முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஷ்ரேயாஸ் ஐயர்களின் உலகம்


 

அண்மையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் ஷ்ரேயாஸ் உயரப்பந்தை லைனுக்கு உள்ளே வந்து தரையோடு புல் அடிப்பதைப் பார்க்க அழகாக இருந்தது. மிட் விக்கெட், பைன் லெக் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பந்தை மிஸ் பண்ணாமல் அடித்தார். அவர் கடந்த சில மாதங்களில் உள்ளூர் போட்டிகளுக்காக பயிற்சியெடுக்கும்போது உயரப்பந்தை ஆடுவதில் தனி கவனம் செலுத்தியதாகச் சொல்கிறார்கள். சுயமுயற்சியாலோ மற்றபடியோ அவரது இந்த முன்னேற்றம் மிகவும் கொண்டாடத்தக்கது. அந்த ஒரு குறையைத் தவிர்த்தால் அவர் அபாரமான ஒருநாள் மட்டையாளர். ஆனால் இப்போதும் பந்து குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் ஆப் குச்சியில் விழுந்து எகிறினால் ஆடத் தெரியாமல் அவர் சிக்கிக்கொள்கிறார் என்பதையும் மார்க் வுட்டின் பந்துவீச்சுக்கு எதிராகப் பார்த்தோம். இந்தியாவில் கண்டத்தைத் தாண்டி விட்டார். வெளியே போகும்போதுதான் அடுத்த சவால்.

அடுத்து அவருக்கும் நிர்வாகத்துக்கும் ஏதோ ஒரு லடாய் இருந்துகொண்டே இருக்கிறது. அவர் மட்டையாடும்போது நிதானமாக மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரியவில்லை. இடத்தைக் காப்பாற்றுவதற்காக தினமும் போராட்டம்தான் போல.
ஆடுதளத்தில் உயரப்பந்து ஒரு தடங்கல் என்றால் அணிக்குள் அவரது நடத்தையும் நாக்கும் மற்றொரு இடைஞ்சல்.
ஆனால் ஐ.பி.எல் உபயத்தினால் ஆட ஆரம்பித்து சில ஆண்டுகளிலேயே பெரும் செல்வம், சொத்து, செல்வாக்கு, புகழ் என இந்திய கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை பெரும் தாவு தாவி எங்கேயோ போய்விடுகிறார்கள். இந்த தலைமுறை இளைஞர்களின் அதிர்ஷ்டம் இது. எந்த பலனும் தராத வேலைக்காகவோ மக்கள் 14 மணிநேரம் உழைக்கிறார்கள். நூறு பிரதிகள் விற்கும் எனத் தெரிந்தும் எழுத்தாளர்கள் இரவுபகலாக எழுதுகிறார்கள். கவாஸ்கர் எல்லாம் அந்த காலத்தில் சொற்ப சம்பளத்துக்காக எவ்வளவு ரன்கள் குவித்தார்! இவ்வளவு பணம் கொட்டும்போது ஷ்ரேயாஸ் உழைத்து தன் குறையைக் கடந்து வருவதில் பெரிய ஆச்சரியம் இல்லை. இதைக்கூடச் செய்யாமல் எப்படி?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...