சடங்குகளுக்கும் அர்த்தங்கள் உண்டு.
அவை மானுடவியல் நோக்கில் உளவியல் நோக்கில் அணுக வேண்டியவை.
கொஞ்சம் தொ.ப. வை வாசியுங்கள்.
பகதவத்சல பாரதியை வாசியுங்கள்..
தொல் பழங்குடி சமூகத்தின் எச்சங்கள் தான் நம் சில சடங்குகளில் கடத்தப்பட்டு வந்திருக்கின்றன.
இவை மானிடவியல் நோக்கில் அணுக வேண்டியவை.
இச்சடங்குகளை தலைமுறையாக கடத்தி வந்ததில் பெண்களின் பங்களிப்பு முக்கியமானது.
ஏன் இதைச் செய்கிறோம் என்று பெண்கள் தெரிந்து செய்யவில்லை என்பதால் அதைச் " சடங்கு" என்றழைக்கிறோம்.
பண்பாட்டு ஆய்வாளர்கள் இதை " தொல்படிமவியல்" என்பார்கள். இது உளவியலோடு தொடர்புடையது.
தொல்படிமம் என்பது வரலாற்றுக்கு முந்திய காலந்தொட்டு மனித குலத்தின் மூளையில் பதிந்த பண்பாட்டுத் தடயங்களின் சாரமாகவும், மரபு வழியாக வரும் கூட்டு நனவிலி (Collective unconsciousness) மனத்தின் வடிவமாகவும், மனித குலம் அதன் வெவ்வேறு காலகட்டங்களைச் சந்தித்த வகை மாதிரியான எண்ணற்ற அனுபவங்களின் உளவியல் நிலையிலான எச்சமாகவும் கொள்ளப்படுகிறது.
இதைப் பற்றிய எந்த ஒரு புரிதலும் இல்லாமல் ரொம்பவும் மேம்போக்காக பேசுவதைக் காணும்போது
நம் புரிதல் என்னவாக இருக்கிறது! என்பதைத்தான் இவை வெளிப்படுத்துகின்றன.
- புதிய மாதவி
######
கடந்த வார நீயா நானாவைப் பார்த்தபோது நானும் இதையே உணர்ந்தேன். சடங்குகள் மூடத்தனமானவை, மக்களை அவை அடிமையாக்குகின்றன என்பதே ரொம்ப பழைய மேம்போக்கான கருத்துதான். சடங்குகள் அடிப்படையில் மனிதர்களை இணைக்கின்றன, சேர்ந்து செயல்படும் நம்பிக்கையை, உற்சாகத்தை அளிக்கின்றன. அந்த பிணைப்பு உடையும்போது மனிதர்கள் சிதறி மைக்ரோ குடும்பங்கள் பிறக்கின்றன. அதனாலே அடுத்தவர்களின் அழுத்தத்தினால் சடங்குகளில் ஈடுபடுவதாக நாம் உணர்கிறோம். ஆனால் இன்னொருவருக்காக நாம் ஏன் ஒன்றைச் செய்யக் கூடாது?
சரி அப்படியே செய்ய வேண்டாம் என்றால் விலகி தனியாக இருக்கலாம். தவறில்லை. ஆனால் பின்பற்றுகிறவர்களை மூடநம்பிக்கையாளர்கள், பெண்களை அடிமைப்படுத்துபவர்கள் என்றெல்லாம் பொருள்படப் பேசுவது வன்முறை. அது தனிமனிதர்களை அல்ல, சமுக அமைப்பையே கேலி செய்து தகர்க்கும்படி கோருகிறது. நாம் அந்த இடத்தில் இலக்கியம், அரசியல் சமூக இயக்கங்களை உருவாக்கி ஒன்றாகச் செயல்பட்டால் சரி. ஆனால் அங்கு நாம் வெறுமனே 9-9 உழைக்கிற தனியர்களையும், மன அழுத்ததையும், சுரண்டலையும், காங்கிரீட் சிறைகளையுமே உருவாக்கியிருக்கிறோம். நல்ல காற்று, உணவு, போதுமான இடவசதி, பேசப் பழக களங்கள் இல்லாத நமது நகரங்கள் மனித மனத்தை சிதைக்கின்றன. இத்தகைய சமூகங்களிலே சர்வாதிகாரமும் வெறுப்பரசியலும் தோன்றும் என இரண்டாம் உலகப்போர் கால ஜெர்மனியை வைத்து ஹேனா அரெண்ட் கூறுகிறார். சமூகரீதியான மதத்தின் வீழ்ச்சியிலும் நவீன சமூகத்தின், பெரும் அரச மதத்தின் எழுச்சியிலுமே தான் பாஸிசம் உருவெடுக்கிறது. இந்து மதத்தை வீழ்த்தியே இந்துத்துவா தோன்றுகிறது. கும்பமேளாவில் நம் பிரதமர் கடவுளை அல்ல, தன்னைத் தான் முன்வைக்கிறார். அதுதான் நவீன சமூகம். அங்கு தனிப்பட்ட அந்தரங்க மதம், சடங்குகளுக்கு இடமிருக்காது. அதனிடத்தில் மதம் அரசியல்பட்டதாக, கொள்கை வயப்பட்டதாக இருக்கும். உண்மையானப் பகுத்தறிவு இந்த நுட்பமான வித்தியாசத்தைப் புரிவதே.
மேலும் எல்லா பெண்களும் ஆண்களுக்காக சடங்குகளைச் செய்வதாகச் சொல்ல முடியாது. சிறுதெய்வ வழிபாட்டில் மிகத்தீவிரமாக இருக்கும் பல பெண்கள் குடும்பப் பொறுப்புகளையே கூட சிலநேரம் உதறிவிடுவார்கள். இந்த ஆத்ம பந்தமே அவர்களை விடுவிக்கிறது.
நான் நீயா நானா நிகழ்ச்சி வறட்டுப் பகுத்தறிவுவாதம் பேசுவதாகச் சொல்லவில்லை. அடுத்து உடனே பக்தர்களை அழைத்து ஆடிப்பாடி ரகளையாக ஒரு நிகழ்ச்சி நடத்தி அதில் கோபிநாத்துக்கும் சாமி வருவதாகக் காட்டிவிடுவார்கள். எல்லா பக்கமும் நிற்பார்கள். டாக்டர் ஷாலினி கடைசியில் வராதவரை எல்லாமே சரியாகத்தான் போகும்.
- ஆர். அபிலாஷ்
Comments