ஒடுக்கப்பட்டவர்களைத்' தாண்டி, விக்டிம்களைத் தாண்டி, வேறற்றுப் போகாத, சிறுநகர, கிராமத்து மக்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பதை இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் மறந்துவிட்டார்கள். காதலோ, சண்டையோ சாகசமோ மண்டையை சுவரில் மோதி ரத்தத்தை சிதறடிப்பது, தொடர்ந்து கத்திக்கொண்டே இருப்பது, அண்ணன் தங்கையின் கழுத்தை அறுப்பது, தம்பி அண்ணனைக் கத்தியால் குத்துவது, மகன் அம்மாவைக் கல்லைப் போட்டுக் கொல்லுவது, காட்சிக்கு காட்சி யாரையாவது கொன்று புதைத்துக்கொண்டே கூலாக ஓட்டலில் வேலையும் செய்வது போன்ற விசயங்கள் இன்றி கதைசொன்னால் கவனிக்க மாட்டார்கள் என நம்பினார்கள். ஆனால் இயல்பாக மக்களிடம் உள்ள நட்பு, உறவுகளிடத்துள்ள பிடிப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மஞ்ஞ்ம்மல் பாய்ஸ் போன்ற படம் இங்கே சக்கை போடுபோட்டது. இம்மாதிரியான போக்கை நீங்கள் பேய்ப்படங்கள் விசயத்தில் பார்க்க முடியும். அதாவது சனடைப்படம், குடும்பப்படம், காதல் படம் எனப் பார்த்து மக்கள் அலுத்துப் போகும்போது ஒரு பேய்ப்படம் வந்து மக்களை அசரடிக்கும், பெரிய ஹிட்டடிக்கும். இப்போதுள்ளுள்ள அலுப்பான செயற்கையான சூழலைப் பயன்படுத்தி அவ்வாறு ஹிட்டடித்த 'பேய்ப்படம்' தான் "மதகஜராஜா" (அதன் பழமையே அதன் பேய்.)


பேயென்றால் என்ன? இல்லாத ஒன்று இருப்பது. அது நிச்சயமாக இல்லையெனத் தோன்றும்போது நமக்கு பயம் அதிகமாவது. அந்த பயத்தில் இன்பம் தோன்றுவது. அந்த இன்பமே பீதியை அதிகப்படுத்துவது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பான பழைய டிரெண்டுகள், பாலியல் இரட்டை வசனங்கள், மாமியார் ஜோக், மச்சினிச்சி ஜோக், பொறுப்பின்மை, விக்டிம்மாகவோ பாதிக்கப்பட்ட குழுவைச் சேராமலோ இருக்கும், எந்த அடையாளமும் இல்லாமல் காட்டப்படும் நாயகன், தன் உடலை போகிக்கும் படி பார்வையால் அழைக்கும் பெண்கள், அவர்களைப்பொறுப்பற்றுரசிக்கும் ஆண், நாயகனே பாதிக்கப்படுபவனாக அல்லாமல் பாதிக்கப்படுபவர்களை காப்பாற்றுபவனாக இருப்பது, நண்பனைக் காப்பாற்ற போராடுவது, பிரியவிருக்கும் மனைவியை கணவனுடன் சேர்த்து வைப்பது, பிரிந்து போன காதலியை பொறாமையைத் தூண்டி ஈர்ப்பது என ரொம்ப காலாவதியான உணர்ச்சிகள், நம்பிக்கைகள், போக்குகள் இப்படத்தில் வரும்போது நமக்கு இல்லாத ஒன்று மீண்டெழுந்து வருவதைக் காணும் திகைப்பும் மகிழ்ச்சியும் வருகிறது. இதே படத்தை சுந்தர் சியோ வேறு இயக்குநரோ இன்று எடுத்திருந்தால் நாயகி நாயனைடேய் வாடா போடாஎன்று அழைப்பதாகவும் நாயகன் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு அவள் பின்னாலே அலைவதாகவும், அதை எண்ணி நண்பனிடம் புலம்புவதாகவும் எடுப்பார்கள். ஆனால் இப்படத்தில்மனைவியை வாடிபோடின்னு கூப்பிடாமஎன்று ஆரம்பித்து ஒரு வசனம் வருகிறது. இன்று அப்படி நகைச்சுவை வைத்தால் சமூகவலைதளத்தில் பேயாக முடியை விரித்துப் போட்டுக்கொண்டு திட்டுவார்கள் என்று பயந்து இயக்குநர்கள் தவிர்ப்பார்கள். ஆனால் திரையரங்கில் மக்கள் அதை ரசித்து சிரிக்கிறார்கள். (சமூகவலைதளப் பூச்சாண்டிகளை, அரசியல் சரிநிலைப் போலிப் போராளிகளைப் பூச்சிமருந்தடித்துக் கொல்வது எவ்வளவு அவசியம் என எனக்கு அப்போது தோன்றியது.)  அஞ்சலியும், வரலட்சுமியும் இன்றைய நாயகியரைப் போல ஒல்லிக்குச்சியாக இல்லாமல் தொப்பை காட்டினாலும் அவர்களுடைய உணர்ச்சிகளும், அவர்களிடம் விஷால் காட்டும் உடல்மொழியும் நமக்கு ரொம்ப இயல்பாகத் தெரியும் அளவுக்கு இன்றைய நாயக, நாயகியர் ஏதோ அண்ணன், தங்கையைப் போல காமமின்றி நடிக்கிறார்கள்.


 அதேபோல, கைத்தறித் தொழிலாளர்கள் சார்ந்த காட்சியொன்று போகிற போக்கில் இப்படத்தில் வருகிறது. அதுவே இன்றைய படத்தில் வந்தால் அரைமணிநேரம் ஆவணப் படம் போல சாயத்தொழில், கைத்தறித்தொழிலின் அவலம் பற்றிக் காட்சியமைத்து பத்து நிமிடம் சமூகநீதி வசனம் பேசி நம்மைச் சாகடித்திருப்பார்கள். இப்படத்தில் அது தேவையான அளவுக்கு காரச் சட்னி அளவுக்கே வருகிறது. இயக்குநர் போராளி வேடம் போடவில்லை. இதெல்லாம் மக்களுக்கு ஆறுதலாக இருக்கிறது.


அதுதான்மதகஜராஜாவின்வெற்றி. மிக மிக பலவீனமான (தூள் படத்தை நினைவுபடுத்தும்) கதையமைப்புகளும் காட்சிகளும் அபத்தமான லாஜிக்கும் இருந்தாலும் அதன் அப்பட்டமான புத்திசாலித்தனமில்லாத எளிமை மக்களை ஈர்க்கிறது. ஆனால் இதுபேய்தான்”. நாம் இனி இப்படியான படங்களைப் பார்க்க வாய்ப்பே இல்லை. புத்திசாலித்தனமான, மிகையான, போராளித்தனமான நாயகர்களும் நாயகியரும், கிராபிக்ஸ் சண்டைக் காட்சிகள் மிகுந்த, லாரி நிறைய மக்களை கவிழ்த்துப் போட்டுக் கொன்று ஒப்பாரி வைத்து உணர்ச்சியைச் சுரண்டி அதை அறம், முறம் எனப் பேசும் படங்கள் திரும்ப வரும். இயல்புக்கு மீள்வோம்.

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...