கேள்வியாளர்: இலக்கியமும் தீமையும் பிரிக்க முடியாபடி ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவையா?
ஜார்ஜ் பத்தாய்: தீமையில் இருந்து இலக்கியத்தைப் பிரித்துவிட்டால் அது அலுப்பூட்டுவதாகும். இலக்கியம் அடிப்படையில் பரிதவிப்பைப் பேசுவது. பரிதவிப்பு ஒன்று நிச்சயமாக தவறாகவே போகும் எனும்போது தோன்றுவது. தவறாகப் போவது தீமையாகிறது. நான் இதை எளிமைப்படுத்திச் சொல்கிறேன் என்றாலும் இப்படிப் புரிந்துகொள்ளலாம்: நீங்கள் வாசகரிடம் எல்லாம் தீமையில் போய் முடியுமென்றோ அவர்கள் படிக்கும் கதையில் அவர்கள் அக்கறை கொள்ளும் பாத்திரங்கள் தீமையான முடிவை நோக்கிப் போகிறார்கள் என்றோ காட்டும்போது அவர்கள் இதமற்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதன் விளைவான நெருக்கடிதான் இலக்கியத்தை சுவாரஸ்யமாக்குகிறது.
கேள்வியாளர்: இலக்கியம் தீமையைப் பற்றியது என்றால் அதை எழுதும் எழுத்தாளர் தாம் செய்வது தவறு எனும் குற்றவுணர்வை அடைவதுண்டா?
ஜார்ஜ் பத்தாய்: உண்டு. இலக்கியம் எழுதுவது ஒரு வேலையாக அதனால்தான் இருக்க முடியாது.
கேள்வியாளர்: அப்படிக் குற்றவுணர்வு கொண்ட படைப்பாளிகளின் பெயர்களைச் சொல்ல முடியுமா?
ஜார்ஜ் பத்தாய்: இருவரைச் சொல்லலாம். அவர்களைப் பற்றி என் நூலில் எழுதியிருக்கிறேன். ஒருவர் போத்ரிலியர். அவர் தனது கவிதைத் தொகுப்புக்கு "தீமையின் மலர்கள்" எனத் தலைப்பிட்டதே இதனால்தான். அடுத்து காப்கா. அவர் தான் எழுதுவதே தீமை எனும் உணர்வைக் கொண்டிருந்தார். ஏனென்றால் வாழ்க்கையை வியாபாரச் செயல்பாடுகளில் ஈடுபட்டு சம்பாதிக்க பயன்படுத்தாமல் எழுதச் செலவிடுது தீமையானது என்று அவரது குடும்பத்தினர் அவருக்கு உணர்த்தியபடியே இருந்தனர்.
கேள்வியாளர்: எழுதுவது குற்றமெனக் கருதப்பட்டால் போத்லியருக்கும் காப்காவுக்கும் எழுதுவதே பொறுப்பற்ற செயலாகிறதுதானே...
ஜார்ஜ் பத்தாய் குறுக்கிட்டு: அவர்களது குடும்பத்தினர் தாம் அவ்வாறு கருதினர்.
கேள்வியாளர்: இந்த குற்றவுணர்வே குழந்தைத்தனமானது எனும்போது காப்காவும் போத்ரிலியரும் இலக்கியம் எழுதுவதை குழந்தைத்தனமானது எனக் கருதினார்களா?
ஜார்ஜ் பத்தாய்: அவர்கள் தமது பெற்றோர் முன்பு ஒரு குழந்தையைப் போல உணர்ந்தார்கள் என்பது இதைத் தெளிவாக்கும். அவர்கள் சேட்டைகள் செய்து அதனால் குற்றவுணர்வு கொள்ளும் குழந்தையைப் போல உணர்ந்தனர். ஏனென்றால் அக்குழந்தை தனது பெற்றோர், அவனுக்கு மிகவும் பிடித்தமான பெற்றோர், அவன் ஒருபோதும் செய்யக்கூடாது என்று சொன்னதையே அவன் செய்து வந்தான். இதுதான் அதன் ஆகத்தீவிரமான பொருளில் தீமையாக இருக்கிறது.
கேள்வியாளர்கள்: எழுத்தாளர்கள் எழுதும்போது குற்றவுணர்வு கொள்கிறார்கள் எனில், இலக்கியமே குழந்தைத்தனம் என்றாகிறது அல்லவா?
