முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோலியின் தடுமாற்றம்

விராத் கோலி தில்லிக்காக ரஞ்சி ஆட்டத்தில் 6 ஓட்டங்களில் அவுட் ஆன காணொளியைப் பார்த்தேன். நியுசிலாந்து டெஸ்ட் தொடர் முதலே அவரிடம் ஒரு பிரச்சினையை கவனிக்கிறேன் - அவர் பந்தின் நீளத்தை சரியாகப் பார்ப்பதில்லை. சில நேரங்களில் பந்தின் திசையையும் கணிப்பதில்லை. இந்த பந்து ஆறாவது குச்சியில் விழுந்து உள்ளே வருகிறது. அதை கோலி கவர் டிரைவ் செய்யும் நோக்கில் மட்டையைத் தூக்கிக் கொண்டு லெக் ஆண்ட் மிடிலில் நிற்பதைப் பாருங்கள். உள்ளே வரும் பந்தை யாரும் அப்படி விரட்ட மாட்டார்கள். அதுவும் பந்துவீச்சாளர் குச்சிகளுக்கு நேராக வரும்போது பந்து நேராகவோ உள்ளாகவோ தாம் வரும். இது பாலபாடம்.

சரி அதையும் விடுவோம். பந்து ஸ்விங் ஆகாது என்று அவர் நினைத்தால் கவர் பகுதியில் ஆடும்படி அவரது தலை முன்னங்காலை நோக்கி கவர் பக்கமாகத் தானே போக வேண்டும். ஆனால் கோலியின் தலை அவரது இடப்பக்கம் சரிகிறது. மட்டையின் இறக்கமோ கீப்பரின் பக்கமிருந்து கீழே வருகிறது. அது கவர் டிரைவுக்கானது என்றால் ஷாட் நேரான டிரைவுக்கானது. இப்படி அவர் ஒரு ஷாட்டை அடித்தால் கையும் தலையும் வேறிரு ஷாட்களுக்காக தயாராகின்றன. முக்கியமாக அவர் பந்தின் திசையை பந்து விழும் முன்னரே கால்வினாடியில் கணிக்கிற திறனை இழந்துவிட்டார். எப்போதாவது அவரது பார்வையும் தலையும் காலாட்டமும் சரியாக அமையும்போது அழகான ஷாட்களை ஆடுவார். மற்ற சமயங்களில் பந்தை டி ராஜேந்தர் தன் நாயகியைப் பாடல் காட்சியில் லவ் பண்ணுவதைப் போலத்தான் அடிக்கிறார். 

பிரச்சினை ஆட்டநிலையிலோ கவனத்திலோ இல்லை. அவரது பார்வையில் ஏதோ பிரச்சினை உள்ளது. திராவிட்டுக்கும் அவரது ஓய்வுக்கு முன்பான ஓராண்டு காலத்தில் இப்பிரச்சினை தோன்றியது. ஆனால் அவர் மீண்டு வந்தார். நியுசிலாந்தின் ரோஸ் டெய்லர், தென்னாப்பிரிக்காவின் ஹஷீம் ஆம்லாவுக்கும் கண் பிரச்சினை ஏற்பட்டு ஆட்டத்தை பாதித்தது. விராத் கோலியின் இப்பிரச்சினையைப் பற்றி ஐந்தாண்டுகளுக்கு முன்னரே கபில் தேவ் ஓரிடத்தில் குறிப்பிட்டார் என்பது கவனிக்கத்தக்கது. 

சிலநேரங்களில் இம்மாதிரி குறைகளுக்கு நேரடித் தீர்வு இல்லையென்றால் வீரர்கள் அதை வைத்துக்கொண்டே ஆட முயல்வார்கள். தம் திறமையில் அதீத நம்பிக்கை வைப்பார்கள். பிடிவாதமாக முயன்று கொண்டே இருப்பார்கள். ஒருவேளை கோலிக்கும் நடப்பது அதுவாக இருக்கலாம். 

பாவமாக இருக்கிறது! இவரைப் போய் ஏன் ரசிகர்கள் திட்டுகிறார்கள்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.