டி20 தொடரை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். ஆனால் இங்கிலாந்து 5-14 வரையிலான ஓவர்களில் மட்டமாக ஆடி சுழலர்களுக்கு தேவையில்லாமல் விக்கெட் கொடுத்ததாலே சமநிலையற்ற பந்துவீச்சைக் கொண்ட இந்திய அணியிடம் தொடரை இழந்தது என நினைக்கிறேன். இந்த இந்திய அணியின் தேர்வு மிகச் சொதப்பலானது என அணித்தலைமையே ஏற்றுக்கொள்வார்கள். ஒவ்வொரு போட்டியிலும் ஒரே வேகவீச்சாளருடன் ஆடினார்கள். ஹர்த்திக் துவக்க ஓவர்களிலும் கடைசி ஓவர்களிலும் ரன் கொடுக்காமல் வீசுவார் என நம்பி களமிறங்கினார்கள். முக்கியமான கட்டத்தில் ஹர்த்திக்குக்கு காயம் ஏற்பட்டிருந்தால், சுழலர்களுக்கு இந்தளவுக்கு விக்கெட் விழாவிடில் இந்தியா கடைசி 5 ஓவர்களை யார் வீசுவது எனத் தெரியாமல் தத்தளித்திருக்கும். அம்மாதிரியான நெருக்கடிகளை இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு கொடுக்கவில்லை. துபேவும் ஹர்த்திக்கும் இருக்கும்போது இந்தியாவுக்கு அக்ஸர் பட்டேல் தேவையில்லை. ஆனால் அவர் துணைத்தலைவராக இருப்பதால் அவரை எல்லா போட்டிகளிலும் ஆட வேண்டிய தேவையிருந்ததால் அணியின் சேர்க்கையே குழப்பமாகியது. ஆனால் இதே அணியமைப்பை வரும் தொடர்களில் கொண்டு போனால் நிச்சயமாக அடிவாங்குவார்கள். 10-17வது ஓவர்கள் வரை பந்துவீச (ஹர்ஷித் ரானா, அர்ஷதீப் போன்ற) நல்ல வேகவீச்சாளர் நிச்சயமாகத் தேவை.
இங்கிலாந்தைப் பொறுத்தமட்டில் உடலை நோக்கி ஆர்ச்சர், வுட், கார்ஸ் ஆகியோர் பவுன்சர்கள், குறைநீளப் பந்துகளை வீசும் உத்தி என்னை வெகுவாக கவர்ந்தது. ஆனால் அதேநேரம் சென்னையிலும் (கூடுதல் பவுன்ஸ்) ராஜ்கோட்டிலும் (ஏற்ற இறக்கமான பவுன்ஸ்) ஆடுதளம் இந்த உத்திக்கு உதவியாக இருந்ததைப் போல கொல்கொத்தா, பூனே, மும்பையில் இருக்கவில்லை. ஒரே பவுன்சர் செயல்திட்டத்தை ஆடுதளத்தின் மாறுதல்களைக் கருத்திற் கொள்ளாமல் அவர்கள் எல்லா மைதானங்களிலும் முயன்று பார்த்தது முட்டாள்தனமானது. உ.தா., கடைசிப் போட்டி நடந்த மும்பையில் ஆடுதளம் சற்று மெத்தனமாக இருந்ததால், இரு பக்க எல்லைக்கோடுகள் 60 மீட்டரே இருந்ததால், வேகமாக அரைக்குழி வீசுவது எடுபடவில்லை. அதற்குப் பதிலாக பந்தைக் குத்தி மட்டையாளரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு குறைநீளத்தில் மெதுப்பந்துகளை அதிகமாக வீசியிருந்தால், குச்சிகளுக்குள் அல்லது காலை நோக்கி பந்துகளை வைத்திருந்தால் இவ்வளவு அதிகமான ரன்களை பவர்பிளேயிலோ பின்போ கொடுத்திருக்க மாட்டார்கள். ஆர்ச்சரும் வுட்டும் ஒரே மாதிரி வேகமாக ஷார்ட்டாக இங்கும் வீசியது சொதப்பலாகியது. சூழலைக் கணித்து சரியாகத் திட்டமிடாமல் வந்ததைப் போலத் தோன்றியது. அதே போல இந்தத் தொடர் முழுக்கவே இடதுகை மட்டையாளர்களுக்கு அவர்களுடைய வேகவீச்சாளர்களுக்கு சரியாக வீச வரவில்லை. வலதுகை மட்டையாளருக்கு உள்ளே வரும் ‘பக்கிள்’ பந்துகள் இடதுகை மட்டையாளருக்கும் அதே போல உள்ளே தலைக்கு வரவில்லை, மாறாக வைடாக சென்றது. அல்லது அவர்கள் ஸ்டம்பைக் காட்டி சுற்றினால் அவர்களைப் பின் தொடர்ந்து பந்தை உள்ளே குறைநீளத்தில் வீசவில்லை. அவர்களிடம் இடதுகை வேகவீச்சாளர் இல்லாதது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அபிஷேக் ஷர்மாவிடம் இப்படித்தான் சிக்கிக் கொண்டார்கள். அவரால் காலில் விழும் அரைக்குழிப் பந்தை பேக்வெர்ட் ஸ்கொயர் லெக்கில் சிக்ஸர் அடிக்க முடியும் என்றாலும் அந்த ஒரு திசையில் மட்டும் அவரை அதிகமாக ஆட வைத்திருந்தால் அவர் தடுமாறியிருப்பார். அபிஷேக்கின் அடிக்கும் அரைவட்டம் கவர், பாயிண்ட், நேரான பவுண்டரிகளே. இங்கிலாந்து வீச்சாளர்கள் அங்குதான் அதிகப் பந்துகளையும் கொடுத்தார்கள். அதேபோலத்தான் துபேயும் திலக்கும் குச்சிகளை விட்டு அடித்தபோது அவர்களால் வீசும் இடமளிக்காமல் முடக்க முடியவில்லை. அதாவது சாம்ஸன், சூர்யா ஆகியோர் விலகி நின்று மட்டையை வீசும்போது அவர்களுடைய தலைக்கோ விலாவுக்கோ வீச முடிந்த அவர்களால் இடதுகையாளர்களுக்கு அதைச் செய்ய இயலவில்லை. இதுவே இத்தொடரின் முடிவை இந்தியாவுக்குச் சார்பாக மாற்றிய மற்றொரு காரணி.
கடைசியாக அவர்கள் சுலபத்தில் வருணின் பந்துவீச்சை அதிக ரிஸ்க் எடுக்காமல் தள்ளிவிட்டு மற்ற வீச்சாளர்களை இலக்காக்கியிருந்தால் இவ்வளவு விக்கெட்டுகளை இழந்திருக்க மாட்டார்கள். அவர்கள் தப்பித்திருக்கலாம். கடைசி 5 ஓவர்களில் - அர்ஷதீப்பைத் தவிர சரியான கடைசி ஓவர் வேகவீச்சாளர்கள் இல்லாத - இந்தியாவை சாத்தியிருக்கலாம். ஏனோ அதையும் அவர்கள் செய்யவில்லை. அதாவது மேட்ச் அப்பில் சொதப்பினார்கள்.
இந்தியாவுக்கு அதிர்ஷ்டகரமாக ஒரு டி20 தொடர் மடியில் வந்து விழுந்திருக்கிறது! கம்பிருக்கு இது ஒரு தற்காலிக ஆறுதல். சூர்யாவுக்கு மகுடத்தில் மற்றொரு இறகு.
Comments