ஜார்ஜ் பத்தாய்: இலக்கியத்தின் அடிப்படையாக சிறுபிள்ளைத்தனம் உள்ளது. நமக்கு இலக்கியம் மீதுள்ள பெருமரியாதைக்கு, எனக்குள்ள பெருமதிப்புக்கு, இது முரணாக இருக்கலாம். ஆனால் இது மிக அடிப்படையான, ஆழமான உண்மையென்று கருதுகிறேன். இலக்கியம் உங்களுக்கு என்னவாக இருக்கிறது என்பதை ஒரு குழந்தையின் மனநிலையில் இருந்து பார்த்தாலே உங்களுக்கு விளங்கும் (கீழான பார்வையில் இருந்து என்று நான் குறிக்கவில்லை).
கேள்வியாளர்: பாலின்ப எழுத்து பற்றி நூலொன்றை எழுதியிருக்கிறீர்கள். பாலின்ப இலக்கியமும் குழந்தைத்தனமானதுதானா?
ஜார்ஜ் பத்தாய்: இலக்கியம் பாலின்ப எழுத்தில் இருந்து அவ்விதத்தில் வேறுபடுவதாக நான் நினைக்கவில்லை. ஆனால் பொதுவாக பாலின்ப எழுத்திலுள்ள குழந்தைமையைப் புரிந்துகொள்வது அவசியமானது என நினைக்கிறேன். பாலின்ப கிளர்ச்சியை அடைவது தடைசெய்யப்பட்ட விளையாட்டை ஆடுவதாக ஒரு குழந்தை கற்பனையில் திளைப்பதைப் போன்றது. பாலின்ப கிளர்ச்சியின்பால் பெரும் ஈர்ப்பு கொள்வது தன் பெற்றோர் முன் ஒரு குழந்தை இருப்பதைப் போன்றது. தனக்கு எதாவது நடந்துவிடுமோ என அவன் அஞ்சுகிறான். அஞ்சுவதற்கான காரணம் சரியாக கிடைக்கும்வரை அவன் நிறுத்தப் போவதும் இல்லை. இயல்பான வளர்ந்தவர்கள் செய்வதை செய்தால் மட்டும் அவனுக்குப் போதாது, அவனுக்கு பீதியடைய வேண்டும். ஒரு குழந்தையாக எப்போது வேண்டுமெனினும் சாடப்படலாம், தாள முடியாத அளவுக்குத் தண்டிக்கப்படலாம் எனும் தீவிர அச்சத்தை அவன் உணர வேண்டும்.
கேள்வியாளர்: நீங்களும் நானும் பேசுவதைப் பார்க்கும்போது குழந்தைத்தனத்தை நீங்கள் கண்டிப்பதாக உணர்வு ஏற்படலாம். அதனாலே நாம் உங்கள் நூலின் தலைப்புக்குப் போக வேண்டும் என நினைக்கிறேன்: "இலக்கியமும் தீமையும்". நீங்கள் அதில் இலக்கியத்தையோ தீமையையோ கண்டிக்கவில்லை. அதிலுள்ள கருத்துக்களைப் பற்றிச் சொல்ல முடியுமா?
ஜார்ஜ் பத்தாய்: அது ஒரு எச்சரிக்கை. இலக்கியம் ஆபத்தானது என அது சொல்கிறது. ஆனால் அதை உணர்ந்தபின்னர் அதைத் துணிந்து எதிர்கொள்வதே சரியானது. இலக்கியமெனும் தீமையை நாம் துணிந்து நேர்கொள்வது முக்கியம் என நான் நினைக்கிறேன். அதை நீங்கள் சந்திக்கவில்லை எனில் நீங்கள் மனிதராகவே இருக்க முடியாது எனும்படியான மிகப் பெரிய, அசலான ஆபத்து அது. இலக்கியத்தில் மனிதனைக் குறித்த முழுமையான் பார்வையை நாம் பெறுகிறோம். மனித இயல்பின் பின்னுள்ள வன்முறையைக் காணாமல் வாழ்வதற்கு இலக்கியம் நம்மை அனுமதிக்காது. ஷேக்ஸ்பியரின் துன்பியல் நாடகங்களும், அந்த வகைமையைச் சேர்ந்த பிற படைப்புகளும் இதற்கு உதாரணமாகும்.
மிக மோசமான நிலையைக் காட்டி அதை எதிர்கொள்ள நமக்குக் கற்றுத் தருவது இலக்கியமாகும். சுருக்கமாக, இந்த விளையாட்டை ஆடுகிறவருக்கு அது ஏற்படுத்தும் திகிலை முறியடிக்கும் ஆற்றலை இவ்விளையாட்டே அளிக்கும்.
(1958இல் ஜார்ஜ் பத்தாய் அளித்த டிவி நேர்முகத்தின் தமிழாக்கம் - ஆர். அபிலாஷ்)
Comments