நண்பர் கணேஷ் பேஸ்புக்கில் இந்தப் பகுதியைப் பகிர்ந்திருந்தார்:
'நிழல் பொம்மை' நாவலில் இருந்து
சிறிது குரூரம் எனக்குள் வந்ததற்குக் காரணம் யார், பொய்களைப் புனைந்து சுயநலத்தைப் பேணலாம், அதுவே சாமர்த்தியம் என என்னை நம்ப வைத்தது யார்?.
அடிமைகளைக் கட்டி வைத்து சாட்டையால் அடித்துக் கட்டுப்படுத்தும்போது பௌதீக விடுதலையே அவர்களுக்குப் போதும். சுதந்திரமாகத் திரியவிட்டு அவர்களுடைய சிந்தனையை, மன அமைப்பை மாற்றித் தமக்கேற்றபடி ஒருவர் ஒழுங்குபடுத்தும்போது மீளவே முடியாத அடிமைப் பள்ளத்தாக்கில் அவர்கள் விழுகிறார்கள்.
பள்ளத்தாக்கில் அலையும் கண்ணற்றவர்கள் ஒற்றைப் பார்வைகொண்ட பெருந்திரளாக மாற்றப்படுவது, அவர்களை யாரோ குன்றின் மேல் ஏறி நின்று கண்காணித்து வழிநடத்தி திருப்தி கொள்வது, அவ்வப்போது ஆணைகள் பிறப்பித்து அவர்களின் திசையை மாற்றிவிட்டு அதன் விளைவுகளை ரசிப்பது, அவர்கள் பரஸ்பரம் மோதிக்கொள்ளாமல் ஒழுங்கமைவை உறுதி செய்வது, அவர்கள் தற்செயலாக வழி கண்டுபிடித்துத் தப்பித்துவிடாமல் பார்த்துக்கொள்வது,
அன்றாடத்தின் அற்பமான மகிழ்ச்சிகளின்
பாற்பட்டு பிரதான இலக்கை அவர்கள் மறந்துவிடச் செய்வது.
நான் வந்து சேர்ந்த சில மாதங்களிலேயே சச்சிதானந்தர் அதிகாரத்துக்கு வந்தார். விரைவிலேயே சச்சிதானந்தரே லோகோஸ், லோகோஸே சச்சிதானந்தர் எனும் அளவுக்கு அவர் சூழலை மாற்றினார். சொல்லப்போனால் அங்கு வேலை பார்த்தவர்கள், படித்தவர்கள் எல்லாருமே அனேகமாக தம்மையே லோகோஸ் என்றும், சச்சிதானந்தர் என்றும் கருத ஆரம்பித்தார்கள்.
எங்களையே அறியாமல் அவரது அசைவுகளுக்கு ஏற்ப நாங்கள் எங்கள் அசைவுகளை உருமாற்றிக்கொண்டோம். நாங்கள் பொம்மலாட்டப் பாவைகள் எனில் அவரே எங்களை அசைக்கும் விரல்கள் அவ்வப்போது நாங்கள் அவரது அசைவுகளை மீறித் தன்னிச்சையாக அசையவும், எங்கள் நிழல்கள் எங்கள் நகர்வுக்கு ஏற்ப அசைவதைக் கண்டுகளிக்கவும் செய்தோம். திரும்ப காற்றில் விரல்களின் அழுத்தங்களை, எழுச்சிகளைக் கண்டு எங்களை மீண்டும் தகவமைத்து ஒழுங்கமைவின் பகுதியாக்கிக்கொண்டோம். இதற்கு நடுவே நாங்கள் எங்களைக் கண்டுகொண்டோம். சில நேரங்களில் கண்டுகொள்ள முடியாமல் மேலும் சீரழிந்து போய் மனம் துவண்டோம்.
Comments