அண்மையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் ஷ்ரேயாஸ் உயரப்பந்தை லைனுக்கு உள்ளே வந்து தரையோடு புல் அடிப்பதைப் பார்க்க அழகாக இருந்தது. மிட் விக்கெட், பைன் லெக் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பந்தை மிஸ் பண்ணாமல் அடித்தார். அவர் கடந்த சில மாதங்களில் உள்ளூர் போட்டிகளுக்காக பயிற்சியெடுக்கும்போது உயரப்பந்தை ஆடுவதில் தனி கவனம் செலுத்தியதாகச் சொல்கிறார்கள். சுயமுயற்சியாலோ மற்றபடியோ அவரது இந்த முன்னேற்றம் மிகவும் கொண்டாடத்தக்கது. அந்த ஒரு குறையைத் தவிர்த்தால் அவர் அபாரமான ஒருநாள் மட்டையாளர். ஆனால் இப்போதும் பந்து குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் ஆப் குச்சியில் விழுந்து எகிறினால் ஆடத் தெரியாமல் அவர் சிக்கிக்கொள்கிறார் என்பதையும் மார்க் வுட்டின் பந்துவீச்சுக்கு எதிராகப் பார்த்தோம். இந்தியாவில் கண்டத்தைத் தாண்டி விட்டார். வெளியே போகும்போதுதான் அடுத்த சவால்.
அடுத்து அவருக்கும் நிர்வாகத்துக்கும் ஏதோ ஒரு லடாய் இருந்துகொண்டே இருக்கிறது. அவர் மட்டையாடும்போது நிதானமாக மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரியவில்லை. இடத்தைக் காப்பாற்றுவதற்காக தினமும் போராட்டம்தான் போல.
ஆடுதளத்தில் உயரப்பந்து ஒரு தடங்கல் என்றால் அணிக்குள் அவரது நடத்தையும் நாக்கும் மற்றொரு இடைஞ்சல்.
ஆனால் ஐ.பி.எல் உபயத்தினால் ஆட ஆரம்பித்து சில ஆண்டுகளிலேயே பெரும் செல்வம், சொத்து, செல்வாக்கு, புகழ் என இந்திய கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை பெரும் தாவு தாவி எங்கேயோ போய்விடுகிறார்கள். இந்த தலைமுறை இளைஞர்களின் அதிர்ஷ்டம் இது. எந்த பலனும் தராத வேலைக்காகவோ மக்கள் 14 மணிநேரம் உழைக்கிறார்கள். நூறு பிரதிகள் விற்கும் எனத் தெரிந்தும் எழுத்தாளர்கள் இரவுபகலாக எழுதுகிறார்கள். கவாஸ்கர் எல்லாம் அந்த காலத்தில் சொற்ப சம்பளத்துக்காக எவ்வளவு ரன்கள் குவித்தார்! இவ்வளவு பணம் கொட்டும்போது ஷ்ரேயாஸ் உழைத்து தன் குறையைக் கடந்து வருவதில் பெரிய ஆச்சரியம் இல்லை. இதைக்கூடச் செய்யாமல் எப்படி?
Comments