அண்மையில் "சிவாஜியைப்" பார்த்தபோது படத்தில் கதையே இல்லையென்று தோன்றியது. ஆனால் சிவாஜி கேரக்டர் கிராபை நன்றாகப் பண்ணியிருந்தார்கள். கறுப்புப் பணத்தை அவர் வெளிநாட்டுக்கு அனுப்பி திரும்ப வாங்கி நலத்திட்டமாக முதலீடு பண்ணியதும் படம் முடிந்துவிடுகிறது. உபரியாக வரும் ஆக்ஷனெல்லாம் சும்மா என்று நினைத்தேன். ஜெண்டில்மேனில் இதே பிரச்சினை - ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் ஹீரோவின் want தீர்ந்துபோகிறது. ஷங்கர் படங்களின் பெரிய குறை இது - அதாவது KGFஇன் கிளைமேக்ஸ் ஷங்கர் படங்களில் இடைவேளையின் போது வந்துவிடும் அதன் பிறகு இருப்பதைக் காப்பாற்ற ஹீரோ எதிர்கொள்ளும் சவால்கள் அலுப்பூட்டும். ஏனென்றால் அவை கதையின் பகுதியல்ல. ஷங்கர் காவிய நாயகனாக ஹீரோவைக் காட்ட வாழ்வின் பல கட்டங்களாக கதையை அமைக்கிறார். இது அவரது பலவீனம்.
நீங்கள் பழைய எம்.ஜி ஆர் படங்களைப் பார்த்தால் இச்சிக்கல் கதையில் இருக்காது. "ஆயிரத்தில் ஒருவன்" சிறந்த உதாரணம். ஹீரோவின் want மக்களை கொடுங்கோன்மையில் இருந்து காப்பாற்றி தன்னை தலைவனாக அறிய படத்தின் கடைசி கட்டம் வரைத் தேவைப்படும். Rambo, Enter the Dragon மாதிரி ஹாலிவுட் ஆக்ஷன் படங்களுக்கும் இதைச் சொல்லலாம். தமிழில் "சத்திரியனை" எடுத்துக்கொண்டால் வில்லனை நாயகன் கைது பண்ணியதும் வில்லன் திரும்ப அடிக்கிறார், நாயகன் வீழ்கிறான், கிளைமேக்ஸில் அவன் தனது தனிப்பட்ட எல்லாவற்றையும் விட்டாலே சரியாக வெல்ல முடியும் எனப் புரிந்துகொண்டு வில்லனைக் கொல்லும்போது கிளைமேக்ஸ் வருகிறது. ரஞ்சித்தின் "சார்ப்பட்ட பரம்பரையையிலும்" இவ்விசயத்தில் (want) சரியாக அமைத்திருப்பார்கள். ஆனால் நாயகனின் உள்ளார்ந்த "அச்சத்தை" (need) - அப்பாவின்றி வளரும் இளைஞனின் பதற்றம், போதாமை - எப்படி அவன் எதிர்கொள்கிறான் என்பதை இயக்குநர் சரியாக எழுதவில்லை.
ரெண்டாயிரத்துக்குப் பிறகு எழுதப்பட்ட பல சாகசப் படங்களில் இப்பிரச்சினை இருக்கும்.
Comments